Friday 18 November 2016

கறுப்புப் பணமும் செல்லாத நோட்டுகளும் - பகுதி 4

முந்தைய பகுதிகளை வாசிக்க : பகுதி 1, பகுதி 2, பகுதி 3

? இந்த நடவடிக்கையால் பணத்தை கையில் வைத்திருப்பது குறையும், வங்கி மூலம் பரிமாற்றம் அதிகரிக்கும், கரன்சி இல்லாத சமூகம் என்ற திசையில் நாடு முன்னேறும் அல்லவா?
•-• இது மிகவும் ஆழமான கேள்வி. இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துகிறவர்கள், இணைய வசதி உள்ளவர்கள் என பல விவரங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
2014இல் ரூபாய் நோட்டுகளை செல்லாதென அறிவிக்கக்கூடாது என்று பாஜக எதிர்த்தபோது, பாஜகவும் ஒத்துக்கொண்ட விஷயம் இந்தியாவில் 65 விழுக்காட்டினர் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் என்பது. இருந்த வங்கிக் கணக்குகளிலும் செயலற்ற கணக்குகள் நிறையவே இருக்கும். அது 43% என்கிறது ஒரு மதிப்பீடு. மோடி அறிவித்த ஜன் தன் திட்டத்தால் சேர்க்கப்பட்ட கணக்குகள் 22 கோடி. ஏற்கெனவே கணக்கு வைத்திருந்தவர்களும் ஜன் தன் திட்டத்தில் கணக்கு ஆரம்பித்தது சுமார் 7 கோடி. இப்படி எல்லாவற்றையும் கணக்கிட்டுப் பார்த்தால், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் 52 விழுக்காடுதான். செயலற்ற கணக்குகளையும் கழித்தால், 32 விழுக்காடுதான் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துகிறவர்கள். டெபிட் கார்ட் வைத்திருப்பவர்கள் 22.1%. கிரெட்டி கார்ட் பயன்படுத்துவோர் 3.4%.


ஆக, இந்த 25 விழுக்காட்டினரை சுட்டிக்காட்டி, நாடு முழுமைக்கும் பொருத்திப் பார்க்க முடியுமா? ஆர்கனைஸ்டு செக்டார் எனப்படும் துறையில் வேலை செய்கிற, நாற்காலியில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிற, வார விடுமுறை இருக்கிற, வங்கிக்குச் செல்லக்கூடிய அல்லது வங்கியை அணுகக்கூடிய வசதி இருக்கிறவர்களுக்கு கரன்சி அதிகம் தேவைப்படாதிருக்கலாம்; பல வேலைகளையும் இணைய வழியில் செய்யலாம். ஆனால் அனார்கனைஸ்டு செக்டாரில் இருப்பவர்கள்தான் இந்தியாவில் அதிகம். இவர்களில் பலருக்கு வார விடுமுறைகூட கிடையாது. தினமும் புழங்குகிற பணத்தை செலுத்தவும், தேவைப்படும் பணத்தை எடுக்கவும் வங்கிக்குப் போய் வந்துகொண்டிருக்க முடியாது.
அவசரத் தேவைகளுக்கு நண்பர்கள் அல்லது உறவினரிடமிருந்து கடன் பெறுவோர் 32%. வங்கிகள் அல்லாத தனிநபர்களிடமிருந்து (கந்து வட்டி) கடன் பெறுவோர் 12.6%. இவர்கள் எல்லாருக்கும் கையில் பணப்புழக்கம்தான் அன்றாடம் தேவை. காலையில் கடன் வாங்கி, மண்டியில் காய்கறி எடுத்துவந்து விற்றுவிட்டு, மாலையில் வட்டியுடன் கொடுப்பவர்கள் ஏராளம். இவர்களை எல்லாம் கரன்சிகளைப் பயன்படுத்தாமல் வங்கிக் கணக்கு மூலம் பரிவர்த்தனை செய்யச் சொல்வது அபத்தம். அவர்களுடைய தொழில், வியாபாரம், எல்லாமே அடிபட்டுப்போகும்.
கரன்சி இல்லாத சமூகம் இயல்பாக உருவாவது என்பது வேறு. அதை இலக்காக வைத்து திணிப்பது என்பது வேறு. இப்போதைய நடவடிக்கை, அப்படித் திணிக்கும் முயற்சியின் அங்கம்தான் என்பதை பலரும் கவனிக்கத் தவறுகிறார்கள். மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களில் 80 விழுக்காடு வங்கிச் சேவைகளைப் பெறாதவர்கள். வீட்டு வேலைக்காரிகள், சித்தாள்கள், பீடி சுற்றுபவர்கள், தீப்பெட்டித் தொழிலில் இருப்பவர்கள், என பல துறைகளில் உழைக்கும் பெண்கள் தமது வருமானத்தை அன்றாடச் செலவுகளுக்குப் பயன்படுத்த முடிவதே பெரிய விஷயம். அவர்கள் தமது வேலைகளை நிறுத்திவிட்டு, வங்கிக்கும் போக வேண்டும் என்று எதிர்பார்ப்பது அநியாயம் இல்லையா? வங்கிச்சேவை அவர்கள் இருக்கும் இடத்துக்குச் சென்றால் மாற்றம் நிகழலாம். ஆனால் மகளிருக்காக என உருவாக்கப்பட்ட மகிளா பேங்க் என்ற அமைப்பை, அது சிதம்பரம் கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே, ஒழித்துக்கட்டியது இந்த அரசு.

நமது ஜிடிபியில் உள்நாட்டு உற்பத்தியில் 45 விழுக்காடு அன்-ஆர்கனைஸ்டு செக்டார் எனப்படும் ஒருங்கிணைக்கப்படாத தொழில்துறையிலிருந்து வருவது. பணநெருக்கடி அந்த செக்டரின் தொழில் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் என்பது நிச்சயம். இதன் விளைவாக ஜிடிபி குறையும். தினக்கூலிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகிற கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் தினக்கூலிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வேலையின்மையும், வருவாய் இழப்பும், விரக்தியும் வசதியாக நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு உபதேசம் செய்பவர்களால் உணர முடியாது.
உதாரணத்திற்கு ஒரு விஷயம் வீட்டுக்கு அருகே உள்ள நாற்சந்தியில் அதிகாலையிலிருந்தே நூற்றுக்கணக்கானோர் கூடியிருப்பார்கள். தச்சர்கள், மேஸ்திரிகள், பெயின்டர்கள், சித்தாள்கள்,... அவரவர் தொழிலுக்கேற்ப மட்டக்கோல், அல்லது பிரஷ் கையில் வைத்துக்கொண்டு சாலையோரம் காத்திருப்பார்கள். வேலைக்கு ஆள் தேவைப்படுகிறவர்கள் அங்கே வந்ததும் அத்தனைபேரும் மொய்த்துக்கொள்ள, அவர் தனக்கு எத்தனை ஆட்கள் தேவையோ அவர்களைப் பொறுக்கி எடுத்து அழைத்துச்செல்வார். 10 மணிவாக்கில் பெரும்பாலோர் போய்விட, அப்போதும் வேலை கிடைக்காத 10-20 அங்கேயே ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டு, எவராவது வரமாட்டாரா என்று காத்திருப்பார்கள். ஆனால் இப்போதோ, காத்திருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வேலை கிடைக்காமல் அப்படியே முடங்கியிருக்கிறார்கள்.
இன்னொரு விஷயம் கறுப்புப்பணத்தில் ஒரு பகுதி முடங்கி இருக்கும். இன்னொரு பகுதி புழக்கத்தில் இருக்கும் என்பதை முன்னரே பார்த்தோம். அந்தப்பணத்தை செலவு செய்யும்போது, அதன் மூலமும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது, வியாபாரம் நடக்கிறது, அதிலும் ஒரு பகுதி வரி வருவாயாக அரசுக்குப் போகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அது வெள்ளையாகி விட்டது. இதைச் சொல்வதால் கறுப்புப்பணம் நல்லது என்று சொல்வதாகப் பொருளாகாது, முடக்கத்தில் இருக்கும் பணம்தான் பொருளாதாரத்துக்கு உதவாத பணம், அதன் பங்கு ஒப்பீட்டில் குறைவு என்று காட்டுவதற்காக இதைச் சுட்டுகிறேன்.
மக்கள் எப்போதும் தம் கையில் பணம் வைத்திருக்க விரும்புவார்கள், வைத்திருக்க வேண்டும். பணம் கையில் இருக்கிறது என்பது ஒரு மனதைரியத்தைக் கொடுக்கிறது. பணமில்லாத நேரத்தில் சிறிய பிரச்சினைகள்கூட பெரிதாகத் தெரியும். கடனாக வாங்கியதாக இருந்தாலும், சம்பாதித்தாக இருந்தாலும், பணம் கையில் இருக்கும்போது, பெரிய பிரச்சினைகள்கூட சிறியதாகத் தோன்றும். இது மனித இயல்பு. அதுதவிர, மக்கள் கையில் பணம் இருப்பது எத்தகைய பொருளாதார நெருக்கடி ஏற்படும்போதும் சமாளிக்க உதவுகிறது. கையில் பணம் இருந்தும் பயன்படுத்த முடியாத காரணத்தால்தான் இப்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது, மக்களிடையே கோபமும் அதிகரித்துள்ளது. திருமணம் முதல் சொத்துப் பரிமாற்றம் வரை, மருத்துவம் முதல் கல்விக் கட்டணம் வரை என பலவற்றிலும் உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்திருப்பவர்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.
வங்கியின் மூலம் மட்டுமே பரிவர்த்தனை என்னும்போது இன்னொரு சிக்கலும் இருக்கிறது. இப்போது வங்கியில் இருக்கும் பணத்திலிருந்து கிடைக்கும் வருவாய் மிகக்குறைவு. எல்லாரும் வங்கியில் செலுத்தி, வங்கியில் சேமிப்பு அதிகமானால், சேமிப்பின்மீதான வட்டி விகிதம் குறையும். அதிலிருந்து கிடைக்கும் வருவாய் இன்னும் குறையும். நடுத்தர வர்க்கத்தினருக்கு, சேமிப்பிலிருந்து கிடைக்கும் வருவாயை நம்பியிருப்பவர்களுக்கு இது பெரிய அடியாக இருக்கும். அதே நேரத்தில், நூறு கோடி ஆயிரம் கோடி என்று கடன் வாங்குகிறவர்களுக்கு வட்டி விகிதம் குறைவது பெருத்த லாபமாக இருக்கும்.
இவற்றைத்தவிர, ஆன்லைன் பர்ச்சேஸ், ஆன்லைன் மளிகை போன்றவற்றினால் மிக முக்கியமான மற்றொரு பண்பாட்டு மாற்றம் நிகழும் மக்களை சிறு வியாபாரிகளிடமிருந்து பெருவர்த்தகர்களின் பக்கம் திருப்புவதே அது. இப்போது கையில் வைத்திருக்கும் பணத்தைக்கொண்டு பக்கத்தில் இருக்கும் மளிகைக்கடைகள், பெட்டிக் கடைகள், காய்கறிக்கடைகளில் வாங்குவோம். அவர்களோடு ஓர் உறவு உருவாக்கி வைத்திருப்போம். அவசரத்துக்கு கொடுக்கல் வாங்கல் இருக்கும். ஆன்லைனில் இது இருக்காது. ஆன்லைன் வர்த்தகம், மால்களின் பெருக்கம் ஆகியவை சிறுகச்சிறுக சிறு வியாபாரிகளை அழிக்கும். அவர்களுடைய வியாபாரத்தை, அதன் மூலம் கிடைத்துவந்த வேலைவாய்ப்புகளைக் குறைக்கும், பலரை புலம்பெயர வைக்கும், சிலரை தெருவுக்கு வர வைக்கும். உறவுகள் மறைந்து இயந்திரத்தனம்தான் அதிகமாகும். அப்புறம் எலிசியம் என்னும் திரைப்படத்தில் வருவதுபோல, இரண்டு வகையான சமூகங்கள் இருக்கும். ஒன்று, எல்லா வசதிகளையும் அனுபவிக்கும் ஒரு சிறுபான்மை சமூகம்; மற்றது, எந்த வசதியும் இல்லாத பெரும்பான்மை சமூகம். ரூபாய் நோட்டை ஒழித்ததை ஆதரித்தவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலோர் மேல்நடுத்தர, உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்று புரியும்.

? பிரதமர் மோடி ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார். அதனால்தான் இதைச் செய்திருக்கிறார். அவர்மீது உங்களுக்குள்ள காழ்ப்பின் காரணமாகத்தான் நீங்கள் விமர்சிக்கிறீர்கள் என்கிறேன். என்ன சொல்வீர்கள்?

•-• பிரதமர் மோடிக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் ஏதுமில்லை. பங்காளி-பகையாளி உறவும் இல்லை. எனவே காழ்ப்பு என்று ஏதுமில்லை. “கல்யாணம் செய்யணும்... கையில் பணமில்லை” என்று இந்தியர்களின் நிலையை ஜப்பானில் இருக்கும்போது கேலியாகப் பேசி கைதட்டல் வாங்கியவர், இங்கே வந்ததும் “நாட்டுக்காக குடும்பத்தை தியாகம் செய்தேன்” என்று சினிமா வசனம் பேசி கைதட்டல் வாங்கப் பார்க்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது குமட்டலாக இருக்கிறது. இந்த நாட்டின் எந்தவொரு பிரதமரும் இப்படி பிலாக்கணம் வைத்ததில்லை. அது ஒருபுறம்பா இருக்கட்டும். மோடியின் அரசியல், அவர் சார்ந்திருக்கும் கட்சியின் அரசியல்பார்வை மீது ஒவ்வாமை உண்டு. ஏனென்றால், அது சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கிற, நாட்டின் பன்மைத்துவத்தை மறுத்து ஒற்றைத்துவத்தை நிலைநிறுத்த முனைகிற அரசியல். அதை இந்தியர்கள் எல்லாரும் சேர்ந்து முறியடித்தாக வேண்டும்.
மோடி அரசில் விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது, வரிகள் அதிகரித்துள்ளன, ஏழைகளின், நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் சீர்கெட்டிருக்கிறது, வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. அவை சாத்தியமும் அல்ல. ஆனால் இந்தத் தோல்விகளை மறைப்பதற்கு, அல்லது தோல்விகளிலிருந்து திசை திருப்புவதற்கு, மாநிலங்களின் தேர்தல்களுக்கு, அவ்வப்போது இந்த அரசுக்கு ஏதேனும் விஷயம் தேவைப்படுகிறது. முந்தாநாள் அது மாட்டிறைச்சியாக இருந்தது. நேற்று கஷ்மீர் பிரச்சினையாக இருந்தது. இன்று கறுப்புப்பணமாக இருக்கிறது. நாளை அண்டை நாட்டுடன் போராகவும் இருக்கலாம். ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டன. ஊழல்வாதிகள் என்று யார்மீது குற்றம் சாட்டினார்களோ அவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? அல்லது தமது கட்சிக்குள் இருக்கும் ஊழல்வாதிகளைத்தான் வெளியேற்றினார்களா? காங்கிரசின் ஊழல் வெளியே தெரியக்கூடியது. இவர்களுடைய ஊழல் வெளிப்படையாகத் தெரியாதது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 63 நிறுவனங்கள் நிலுவையில் வைத்திருந்த 7000 கோடி ரூபாயை இப்போதுதான் வாராக்கடன் என்று முடிவு செய்திருக்கிறார்கள். இனி அந்தப்பணம் வரப்போவதில்லை. சாமானிய மனிதர்கள், சம்பளம் வாங்குவோர், முதியோர் சிறுகச் சிறுக வங்கிகளில் சேமிக்கிறார்கள். அவற்றை கோடிகோடியாக சிலருக்கு கடனாகக் கொடுத்து, திரும்பி வராவிட்டால் தள்ளுபடி செய்யும் பெரிய மனது இந்த ஆட்சிக்கு உண்டு. இதெல்லாம் வெளியே தெரியாது. முகமூடிகளை மட்டும் பார்ப்பவர்கள் நல்ல திட்டம் என்றுதான் நினைப்பார்கள். வாய்ஜாலத்தில் மயங்குபவர்கள் நமது மக்கள். இதில் வியப்பேதும் இல்லை. நமது மக்கள் மிகவும் அப்பாவிகள்.

7000 கோடி தள்ளுபடி செய்ததில் விஜய் மல்லையாவின் 1200 கோடியும் அடக்கம். விஜய் மல்லையாவை நாட்டைவிட்டுத் தப்பிச்செல்ல விட்டவர்கள் யார்? அவர் நாடாளுமன்ற உறுப்பினராக உதவிய அதே கட்சியினர்தான். இதெல்லாம் மக்களுக்குத் தெரியாது.

? அப்படியானால் மோடியும் ஊழல் செய்திருக்கிறார் என்கிறீர்களா?
•-• முதலாளித்துவக் கட்சிகளில் ஊழலில் ஈடுபடாத, வேண்டப்பட்ட ஆட்களுக்கு சலுகைகளை வழங்காதவர் என்று யாரும் இருக்கவே முடியாது. குஜராத்தில் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட சலுகைகள் கணக்கற்றவை. குஜராத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஊழல் விவகாரம் இன்னும் கவனிக்கப்படவே இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்புதான் இன்னொரு ஊழல் செய்தி வெடித்திருக்கிறது. ஊடகங்கள் ஏன் அதை கவனிக்கவில்லை என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ரூபாய் நோட்டு விவகாரத்தில் மூழ்கியிருப்பதால், சமூக ஊடகங்களிலும் அந்த விவகாரம் கவனத்தைப் பெறவில்லை. பிரசாந்த் பூஷண் சி.பி.டி.டி. தலைவரிடம் ஊழல் விவரங்களைக் கொடுத்திருக்கிறார். விரைவில் உச்சநீதிமன்றத்தை அணுக இருக்கிறார். நியாயமான, நேர்மையான விசாரணை நடக்குமானால் குஜராத்தில் ஆட்சியில் இருந்தபோது மோடி அரசின் ஊழலும் வெளிவரும். ஊழல் செய்தவர்களே ஆட்சியில் இருக்கிறார்கள், விசாரணை அமைப்புகளும் அவர்கள் கையில்தான் இருக்கின்றன. விசாரணையை முடுக்கி விடுவார்களா, முழுக்கடித்து விடுவார்களா என்பதை எவரும் ஊகிக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.



? அப்படியானால் மோடிக்கு ஊழலை ஒழிக்கும் நேர்மை இல்லை என்கிறீர்களா?
•-• நான்தான் முதலிலேயே சொன்னேனே நமது மக்கள் அப்பாவிகள். எதையும் எளிதில் நம்பி விடுவார்கள். குஜராத்தில் லோகாயுக்தா குறித்து சொல்கிறேன். இதைப் படித்தபிறகு நீங்களே கேள்விக்கான பதிலை முடிவு செய்து கொள்ளுங்கள்.
லோக்ஆயுக்தா தெரியும் அல்லவா? (லோக் = மக்கள், ஆயுக்த = அதிகாரி அல்லது ஆணையர்). ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழலுக்கு எதிராக நியமிக்கப்படுகிற அமைப்பு இது. ஊழல் அல்லது மோசமான நிர்வாகம் குறித்து மக்கள் இந்த அமைப்பிடம் புகார் செய்யலாம். லோக் ஆயுக்தாவுக்கு பெருமளவு விசாரணை அதிகாரங்கள் இல்லை. ஆனாலும், லோக்ஆயுக்தா கண்டறிந்த விவகாரத்தால்தான் எடியூரப்பா பதவி ஆட்டம் கண்டது. எங்கெல்லாம் லோக்ஆயுக்தா இருக்கிறதோ அங்கெல்லாம் முதல்வர்கள் சற்றே எச்சரிக்கையாக இருக்க நேர்கிறது. குஜராத்திலும் மோடி வருவதற்கு முன் லோக்ஆயுக்தா இருந்தது. அப்போது லோக்ஆயுக்தாவாக இருந்த சோனி, கேஷுபாய் படேல் நியமித்தவர். 2003இல் அவர் விலகிய பிறகு, அடுத்து வந்த முதல்வர் மோடி, லோக்ஆயுக்தா வராமல் பார்த்துக் கொண்டார். அதற்குப் பிறகு நடந்தவற்றை எல்லாம் தனி அத்தியாயமாகவே எழுதலாம். சுருக்கமாகச் சொல்கிறேன்.
• 2003 முதல் 2011 வரை லோக்ஆயுக்தா வராமல் பார்த்துக் கொண்டவர் மோடி.
• 2011இல் மேத்தா என்பவரை லோக் ஆயுக்தாவாக ஆளுநர் நியமனம் செய்தபோது அதற்கு எதிராக வழக்குத் தொடுத்தது மோடி அரசு.
இதற்காக மூன்றுமுறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது அவருடைய அரசு.
இதற்காக செலவு செய்த தொகை 45 கோடி!
அதாவது, லோக்ஆயுக்தா அமைப்பு செயல்பட்டிருந்தால் எவ்வளவு செலவு ஆகியிருக்குமோ அதைவிட அதிகமாக மக்கள் வரிப்பணத்தை வீணடித்து லோக்ஆயுக்தா வரவிடாமல் செய்தது மோடி அரசு.
அதற்குப் பிறகு, எந்த அதிகாரமும் இல்லாத, அரசுக்குத் தாளம்போடுகிற லோக் ஆயுக்தாவாக ஆக்கும் சட்டத் திருத்தம் செய்த்து மோடி அரசு.
விசாரணை அதிகாரம் இல்லாத லோக் ஆயுக்தா விஷயத்துக்கே மக்களின் வரிப்பணத்தில் 45 கோடி வீணடித்து, பத்தாண்டுகள் தடங்கல்கள் செய்த இவர்தான் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவீர்கள் என்றால்...

“கேப்பையில் நெய் ஒழுகுதுன்னு சொன்னா கேக்கறவனுக்கு எங்கே போச்சு புத்தி?” என்ற ஒரே பழமொழியை எத்தனை முறைதான் சொல்வது?!
முற்றும்

No comments:

Post a Comment