Saturday 17 April 2010

படித்ததில் பிடித்தது-1


படித்ததில் பிடித்தது-1

புதுதில்லி உலகப் புத்தகக் கண்காட்சியில் எத்தனையோ புத்தகங்களை வாங்கினேன். அவற்றில் ஒவ்வொன்றாக இப்போதுதான் படிக்கத் துவங்கினேன். முதலில் படித்தது இரா முருகனின் இரட்டைத் தெரு. அவருடைய எழுத்துகளிலிருந்து புரிந்தது அவர் என்னைவிட சுமார் 2 வயது மூத்தவர். எனவே அவர் குறிப்பிட்ட நிகழ்வுகள் பலவற்றை நானும் கண்டிருக்கிறேன், அனுபவித்திருக்கிறேன். அதுவே அந்த நூலின்பால் அதீத ஈர்ப்பை ஏற்படுத்தியது. கடந்த கால நினைவுகளில் அலைபாய வைத்தது. எனக்கு மட்டுமல்ல, நூலைப் படித்த என் மனைவி, தங்கை, மற்றொரு தோழி என மூவரும் ஒரே மூச்சில் படித்து முடித்தார்கள். இந்த நூலைப் பற்றி பிறிதொரு சமயம் பேசுவோம்....

அடுத்துப் படித்தது ஜோதி நரசிம்மன் என்பவர் எழுதிய அடியாள், கிழக்கு வெளியீடு.
நடுத்தர நகரமொன்றில் அடியாளாக இருந்தவரின் ஒப்புதல் வாக்குமூலம். முதல் சிறை அனுபவங்கள் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் அடியாளாக இருந்தகாலத்தின் தன் செயல்களை முழுவதுமாக வெளியிட்டாரா என்று சொல்ல இயலவில்லை. பிற்பாடு அவர் திருந்தி, தமிழ் தேசிய இயக்கத்தில் முனைப்பாக ஈடுபடுகிறார். அரசியல் போராட்டத்தில் மீண்டும் ஒருமுறை சிறை செல்கிறார்.

அண்மைக்காலமாக இப்படிப்பட்ட அதிர்ச்சி மதிப்பு நூல்கள் நிறையவே வெளிவருகின்றன இதுவும் அதில் அடக்கம். படிக்க வேண்டிய நூல்தான், ஆனாலும் படித்தேயாக வேண்டிய வரிசையில் என்னால் சேர்க்க முடியவில்லை.

மின்சாரம் தடைபட்டிருந்த ஒரு நேரத்தில் ஏதாவதொரு புத்தகத்தைப் புரட்டலாமே என்று தோண்டியபோதுதான் கண்ணில் பட்டது ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற நூல். இப்படியொரு நூலை வாங்கிய நினைவும்கூட இருக்கவில்லை. அடியாளைப் படித்து விட்டோம், அது என்ன பொருளாதார அடியாள்... கேள்விப்படாத சொற்றொடராக இருக்கிறதே என்று எண்ணி புத்தகத்தைப் புரட்டத் துவங்கினேன். 302 பக்க நூலை ஒரே நாளுக்குள் படித்து முடித்தும் ஆயிற்று, படிக்கும்போது எழுந்த சந்தேகங்களை இணையத்தில் தேடி பல வலைப்பக்கங்களை மேய்ந்தும் ஆயிற்று.

படித்ததில் கிடைத்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் சில வரிகளையேனும் பதிவு செய்துவிட வேண்டும் என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப் பதிவு. எங்கே, எப்படித் துவங்குவது என்பதுதான் பெரும் கேள்வியாக இருக்கிறது. காரணம், இது எழுப்பிய அதிர்ச்சி... எதிராளி எப்போதாவது அறையப் போகிறான் என்று நமக்குத் தெரிந்தே இருந்தாலும், திடீரென அடுக்கடுக்காக அறைகள் விழுந்தால் எப்படியிருக்கும்... அப்படித்தான் இருந்தது இதன் அதிர்ச்சி.

காண்க - படித்ததில் பிடித்தது-2

No comments:

Post a Comment