Wednesday 30 November 2016

எங்கே போயின 500 ரூபாய் நோட்டுகள்?



ஐநூறு ரூபாய் நோட்டுகள் வெளிவந்துவிட்டன. இன்னும் நான்கைந்து நாட்களில் நிலைமை சீராகி விடும் என்று கூறப்பட்டு பத்து நாட்களுக்கு மேலாயிற்று. இன்னும் 500 ரூபாய் நோட்டுகளை பலரும் பார்க்கவே இல்லை.

இதற்கிடையில், என்னுடைய வங்கியில் 500 ரூபாய் நோட்டு கிடைத்தது, எந்த சிக்கலும் இல்லை, கூட்டமும் இல்லை என்று சிலர் எழுதுகிறார்கள். அவர்கள் எழுதுவதைப் பார்க்கும்போது, அவை பெரும்பாலும் தனியார் வங்கிகள். ஆக, தனியார் வங்கிகளுக்கு மட்டும் முன்னுரிமை தரப்பட்டு ஐநூறு ரூபாய் நோட்டுகள் போய்ச் சேருகின்றன. பொதுத்துறை வங்கிகளுக்குப் போகவில்லை என்ற சந்தேகம் எவருக்கும் எழும். வங்கி அதிகாரிகளுக்கும் இதே சந்தேகம் எழுந்து, அது பத்திரிகைச் செய்தி ஆகியுள்ளது.



டீமானிடைசேஷனை ஆதரித்து எழுதுபவர்களுக்கு மட்டும் எப்படி 500 ரூபாய் நோட்டு எளிதாகக் கிடைக்கிறது? நண்பர் அருண் எழுதிய கற்பனை உரையாடல் :
 *
சார், புது 500 ரூவா நோட்டு கொஞ்சம் ரெடியாயிருக்கு. விநியோகத்துக்கு அனுப்பிரலாமா....?

சீக்கிரம் அனுப்பு. எங்கே அனுப்பறே?

2000 நோட்டே இன்னும் பற்றாக்குறையா இருக்குற எடத்துக்கெல்லாம் உடனே அனுப்புறேன்...

அங்க எதுக்கு அனுப்பனும் ??

உழவுக்கு, உரத்துக்கு, மளிகைக்கு, மருத்துவத்துக்கு இப்படி எல்லாத்துக்கும் பணமா தேவைப்படுற எல்லாரும் அங்கதான வரிசைல நிக்குறாங்க...?

தேவைப்படுறவனுக்கு பணத்தைக் குடுத்தா அதை செலவு பண்ணிட்டு அடுத்த செலவுக்கு மறுபடியும் பணமெடுக்க வரிசைல வந்து நிப்பான்... மீடியாக்காரன் மக்கள் அவதின்னு நியூஸ் போடுவான்.

அப்போ எங்கதான் அனுப்ப ...?

சிட்டில உள்ள ஐடி பார்க்ல உள்ள எல்லா ஏடிஎம்களையும் முதல்ல நிரப்ப சொல்லு... அதுக்கும் மேலே மிச்சமிருந்தா மத்த இடத்துக்கு அனுப்பு.

ஆனா அவங்கதான் மீல் பாஸ், பேடீஎம், கிரெடிட்/டெபிட் கார்டு, ஆன்லைன் பர்சைஸ், டோர் டெலிவரின்னு இருக்காங்களே, அவங்களுக்கு இவ்ளோ லிக்யூட் கேஷ் தேவைப்படாதே...?!

அது எனக்கும் தெரியும். அவசியம் உள்ளவனுக்கு காசு குடுத்தா செலவழிப்பான்.அவசியம் இல்லாதவனுக்கு குடுத்தா அத வச்சு செல்ஃபீ எடுத்து போஸ்ட் போடுவான்...அத பாத்துட்டு இன்னும் நாலு பெரு செல்ஃபீ போடுவான்....
பத்தலைனா நாலு தேசபக்தி கட்டெறும்பை பிடிச்சு சட்டைக்குள்ள விட்டோனு வையி... பொது ஜனம் வரமுடியாத, கேம்பஸ் உள்ளாடி இருக்குற பாங்குக்கு போய் பணம் வித்ட்ரா பண்ணிட்டு வந்து... நான் பத்து நிமிஷம் தான் லைன்ல நின்னேன் பணம் எடுத்துட்டு வந்துட்டேன்... நாட்டுக்காக ஒரு பத்து நிமிஷம் பொறுக்க முடியாதான்னு போஸ்ட் போடுவான்... லைக்கு ஷேர்ன்னு சும்மா பிச்சுக்கும்..... 
அடுத்த பேட்ச் பணம் வர வரைக்கும் நாமளும், பணம் இல்லைன்னு சொல்றதெல்லாம் பொய்... சமூக வலைத்தளத்துல பாருங்க.... எதிர்க் கட்சிகள் மிகை படுத்துறாங்கன்னு சொல்லி சமாளிச்சுட்டே போலாம்....
எது வேணா தீரலாம்... தேசபக்தி எறும்பு மட்டும் எப்பவும் ஸ்டாக் வச்சிருக்கணும்... புரிஞ்சுதா...

நல்லா புரிஞ்சுது சார்...!

Tuesday 29 November 2016

பணத்தாள் நீக்கம் – ஏழைகளின்மீதான மரண அடி



டீமானிடைசஷேன் – ஏழைகளின் சேமிப்புகளை செல்வந்தர்களுக்கு நிரந்தரமாக மாற்றும் மரண அடி
(ஸ்க்ரோல்-இன் கட்டுரையின் தமிழாக்கம்)

பணத்தாள் நீக்கம் குறித்தான விவாதத்தில் பெரும்பகுதி, பொருளாதாரம் சீரடையும் அல்லது ரொக்கப் பணம் தேவைப்படாத நிலை வரும் என்பதைப் பற்றியே பேசுகிறது. இரண்டும் நடந்தால் நல்லது என்பது அதன் உள்ளடங்கிய அர்த்தம். ஆனால், பொருளாதாரத்தின்மீது ஒட்டுமொத்தமாக என்ன தாக்கம் ஏற்பட்டாலும் சரி, வளங்களின் பகிர்வின்மீது மிகப்பெரும் தாக்கம் ஏற்படும் என்பதை இந்த வாதம் புறக்கணிக்கிறது. டீமானிடைசேஷன் என்பது பெரியதொரு வெற்றிடம் சொல்லப்படுவதற்கு நேர் மாறாக - வலிமையற்றவர்களிடம் இருக்கும் வளங்களை செல்வாக்கு மிக்கவர்களுக்குச் சென்றடையுமாறு உறிஞ்சுகிற வெற்றிடம். குறிப்பாக, இந்த மாற்றம் நிரந்தரமானது.

இந்தியர்களில் எத்தனை பேர் முறைசாராத் தொழில்களில் இருக்கிறார்கள் என்ற மதிப்பீடுகள் மாறுபடலாம்; ஆனால் சுமார் 80%-90% முறைசாராத் தொழில்களில்தான் இருக்கிறார்கள். அவர்கள் சம்பாதிப்பதும் செலவு செய்வதும் ரொக்கமாகத்தான். இப்போது ஏற்பட்டுள்ள ரொக்கப் பண வறட்சி, இவர்கள் எல்லாரையும் வாட்டும், மற்றவர்களைவிட மிக அசாதாரணமாக வாட்டும்.

அசாதாரணமான தாக்கம் என்பது வீட்டுக்குள்ளிருந்து துவங்குகிறது. குடிகார, அடித்து உதைக்கிற, பொறுப்பற்ற கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்ட உழைக்கும் பெண்கள், அவசரத் தேவைகளுக்காக பணத்தை ஒளித்து வைத்திருப்பார்கள். இப்போது அந்தப் பணம் முழுக்கவும் தொலைந்து விட்டது, அல்லது வெளியாகி விட்டது. இரண்டில் எதுவாக இருந்தாலும் சரி, பெண்ணிடம் இருந்த ஒரு ஆயுதம் போய் விட்டது. அவளை சுரண்டுவது இன்னும் எளிதாகிவிட்டது.

ரபி என்பது குளிர்காலத்தில் விதைத்து, வசந்தத்தில் அறுவடை செய்யும் பயிர். நவம்பர் மத்தியில்தான் ரபி பயிருக்கு விதைக்கும் காலம். விவசாயிகள் விதைக்க முடியவில்லை, பயிர்களை விற்க முடியவில்லை. பணத்தாள் நீக்கம் காரணமாக கூட்டுறவு வங்கிகள் அடைபட்டு விட்டதால் அவர்கள் கடன் கொடுப்பவர்களை நாட வேண்டியதாயிற்று. இதற்காக அவர்கள் அதிக வட்டி கொடுக்க வேண்டியிருக்கும். கடனை திருப்பிச் செலுத்த முடியாது போனால், நிலமும் கைவிட்டுப் போய்விடும்.

சிறிய தொழிற்சாலைகளில் லேஃஆப் விடப்பட்டு கொத்துக் கொத்தாக ஆட்கள் வேலையிழக்கிறார்கள். அவர்களின் நிலையும் இதுதான், சிறிய தொழிற்கூடங்களின் உரிமையாளர்களின் நிலையும் இதுதான். பணத் தேவைக்காக தனியாரிடமிருந்து அதிக வட்டிக்கு கடன் பெற வேண்டியதாகிறது, விளைவாக, இருக்கிற சொத்துகளை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

உணவு, மளிகை, மருத்துவச் செலவு, அவசரச் செலவு என பழைய நோட்டுகளை மாற்ற வேண்டிய ஒவ்வொருவரும் தரகர்களை அணுக வேண்டியிருந்தது. சனிக்கிழமை நான் டேராடூனில் ஒரு சேரியில் இருந்தேன். அந்த சேரியில் சுமார் 300 குடும்பங்கள் இருந்தன. நான் அங்கே இருந்தபோது குறைந்தது ஐந்து பேர் 500 ரூபாய் நோட்டுக்கு 100 ரூபாய் நோட்டு வேண்டுமெனக் கேட்டு சேரியின் தலைவரிடம் வந்தார்கள். அவர் நேர்மையான மனிதர், கமிஷன் ஏதும் வாங்கவில்லை. ஆனால் பணத் தரகர்கள் இதுதான் நேரம் என்று சுரண்டுகிறார்கள். 500 ரூபாய் நோட்டுக்கு 400 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கு 800 ரூபாய். பணத்தை மாற்றிய எவரும் தம்மிடமிருந்த ரூபாயின் மதிப்பில் 20% ஒரே இரவில் இழந்தார்கள்.

சிறிய வணிகர்கள், சாலையோரக் கடைக்காரர்கள், பெட்டிக் கடைக்காரர்கள் போன்றோர் தமது வியாபாரத்தை ஆன்லைன் வர்த்தகத்திடம் இழந்து விட்டார்கள். பே டிஎம் முறையை பயன்படுத்தலாம் என்றால், அதற்கு ஒரு ஸ்மார்ட் போன் தேவை, 10 ஆயிரத்துக்கு மேல் வருமானம் என்றால் டேக்ஸ் இன்பர்மேஷன் எண் தேவை. சிறு வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள சோதனைகள் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

புழக்கத்தில் இருந்த பணம் முழுவதையும் உறிஞ்சி எடுத்துக்கொண்டதால் வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கின்றன. இதன் காரணமாக முதலீடு அதிகரிக்கும் என்கிறார்கள் சிலர். பணப்பற்றாக்குறை என்றால் டிமாண்டே இல்லை என்னும்போது, முதலீடு எப்படி அதிகரிக்கும் என்று தெளிவில்லை.

ஆனால், வட்டி விகிதம் குறைவதால் பயனடையக்கூடிய ஒரு பிரிவு உண்டு கடன் வாங்கியவர்கள்தான் அவர்கள். எவ்வளவு அதிக கடன் வாங்கினார்களோ அவ்வளவுக்கு லாபம். 2015 மார்ச் கணக்கின்படி, 10 கார்ப்பரேட் நிறுவனங்கள் 7.3 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் கடன் வைத்திருந்தார்கள். வட்டிவகிதம் ஒரு சதவிகிதம் குறைந்தாலும் இந்த ஆண்டு மட்டும் அவர்களுக்கு 7300 கோடி ரூபாய் லாபமாகும். கோடிக்கணக்கான மக்கள் தமது பணத்தைப் பயன்படுத்த முடியாமல் போனதால் மட்டுமே கார்ப்பரேட்களுக்கு இந்த அதிர்ஷடம் கிடைத்திருக்கிறது. பணத்தின் உரிமையாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பலனை அதைவிட அதிகமாக கார்ப்பரேட்டுகள்தான் அனுபவிக்கிறார்கள்.

எவ்வளவு நோட்டுகள் வங்கிக்கு வரவில்லையோ அவ்வளவும் கறுப்புப் பணம் என்று சிலர் பேசுகிறார்கள். வங்கியை அணுக வசதி இல்லாதவர்கள், முதியவர்கள், கியூவில் நிற்கும் அளவுக்கு நேரத்தை செலவழிக்க இயலாதவர்கள், முறையான அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆகியோரின் கையிருப்பிலிருந்த பணம் வராது. உதாரணமாக, அடையாள அட்டை இல்லாதவர்களை எடுத்துக்கொள்வோம். இந்திய அரசு தருகிற புள்ளிவிவரங்களின்படி பார்த்தாலும் வயது வந்தவர்களில் 5.8 கோடிப் பேரிடம் ஆதார் அட்டை இல்லை. இவர்களிடம் வேறு அடையாள அட்டையும் இருக்காது, வங்கிக் கணக்கும் இருக்காது என்று உறுதியாகச் சொல்ல்லாம். இந்தியாவில் ஒவ்வொரு குடும்பமும் அவசரச் செலவுக்காக ரொக்கப் பணத்தை வைத்திருக்கும். இதுகுறித்த ஒரு கணக்கெடுப்பில், வருமானத்தில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் 59% பேர் பணத்தை ரொக்கமாக வீட்டிலேயே வைத்திருப்பார்கள் என்று தெரிந்தது. இவர்கள் ஒவ்வொருவரிடமும் மாற்ற முடியாத, வங்கியில் போட முடியாத 2000 ரூபாய் இருந்தது என்றால், அதன் மதிப்பு 11,400 கோடி ஆகும்.

மேற்சொன்ன நஷ்டங்கள் எதிலும் 50 நாட்களில் முன்னேற்றம் வந்து விடாது. நிலத்தை இழந்தது, சேமிப்பு போனது, வேலை இழந்தது, கமிஷன் கொடுத்தது, உணவோ மருந்தோ இல்லாமல் மக்கள் இறந்தது இதில் எதுவும் திரும்பி வரப்போவதில்லை. இழப்போ லாபமோ நிரந்தரம். மேலும், பணத்தாள் நீக்கத்தின் காரணமாக பெரும்பான்மை மக்களின் பெருமளவிலான செல்வ வளம் இடம் பெயர்ந்தது எந்தவித உற்பத்தி சார் காணமாகவும் அல்ல. இதனால் பயன் பெறுகிறவர்கள் எவரும் அதற்காக ஒரு துரும்பையும்கூட கிள்ளிப்போட்டவர்களும் அல்ல. அவர்கள் வலிமை உள்ளவர்களாக இருப்பதால் அவர்கள் பெருத்த லாபம் அடைகிறார்கள். அடக்குமுறைப் பொருளாதாரம் என்பதற்கு இதைவிடப் பெரிய விளக்கம் இருக்க முடியாது.

பணத்தாள் நீக்கத்தின் ஆதரவாளர்கள், இது வரி ஏய்ப்பைத் தடுக்கும் என்கிறார்கள். ஆனால் இந்த அரசு வரி ஏய்ப்பை குறித்து கவலைப்படும் என்று எதிர்பார்க்க எந்த நியாயமும் இல்லை. இந்தியாவில் மிகப்பெரிய வரி ஏய்ப்பாளர்கள் பெரிய கம்பெனிகள்தான். உதாரணத்துக்கு, நடப்பில் இருக்கிற மிக முக்கியமான பெரிய வரி ஏய்ப்பு வழக்கு வோடஃபோனுக்கு எதிரானது. 20 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கு. ஆனால், வோடஃபோன் பயன்படுத்தி வந்த சட்டத்தின் ஓட்டையை அடைப்பதற்காக 2012இல் கொண்டு வந்த விதி General Anti-Avoidance Rules செயல்படுத்தப்படவே இல்லை. முந்தைய காங்கிரசும் சரி, 2014இல் வந்த பாஜக அரசும் சரி, இந்த விதிகளை நடைமுறைப்படுத்துவதை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்துள்ளன. 2017 ஏப்ரலுக்கு முந்தைய விவகாரங்களில் இந்த விதி செல்லுபடியாகாது என்று இந்த அரசு இப்போது அறிவித்திருக்கிறது! வரி ஏய்ப்புக்காக தண்டனை விதிப்பது என்பது சூட்கேஸ்களில் பணத்தை வைப்பவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் போலும்!

திடீர் வரி வருவாய் பெருக்கம் அல்லது ரிசர்வ் வங்கி அரசுக்கு டிவிடென்ட் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் தற்காலிகமாக சில நலத் திட்டங்களை அறிவிக்கச் செய்யலாம். ஆனால் பணத்தாள் நீக்கத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடுசெய்யக்கூடிய வகையில் பொதுநலத் திட்டங்களில் இந்த அரசு செலவு செய்யாது, செலவு செய்யக்கூடிய அரசியல் நோக்கமும் அதனிடம் கிடையாது. பணத்தாள் நீக்கம் என்பது ஏழைகளுக்கு உதவுவதற்காக வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிரான போர் என சித்திரிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்தியப் பொருளாதாரத்தை இன்னும் ஏற்றத்தாழ்வு கொண்டதாகவே இது மாற்றும். பாதிப்புக்கு ஆளாகும் பெரும்பான்மை மக்கள் சமூகம் இன்னும் அதிக பாதிப்புக்கு ஆளாகும்.

சந்தேகமில்லாமல் இது அதிரடிதான் ஏழைகள் மீதான மரண அடி.

Thursday 24 November 2016

பணத்தாள் நீக்கம் என்னும் கொடுங்கனவு

எம்.எஸ். ஸ்ரீராம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். ஆங்கிலக் கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

ரூபாய் நோட்டுகளை செல்லாதென அறிவித்த டீமானிடைசேஷன் என்னும் நடவடிக்கையின் விளைவுகள் வெளித்தெரியத் துவங்கி விட்டன. ஆனால், நமக்குக் காணக் கிடைப்பது நம் அண்டைப் பகுதிகளில் ஏற்பட்ட விளைவுகள் மட்டுமே பெரும்பாலும் ஊடகங்கள் சென்றடையக்கூடிய நகர்ப்புறப் பகுதிச்செய்திகள் மட்டுமே.

ஏதோவொரு கிராமத்தில் காத்திருக்கும் சாமானியர்கள் எப்படி அடி வாங்குகிறார்கள் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

நாட்கள் செல்லச்செல்ல வேளாண்மைச் சந்தைகள் எப்படி சீர்குலையும், சரக்கு லாரிகள் எப்படித் தேங்கி நிற்கும், பொருளாதாரச் செயல்பாடுகள் எப்படி மந்தமடையும் என்பதையெல்லாம் பார்க்கப் போகிறோம். நாட்டின் நன்மைக்காக இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று நமக்குக் கூறப்படுகிறது. இந்த வாதம் பெரும்பாலும் அபத்தமானது. கணக்கில் வராத செல்வம் வைத்திருக்கிறவர்களை இது பாதிக்கும் என்றாலும், நேர்மையாக வரி செலுத்துபவரை அதைவிடப் பன்மடங்கு பாதிக்கிறது.

பண நோட்டின் முக்கியத்துவம் என்பது, அதை மாற்றக்கூடிய தன்மையில்தான் இருக்கிறது. (பணத்தைக்கொடுத்து பொருளை வாங்கலாம், பொருளைக் கொடுத்து பணத்தை வாங்கலாம், பண நோட்டைக் கொடுத்து வேறு நோட்டுகளை வாங்கலாம்.) இதர எல்லா சொத்துகளும் குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த சொத்துகள் அவற்றுக்கு உடைமையாளன் என்ற அடையாளம் உண்டு. செல்பேசியோ, சீறிப்பாயும் மோட்டார் பைக்கோ, அந்த சொத்துக்கு உரிமையாளன் என்ற அடையாளம் கொண்டவை. ஆனால் பண நோட்டு என்பது, அதை வைத்திருப்பவருக்குச் சொந்தமானது, கை மாறும்போது மாறுபவருக்குச் சொந்தமாகிறது. அரசு அறிவித்த திடீர் நடவடிக்கை, மாற்றப்படக்கூடிய சொத்தினை குறிப்பிட்டதொரு நிலைச் சொத்தாக மாற்றுகிறது சிறிது காலத்துக்குத்தான் என்றாலும்கூட, பண நோட்டுகள் வைத்திருப்பவரின் அடையாளத்துடனும் வருவாயுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது. பழைய நோட்டுகளைக் கொடுத்து புதிய நோட்டுகளை வாங்குவோரின் விரலில் மை வைக்கும் அபத்தமான செயல், பண நோட்டின் இயல்பையே மாற்றுகிறது. கணக்கு வைக்கப்பட்டு, வரி விதிக்கப்படக்கூடியதாக கையில் இருக்கும் வருவாய் மற்றும் பரிமாற்றத்துக்கான ஊடகமாகச் செயல்படுகிற, கையில் வைத்திருக்கிற பண நோட்டு வருவாய்-பண நோட்டு இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

வாகனத்தை ஓட்டும் ஒவ்வொரு டிரைவரும், தான் சிவப்பு விளக்கை மீறவில்லை என்று பிரகடனம் செய்ய வேண்டும் என்று சொன்னால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்? அதே அளவுக்கு அபத்தம்தான் தன்னிடம் இருக்கும் பண நோட்டு நேர்மையான வழியில் வந்ததுதான் என்று நிரூபிக்க வேண்டும் என்று குடிமக்கள் அனைவரையும் வரிசையில் நிற்க வைப்பதும். பண நோட்டில் அரசின் உறுதிமொழி இருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை, “இந்த ரூபாய் நோட்டை வைத்திருக்கும் நபருக்கு ..... ரூபாய் தருவதாக உறுதியளிக்கிறேன்என்று பண நோட்டில் எழுதப்பட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்திட்ட அந்த உறுதிமொழியை உடைத்தெறிந்து விட்டது.

செலுத்தப்பட வேண்டிய குறிப்பிட்ட காலத்தில் செலுத்தப்படாத கடனுக்கு டிஃபால்ட் என்று பெயர். குறுகிய காலத்துக்கே என்றாலும், தன் குடிமக்களுக்கு அளித்த உறுதிமொழியை மீறி மிகப்பெரிய தவறிழைத்ததாக டிஃபால்டராக இருப்பது அரசுதான். பண நோட்டு வைத்திருப்பவருக்கு அதற்கான தொகை தராதபோது, ரிசர்வ் பேங்க் தனது உறுதிமொழியிலிருந்து டிஃபால்ட் ஆகிறது. குறிப்பிட்ட காலத்துக்கு அந்த உறுதிமொழியை செயல்படுத்த மாட்டோம் என்று சொல்வதே மோசமானதுதான்; ஆனால், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட, கணக்கில் வைக்கப்பட்ட பணத்தைக்கூட வாடிக்கையாளர் தன் விருப்ப்ப்படி பெற முடியாது என்று சொன்னால், அது தீயது, ஒழுக்கக்கேடானது.

திரைப்படத்துக்கு, கோவிலில் தரிசனத்துக்கு, மதுபானம் வாங்குவதற்கு நிற்கிறபோது தன்னுடைய சொந்தப்பணத்துக்காக வரிசையில் நின்று தேசபக்த பட்டயத்தை வாங்கி ஒட்டிக்கொள்ளக்கூடாதா என்று கேட்கிறார்கள். இங்கே முக்கியமான கேள்வி எத்தனை காலம் நிற்க வேண்டும்? எப்போது எனக்கு அந்த தேசபக்தப் பட்டயம் கிடைக்கும்?

பணத்தாள் நீக்க நடவடிக்கை ஆரம்பித்தது முதலாகவே நெருக்கடியின் பரிமாணங்கள் சாமானியர்களுக்குக்கூடத் தெரிந்து விட்டது. இப்படியொரு மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கும்போது இரண்டு விஷயங்கள் கவனிக்கப்பட்டிருக்க வேண்டும் : மாற்றாகத் தர வேண்டிய பண நோட்டுகள் போதுமான அளவுக்கு அச்சிடப்பட்டு, சுற்றுக்கு விடப்படக்கூடிய அளவுக்கு கையிருப்பில் தயாராக உள்ளதா? குறைந்த கால அவகாசத்துக்குள் இதைச் செய்துமுடிக்கக்கூடிய நெட்வொர்க்கும் லாஜிஸ்டிக்சும் தயாராக இருக்கிறதா?



இந்த இரண்டு கேள்விகளுக்கும் கிடைக்கிற விடை இல்லைஎன்பதே. ஒற்றை வரி அறிவிப்பால் செல்லாதென ஆகிவிட்ட பண நோட்டுகளுக்கு ஈடாக புது நோட்டுகளை அச்சடித்து விநியோகிக்க 2017 மே மாதம் வரை காலம் எடுக்கும் என்று திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினர் சௌமித்ர சவுத்ரி கணக்கிட்டுக் கூறியிருக்கிறார். தேசபக்தியைக் காட்ட இந்த ஆறு மாதங்கள் போதுமா? ஆறு மாதங்களுக்குப் பிறகாவது நம் தேவைக்கேற்றபடி, அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்ப சில்லறையாக ரொக்கப் பணம் கிடைக்குமா?

ரூபாய் நோட்டு விநியோக லாஜிஸ்டிக்ஸ் இப்போது அதன் முழுத்திறனில் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், பயன் முழுக்க்க் கிடைக்கவில்லை என்பதை எல்லா வங்கிக் கிளைகளிலும் ஏடிஎம்களிலும் பார்க்க முடிகிறது.

இந்த துல்லியத் தாக்குதலுக்குஅரசு இயந்திரம் தயாராக இருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கையில் போதுமான அளவுக்கு பண நோட்டு இருப்பு இருக்கிறது என்றே வைத்துக்கொண்டாலும், மாற்றித் தர நான்கு மாதங்கள் பிடிக்கும் என்பது கடந்தவார செயல்களிலிருந்து புரிகிறது. இது மிக மோசமான திட்டமிடலாகும்.

மோசமான திட்டமிடல், மோசமான செயல்படுத்தல் இவற்றின் விளைவுகள் எல்லாருக்கும் தெரிகின்றன. சுமார் 60 பேர் உயிரிழந்தார்கள். அடுத்தடுத்து வந்த வறட்சியால் பாதிக்கப்பட்ட வேளாண் துறை, மனித்த் தவறின் விளைவான பேரிடரையும் எதிர்கொள்ளப்போகிறது. விளைபொருட்களை விவசாயிகள் விற்க முடியவில்லை, இருப்புகளை லாரிகள் ஏற்றிச்செல்ல முடியவில்லை. தற்போதைக்கு உணவுப் பொருட்கள் மற்றும் விலைகளில் இதன் தாக்கம் இருக்கும்.

ஜன்-தன் திட்டத்தில் வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டபோது, ஏழைகள் வங்கிச்சேவையில் சேர்க்கப்படுகிறார்கள், அவர்களுக்குப் பயன் கிடைக்கும், தொழில்நுட்பத்தின் வரம் என்றெல்லாம் பார்ட்டிக்கொண்டிருந்த நிலை மாறிவிட்டது. புலம் பெயர்ந்த தொழிலாளி தன் மனைவி/தந்தை/சகோதரன் கணக்கில் பணம் போட முடியாது. அப்படிச் செய்வதற்கு அங்கீகாரக் கடிதம் தேவை என்றாகி விட்டது.

ஏழை குடும்பத்தலைவி அவசரத்துக்காக சிறுகச் சிறுக சேர்த்துவைத்த பணத்தை பயன்படுத்த முடியவில்லை. அடையாள அட்டை இல்லை, அல்லது வங்கிக்கணக்கு இல்லை. அரசு திருதிருவென விழிப்பது நாளும் பல்டியடிக்கும் அதன் அறிவிப்புகளிலிருந்தே தெரிகிறது. பழைய நோட்டுகளைக் கொடுத்து 4000 ரூபாய் மாற்றுவதை ஒரு தடவைதான் செய்யலாம் என்று வரம்பு ஏதுமில்லை என்று சொன்னார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. ஆனால், லாஜிஸ்டிக்ஸ் காரணமாக, வங்கிகள் தேவைப்பட்டால் இதை கட்டுப்படுத்தலாம் என்றார். அடுத்த நாளே ஒரு முறைதான் மாற்ற முடியும் என்றானது. அத்துடன். விரலில் மை வைக்கப்படும் என்றார்கள். அடுத்த நாளே அது 2000தான் என்றாகி விட்டது.

இப்போது பெட்ரோல் பம்ப்களில் டெபிட் கார்டுகளை தேய்த்து பணம் எடுக்கலாம் என்கிறார்கள். (எல்லா பெட்ரோல் பம்ப்களிலும் இது கிடையாது.) ஓரளவுக்குத்தான் பயன்தரும் என்றாலும் இது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், புழக்கத்துக்கான சில்லறை நோட்டுகள் இல்லை என்ற அடிப்படைப் பிரச்சினையை இது தீர்க்கவில்லை. இப்போதைய குழப்ப நிலையை நியாயப்படுத்த அரசு கையிலெடுக்கும் ஒரே ஆயுதம் ரகசியம். ஆக, ரகசியம் என்ற காரணத்தால், அரசில் முடிவெடுத்தவர்கள் அறிவார்ந்த ஆலோசனைகள் அல்லது கருத்துகளை கேட்கவே இல்லை என்று தெளிவாகிறது. அப்புறம் குழப்பநிலை ஏற்பட்டதில் வியப்பேது?

பணநோட்டுப் பற்றாக்குறையும், அதன் விளைவாக ஏற்பட்ட குழப்பமும் சேர்ந்து, மோசடிக்காரர்கள் சந்தையில் இருக்கும் சமநிலையின்மையைப் பயன்படுத்திக் கொள்ள வழி செய்கிறது. இந்த துல்லியத் தாக்குதல்கணக்கில் வராத வருவாயை இன்னும் உருவாக்குகிறது இல்லையா? இதுதான் கேவலமான முரண்.

*

ஆட்டுமந்தை ஒன்று இருந்தது. எல்லா ஆடுகளுக்கும் கம்பளி தரப்போவதாக அதன் தலைமை ஆடு அறிவித்தது.
எல்லா ஆடுகளும் மகிழ்ச்சிக் கூத்தாடின
கம்பளிக்கான ரோமம் எங்கிருந்து கிடைக்கும்?” என்று ஒரு ஆடு கேட்கும் வரை.
-  ஆங்கிலத்தில் டிவிட்டரில் வந்த துணுக்கின் தழுவல்