Wednesday 28 September 2016

கனவுதேசம் நூலுக்கு பகத்சிங் முன்னுரை

`கனவு தேசம்' நூலுக்கு முன்னுரை 

பகத் சிங்


என் இனிய நண்பர் எல். ராம் சரண் தாஸ், `கனவு தேசம்' என்ற தன் கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதுமாறு கேட்டிருக்கிறார். நான் கவிஞனும் இல்லை, இலக்கியப் படைப்பாளியும் இல்லை; நான் ஒரு பத்திரிகையாளனோ அல்லது விமர்சகனோ அல்ல. ஆகையால், எந்த வகையில் பார்த்தாலும் அவருடைய கோரிக்கையில் நியாயம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

ஆயினும், நான் இப்போது வைக்கப் பட்டிருக்கிற சூழ்நிலை, கவிதை நூலாசிரியருடன் விவாதம் புரிய வாய்ப்பாக இல்லை என்பதால் என் நண்பரின் விருப்பத்துக்கு இணங்குவதைத் தவிர வேறு வழி இல்லை. நான் கவிஞன் அல்ல என்பதால் கவித்துவப் பார்வையில் அதைப்பற்றி விவாதிக்கப் போவதில்லை. எதுகை மோனை பற்றி எனக்கு அட்சரமும் தெரியாது; எனவே கவிதை இலக்கணத்தின்படி பார்த்தால் இந்நூல் நன்றாக இருக்கிறதா என்பதும் தெரியாது. நான் இலக்கியப் படைப்பாளி அல்ல என்பதால் தேசிய இலக்கியத்தில் இந்நூலுக்கு உரிய இடம் தருவது என்ற நோக்கில் நான் விவாதிக்கப் போவதில்லை. நான் ஒரு அரசியல் போராளி என்பதால் அந்த நோக்கில் மட்டுமே அதைப் பற்றி விவாதிக்க முடியும். ஆனால் இதிலும்கூட ஒரு அம்சம் என் வேலையை கடினமாக்கி விடுகிறது பொதுவாக, நூலாசிரியரின் படைப்பில் உள்ள கருத்துகளுடன் ஒத்த சிந்தனை உடையவரால்தான் முன்னுரை எழுதப்படும். ஆனால் இங்கே இதற்கு நேர்மாறாக இருக்கிறது. எல்லா விஷயங்களிலும் எனக்கும் என் நண்பருக்கும் ஒத்த கருத்து இருப்பதாகக் கூற முடியாது. முக்கியமான பல விஷயங்களில் நான் மாறுபட்ட கருத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அவர் நன்கு அறிவார். ஆகவே, நான் எழுதப்போவது நிச்சயம் முன்னுரையே அல்ல. அதிகபட்சமாகச் சொன்னால் அதை விமர்சனம் என்று கூறலாம்; அது இடம் பெற வேண்டிய இடம் நூலின் ஆரம்பம் அல்ல, இறுதியாகத்தான் இருக்க முடியும். 

அரசியல் களத்தில் `கனவு தேசம்' முக்கியமான இடத்தை வகிக்கிறது. நடப்புச் சூழ்நிலைகளில், இயக்கத்தில் உள்ள முக்கியமான இடைவெளியை இது இட்டு நிரப்புகிறது. சரியாகச் சொன்னால், நம் நவீன வரலாற்றில் இதுவரை முக்கியப் பங்காற்றி வந்திருக்கிற நம் நாட்டு அரசியல் இயக்கங்கள் அனைத்துமே தம்முடைய இறுதி இலக்கு எது என்பதில் தெளிவாக இல்லை. புரட்சி இயக்கமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. நான் ஏராளமான முயற்சிகளைச் செய்த பிறகும், தாம் எதற்காகப் போராடுகிறோம் என்பது பற்றிய தெளிவான சிந்தனைகளைக் கொண்ட அரசியல் இயக்கம் எதையும் காண முடியவில்லை; கதார் கட்சி இதற்கு விதிவிலக்கு அமெரிக்க பாணி அரசின்பால் ஈர்க்கப்பட்ட கதார் கட்சி, தற்போதைய அரசை அகற்றி விட்டு அந்த இடத்தில் குடியரசு வகையான ஆட்சி அமைக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறியது. மற்ற கட்சிகளில் இருப்பவர்களுக்கெல்லாம் ஒரே கருத்துதான் — அதாவது, அன்னிய ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடுவது. இது கருத்தளவில் பாராட்டத் தக்கதுதான், ஆனால் புரட்சிகரக் கருத்து என்று கூற இயலாது. 

புரட்சி என்றால் வெறும் கலக எழுச்சியோ அல்லது இரத்தம் சிந்தும் மோதலோ அல்ல என்பதை நாம் தெளிவுபடுத்தியாக வேண்டும். தற்போதைய அரசாங்க அமைப்பை (அதாவது, ஆட்சியை) முற்றிலுமாகத் தகர்த்து விட்டு புதிய, மேம்பட்ட அடித்தளத்தில் சமூகத்தை மறுகட்டமைப்புச் செய்வதற்கான அமைப்பு ரீதியான திட்டம் என்பதும் புரட்சியில் உள்ளடங்கி இருக்க வேண்டும். அரசியல் களத்தில், தற்போதைய அரசின்கீழேயே சில சலுகைகள் வேண்டும் என்றார்கள் மிதவாதிகள்; இன்னும் அதிகமாக வேண்டும் என்று கோரும் தீவிரவாதிகள் அதற்காக தீவிர வழிமுறைகளைப் பின்பற்றவும் தயாராக இருந்தார்கள். அன்னிய ஆதிக்கத்தைத் தூக்கியெறிவது என்ற ஒரே கருத்தில் அதற்காக எத்தகைய தீவிர வழிமுறையையும் பின் பற்றலாம் என்று புரட்சிக்காரர்கள் எப்போதும் கருதி வந்திருக்கிறார்கள். இந்த வழிகளின்மூலம் சில சலுகைகளைக் கறந்து விடலாம் என்று கருதிய சிலர் இருந்தார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை. இந்த இயக்கங்கள் அனைத்தையுமே புரட்சி இயக்கங்கள் என்று துல்லியமாக வகைப்படுத்த முடியாது. 

ஆனால் ராம் சரண் தாஸ், 1908இல் வங்கத்திலிருந்து தலைமறைவான ஒருவரால் பஞ்சாபில் முறையாகப் பயிற்சியளிக்கப்பட்ட முதல் புரட்சிக்காரர். அன்று முதல் பல்வேறு புரட்சி இயக்கங்களுடன் அவர் தொடர்பு வைத்திருந்தார்; இறுதியில் கதார் கட்சியில் சேர்ந்தார். இருந்தாலும் தன் பழைய புரட்சிக் கருத்துகளையும் விட்டு விடாமலிருந்தார். 

இதில் சுவையும் மதிப்பும் மிக்க இன்னொரு அம்சமும் உண்டு. 1915ஆம் ஆண்டில் ராம் சரண் தாஸுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது நாடு கடத்தும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இன்று மரண தண்டனைக் கைதியாக சிறைக் கொட்டடிக்குள் உட்கார்ந்திருக்கிற நான் வாசகர்களுக்கு உறுதியாகச் சொல்ல முடியும் — ஆயுளுக்கும் நாடு கடத்தப்படும் தண்டனை, மரண தண்டனையை விட பல மடங்கு கடுமையானது. ராம் சரண் தாஸ் பதினான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியதாயிற்று. 

தெற்கே உள்ள ஒரு சிறையில் இருக்கும்போதுதான் அவர் இந்தக் கவிதை நூலை எழுதியிருக்கிறார். அந்தச் சிறைவாசத்தின் போது ஏற்பட்ட உளப்பாங்கும் மனப்போராட்டமும் அவர் கவிதைகளில் பதிந்துள்ளன; இது கவிதைகளுக்கு அழகும் சுவையும் சேர்க்கிறது. இதை எழுதுவதற்கு முன்னால், தனக்கு ஏற்பட்ட விரக்தியான மனநிலையை எதிர்த்து அவர் கடுமையாகப் போராடியிருக்கிறார். அவருடைய தோழர்கள் பலர் அரசுக்கு உறுதிமொழி எழுதிக்கொடுத்து விட்டு விடுதலை பெற்ற சூழலில், இதே போன்ற உந்துதல் நூலாசிரியர் உள்பட ஒவ்வொருவருக்குள்ளும் கடுமையாக இருக்கும் என்ற சூழலில், மனைவி குழந்தைகள் பற்றிய இனிதான, வேதனையான நினைவுகள் விடுதலை ஏக்கத்தை மேலும் தீவிரமாக்கும் சூழலில், நம்பிக்கை இழக்க வைக்கும் அவற்றின் தாக்கத்திலிருந்து விடுபட அவர் கடுமையாகப் போராடி இருக்கிறார்; அவற்றிலிருந்து மனதைத் திருப்ப இதை எழுதியிருக்கிறார். அதனால்தான் இந்த முதல் கவிதை சட்டென்று வெடிக்கிறது: 
நண்பர்கள், மனைவி, குழந்தைகள் 
என்னைச் சுற்றி 
நாற்றிசையிலும் நச்சுப் பாம்புகள் 

துவக்கத்திலேயே அவர் தத்துவத்தைப் பேசுகிறார். வங்கத்திலும் சரி, பஞ்சாபிலும் சரி, இந்தத் தத்துவம்தான் புரட்சி இயக்கங்கள் அனைத்துக்கும் முக்கியமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் நான் அவருடைய கருத்திலிருந்து மிகவும் விலகி நிற்கிறேன். பிரபஞ்சத்தைப் பற்றிய அவருடைய கருத்து முடிவு சார்ந்தது, இயற்கைக்கு அப்பாற்பட்டது. ஆனால் நானோ பொருள்முதல்வாதி; பிரபஞ்சத்தைப் பற்றிய என் கருத்து, காரணகாரியம் சார்ந்தது. இருந்தாலும் அவருடைய கருத்து கால வர்த்தமானத்திற்குப் பொருந்தாதது அல்ல. நம் நாட்டில் பொதுவாக நிலவும் கருத்துகள் இவர் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு இசைந்தவை. விரக்தியூட்டும் மனநிலையை எதிர்த்துப் போராட இவர் பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்; நூலின் தொடக்கப்பகுதி முழுவதும் கடவுளுக்கு அர்ப்பணிக்கப் பட்டு, கடவுளின் புகழ் பாடுகிறது. விரக்தியின் இயற்கையான தொடர்விளைவாக ஏற்படும் கற்பனா வாதத்தின் விளைவுதான் கடவுள் நம்பிக்கை. இந்த உலகம் ஒரு `மாயை' அல்லது `புனைவு' என்ற கருத்து சங்கராச்சாரியார் போன்ற புராதன இந்துத் துறவிகளால் உருவாக்கப்பட்டு வளர்ந்து வந்திருக்கிற கற்பனா வாதம். ஆனால் பொருள்முதல்வாதத் தத்துவத்தில் இத்தகைய சிந்தனைக்கு சிறிதும் இடமே இல்லை. 

இருப்பினும், நூலாசிரியரின் கற்பனாவாதம் இலக்கற்றது அல்லது தரமற்றது என்று கூறிவிட இயலாது. அதில் அதற்கே உரிய அழகும் கவர்ச்சியும் உண்டு. கருத்துகள் ஊக்கமளிப்பதாக உள்ளன. இதைப் பாருங்கள்: 
கண்ணுக்குத் தெரியாத அடிக்கல்லாய் இரு 
உன் மார்பின்மீது எழும்பி நிற்கட்டும் 
உயர்ந்து பரந்த விரிந்த கட்டிடம் 
துன்பம் சுமப்பதில்தான் உண்மை இன்பம் 
உலகமே புகழ்ந்து போற்றிப் பாடிடும் 
உச்சியில் பொதிந்து மின்னும் கல்லிடம் 
உனக்குத் தேவையில்லை பொறாமை எதுவும். 

என்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்து நான் உறுதியாகக் கூற முடியும்: `நம்பிக்கையும் இன்றி, அச்சமும் இன்றி', `யாராலும் அறியப்படாமல், போற்றப்படாமல், புகழப்படாமல் உயிர் துறக்க எப்போதும் தயாராக இருந்து' எந்தநேரமும் உயிருக்கு ஆபத்தான வேலைகளை மேற்கொண்டு இரகசிய வாழ்க்கை நடத்துகிற ஒரு மனிதன், எந்த வகையிலும் உற்சாகத்தைக் குலைக்காத இத்தகைய கற்பனா வாதத்தின் துணையில்லாமல் தனக்குள் எழும் சுயநல உந்துதல்களை வெற்றி கொள்ள இயலாது. 

அடுத்ததாக அவர் எடுத்துக் கொள்வது, ஒரு புரட்சிக் காரனின் மனப்போக்கு. வன்முறைச் செயல்கள் பலவற்றுக்குப் பொறுப்பான ஒரு புரட்சிக் கட்சியின் உறுப்பினராக இருந்தவர் ராம் சரண் தாஸ். ஆயினும் புரட்சிக்கார்களை இரத்தவெறி பிடித்தவர்கள் என்றோ, அழிப்பதில் மகிழ்ச்சி காண்பவர்கள் என்றோ கூறி விட முடியாது. இதைப் படியுங்கள்: 
வேளை வந்தால் வெளியே முரட்டுத்தனம் காட்டு 
எனினும் இதயத்தில் மென்மையைப் போற்று 
தேவை வந்தால் சீறு, எனினும் கடிக்காதே 
மனதில் நேசம் கொள் வெளியே போராடு ... 

புதியதைக் கட்டியெழுப்பும்போது பழையதை அழித்தல் அவசியமானது மட்டுமல்ல, தவிர்க்க முடியாதது. புரட்சிக்காரர்கள் தமது திட்டத்தின் அவசியமான ஒரு அங்கமாக இதனைப் பின்பற்ற வேண்டும் என்பதையும், வன்முறை மற்றும் அகிம்சைத் தத்துவங்களும் மேலே குறிப்பிட்ட வரிகளில் அழகாக விளக்கப்பட்டுள்ளன. லெனின் ஒருமுறை கார்க்கியிடம் கூறினார் ``என்னால் இசையைக் கேட்க இயலாது. காரணம், இசை என் நரம்புகளைத் தூண்டி விடுகிறது, இசைக்கலைஞர்களின் தலையைத் தட்டிக்கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் இது தட்டிக் கொடுக்க வேண்டிய தருணமல்ல. நமது இறுதி இலக்கு எல்லாவித வன்முறைகளையும் ஒழித்துக்கட்டுவதே என்றாலும்கூட, கைகள் இப்போது மண்டைகளைத் தகர்க்கவே கீழே இறங்குகின்றன.'' அத்தியாவசியத் தேவையாக வன்முறை வழிகளைக் கைக்கொள்ள நேரும்போது புரட்சிக்காரர்கள் இவ்வாறுதான் உணர்கிறார்கள். 

அடுத்ததாக, முரண்பட்டு நிற்கும் பல்வேறு மதங்களைப் பற்றி அலசுகிறார் ஆசிரியர். தேசியவாதிகள் பலரும் முயற்சி செய்வது போலவே இவரும் மதங் களுக்கு இடையே சமரசத்தையே பேசுகிறார். மதம் என்ற பிரச்சினையை விளக்க இவர் கைக்கொள்ளும் பாதை நீளமானது, சுற்றி வளைத்துச் செல்வது; நானோ, இதை காரல் மார்க்சின் ஒற்றை வரியில் ஒதுக்கித் தள்ளி விடுவேன் `மதம் என்பது மக்களை மயக்கும் அபின்''. 

கடைசியாக வருகிறது கவிதைத் தொகுப்பின் மிக முக்கியமான பகுதியான எதிர்காலச் சமுதாயம்; நாம் உருவாக்க ஏங்கும் சமுதாயம். இருப்பினும் நான் ஒரு விஷயத்தை ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். `கனவுதேசம்' தெளிவான ஒரு கற்பனை. இதை நூலாசிரியர் தலைப்பில் மிகத் தெளிவாகவே ஒப்புக் கொள்கிறார். இந்த விஷயத்தைப் பற்றி அறிவியல் பூர்வமான கட்டுரை எழுதுவதாக நடிக்கவில்லை. `கனவு தேசம்' என்ற தலைப்பு இதைத் தெளிவுபடுத்தி விடுகிறது. இருப்பினும், சமூக முன்னேற்றத்தில் கற்பனா வாதங்களும் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன என்பதில் ஐயமில்லை. செயின்ட் சைமன், ஃபூரியர், ராபர்ட் ஓவன் போன்றோரும் அவர்களுடைய சூத்திரங்களும் இல்லை என்றால் அறிவியல்பூர்வமான மார்க்சிய சோஷலிசமும் கிடைத்திருக்க முடியாது. ராம் சரண் தாசின் கற்பனாவாதமும் இதே ரகத்தைச் சேர்ந்தது. நமது இயக்கம் அவர்களுடைய இயக்கத் தத்துவங்களை முறைப்படுத்த வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து, இயக்கத்தைப் பற்றிய அறிவியல் பார்வையை உருவாக்கும்போது இந்தப் புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும். 

கருத்து வெளிப்பாட்டு விதம் கரடுமுரடாக இருக்கிறது என்பதைக் காண்கிறேன். தனது கற்பனா வாதத்தைப் பேசும்போது தற்காலச் சமுதாயத்தின் கருத்துகள் அவர் மனதை பாதிக்கத்தான் செய்கின்றன. ``தேவையில் உள்ளவர்களுக்கு தர்மம் செய்தல்.'' எதிர்காலச் சமுதாயத்தில், அதாவது நாம் கட்டியமைக்க விரும்பும் கம்யூனிச சமூகத்தில், நாம் தானதர்ம நிறுவனங்களை நிறுவப்போவதில்லை; ஏனெனில், அதில் தேவையுள்ளவர்களும் ஏழைகளும் இருக்க மாட்டார்கள், தானம் கொடுப்பதும் இருக்காது, பெறுவதும் இருக்காது. நூலாசிரியர் அலசுகிற பொதுவான வழிமுறை விஞ்ஞான சோஷலிசத்தை மிகவும் ஒத்திருக்கிறது. என்றாலும், இதில் எதிர்க்க வேண்டிய அல்லது முரண்பட வேண்டியவை தெளிவாகச் சொன்னால் திருத்த வேண்டியவை உள்ளன. எடுத்துக்காட்டாக, 427ஆம் பத்திக்கான அடிக்குறிப்பில் கூறுகிறார் — அரசுப் பணியாளர்கள் தமது வாழ்க்கைத் தேவைகளுக்காக சம்பாதிப்பதற்கு பண்ணைகளில் அல்லது தொழிற் சாலைகளில் தினமும் நான்கு மணி நேரம் உழைக்க வேண்டும். 

இது கற்பனாவாதம், நடைமுறைக்கு ஒவ்வாதது. சொல்லப்போனால், அரசாங்க ஊழியர்களுக்கு மிக உயர்ந்த ஊதியம் வழங்கப்படுகிற தற்போதைய சமூக அமைப்பின்மீது ஏற்பட்ட எதிர்ப்பு உணர்வால் உருவான கருத்து இது. உண்மையைச் சொன்னால், மூளை உழைப்பும் உடலுழைப்பு போலவே ஆக்கப்பணிதான் என்று போல்ஷ்விக்குகள்கூட ஒப்புக் கொண்டுள்ளனர். எதிர்காலச் சமுதாயத்தில், பல்வேறு பிரிவுகளின் உறவுகள் சமத்துவத்தின் அடிப்படையில் சரிசெய்யப்படும்போது, உற்பத்தி செய்பவர்களும் விநியோகம் செய்பவர்களும் சமமாகவே கருதப் படுவார்கள். ஒரு மாலுமி தன் வாழ்க்கைத் தேவைக்காக தினமும் கப்பலை நிறுத்தி விட்டு நிலத்திற்கு வந்து தினமும் நான்கு மணி நேரம் உழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? அல்லது ஒரு விஞ்ஞானி தன் ஆய்வுக்கூடத்தையும் சோதனையையும் (பணியை) விட்டு விட்டு தனக்கிடப்பட்ட பண்ணை வேலையை செய்ய முடியுமா? இரண்டு பிரிவினருமே மிகவும் ஆக்கபூர்வமான உழைப்பையே செய்து வருகிறார்கள். சோஷலிச சமூகம் எதிர்பார்க்கிற ஒரே ஒரு வித்தியாசம் உடலுழைப்பாளர்களைவிட மூளை உழைப்பாளர்கள் உயர்ந்தவர்கள் என்று கருதப்பட மாட்டார்கள்.

ராம் சரண் தாஸ் கூறும் இலவசக் கல்வி என்பது உண்மையியே கவனிக்க வேண்டிய கருத்து; ரஷ்யாவில் உள்ள சோஷலிச அரசு கிட்டத்தட்ட இதேபோன்ற வழியைத்தான் ஏற்றுக் கொண்டுள்ளது. குற்றம் பற்றிய நூலாசிரியரின் கருத்து உண்மையில் மிகவும் நவீனச் சிந்தனையாகும். குற்றம்தான் சமூகத்தின் மிகக் கடுமையான பிரச்சினை, மிகவும் சாதுர்யமாகக் கையாள வேண்டிய பிரச்சினை. தன் வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் கழித்திருக்கிறார் என்பதால் அவருக்கு நேரடி அனுபவம் உண்டு. சிறையில் புழங்கும் `இலேசான உழைப்பு, மிதமான உழைப்பு, கடும் உழைப்பு' போன்ற சொற்களை அவர் ஒரு இடத்தில் பயன்படுத்தி இருக்கிறார். குற்றம் செய்தவருக்கு பதிலடி தருவது, அதாவது பழிக்குப் பழியாக என்று இல்லாமல், சீர் திருத்தும் வழியாகவே தண்டனை அமைய வேண்டும் என்று எல்லா சோஷலிசவாதிகளைப் போலவே இவரும் கூறுகிறார். தண்டிப்பது அல்ல, சீர்திருத்தி திரும்பிப் பெறுவதே நீதிமுறை நிர்வாகத்தின் வழிகாட்டிக் கொள்கையாக இருக்க வேண்டும். சிறைகள் சீர்திருத்தும் மையங்களாக இருக்க வேண்டும், நரகங்களாக இருக்கக் கூடாது. இந்த விஷயத்தில் ரஷ்ய சிறை அமைப்பு பற்றி வாசகர்கள் படிக்க வேண்டும்.

இராணுவத்தைப் பற்றி எழுதும்போது இவர் போர் பற்றியும் எழுதுகிறார். என்னைப் பொறுத்தவரை, போர் என்பது உலகக் கலைக்களஞ்சியத்தில் மிகச் சில பக்கங்களை மட்டுமே நிரப்ப வேண்டும்; போர்த் தளவாடங்கள் அருங்காட்சியகங்களை அலங்கரிக்க வேண்டும். ஏனெனில், போருக்குக் காரணமாகும் முரண்பாடுகளோ, மாறுபட்ட சுயநலன்களோ, அந்தச் சமூகத்தில் இருக்காது.

அதிகபட்சமாக, மாற்றம் பெறுகின்ற இடைக் காலத்திற்கு மட்டுமே போர் என்ற நடைமுறையை ஏற்கலாம். இன்றைய ரஷ்யாவை உதாரணமாக எடுத்துக்கொண்டால் இதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். தற்போது அங்கே தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் நிலவுகிறது. அவர்கள் சமத்துவ சமூகத்தை நிறுவவே விரும்புகிறார்கள். இதற்கு இடையில், முதலாளித்துவ சமுதாயத்திடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள அவர்கள் ராணுவத்தை வைத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் போரின் நோக்கங்கள் வெவ்வேறாக இருக்கும். கனவுதேச மக்கள் போர் தொடுக்கும்படி ஏகாதிபத்திய வழிமுறைகள் இனியும் தூண்ட முடியாது. போரில் வென்றதற்கான கோப்பை களும் அங்கே இருக்காது. புரட்சிப் படை வேற்று நாட்டில் நுழைவது ஆட்சி செய்யவோ அல்லது மக்களைக் கொள்ளை அடிப்பதற்காகவோ இருக்காது; ஒட்டுண்ணிகளின் ஆட்சியை சிம்மாசனத்திலிருந்து இறக்கவும், இரத்தத்தை உறிஞ்சும் சுரண்டலை நிறுத்தவும், இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை செய்வதற்காகவுமாக இருக்கும். ஆனால், நமது மக்களை சண்டையிடத் தூண்டுகிற ஆரம்பகால தேசியவாத அல்லது இனவாத வெறுப்புகள் இருக்கக் கூடாது.

உலகக் கூட்டமைப்பு என்பது சுதந்திரமாகச் சிந்திக்கும் அனைவரின் உடனடி இலக்காகவும் மிகவும் பிரபலமாகவும் இருக்கிறது. இதைப்பற்றி ஆசிரியர் நன்றாக விவாதித்திருக்கிறார்; `லீக் ஆஃப் நேஷன்ஸ்' என்று அழைக்கப்படும் அமைப்பின்மீதான அவரது விமர்சனம் மிக அற்புதமாக உள்ளது. 571 (572)ஆம் பத்திக்கான அடிக்குறிப்பில், வழிமுறைகள் பற்றி தொட்டுச் சென்றிருக்கிறார். அவர் கூறுகிறார்: ``இத்தகைய அரசாட்சியை வன்முறைப் புரட்சியினால் கொண்டுவர இயலாது. சமூகத்தின்மீது இதை வெளியிலிருந்து திணிக்க முடியாது. இது உள்ளுக்குள்ளேயே வளர வேண்டும்... மேலே சொன்ன வழிமுறைகளில் மக்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் படிப்படியான பரிணாம வளர்ச்சியின் வாயிலாகவே இதைக் கொண்டுவர முடியும்...'' இதை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் குறை ஏதும் கூற முடியாது, மிகவும் சரிதான்; ஆனால் இதை முழுமையாக விளக்காமல் விட்டால் தவறான புரிதல்களுக்கு — அல்லது அதைவிட மோசமாக குழப்பத்திற்கு — இட்டுச் செல்லக்கூடும். இதற்குப் பொருள் என்ன? வன்முறை வழி தோல்வியே தரும் என்று ராம் சரண்தாஸ் புரிந்து கொண்டாரா? அகிம்சையின்மீது அசையாத நம்பிக்கை கொண்டவராக ஆகி விட்டாரா? இல்லை, இதன் பொருள் அதுவல்ல. மேலே குறிப்பிட்ட வாசகம் என்ன பொருள் தருகிறது என்று விளக்குகிறேன். 

வன்முறை வழிகளால் மட்டும் சோஷலிச சமூகத்தை உருவாக்கிவிட முடியாது, அது உள்ளுக்குள்ளேயே உருவாகி வளர வேண்டும் என்பதை மற்ற எவரையும்விட புரட்சிக்காரர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். இதற்கு கல்வி ஒன்றே பயன்படுத்தப்பட வேண்டிய ஆயுதம் என்கிறார் நூலாசிரியர். ஆனால், தற்போதைய அரசு, அல்லது உண்மையைச் சொன்னால் எந்தவொரு முதலாளித்துவ அரசும், இத்தகைய முயற்சிக்கு எந்தவித உதவியும் அளிக்காது; மாறாக இத்தகைய எந்த முயற்சியையும் இரக்கமின்றி ஒடுக்கவே முயலும் என்பதை எவரும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். அப்படியானால், இவர் கூறுகிற `பரிணாம வளர்ச்சி' எதை சாதிக்கும்? புரட்சிக் காரர்களாகிய நாம் அதிகாரத்தை நம் கையில் எடுத்துக் கொள்ளவும், இன்று ரஷ்யாவில் செய்யப்படுவது போல தனது எல்லா வளங்களையும் மக்களைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்துகிற புரட்சி அரசை ஏற்படுத்தவும் போராடுகிறோம். அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு ஆக்கபூர்வமான பணிகளுக்கு அமைதி வழிமுறைகள் பயன்படுத்தப்படும்; தடைகளை ஒடுக்குவதற்கு வன்முறை பிரயோகிக்கப்படும். 

ஆசிரியர் கூறுவது இதுதான் என்றால், அவருடைய கருத்தும் என் கருத்தும் ஒன்றே. அவர் கூற வந்ததன் பொருள் இதுதான் என்று நான் நம்புகிறேன். புத்தகத்தைப் பற்றி விரிவாகவே விவாதித்து விட்டேன். ஏன், விமர்சனமும் செய்து விட்டேன். என்றாலும் இதில் மாற்றங்கள் எதையும் செய்ய வேண்டும் என்று கேட்க மாட்டேன்; ஏனெனில் இதற்கு வரலாற்றுபூர்வமான மதிப்பு உண்டு. 

இதில் உள்ளவை 1914-15 காலகட்டத்துப் புரட்சிக்காரர்களின் கருத்துகள். இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும் என்று குறிப்பாக இளைஞர்களை நான் வலியுறுத்துகிறேன். என்றாலும் ஒரு எச்சரிக்கை: இதைப்படித்து அப்படியே குருட்டுத்தனமாக பின்பற்ற வேண்டும் என்பதற் காகவோ, அல்லது இதில் எழுதப்பட்டுள்ளதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவோ படிக்க வேண்டாம். இதைப் படியுங்கள், விமர்சனம் செய்யுங்கள், இதைப்பற்றி சிந்தனை செய்யுங்கள், இதன் உதவியுடன் உங்கள் சொந்தக் கருத்துகளை உருவாக்கிக் கொள்ள முயலுங்கள்.

Friday 23 September 2016

மின்சாரம் தூக்கி அடிக்குமா?

ராம்குமார் (தற்)கொலையைத் தொடர்ந்து பலருக்கும் இப்போது ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. கரன்ட் ஷாக் அடிச்சு அப்படியே தூக்கி எறிஞ்சிருச்சுஎன்கிறார்களே...? சில திரைப்படங்களில் மின்சாரம் தாக்கியவர் பறந்து போய் விழுகிறாரே? மின்சாரம் தாக்கினால் தூக்கி அடிக்குமா? மின்சார வயரை பல்லால் கடிக்கும்போது தூக்கி எறிந்திருக்காதா?

பள்ளிப்படிப்பு முடித்து சில காலம் எலக்டிரீசியனுக்கு ஹெல்பராக வேலை செய்த அனுபவத்திலிருந்து எனக்குத் தெரிந்ததை விளக்குகிறேன்.

சில காலத்துக்கு முன்னால் ஒரு வீடியோ இங்கே சுற்றிக்கொண்டிருந்தது. ஏதோவொரு ரயில் நிலையத்தில் ஒரு மின்சார ரயில் நின்றிருந்தது. பைத்தியக்காரன் ஒருவன் ரயிலின் கூரையில் ஏறி விட்டான். கிறுக்குத்தனமாக சிரித்துக்கொண்டே மேலே நடந்து போனவன், சட்டென்று மேலே இருந்த வயரைப் பிடித்தான். பிறகு கையை எடுக்க முடியவில்லை. முதலில் அவன் தலைமயிர் திகுதிகுவென எரிந்தது. ஓரிரு நொடிகளுக்குள் அப்படியே கருகி விழுந்து விட்டான். தூக்கி அடிக்க வேண்டும் என்றால் அவன் கீழே விழுந்திருக்க வேண்டும்.

அப்படியானால் தூக்கி அடிப்பதாகச் சொல்வது தவறா? ஆமாம். மின்சாரம் தூக்கி அடிக்காது. நாமே நம்மைத் தூக்கி அடித்துக் கொள்ளலாம். அதாவது, மின்சாரம் தாக்கும்போது ஏற்படும் ரிஃப்ளக்ஸ் ஆக்சனால் அதிர்ச்சியில் தூரப்போய் விழலாம்.

இங்கே தரப்படுகிற விளக்கத்தில் மின்சாரம் என்பது நாம் பொதுவாக வீடுகளில் பயன்படுத்தும் 220 வோல்ட் மின்சாரம் என்பதை கவனத்தில் கொள்ளவும். உயர் அழுத்த மின்சாரம் தாக்கினால் நொடியில் மரணம் நிகழும்.

எலக்டிரீசியன் வேலை செய்வதைப் பார்த்திருப்பீர்கள். ஒரு வயரில் மின்சாரம் வருகிறதா என்று பார்க்க வேண்டும். அவர் டெஸ்டர் கொண்டு வரவில்லை. அப்போது என்ன செய்வார்? விரலின் மேல் பகுதியால் - அதாவது, நகம் இருக்கும் பகுதியால் சட்டென்று தொட்டுப் பார்த்துவிட்டு எடுத்துக் கொள்கிறார். ஏன் என்றால், விரல் பின்பக்கமாக மடங்காது. ரிஃப்ளக்ஸ் ஆக்சனில் சட்டென விரலை மீட்டுக்கொள்ள முடியும்.

அதையே விரலின் உள்பக்கத்தால் உள்நோக்கி வளைக்கக்கூடிய மென்மையான பக்கத்தால் தொட்டுப் பார்த்தால், மின்சாரம் தாக்கும்போது, தசைகள் விரைவாக சுருங்கி விரியும்போது, சட்டென்று பிடித்துக்கொள்ளும். எனவேதான் மின்சாரத்தில் வேலை செய்பவர்கள் விரலின் பின்பக்கத்தால் - நகமிருக்கும் பக்கத்தால் தொட்டுப் பார்ப்பார்கள். அதுவும் கண நேரத்துக்கு மட்டுமே.



ஒரு படத்தின் மூலம் விளக்கியிருக்கிறேன். கறுப்பு வெள்ளையில் இருக்கும் படம், மின்சாரம் உள்ளதா என்று சோதிக்க சரியான முறை. (இது விளக்கத்துக்காகத்தானே தவிர, இதை யாரும் செய்து பார்த்துவிடக்கூடாது.) வண்ணப்படத்தில் இருப்பது தவறான முறை. அதுவும் இரண்டு விரல்களால் பிடிப்பது மிகவும் ஆபத்தான முறை.

வயரை வாயில் வைத்துக் கடிக்கும்போது மின்சாரம் பாய்ந்தால் என்னவாகும்? மின்தாக்குதலின்போது ஏற்படும் தசைச் சுருக்கம் காரணமாக வாய் இறுகிக் கொள்ளும். அதிர்ச்சியில் இருக்கும்போது, வாயைத் திறந்து வயரை அகற்றி மின்சாரத்தின் பிடியிலிருந்து விலக முடியாது. அதிலும், வாய் ஈரமாக இருக்கும் என்பதால் தப்ப முடியாது.

மின்சார இணைப்புகளில் முறையாக எர்த்திங் தரப்பட்டு, ELCB எனப்படும் Earth-leakage circuit breaker அமைப்பு பொருத்தப்பட்டிருந்தால் மட்டுமே யாருக்காவது மின்சாரம் தாக்கும்போது தானாகவே மின்இணைப்பு துண்டாகும். எல்லா வீடுகளிலும்/கட்டிடங்களிலும் ELCB இருக்காது.

எந்த வயராக இருந்தாலும், குறிப்பாக சில்க் வயர், காலப்போக்கில் இறுகி வலுவிழந்து விடும். சில இடங்களில் வெடிப்பும் இருக்கும். இன்னும் சில இடங்களில், கொஞ்சம் உருகி, உள்ளிருக்கும் உலோகக் கம்பி நீட்டிக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட வயர்களில் வேலை செய்யும்போது எச்சரிக்கை அவசியம்.


மின்தாக்குதல் எவ்வளவு நேரத்துக்கு நீடித்தது, தாக்கப்பட்ட மனிதன் மின்சாரத்துக்கும் பூமிக்கும் இடையே எர்த்திங் போல எந்த நிலையில் இருந்தான், அங்கே ஈரம் இருந்ததா போன்ற காரணிகளைப் பொறுத்து உயிரிழப்போ தீக்காயங்களோ ஏற்படும். 

Saturday 17 September 2016

லாரி டிரைவர் கனவு

(ஓட்டுநர்கள் தினத்தை முன்னிட்டு - நெடுஞ்சாலை வாழ்க்கை)


பெரியவனாகி என்ன செய்யப்போறே?” என்ற கேள்விக்கு டிரைவர் ஆகப் போறேன்என்று சொல்லாத சிறுவர்கள் இருந்திருக்கவே முடியாது என்பது என் நம்பிக்கை. டிரைவர் என்பவர் சிறுவர்களுக்கு அவ்வளவு பெரிய ஆதர்சமாக இருந்திருக்கிறார். பஸ்சில் பயணிக்கும்போது முன் வரிசையில் உட்காரத் துடிப்பதும், டிரைவர் அஸால்டாக ஸ்டியரிங்கைத் திருப்பி வண்டியை ஓட்டுவதும், கியர் மாற்றுவதும், பின்னால் திரும்பிப் பேசிக்கொண்டே ஓட்டுவதும், அவ்வப்போது ஹாரனை அமுக்குவதும்... கண்டு வியக்காத சிறுவர்கள் யார்தான் இருக்க முடியும்? ஊருக்குள் வரும் லாரிகளின் பின்னால் ஓடாதவர்கள், பின்பக்கப் பலகையைப் பிடித்துத் தொங்காதவர்கள் யார்?

அம்மா பொட்டுக்கடலை வாங்கி வரச் சொல்லும்போதும், பக்கத்து வீட்டு மாமா சிகரெட் வாங்கி வரச் சொல்லும்போதும் நான் லாரியை எடுத்துக்கொண்டுதான் புறப்படுவேன். சாவியைப் போட்டு டுர்ர்ர்ர்.... என்று கிளப்பி, நிறுத்தியிருக்கும் இடத்திலிருந்து ரிவர்ஸ் எடுத்து, சரசரவென ஸ்டியரிங்கைத் திருப்பி, வண்டியை கடைக்கு விடுவேன். சமயத்தில் மோட்டார் பைக்கில்கூடப் போவதுண்டு. திரும்பி வரும்போது என்னை அறியாமலே அது லாரியாக மாறியிருக்கும். மோட்டார் பைக்கின் ஹாண்டிலை திருப்புவதில் சுவாரசியம் அதிகம் கிடையாது. இடது பக்கமோ வலது பக்கமோ திருப்பியதும் இடுப்பில் முழங்கை இடிக்கும். ஆனால் லாரி அல்லது பஸ்சின் ஸ்டியரிக் அப்படியல்ல, இரண்டு கைகளாலும் சுழற்றுவதில், எவ்வளவு சுகம்! இடது பக்கமோ வலது பக்கமோ திரும்ப வேண்டுமானால், பவர் ஸ்டியரிங் என்றால் என்னவென்றே தெரிந்திராத அந்தக் காலத்திலேயே என்னுடைய ஸ்டியரிங் சொய்ங் என்று இரண்டு மூன்று சுற்றுச் சுற்றும். வழியில் ஆள் வந்தால் என் வண்டியின் வேகத்தைப் பார்த்து ஒதுங்க வேண்டும். ஒதுங்காதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது பாம்... பாம்... ரப்பர் ஹாரன். வழியில் ஆட்கள் இல்லாதபோது வண்டி டாப் கியரில் சத்தமில்லாமல் ஓடும். கடைக்குப் போய் காசு கொடுத்து பொருள் வாங்கும்போது வண்டியிலிருந்து இறங்காமலே வாங்குவதுண்டு. ஆனால் திரும்பி வந்து கொடுக்கும்போது வண்டியின் வலது பக்கத் கதவைத் திறந்து கீழே குதித்து, டமாரென்று கதவை அறைந்து சாத்திவிட்டுத்தான் கொடுப்பேன். யு போல வளைத்த கம்பியின் இடையில் சைக்கிள் ரிம்மை ஓட்டிக்கொண்டு போய் திரும்பும்போது அதே ரிம் ஸ்டியரிங்காக மாறிவிடுவதும் உண்டு.

முதல்முதலாக லாரியில் பயணித்தது மங்கலாக இப்போதும் நினைவில் உண்டு. வெள்ளகோவிலிலிருந்து மடத்துக்குளத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கிய அப்பா, லாரியில்தான் சாமான்களையும் எங்களையும் ஏற்றிக்கொண்டு வந்தார். ஓர் அதிகாலையின் மங்கிய ஒளியில் தூக்கக் கலக்கத்துடன் லாரியின் பின்னாலிருந்து இறங்கி நின்றது அந்தக் காலையைப் போலவே மங்கலாக நினைவிருக்கிறது. உயர்நிலைப் பள்ளிப்பருவத்தை எட்டியபோது நிஜ லாரியில் அதாவது, லாரியின் கேபினில் ஏறி உட்காரும் வாய்ப்புகள் கிடைத்தன.

எனக்கு சொந்த ஊர் தாராபுரம். அங்கே எங்களுக்கு நிறைய உறவினர்கள். ஆண்டு இறுதியில் கோடை விடுமுறைகள் பெரும்பாலும் தாராபுரத்தில் கழியும். சுல்தானியா பள்ளிவாசலின் வடக்கே, மாரியம்மன் கோவில் வீதியின் கிழக்கே, வாய்க்காலை அடுத்து பெரிய மைதானம் இருக்கும். அதுதான் லாரிகளின் ஷெட். நிறைய லாரிகள் நின்றிருக்கும்.

உறவினர்களில் ஒருவர் கலீம் - ஒன்று விட்ட சித்தப்பா. அவர் ஒரு லாரியின் டிரைவராக இருந்தார். விடுமுறையில் ஊருக்குப் போகும்போதெல்லாம் என் பொழுதுகள் பெரும்பாலும் லாரி ஷெட்டிலேயே கழியும். அல்லது அமராவதி ஆற்றில் கழியும். கலீமுக்கும் எனக்கும் அதிக வயது வித்தியாசம் இல்லை. நண்பனாக நடத்துவார், அதீத பாசத்துடன் பேசுவார். இப்போதும் கலீம் என்று பெயர் சொல்லித்தான் அழைக்கிறேன். அவருடைய சகோதரி என் சின்னம்மாவும் அளவற்ற பாசத்தைப் பொழிவார். அவருடைய கணவர் டிங்கரிங் வேலை செய்பவர். அவருடைய தொழிலும் செவ்வாய்க் கிழமை வாரச் சந்தை நாள் தவிர இதர நாட்களில் லாரி ஷெட்டை நம்பித்தான் இருந்தது. இன்னொரு உறவினர் தின்பண்டங்களை ஒரு டின்னில் போட்டுக்கொண்டு லாரி ஷெட்டில் அலைந்து விற்றுக் கொண்டிருப்பார்.

மாமா தாராபுரத்தில் தாசில்தாராக இருந்தார். விடுமுறைக்குச் செல்வது அவர் வீட்டுக்குத்தான். ஆனால் பேருக்குத்தான் அங்கே போவது. இரவு உறங்கவும், காலை உணவுக்கும் மட்டும்தான் மாமா வீடு. மற்ற நேரமெல்லாம் சேக்காளிகளோடும் மற்ற உறவினர்களின் வீடுகளிலும்தான் இருப்பேன். (சின்னம்மா வீட்டில் பழைய சோறும், பெண்கள் கூடைக்குள் பாத்திரத்தை வைத்து விற்றுக் கொண்டு வந்த தாராபுரத்துத் தயிரும், கோடை காலத்துக்கென்றே வரம் வாங்கி வந்த மாம்பழமும் உணவாகக் கிடைக்கும்.) கலீம் தவிர, இன்னொரு தோழன் சிராஜ். என் வயதுக்காரன், உறவுமுறைச் சகோதரன். அவன் தன் அண்ணனின் லாரியில் கிளியாக இருந்தான். (கிளி என்பது கிளீனர் என்பதன் சுருக்கம்.) அவர்களுடைய லாரியின் பெயர் நாம் இருவர் தமிழ் அல்ல ஆங்கிலம் – WE TWO. அதாவது, அண்ணனும் தம்பியும் இணைந்து ஓட்டும் லாரியாம். சிறிது காலத்துக்குப் பிறகு சிராஜும் டிரைவராகி விட்டான்.

லாரியில் டிரைவர் ஆவதற்கு முதல் தகுதி, யாராவது ஒரு டிரைவரிடம் கிளீனராகச் சேர வேண்டும். சொல்லப்போனால் டிரைவரைவிட கிளிக்குத்தான் அதிக வேலை இருக்கும். வாடகைக்குப் போய்விட்டு வந்த டிரைவர் வண்டியை விட்டுவிட்டு ஹாயாகப் போய்விடலாம். பக்கத்து வாய்க்காலிலிருந்து பக்கெட்டில் தண்ணீர் பிடித்து வந்து கிளீனர்தான் வண்டியைக் கழுவ வேண்டும், தார்பாலினை முறையாக மடித்து வைக்க வேண்டும், கயிறைச் சுருட்டி வைக்க வேண்டும்.... ஓரிரண்டு ஆண்டுகள் கிளியாக இருந்து நம்பிக்கை வந்த பிறகுதான் லாரியை ஓட்ட அனுமதிப்பார். அதுவும் வாடகைக்குப் போகும்போது அல்ல. இதுபோல ஷெட்டில் நிற்கும்போது ரிவர்ஸ் எடுக்க, நகர்த்தி நிறுத்த, கழுவிய பிறகு லேசாக ஒரு டிரையல் பார்க்க அனுமதிப்பார் டிரைவர். அவ்வப்போது அடியும் கிடைக்கும். அடிக்குப் பயந்தவன் டிரைவர் ஆகவே முடியாது. ஒரு டிரைவரிடம் கிளியாகத் தாக்குப் பிடிக்காதவன் இன்னொரு டிரைவரிடம் அவ்வளவு சுலபமாக கிளியாகச் சேர்ந்து விட முடியாது. கிளிகள் எல்லாருமே தம் வாத்தியார்களிடம் எப்போதும் மரியாதையாகவே இருப்பார்கள் - அந்தக் கிளி இன்னும் பத்துக்கிளிகளை உருவாக்கி விட்ட பின்பும்கூட.

தாராபுரம் லாரி ஷெட்டில் இன்னொரு கவர்ச்சிகரமான விஷயமும் இருந்தது கேரம் போர்டுகள். நான்கைந்து கடைகளில் கேரம் போர்டுகள் வைத்திருப்பார்கள். ஒரு ஆட்டத்துக்கு இவ்வளவு என்று காசு கொடுத்துவிட்டு விளையாடலாம். ஆடுபவர்கள் தமக்குள் பந்தயம் கட்டிக் கொள்வார்கள். மங்களூர் ஓடு வேய்ந்த கூரையிலிருந்து சில்க் வயரில் மஞ்சள் குண்டு பல்பு கேரம் போர்டுக்கு மேலாகத் தொங்கும். போரிக் பவுடர் பஞ்சமே இல்லாமல் கொட்டப்படும். முரடர்கள் என்று கருதப்படும் லாரிக்காரர்களின் விரல்கள் நளினமாக காய்களைத் தள்ளும். ஆடுபவர்கள் நான்கு பேர் என்றால், வேடிக்கை பார்க்கவும் உசுப்பிவிடவும் நாற்பது பேர் இருப்பார்கள். சமயத்தில் சண்டையும் வருவதுண்டு. நான் முதன்முதலாக கேரம் ஆடியது அங்கேதான்.

பொழுது போகாமல் லாரி ஷெட்டுக்குப் போனால் கலீம் கிடைப்பார், அல்லது சிராஜ் கிடைப்பான். சும்மா லாரியில் ஏறி ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து அரட்டை அடித்துவிட்டு வருவேன். அதிக நேரம் அப்படி உட்கார்ந்திருக்க முடியாது. எனக்கு வேலையில்லை, ஆனால் கலீமுக்கும் சிராஜுக்கும் வேலைகள் இருக்கும். இப்போது போல செல்போன் இருந்திருந்தால் செல்பி எடுத்து வைத்திருக்கலாம்! இரண்டு பேரும் வாடகைக்குப் போய்விட்டிருந்தால் சும்மா சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பேன். உறவுகளில் மேலும் சிலரும் லாரித் தொழிலில் இருந்தார்கள். அவர்களிடம் கலீம் எங்கே, சிராஜ் எங்கே என்று விசாரிப்பேன். அவர்கள் இல்லாத நேரங்கள் நரகவேதனையாக இருக்கும்.

மாமா தன் மகனுக்காக, வேறொருவருடன் கூட்டு சேர்ந்து சென்னாக்கல் பாளையம் அருகே செங்கல் சூளை வைத்திருந்தார். தாராபுரத்தில் முதல் மாடர்ன் பிரிக்ஸ் சூளை அதுதான். லக்ஷ்மி பிரிக் வொர்க்ஸ் ஒவ்வொரு செங்கல்லிலும் LBW என்று அச்சுப் பதிந்திருக்கும். செங்கல் ஏற்றிச்செல்ல, மண் கொண்டுவர லாரி இருந்தது. மாமா மகனுக்கு சேக்காளியாக தூரத்து உறவைச் சேர்ந்த சையத் சான் இருந்தான்.. பெயரைக் கொஞ்சம் மாற்றினால் சைத்தான். அதற்கேற்ப சைத்தானாகவே இருந்தான். சொந்த லாரியிலேயே டீசல் கணக்கில் கமிஷன் அடித்தவர்கள் அவர்கள் சைத்தானுடன் நட்பு சேர்ந்த மாமா மகன் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி, கடைசியில் சூளை கையைவிட்டுப் போனது வேறு கதை. கலீமும் சிராஜும் இல்லாத சமயங்களில் அந்த லாரியில் ஏறி சூளைக்குப் போய் வருவதும் உண்டு.

கலீமும் சிராஜும் வாடகைக்குப் போய்வந்த பிறகு கதைகதையாக அளப்பார்கள். அவற்றில் சில கதைகள் மிகைப்படுத்திய பொய்கள் என்று இப்போது தெரிகிறது. ஆனால் அப்போது அவற்றை ஆவென்று வாய் பிளந்து கொண்டு கேட்டுக் கொண்டிருப்பேன். எனக்கும் லாரி டிரைவர் ஆக வேண்டும் என்ற ஆசை வந்தது. ஆனால் கிளியின் வேலைப் பளுவைப் பார்த்தபிறகு ஆசையை அமராவதி ஆற்றில் விட்டுவிட்டேன். அது காவிரியில் கலந்து கடலில் மிதந்து கொண்டிருக்கிறது.
 
ஆந்திர மாநிலத்தில் சவுக்கு மரங்களுக்காகக் காத்திருக்கும் லாரிகள்
கலீமும் சிராஜும் சிராஜின் அண்ணனும் சொன்ன கதைகளில் லாரி டிரைவர்களின் வாழ்க்கை அறிமுகமாகியது. எவ்வளவு சிரமமான வேலை என்று தெரிந்தது. வழிப்பறிக் கொள்ளை, இரவு தூங்குவதற்கு நிறுத்திய இடத்தில் திருட்டு, டீசல் திருட்டு, லாரி ஓடும்போதே பின்னாலிருந்து தொற்றி ஏறி, தார்பாலினைக் கிழித்து பொருட்களை எடுத்து கீழே வீசிவிட்டு, ஏதேனுமொரு மேட்டில் லாரி மெதுவாகச் செல்லும்போது கீழே இறங்கி ஓடிவிடுவது, போலீஸ்காரர்களின் தொல்லை... இப்படி பல கதைகளும் அறிமுகமாகியிருந்தன. ஏதேனுமொரு ஊருக்கு சரக்கு ஏற்றிச் சென்று இறக்கியபிறகு திரும்பி வரும்போது ரிடர்ன் லோடுக்காக காத்திருக்க நேரும். சரியாக அமையாத பட்சத்தில் கிடைத்ததை ஏற்றிக்கொண்டு வர வேண்டியிருக்கும். அதுவும் அவருடைய ஊராக இல்லாவிட்டாலும் பக்கத்து நகரமாக இருந்தாலும் போதும் என்று லோடுக்காக ஏங்க வேண்டியிருக்கும். அப்புறம் அந்த நகரத்திலிருந்து ஊருக்கு காலியாகத் திரும்ப வேண்டியிருக்கும்.

அந்தக் காலத்தில் மாவட்டங்களுக்கு எல்லைகளிலும் செக் போஸ்ட் இருந்தது. ஒவ்வொரு செக் போஸ்டிலும் லாரிகள் வரிசையாக நிற்கும். தாலூகா அலுவலக ரெவின்யூ அலுவலர்களில் செக் போஸ்ட்டில் டியூட்டி கிடைத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏகப்பட்ட காசு கிடைக்கும். லாரி டிரைவர்கள் மனதுக்குள் திட்டிக்கொண்டுதான் காசைக் கொட்டியிருப்பார்கள். 

கலீமும் சிராஜும் பிற்காலத்தில் சேரன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் - சிடிசி - பஸ் டிரைவர்களாக ஆகி, இப்போது ஓய்வு பெற்று விட்டார்கள். தாராபுரம் லாரி ஷெட் இப்போது கலீமைப் போலவே மெலிந்து போய் விட்டது. கலீம் இப்போது ஆட்டோ ஓட்டுகிறார்.

நாம் நினைப்பதுபோல லாரி ஓட்டுவது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று அப்போதே எனக்குப் புரிந்திருந்தது. சரக்கை ஏற்றிக் கட்டுவதுகூட பெரிய கலைதான். கட்டு கொஞ்சம் இளகி விட்டால் சரக்கு ஒருபக்கமாகச் சாயும். ஏதேனுமொரு திருப்பத்தில் கவிழ்ந்துவிடக்கூடும். எங்கள் ஊருக்கு மூன்று மைல் மேற்கே சர்க்கரை ஆலை இருந்தது. சீசனில் கரும்பு லாரிகளும் வண்டிகளும் வரிசையாகப் போய்க் கொண்டே இருக்கும். ஊருக்கு மேற்கே யூனியன் ஆபீஸ் மேட்டில் லாரி முக்கி முனகி ஏறும்போது ஓடும் லாரியிலிருந்து கரும்பு உருவியதும் உண்டு. பாடிக்கு மேலே கரும்பை ஏற்றிக் கட்டிக்கொண்டு லாரிகள் போகும். சரியாகக் கட்டாத கரும்பு ஒரு பக்கமாகச் சாய்ந்திருக்கும். கிருஷ்ணாபுரம் கடந்து, நரசிங்காபுரத்தில் சர்க்கரை ஆலையை நோக்கி இடதுபக்கம் லாரி திரும்பும்போது அப்படியே படுத்து விடும்.

நரசிங்காபுரத்துக்கும் மேற்கே, மைவாடி பிரிவுக்கும் சற்று கிழக்கே சாலையோரம் ஒரு கிணறு உண்டு. ஒருகாலத்திலும் எவரும் பயன்படுத்தாத அந்தக் கிணற்றில் மட்டும் ஒருபோதும் தண்ணீர் வற்றியதே இல்லை. சாலை லேசாக வளைகிற இடத்தில் அந்தக் கிணறு இருக்கிறது. இரவில் மேற்கிலிருந்து வரும் லாரிகளில் மாதத்துக்கு ஒரு லாரியாவது கிணற்றுக்குள் விழுந்துவிடும். லாரிக்குத் தாகம் போலிருக்கு... தண்ணி குடிக்கப் போயிருக்கும்டா...என்று நாங்கள் கேலி பேசிக்கொள்வோம். ஆனால், வெகுதொலைவு ஓட்டிவந்த களைப்பில் இரவில் டிரைவரின் கணநேர உறக்கத்தில்தான் விபத்து நிகழ்ந்திருக்கும் என்பது பின்னர் புரிந்தது. மலைப்பகுதிகளிலிருந்து மரங்களை ஏற்றிவரும் லாரிக்கு தனியான சப்தம் உண்டு. அதன் உறுமல் வித்தியாசமாக இருக்கும். இறக்கத்தில் வரும்போது அதை பிரேக் போட்டு நிறுத்துவது சிரமம் என்பது அப்போதே எங்களுக்குத் தெரியும்.

இப்போதெல்லாம் 12 – 16 சக்கர லாரிகள் வந்து விட்டன. கன்டெய்னர் லாரிகள் வந்து விட்டன. அப்போது இருந்தவை பெரும்பாலும் 6 சக்கர லாரிகள் மட்டுமே. ஆனால் அன்றைக்கும் இன்றைக்கும் லாரி டிரைவர்களின் வாழ்க்கையில் மட்டும் மாற்றமே இல்லை, முன்னேற்றமே இல்லை அதே போலீஸ் தொல்லை, செக் போஸ்ட் தொல்லை, திருட்டுத் தொல்லை, வழிப்பறித் தொல்லை, எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது புதிதாக டோல் கேட் கொள்ளை. கலவரம் செய்பவர்களுக்கு எளிதான இலக்கு லாரிதான். கண்ணாடிகளை உடைக்கலாம், சக்கரங்களில் காற்றைப் பிடுங்கலாம், தீ வைக்கலாம். பாதசாரிகளை அல்லது ஸ்கூட்டர்-பைக் போன்ற வாகனத்தை லாரி இடித்தாலும் சரி, அல்லது அவர்கள் லாரியில் இடித்தாலும் சரி - தவறு எப்போதுமே லாரிக்காரன் மீதுதான்! பிரம்மாண்டமான இயந்திரத்தை இயக்குபவன்மீது மறைமுகமான பொறாமை நமக்குள் இருக்கிறதோ என்னவோ?! ஒன்றிரண்டு லாரி வைத்திருப்பவர்களின் வாழ்க்கை புலிவாலைப் பிடித்த கதை. வாங்கிய கடனுக்கு தவணை கட்ட முழி பிதுங்கும், விற்கலாம் என்றால் விலையும் கிடைக்காது. ஒரு விபத்து அல்லது ஒரு திருட்டு போதும் அவர்களின் வாழ்க்கையையே சிதறடிக்க. ஓனராக இருந்துவிட்டு டிரைவராகப் போவது மிகப்பெரிய அவமானம். நாற்கரச் சாலைகளில் லாரிகள் ஓடுவதைப் பார்த்து, ஆஹா... அவர்களுக்கு எவ்வளவு வசதியாகி விட்டது, எவ்வளவு விரைவான போக்குவரத்து வசதி வந்து விட்டது என்று நீங்கள் நினைத்தால், அது முழுக்கவும் மாயைதான்.



நம்ப முடியவில்லையா? இப்போது எதற்காக இதை எழுதுகிறேன் என்று நினைக்கிறீர்களா? லாரி டிரைவர்களின் உண்மையான வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்பினால் தவறாமல் வாசியுங்கள் நெடுஞ்சாலை வாழ்க்கை. கா. பாலமுருகன் எழுதியது. விகடன் வெளியீடு. (ரூ. 175) மோட்டார் விகடனில் தொடராக வெளி வந்ததாம். லாரி டிரைவர்களுடன் பயணித்து அவர்களுடைய அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஞாநி இந்நூலைப்பற்றி பதிவு எழுதியிருந்தார். மதுரை புத்தகத் திருவிழாவில் வாங்கிய மற்ற நூல்கள் எல்லாம் கண்ணில் பட்டதால் வாங்கியவை. இதை மட்டும்தான் விகடன் கடையைத் தேடிப்போய் வாங்கி வந்தேன்.

தில்லி வந்ததிலிருந்தே லாரியிலேயே தமிழ்நாடு செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்குள்ளும் இருந்து கொண்டிருக்கிறது. லாரி டிரைவராக இந்தப் பக்கம் வந்து சென்று கொண்டிருக்கும் முத்துக்குமாரிடம் இதுபற்றிப் பேசியதாகவும் நினைவு. இதுவரை சாத்தியமாகவில்லை. தொழிலிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சாமான்களை மூட்டை கட்டிக்கொண்டு ஊருக்குப் போகும்போதாவது லாரியில் போக வேண்டும் என்ற ஆசை. நிறைவேறுமா என்று தெரியாது. ஆனால் ஆசையையும் கற்பனையையும் எதற்காகக் கட்டுப்படுத்த வேண்டும். அதுபாட்டுக்கு ஒருபக்கம் இருந்து விட்டுப் போகட்டும். இப்போது இருப்பதுபோல பெட் ரெஸ்டில் இருக்கும்போது, எதையும் செய்யத் தோன்றாதபோது, மனதுக்குள் லாரியில் பயணம் செய்யலாம். கேபினில் சமைக்கலாம், பாட்டுக் கேட்கலாம், திறந்த வெளிகளில் உறங்கலாம், வாய்க்கால்களிலும் கால்வாய்களிலும் குளிக்கலாம், இருந்த இடத்திலிருந்தே நெடும் பயணங்களை மனதுக்குள் அனுபவிக்கலாம்.



உங்களுக்குள்ளும் இதுபோல ஆசை இருந்தால், உங்கள் கற்பனைகளுக்கு சுவை சேர்க்க இந்த நூல் உதவக்கூடும்.

Tuesday 13 September 2016

மாரத்தான்

மாரத்தான் என்னும் சொல்லைக் கேட்டதுமே அவரவர் ரசனைக்கேற்ப பொருளோ வேறு சொல்களோ நினைவு வரக்கூடும். எனக்கு அத்தான்... என்னத்தான்.. அவர் என்னைத்தான்... என்கிற பாட்டுதான் ஞாபகம் வரும். அது போகட்டும்.

மாரத்தான் என்னும் சொல் கிரேக்க புராணக் கதையிலிருந்து பிறந்தது. மாரத்தான் என்னும் நகரில் பெர்சியர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் பெரும் போர் நடைபெற்றது. இதில் பெர்சியர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். அந்தக் காலத்தில் - கி.பி. முதல் நூற்றாண்டில் - தந்தியோ, தொலைபேசியோ, இன்டர்நெட்டோ இருக்கவில்லை. அவ்வளவு ஏன், நல்ல போக்குவரத்து வசதிகூட இல்லை. எனவே, செய்திகளைக் கொண்டு செல்வதற்கு ஓட்டக்காரர்களைத்தான் பயன்படுத்தினார்கள். இந்தியாவில்கூட 1857ஆம் ஆண்டு சிப்பாய்ப்புரட்சியின்போது புரட்சிக்கான செய்திகளை குதிரை வீரர்களும் ஓட்டக்காரர்களும்தான் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்றார்கள், சப்பாத்திதான் ரகசியச் செய்திகளுக்கான குறியீடாகப் பயன்பட்டது என்பது வரலாறு. அதுவும் ஒருபக்கம் கிடக்கட்டும்.

கிரேக்கர்களின் வெற்றிச் செய்தியை பெய்டிப்பைட்ஸ் என்ற பெயர் கொண்ட கிரேக்க தூதுவன், மாரத்தான் நகரிலிருந்து ஓட்டமாக ஓடி ஏதென்ஸ் நகருக்குக் கொண்டு சென்றான். "நேனிகேகாமென்" - நாம் வெறறி பெற்றுவிட்டோம் - என்று கூவிவிட்டு அப்படியே விழுந்து இறந்து போனான். இப்படிப் போகிறது ஒரு கதை.

இது முழுக்கவும் உண்மையா பொய்யா என்பது தெரியாது. இருப்பினும், கிரேக்க வரலாற்று ஆய்வாளர் ஹெரோடோட்டஸ் என்பவர், கிரேக்க ராணுவ உதவி தேவை என்ற செய்தியுடன் ஏதென்ஸ் நகரிலிருந்து ஸபார்ட்டா நகருக்கு 240 கிமீ தூரத்தை பிலிப்பைட்ஸ் என்ற தூதன் கொண்டு சென்றான், மீண்டும் ஸ்பார்ட்டாவிலிருந்து ஏதென்சுக்கு ஓட்டமாக ஓடினான் என்று எழுதியிருக்கிறார்.

எது எப்படியோ, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைந்தபோது, கிரேக்கர்களின் பண்டைய பெருமையை வெளிப்படுத்தும் வகையில், மக்களைக் கவரக்கூடிய போட்டி ஏதேனும் நடத்த வேண்டும் என்று சிந்தித்தனர். 1896ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் முதல் ஒலிம்பிக்ஸ் நடைபெற்ற போது, மாரத்தான் என்ற நீண்ட ஓட்டத்தை நடத்தலாம் என்றார் மைக்கேல் பிரியல் என்பவர். ஒலிம்பிக் நிறுவகரான பியரே டி கௌபர்ட்டின் இதற்கு ஆதரவளிக்கவே, மாரத்தான் போட்டி பிறந்தது. இதில் ஆடவர் மட்டுமே பங்கேற்கலாம் என்ற விதி 1984இல் மாற்றப்பட்டு பெண்களும் பங்கேற்கத் துவங்கினர்.

நவீன ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மாரத்தான் போட்டி இறுதி நிகழ்ச்சியாக இடம் பெறத் துவங்கியது. 1896இல் 40 கிலோமீட்டர் என்று இருந்தது படிப்படியாக மாற்றம் பெற்று, 1924 முதல் 42.195 கிலோமீட்டர் தூரம் கொண்ட போட்டியாக நிலை பெற்றது. ஒலிம்பிக் மாரத்தான் புகழ்பெற்றது என்றாலும், ஆண்டுதோறும் உலகெங்கும் சுமார் 800 மாரத்தான் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பாஸ்டன், நியூயார்க், சிகாகோ, லண்டன், பிரிட்டன் ஆகிய மாரத்தான் போட்டிகள் புகழ் பெற்றவை.

சரி, ஹாஃப் மாரத்தான் என்றால் என்ன? 42 கிலோமீட்டருக்கு பதிலாக அதில் பாதியை - 21.097 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது ஹாஃப் மாரத்தான் - அதாவது அரை மாரத்தான். இதிலும், டேய்டன், லாஸ் வேகஸ், நியூ ஆர்லியன்ஸ், மான்செஸ்டர், பிலடெல்பியா, பர்மிங்ஹாம், ஈஸ்ட் லண்டன், மிலான், ரோட்டர்டாம், பீனிக்ஸ், ஹேக் போன்ற அரை மாரத்தான்கள் புகழ் பெற்றவை.

ஆரம்பத்தில் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் சிறந்து விளங்கி வந்தனர். கடந்த பத்து இருபது ஆண்டுகளாக கென்யா, எதியோப்பியா போன்ற ஆப்பிரிக்க நாட்டினரும் சாதனை புரிந்து வருகின்றனர். அண்மைக்காலங்களில் தில்லி ஹாஃப் மாரத்தான், மும்பை ஹாஃப் மாரத்தான் போட்டியும் புகழ் பெற்று வருகிறது.
 
 2016 மும்பை மாரத்தானில் ஓ.பி. ஜெய்ஷா. இந்திய ஒலிம்பிக் நிர்வாகம் முறையாக குடிநீர் வசதி ஏற்பாடு செய்யாமல் விட்டதால் கடந்த ஒலிம்பிக்கின்போது கடைசிக் கோட்டை எட்டி மயங்கி விழுந்தவர் இவர்தான் 
இந்த மாரத்தான் ஓட்டம் பற்றி முக்கியமான ஒரு கேள்வி அதைப் பார்ப்பவர்களுக்கு எழக்கூடும். அதாவது, ஆயிரக்கணக்கானோர் இதில் ஓடுகிறார்கள். துவக்கப் புள்ளியில் அத்தனை பேரும் நிற்க முடியாது. எனவே துவக்கப் புள்ளிக்குப் பின்னே வரிசையாக நிற்க வேண்டும். போட்டி துவங்கியதும் துவக்கப் புள்ளிக்கு அருகில் இருப்பவர் முதலில் ஓடி விடுவார். பங்கேற்பவர் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால், வரிசையின் கடைசியில் நிற்பவர் துவக்கப் புள்ளியை அடைவதற்கு சில சமயங்களில் 10-20 நிமிடம்கூட ஆகிவிடும். 2002இல் சிகாகோ ஒலிம்பிக்கில் கடைசியில் இருந்தவர் துவக்கப் புள்ளியை எட்டுவதற்கே எட்டரை நிமிடம் பிடித்தது.

அப்படியானால், எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும் முதலில் ஓடிய நபரை கடைசியில் ஓடும் நபர் எட்டவே முடியாது. இது எப்படி நியாயமான போட்டியாகும் என்பது முக்கியமான கேள்வி. அதேபோல, இறுதிக்கோட்டை ஒரே நேரத்தில் பத்துப் பதினைந்து பேர் எட்டினால், யார் முதலிடம் பெற்றார் என்பதை முடிவு செய்வதும் கடினம். என்னதான் அதிவேக காமிராக்கள் இருந்தாலும், மில்லிசெகண்ட்களை கணக்கிடுவது சிரமம்.

இந்தப் பிரச்சினைக்கு நவீன கணினித் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. ஒவ்வொரு நபருக்கும் காலணியில், கணுக்கால் பகுதியில் ஒரு சில்லு - அதாவது சிப் ஒன்று பொருத்தப்படுகிறது. இந்த சில்லு, தண்ணீரில் நனைந்தாலும் வெயிலில் பட்டாலும் கெடாது. ஒவ்வொரு சிப்புக்கும் ஒரு எண் தரப்பட்டிருக்கும். துவக்கப் புள்ளியில் மின்னணு காந்தப்புலன் கொண்ட ஒரு கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும்.

ஓடி வருகிற நபர் எப்போது துவக்கப் புள்ளியில் விரிக்கப்பட்டுள்ள கம்பளத்தை எட்டுகிறாரோ அப்போது அந்த சிப்பிலிருந்து சிக்னல் புறப்பட்டு கம்பளத்தை அடையும். கம்பளத்துடன் இணைக்கப்பட்டுள்ள கணினியில், அவர் துவக்கப்புள்ளியை மிதித்த நேரம் துல்லியமாகப் பதிவாகி விடும். அதேபோல போட்டி முடியும் இடத்திலும் இதே போன்ற கம்பளம் இருக்கும். ஓடிவந்தவர் எப்போது அதைத் எட்டுகிறாரோ அந்த நேரமும் கணினியில் பதிவாகி விடும். சேர்ந்த நேரத்திலிருந்து புறப்பட்ட நேரத்தைக் கழித்தால் அவர் ஓட்ட நேரம் துல்லியமாகத் தெரிந்து விடும். பத்தாண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான இந்த சிப் டைமிங் முறை இன்று மாரத்தான் போட்டிகளுக்கு பெரிதும் கைகொடுக்கிறது.

- 2008 ஒலிம்பிக்கின்போது வானொலியில் வழங்கிய நிகழ்ச்சியிலிருந்து சுருக்கப்பட்டது.