Thursday 17 July 2014

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

நேற்று ஒரு வீடியோ கிளிப்பில் பார்த்த இந்த சப்டைட்டில் மிக அருமையாக இருந்த்து. இரவு முழுக்க மனசுக்குள்ளயே இருந்தது.
We make a living by what we get,
but we make a life by what we give.

நன்றி  - கோபண்ணா, காமராஜர் ஒரு சகாப்தம்
காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் காமராஜர் குறித்து நிறைய பதிவுகள் வெளியாயின. நான் இந்த ஆண்டு அப்படி பதிவு ஏதும் எழுதவில்லை. மாறாக, காமராஜர் எதற்காக நினைக்கப்படுகிறாரோ, அந்தத் திசையில் ஏதேனும் செய்யலாம் என்று முடிவு செய்தேன். ஆமாம், நம்மால் முடிந்த அளவுக்கு ஏழைகளின் கல்விக்கு உதவுவதே சரியான வழி என்று நினைக்கிறேன்.

கடந்த ஆண்டு பேஸ்புக் நண்பர்களிடமிருந்து நிதி திரட்டி நிறைய மாணவர்களுக்கு கல்விக்கான கட்டணம் செலுத்தினோம். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் நிறைய வேண்டுகோள்கள் வந்தன.

1. என்னிடம் படித்த ஒரு மாணவி தற்போது மதுரை தியாகராஜ கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார் ... கடந்த இரு வருடங்களாக 95 சதவிகிதம் பெற்று வருகிறாள் ...கோவை விஜயலக்ஷ்மி அறக்கட்டளை மூலமாகவும், நானும் எனது நண்பர்களும் இணைந்து படிக்க வைத்தோம் ..தற்போது அறக்கட்டளை மூலம் இவ்வாண்டு உதவி செய்ய வில்லை. அப்பா இறந்து விட்டார். அம்மா மட்டும் கூலி வேலை செய்து படிக்க வைக்கிறார். 12ஆம் வகுப்பில் 1136 மதிப்பெண். உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

2. ஏற்காடில் உள்ள அரங்கம் என்ற குக்கிராமத்தின் பள்ளியை தேர்வு செய்துள்ளோம்... அங்கு உள்ள பிள்ளைகளுக்கு நாங்கள் பெல்ட், டை, ஷூ, ஸ்வெட்டர்போன்றவைகளை அளிக்க உள்ளோம்.. அங்கு மொத்தமாய் 80 பிள்ளைகள் இருகிறார்கள்... தங்களால் இயன்ற பண உதவியை செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்... உங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த பணத்திற்கு நாங்கள் உண்மையாக இருப்போம்......

3. ஈரோட்டில் அல் அமீன் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் ஏழை மாணவனுக்கு கல்விக்கட்டணம் செலுத்த உதவி செய்யவும். தந்தைக்கு வருவாய் இல்லை. இத்தனை ஆண்டுகளும் பிறரின் உதவியால்தான் படித்து வந்திருக்கிறார்.

4. கோவையில் எம்சிஏ படிக்கும் ஒரு மாணவிக்காக உதவி கோரி ஒரு வேண்டுகோள் வந்தது.

5. இது நேற்று காலையில் வந்தது சார் ஒரு கல்லூரி படிக்கும் மாணவனுக்கு பீஸ் கட்ட வழியில்லையாம். யாரும் உதவி செய்யவில்லை. நன்றாக படிக்கும் பையன். உதவி செய்ய முடியுமா. சரி என்றால் கல்லூரி விவரம் கேட்டு சொல்கிறேன். நீங்கள் விசாரித்து செய்தால் போதும்.

இதுதான் விஷயம்.

மேலே 2ஆம் எண்ணிட்ட விஷயத்திற்கு ஒரு தோழி 24000 ரூபாய் அனுப்பி விட்டார். சம்பந்தப்பட்டவர்கள் கைக்குச் சென்றுவிட்டது. அவர்கள் இந்த மாதம் ஸ்வெட்டர் விநியோகம் செய்ய இருக்கிறார்கள்.

ஏற்கெனவே நண்பர்கள் அனுப்பிய பணம் என்னிடம் 25000 ரூபாய் இருக்கிறது. பேஸ்புக்கில் இதுகுறித்து ஸ்டேட்டஸ் போட்டதைத் தொடர்ந்து, நிறையப்பேர் பணம் அனுப்புவதாகக் கூறியிருக்கிறார்கள். ஒரு தோழி, மாதாமாதம் ஆயிரம் ரூபாய் தருவதாகச் சொல்லியிருக்கிறார்.
I have seen the attachments, the child is really good and have performed well...what is the fee amount and when is the due date and how do we pay? என்று அஞ்சலில் ஒருவர் கேட்டிருக்கிறார்.

எல்லாருக்கும் நன்றி.

கடைசியாக, நேற்று இரவு ஒரு தோழியுடன் நடந்த உரையாடலிலிருந்து என்னிடம் படித்த மாணவி எம்.ஏ கணிதம் படித்து முதல் ராங்க் பெற்றிருக்கிறாள். இப்போது எம்ஃபில் நுழைவுத் தேர்வில் இரண்டாவது ரேங்க் பெற்றுத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறாள். அவங்க வீட்டுக் குடிசைக்குள்ள நாலு ஆள்தான் உட்காரவே முடியும். ரொம்ப சந்தோஷமா ஃபீஸ் நான் கட்டுறேன் நீ மேல படின்னு சொல்லிட்டேன். ஆனா எவ்ளோ ஃபீஸ் இருக்கும்னுதான் தெரியலே. யோசிக்காம வாக்கு கொடுத்துட்டோமேன்னு கவலையா இருக்கு.

கவலையே படாதீங்க. சேர்ந்து சுமக்கலாம் என்று சொல்லி விட்டேன்.

நண்பர்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கைதான் காரணம்.

சேர்ந்து சுமக்கத் தயாராக இருப்பவர்கள் என் மின்னஞ்சலுக்கு (shahjahanr@gmail.com) செய்தி அனுப்பலாம், அல்லது பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
அன்னயாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்


பி.கு. அது சரி, நம்ம தலைவர் எவ்வளவு கம்பீரமா இருக்காரில்லே...

1 comment:

  1. என்னாலும் ஓரளவு சுமை தூக்க இயலும் என்பதை அறியவும்.நன்றி நண்பரே!

    ReplyDelete