Saturday 6 October 2012

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ...



இப்படியும் இருந்தார்கள் - 
நான் ஆரம்பித்த இந்தக் கப்பல் கம்பெனி, வியாபாரக் கம்பெனி மட்டுமல்ல... மூட்டை முடிச்சுகளுடன் வெள்ளையர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்காகவும் சேர்த்தே இந்தக் கப்பல்கள் பயன்படும் என்று வ.உ.சி. அறிவித்தார்.
இதனை அறிந்த வ.உ.சி.யின் நண்பர் சிவா... மூட்டை முடிச்சுகளை வெள்ளையர்கள் இங்கேயே விட்டு விட வேண்டும். ஏனெனில் அவை நம்மிடம் கொள்ளையடிக்கப்பட்டவை. அவற்றை விட்டுவிட்டே வெள்ளையர் ஓட வேண்டும் என்று உரக்கக் கூறினார். 

* * *

கடைசியில் புலி வந்தே விட்டது. இங்கே மிட்டல்களும் அம்பானிகளும் என்ன விரும்புகிறார்களோ அதெல்லாம் நிச்சயம் நடக்கும். வேதாந்தாக்கள் என்ன நினைக்கின்றனவோ அதுவும் நடக்கும். சாமானியர்களாகிய நீங்களும் நானும் என்ன எதிர்பார்க்கிறோமோ அதற்கு எதிரானவை நிச்சயம் நடக்கும்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை இப்போது அனுமதிப்பதற்கு சிறப்பான காரணம் ஏதும் இப்போது புதிதாக உருவாகி விடவில்லை. 2 அல்லது 4 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைவிட இப்போது புதிய மாற்றம் ஏதும் ஏற்பட்டு விடவில்லை - எதிர்ப்புக்காட்டக்கூடிய வலியவர்கள் இல்லை இப்போது என்பதைத் தவிர.

பொருளாதார சீர்திருத்தம் என்பது தொடர்நிகழ்வு - continuous process - என்று மன்மோகன் சிங் சொன்னதெல்லாம் ஒரே பொருளைத்தான் குறிக்கும் - தொடர்ந்து ஒவ்வொன்றாக அந்நிய நிறுவனங்கள் உள்ளே நுழைந்து கொள்ளைகொண்டு செல்ல அனுமதிப்பது என்பதே அது. அதில் லாபம் சிலருக்கு மட்டுமே இருக்கும். நாட்டுநலன் என்பதற்கு அந்தச் சிலரின் நலன் என்றுதான் மன்மோகன்-அலுவாலியாக்களின் அகராதியில் இருக்கும்.

வால்மார்ட்-உடன் இணைந்து சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார் மிட்டல். யுபிஏ-1இன் காலத்தில் இடதுசாரிகளும் காங்கிரஸ் ஆதரவில் இருந்தார்கள் கடைசிவரை. அவர்கள் இருக்கும்வரை சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரிந்திருந்த காங்கிரஸ் வாய்மூடி இருந்தது. நியூக்ளியர் லயபிலிடி விவகாரத்தில் இடதுசாரிகள் வெளியேறினார்கள். காங்கிரசுக்கு தைரியம் பிறந்தது. அடுத்த தேர்தலில் இடதுசாரிகள் பலமிழந்தார்கள். இன்னும் தைரியம் அதிகரித்தது. யுபிஏ-2இல் உண்மையில் நிரந்தரக் கூட்டாளிகள் யார் என்று காங்கிரசுக்குக் கவலையே இல்லை. எல்லாருடைய குடுமியும் அவர்களிடம் சிக்கியிருக்கிறது. பாஜக பலவீனப்பட்டிருப்பதும், அதன் உள்கட்சி மோதலும் காங்கிரசுக்கு அபார தைரியத்தை அளித்திருக்கிறது என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

இந்து நாளிதழில் வந்த கேலிச்சித்திரம் இதை அழகாக வெளிப்படுத்துகிறது.
 
நிலக்கரி ஊழல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு சரியான வாய்ப்பாகி விட்டது. பிரச்சினையிலிருந்து தப்பிக்க அல்லது கவனத்தை திசைதிருப்ப சரியான வழி - அதைவிடப் பெரிய பிரச்சினையை உருவாக்கி விடுவது. காங்கிரசும் பாஜக-வும் இதில் கரைகண்டவை. காங்கிரஸ் இப்போதும் அதைத்தான் செய்தது.

குளிர்பான நிறுவனங்கள் வந்தன. உள்நாட்டு குளிர்பானத் தொழிலை முற்றமுழுக்க அழித்தன. கார் நிறுவனங்கள் வந்தன. உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனங்கள் - மாருதி உள்பட - திணறுகின்றன. புத்திகெட்ட நடுத்தரவர்க்கம் இதெல்லாம் ஏதோ பெரிய சாதனையாக, வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டதாகப் போற்றி ஏமாளிச்சந்தையாக மாறிக் கொண்டிருக்கிறது. பெப்சி-கோலா நிறுவனங்கள் நிலத்தடி நீர்வளத்தை சுரண்டி, பாழ்படுத்தி வருவதைப்பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. பொதுப்போக்குவரத்து வசதி அதிகரிக்கப்பட்டால் வாகன நெரிசல், புகை, மாசு, பெட்ரோல் விலையேற்றம் போன்ற பல பிரச்சினைகள் குறையும் என்பதைப்பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை. சிறுநகரங்களில்கூட கென்டுக்கி வந்ததுதான் முன்னேற்றம் இவர்களுக்கு. இவர்கள்தான் கருத்துகளை உருவாக்குபவர்கள்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரிப்பவர்கள் காதில் எந்தச்சங்கின் ஒலியும் விழப்போவதில்லை. அமெரிக்காவில் வால்மார்ட் நுழைந்த இடத்தில் எல்லாம் அதைச்சுற்றிலும் இருந்த சிறு வர்த்தகங்களை எவ்வாறு அழித்தது என்று எத்தனை ஆவணப்படங்கள் பார்த்தாலும் அவர்கள் புரிந்து கொள்ள மறுப்பவர்களாகவே இருப்பார்கள். பத்து லட்சம் மக்கள் தொகை உள்ள நகர்களில் மட்டும்தானே அனுமதி, இதில் என்ன தவறு என்று கூறுபவர்கள், இந்தப் பத்து லட்சத்தை 5 லட்சமாக, 1 லட்சமாகக் குறைக்க அதிக காலம் எடுக்காது என்பதை முன்கணிக்க மறுக்கிறார்கள். இதில் அன்னிய முதலீடு வந்தால் விவசாயிகளுக்கு பயன் கிடைக்குமாம்...! அப்படியானால் அரசு எதற்கு? நம்முடைய அரசுகளும் நம்முடைய தனியார் துறைகளும் செய்ய முடியாததை, செய்யத்தவறியதை அன்னியர்கள் செய்வார்கள் என்றால் சுதந்திர நாடு என்று சொல்லிக்கொள்வதுதான் எதற்கு? இனி காப்பீட்டுத்துறையில் அன்னிய முதலீட்டாளர்கள் இன்னும் வரப்போகிறார்கள். இந்தியர்கள் மேல் அவர்களுக்குத்தான் எத்தனை அக்கறை ! தொண்டு செய்து பழுத்த பழங்களோ இவை...?!

அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்றால் அதன் தொடர்ச்சியாக அவர்களுக்கு நம் அரசுகள் தரக்கூடியவை, செய்யக்கூடியவை -
  • வரிச்சலுகைகள்
  • வரிவிலக்குகள்
  • மானியங்கள்
  • சிறப்பு மண்டலங்கள்
  • இலவசமாக அல்லது சலுகை விலையில் நிலங்கள்
  • அதற்காக எவருடைய நிலங்களையும் கையகப்படுத்தல்
  • கட்டமைப்பு வசதிகளை உருவாக்க உதவிகள்
  • அவற்றுக்கான மானியங்கள்
  • கூட்டுசேரும் நிறுவனங்களுக்கு கடன் உதவிகள்
  • தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமைகள் தராமல் கொத்தடிமைகளாக நடத்த அனுமதி
  • கூட்டுசேரும் பெருநிறுவனங்கள் நம் பொதுத்துறை வங்கிகளை சுரண்டி பல்லாயிரம் கோடிகளை கடன் வாங்க அனுமதித்தல், அவற்றைக் கட்டாமல் இருந்தால் கண்டு கொள்ளாமலும் இருத்தல்
இவையெல்லாம் இல்லை என்றால் எந்த வெளிநாட்டு நிறுவனமும் இந்தத் திசையில் தலைவைத்துப்படுக்கவும் எண்ணாது.
சுமார் 15-20 ஆண்டுகளாக அறிமுகமான BOOT / BOT (Build, Own, Operate, Transfer / Build, Operate, Transfer) திட்டங்கள் நெடுஞ்சாலைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது தொலைதூர, பெருநகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளுக்காகத்தான் அறிமுகமாயின. இப்போது என்ன ஆயிறறு. முக்கியச் சாலைகள் அனைத்துமே கிட்டத்தட்ட தனியார்மயமாகி வருகின்றன. மக்களின் போக்குவரத்துக்கான சாலை வசதி என்னும் பொறுப்பிலிருந்து அரசு கைகழுவிக்கொண்டது. அடுத்து மின்விநியோகம், அப்புறம் மின் உற்பத்தி என படிப்படியாக தனியாருக்குத் தரப்பட்டது. இயற்கை வளங்கள் ரிலயன்சுக்கு தாரை வார்க்கப்பட்டன. நீர்வளத்தையும் தனியார்மயமாக்கும் திட்டங்கள் தொடங்கி விட்டன. இப்படித்தான் தொடர்நிகழ்வில் இப்போது வந்திருப்பது சில்லறை வர்த்தகம்.

இந்தியாவின் சில்லறை வர்த்தகம் என்பது மிகப்பெரிய சந்தை. இன்றுவரை சில தனிநபர்களிடம் மட்டும் சிக்காமல் கிராமப் பெட்டிக்கடையிலிருந்து நகரின் மளிகைக்கடை வரை என பலகோடிப் பேரின் கைகளில் இருக்கிறது. அப்படி பலருக்கும் வாழ்வாதாரமாக, வருவாய் தரக்கூடியதாக இருப்பதை விட முடியுமா? சிலருக்கு மட்டும் லாபம் தருவதாக இருந்தால்தானே அடுத்த ஆண்டுகளின் பில்லியனர்ஸ் பட்டியலில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ! பட்டினியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பத்திரிகைகளில் வரப்போகிறதா என்ன...?

மம்தா பானர்ஜி மீது எனக்கு மரியாதை என்று ஏதும் இருந்ததில்லை. இருந்தாலும் அவருடைய தைரியம் பாராட்டக்கூடியது. இதை சற்று வெட்கத்துடன்தான் கூறுகிறேன் - தமிழன் என்ற வகையில். காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்று தமிழர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்கும் துரோகமிழைக்கும் செயலுக்கு துணை போயிருக்கிறது. மம்தாவும் அதே கூட்டணியில் அமைச்சராகத்தான் இருக்கிறார். தான் வெளியேறினால் முலாயமும் மாயாவதியும் காங்கிரசின் வால்பிடிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது அவருக்கும் தெரியும். தெரிந்தே ஆதரவை விலக்கிக் கொள்ளும் தைரியம் அவருக்கு இருந்தது. ஆனால் தமிழகத்தின் தானைத்தலைவருக்கு 2-ஜி முக்கியமானது, எதிர்த்து முனகக்கூட தைரியம் வரவில்லை.

திமுக எதிர்க்காமல் போனதற்கு இது மட்டுமே காரணமா... எனக்கு சந்தேகமாக இருக்கிறது. வால்மார்ட்டோ, கீல்மார்ட்டோ - எது வந்தாலும் அதில் கூட்டுசேர தன் குடும்பத்திற்கும் வாய்ப்புக்கிட்டும் என்று எண்ணி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
பத்து-இருபது-முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தொலைக்காட்சி இப்போது இருப்பதுபோன்ற வருவாய் தரக்கூடிய தொழிலாக இருக்குமா...? அப்படியே இருந்தாலும் இன்னும் போட்டியாளர்கள் அதிகரித்து விடலாம் இல்லையா...? மக்கள் காலாகாலத்துக்கும் இதேபோல குப்பை சினிமாக்களையே பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று என்ன நிச்சயம்...? அதுபோக, ஆளும் கட்சியாக அல்லது அரசியல் கட்சியாக கழகம் இருக்கும் வரைதானே அதிகாரத்தை குடும்ப லாபத்துக்குப் பயன்படுத்த முடியும்....? எத்தனை காலத்துக்கு இந்த ஆட்சிகளும் அரசியலும் நீடித்துவிட முடியும்...? ஆக, எதுவும் நிரந்தரமில்லை.

ஆனால் ஒன்றுமட்டும் நிரந்தரமாக இருக்கும் - மக்களின் அத்தியாவசியத் தேவைகள் என்பதே அது. அரிசியும் பருப்பும் காய்கறியும் மளிகையும் இல்லாமல் மனிதன் எக்காலத்திலும் இருக்க முடியாது. இப்போதே அதில் நுழைந்துவிட்டால் இப்போது பத்து தலைமுறைக்கு மட்டுமே இருக்கிற சொத்து பலநூறு தலைமுறைக்கும் வரக்கூடியதாக பெருகும் என்ற கணக்கும் இருக்கலாம். அதுவே அவர்களை வாய்மூடி மௌனிகளாக வாழச்செய்திருக்கலாம்.

என் சந்தேகங்கள் பொதுவாக பொய்த்துப்போவதில்லை. இது பொய்த்துப்போனால் மகிழ்ச்சிதான்.

2 comments:

  1. வேளியில் செல்லும் ஓணானை மடியில் விளையாட வைத்துள்ளார்கள். அது என்று பாம்பாக மாறிக் கொத்தத் துவங்கப் போகிறதோ?

    ReplyDelete
  2. பேராசிரியர் தொ.பரமசிவன் அய்யா சொன்ன வரிகள் ஞாபகம் வருகிறது. 'பிரம்மாண்டங்கள் எல்லாமே மனித விரோதமானவை'.

    ReplyDelete