Friday 4 October 2019

சின்ன விஷ(ய)ங்கள்


இரண்டு மாதங்களுக்கு முன்னால் பேஸ்புக்கில் ஒரு பதிவு எழுதினேன். நாம் வாங்கும் பால் பாக்கெட்டை வெட்டும்போது எப்படி வெட்டினால் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கலாம் என்பதே அது. அந்தப் பதிவு கீழே :
*
நகரங்களில் இருக்கிற நாம பெரும்பாலும் பாக்கெட் பால்தான் வாங்கறோம்.
பாலிதீன் பாக்கெட்டின் மூலையில் கட் பண்ணி பாத்திரத்தில் ஊத்தறோம்.
அரை லிட்டரோ, ஒரு லிட்டரோ... அந்த பாலிதீன் பாக்கெட், பெரும்பாலும் ரீசைக்கிளுக்குப் போகும்.
ஆனா, வெட்டப்பட்ட அந்த சின்ன பாலிதீன் துண்டு... ?
கண்ணுக்குத்தெரியாத பல லட்சம் பாலிதீன் துண்டுகள் நீர் நிலைகளில் சேருது.
சென்னையில் ஒரு நாளில் பயன்படும் பாக்கெட் பாலின் அளவு சுமார் 25 லட்சம் லிட்டர். ஆமாம், பாக்கெட் மட்டும்தான் சொல்றேன்.
25 லட்சம் லிட்டர் பாலை ஒரு லிட்டர், அரை லிட்டர்னு பாத்தா, சுமார் 40 லட்சம் பாக்கெட்டுகள். தயிர், மோர் பாக்கெட்டுகளும் சேர்த்தா, சென்னையில் மட்டும் ஒரு நாளில் சுமார் 60 லட்சம்!
சுமார் 60 லட்சம் சின்னத் துணுக்குகள் குப்பையிலும் கழிவுநீரிலும் போகுது.
எண்ணெய் பாக்கெட், ஷாம்பு சாஷே, இது மாதிரி பல விஷயங்களுக்கும் இது பொருந்தும்.
இந்த பாக்கெட்டுகளை எல்லாம் நான் எப்போதும் படத்தில் இருப்பது போலத்தான் வெட்டுவேன். மூலையில் துண்டுப்பகுதியை வெட்டி எடுக்க மாட்டேன்.




நீங்களும் இப்படிச் செய்யலாம்.
சின்ன விஷயம்தான். ஆனா பெரிய விஷம் பரவாம தடுக்கலாம்.
தினமும் இதை செய்யப் பழகணும். இத்தனை காலம் ஊறிப்போன பழக்கத்துல டக்குனு வெட்டி எறியத்தான் கை போகும்.
நானும் உங்களை மாதிரிதான்னு சொல்றவங்களுக்கு என் அன்பு.

பதிவை என் பேர் போட்டோ, போடாமலோ ஷேர் செய்யலாம். அல்லது உங்கள் மொழியில் எழுதிப் பரப்பலாம். இந்தச் செய்தி பரவ வேண்டியது முக்கியம்.
*
இந்தப் பதிவு பேஸ்புக்கில் தீயாய்ப் பரவியது. பேஸ்புக் மெசஞ்சரிலும் வாட்ஸ்அப்பிலும் வந்த செய்திகளுக்கு அளவே கிடையாது. தமிழ் ஹிண்டு நாளிதழில் வெளிவந்தது. இன்னும் சில பத்திரிகைகளிலும் இந்தத் தகவல் பரப்பப்பட்டது.


பப்புவா நியூ கினி தமிழர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இது பகிரப்பட்டது. கனடாவிலும் அமெரிக்காவிலும், மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் என பல நூறு செய்திகள் வந்தன.

இன்னும் சிலர் அந்தப் பதிவை வீடியோவாகவும் செய்து வெளியிட்டிருந்தார்கள். அப்படி வந்த வீடியோக்களில் இதுவும் ஒன்று.

*
அந்தப் பதிவில் சொல்லாமல் விடப்பட்ட மற்றொரு விஷயம் பால் பாக்கெட்களை எப்படி கழித்துக் கட்டலாம் என்பது.

பால் பாக்கெட்டுகளை அன்றாடம் தூக்கிப் போட வேண்டாம். என்னதான் முழுதாக குப்பையில் தூக்கி எறிந்தாலும், எல்லாமே மறுசுழற்சிக்குப் போய்விடுவதில்லை. எனவே, ஒரு கம்பியில் கோத்து வைக்கலாம். மாதம் ஒரு முறை பழைய பேப்பர் வாங்க வருகிறவர், அல்லது குப்பை பொறுக்குவோர் உங்கள் தெரு வழியாகப் போகும்போது அவர்களிடம் கொடுக்கலாம். சென்னை போன்ற நகரங்களில் ஆவின் நிறுவனம் 10 பைசா விலைக்கு திரும்பப் பெறுவதாகத் தகவல் கிடைத்தது. அப்படி விற்று, மாதம் 3-5 ரூபாய் வந்து நமக்கு ஆவப்போவது ஏதுமில்லை. ஆனால் குப்பை பொறுக்கும் மகா மோசமான தொழிலில் இருக்கும் சிறுவர்களுக்கு, முதியோருக்கு, ஆதரவற்ற பெண்களுக்கு அது பேருதவியாக இருக்கும். அது மட்டுமல்ல, அந்த பால் பாக்கெட் உறைகள் எல்லாமே மறுசுழற்சிக்குப் போகும் வாய்ப்பும் கிடைக்கும்.


ஏன் இதற்கு இவ்வளவு முக்கியம்? முந்தைய பத்தியில் குறிப்பிட்ட அந்தக் காரணம் என்ன? இதுதான் காரணம், அந்தப் புத்தகத்தில் வந்த வரிகள்

பலவிதங்களிலும் பிளாஸ்டிக் நச்சுத்தன்மை கொண்டது என்று நாம் அறிந்துள்ள போதிலும், மற்றவர்களுக்கும் இந்த விவரங்களை எடுத்துச் சொல்லவேண்டும். நம் வேலை, ஒழிவுநேரம், சமூகப்பணி ஆர்வம் போன்றவற்றுக்கு ஏற்றவாறு மற்றவர்களுக்கு எடுத்துரைத்து அவர்களுடைய வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்தத் துணையாக இருக்கலாம். நாம் மேற்கொள்கிற சின்னஞ்சிறு முயற்சிகளாலும் பெரிய மாற்றம் நிச்சயம் உருவாகும்.

பிளாஸ்டிக் ஒழிப்புக்குச் சாதகமாக எவரேனும் எத்தகைய சிறிய முன்னெடுப்பை மேற்கொண்டாலும் அதை நாம் பாராட்டுவதோடு, அதற்கு ஆதரவாக இருப்பதையும் தெரியப் படுத்துவோம். அதைப்பற்றி அறிய வரும் மற்றவர்களும் அவ்வாறே செயல்படுவார்கள்.
*
பி.கு. - அன்றாடம் பயன்படுத்திய பால் பாக்கெட்டுகளை இப்படி கம்பியில் கோத்து வைக்க விரும்பினால் ஒரு விஷயத்தை கவனத்திலை வைக்கவும். பால் / தயிரை பாத்திரத்தில் ஊற்றிய பிறகும் பாக்கெட்டின் உள்பகுதியில் கொஞ்சம் ஒட்டியிருக்கலாம். குறிப்பாக, பிரிஜ்ஜிலிருந்து எடுத்த பாக்கெட்டாக இருந்தால், உள்பக்கம் நிறையவே ஒட்டியிருக்கும். பாலை ஊற்றிய பிறகு பாக்கெட்டை அப்படியே வைத்தால், ஓரிருநாட்களில் நாற்றம் எடுக்கும். எனவே, பாத்திரத்தில் ஊற்றியபிறகு, பாக்கெட்டில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அலசி பாலில் ஊற்றிக்கொள்ளலாம். பாக்கெட்டையும் சுத்தமாக அலசி கம்பியில் கோத்து வைக்கலாம். மாதம் ஒருமுறை குப்பை பொறுக்க வருகிறவர்களுக்குக் கொடுக்கலாம்.

சரி, பால் பாக்கெட் பற்றி அந்தப் பதிவு எழுத எனக்குத் தூண்டுகோலாய் இருந்தது எது?
அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

No comments:

Post a Comment