Saturday 24 December 2011

பண்பாட்டு அதிர்ச்சி - 1


வீரன் ஒருமுறைதான் சாகிறான், கோழையோ தினமும் சாகிறான் - இந்தப் பழமொழி ஏனோ நினைவு வந்தது பண்பாட்டு அதிர்ச்சி என்ற தலைப்பினை இட்டதும்.
தமிழகத்தை விட்டு தலைநகருக்குக் குடிபுகுந்தவர்கள் பெரும்பாலோர் பண்பாட்டு அதிர்ச்சியிலிருந்து தப்பியிருக்க முடியாது. அது ஒருமுறைதான் நிகழ்வது. ஆனால் தலைநகரிலேயே வசிக்க நேர்ந்தவர்கள தாயகம் வரும் ஒவ்வொரு முறையும் பலமுறை அதிர்ச்சிகளுக்கு ஆளாக நேருகிறது - மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது ஆனால் எனக்கு.
நீ.....ண்.....ட பயணத்துக்குப் பிறகு ரயிலிறங்கியதும் முதலில் சந்திப்பது பேருந்துகளில் ஏற்பட்ட - ஏற்படுகிற மாற்றங்கள். என்னைப் பொறுத்தவரை இதுதான் முதல் அதிர்ச்சி. அடுத்து வீடு சேர்ந்ததும் மின்வெட்டு அதிர்ச்சி... அப்புறம் தொலைக்காட்சித் தொடர்களின் அதிர்ச்சி...
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒருநாளில் வந்திறங்கி ஊருக்கு பேருந்துப் பயணம் மேற்கொள்ளும்போது பஸ்களில் எல்லாம் வீடியோ. கவுண்டமணியும் செந்திலும் மண்டைத் தலையா... எருமைத் தலையா என்று செந்தமிழில் ஒருவரை ஒருவர் திட்டி பாசத்துடன் உதைத்துக் கொள்ளும் தமிழ் நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் காட்சிகளை ஒரு பஸ் விடாமல் எல்லாவற்றிலும் காணும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. அரசு பஸ்களும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. யார் போட்ட வழக்கோ, யார் தொடுத்த புகாரோ தெரியாது - வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது.
இப்போது வீடியோ இல்லாத குறையை இரண்டு மடங்காகத் தீர்ப்பது என முடிவு செய்து விட்டன பேருந்து நிறுவனங்கள். எந்தப் பேருந்தில் ஏறினாலும் உசுரே போகுது-வும் ஒய் திஸ் கொல வெறி டி என்றும் தொண்டை கமறும் குரலைக் கேட்டாக வேண்டிய தலைவிதி... அதிலும் எங்கே போக வேண்டும் என்று கேட்கிற நடத்துநரின் குரலும் போகிற இடத்தைச் சொல்கிற பயணியின் குரலும் அமுங்கிப் போகிற வகையில் உச்சஸ்தாயியில் தொம்தொம் என ஒலிக்கின்றன பாடல்கள். காலையில் பள்ளிக்குத் தேர்வு எழுதச் செல்லும் மாணவன் பேருந்தில் பயணம் செய்தால் அவன் காதில் நாள் முழுதும் இந்தப் பாடல் எதிரொலித்துக்கொண்டே இருக்கும் என்பது நிச்சயம். ஏன் இந்தக் இரைச்சல் வெறி தமிழகமே....
எங்கே போவதானாலும் அரசுப் பேருந்துகளில் மட்டுமே செல்வது என்ற எழுதப்படாத விதியை கடுமையாகப் பின்பற்றுபவனாக இருப்பதால் எனக்கு ஓரளவு இதிலிருந்து விடுதலை. அப்படியும் அரசுப் பேருந்துகள் சிலவற்றிலும் பாடல்கள் ஒலிக்கவே செய்கின்றன - சற்றே இரைச்சல் குறைவாக.
சில நேரங்களில் வேறு வழியே இல்லாமல் தனியார் பேருந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயமும் நேர்ந்து விடுகிறது. உதாரணமாக இரண்டு நாள் முன்பு திருப்பூரிலிருந்து ஈரோடு செல்ல நேர்ந்தது போல.
ஈரோடு செல்வதற்காக திருப்பூர் புதிய பேருந்து நிலையத்துக்கு நான் சென்ற போது பிற்பகல் 3.30 மணி. அரசுப் பேருந்து ஒன்று காலியாகக் காத்திருந்தது. ஏறி அமர்ந்து கொண்டேன். 5...10...15... நிமிடங்கள் கழிந்தன. ஒரு தனியார் பேருந்து அதிரும் ஸ்பீக்கர்களில் பாட்டுகள் ஒலிக்கப் புறப்பட்டது. இந்த பஸ்சில் அமர்ந்திருந்த எல்லாரும் சந்தோஷமாக ஏறிக்கொள்ள அது போய்விட்டது. நான் காத்திருந்தேன். 5...10...15 நிமிடங்கள் கழிந்தன. மற்றொரு தனியார் பஸ் வந்து நின்று பாட்டை அலற விட்டு என் பஸ்சுக்கு முன்னால் நின்று கொண்டது. முன் நிகழ்ந்தது போலவே இப்போதும் இந்த பஸ்சில் ஏறியவர்கள் ஓடிப்போய் அதில் ஏறிக்கொண்டார்கள். எனக்கு பைப்பர் கதை நினைவுக்கு வந்தது. இரைச்சல் பாடல்கள்தான் தமிழகப் பயணிகளை இழுக்கும் பைப்பரோ...
இந்த பஸ் லேட்டாகுங்க... என்று அந்த பஸ்காரர் சொன்னதற்கு தலையாட்டி விட்டு அப்படியே அமர்ந்திருந்தேன். அதுவும் போய்விட்டது. 5...10...15....
காக்கிச் சட்டை அணிந்த இருவர் தோளின்மேல் கைகளைப் போட்டுக்கொண்டே வந்தார்கள். ஒருவர் நானிருந்த பேருந்தில் ஏறி டிரைவர் ஸீட்டுக்கு மேலே ஏதோ ஒன்றை செருகிவிட்டு கீழே இறங்க இருவரும் மீண்டும் தோள்மீது கைபோட்டுக் கொண்டு மாயமாகி விட்டார்கள். ஓஹோ.... டிரைவர் வந்து விட்டார் எப்படியும் புறப்பட்டு விடும் என்ற நம்பிக்கை பிறந்தது.
இப்போது மூன்றாவது தனியார் பேருந்து வந்து நின்று அதுவும் போய் விட்டது. 5...10...15 நிமிடங்கள் யாரையும் காணவில்லை. குமுறலை அடக்கிக் கொண்டு கீழே இறங்கினேன். நேரக்காப்பாளர் - டைம்கீப்பர் என்பதன் தமிழாக்கமாக இருக்க வேண்டும் ... அபாரமான தமிழாக்கம்தான் - என்று போடப்பட்டிருந்த அறைக்குச் சென்றேன். ஒரு மணி நேரமாக காத்திருப்பது பற்றிச் சொன்னேன். ஒரு மாவட்டத் தலைநகருக்கும் மற்றொரு மாவட்டத் தலைநகருக்கும் இடையே ஒரு மணி நேரத்திற்கு அரசுப் பேருந்தே இல்லாமல் இருப்பது விந்தையாக இல்லையா என்று கேட்டேன்.
நேரக்காப்பாளர் அன்று மௌனவிரதம் போல.... பக்கத்தில் இருந்தவர் பேசினார். நான் காத்திருந்த பஸ்சுக்கு டிரைவர் வந்து விட்டாராம், கண்டக்டர் வரவில்லையாம், அதனால் அந்த பஸ் போகாதாம்...
சரி அடுத்த பஸ் எப்போது ...
அது ஐந்தரை மணிக்கு வரும்... அதான் முன்னாடி நிக்குதே பிரைவேட் அதுல போயிடுங்க என்று அருமையான ஆலோசனை கிடைத்தது.
போலாந்தாங்க, ஆனா கவர்மென்டு பஸ்சுல மட்டும்தான் போகணும்னுதான் இவ்வளவு நேரம் வெய்ட் பண்றேன் என்றேன். என்னங்க பண்றது கண்டக்டர் இல்லியே என்றார்.
சரி இதைப்பத்தி எங்க கம்ப்ளைண்ட் பண்ணணும், நம்பர் இருந்தா குடுங்க என்றேன். அதெல்லாம் எங்ககிட்ட இல்லேங்க... வந்தா வந்த டைமைக் குறிக்கிறதும் புறப்பட்டா புறப்பட்ட டைமைக் குறிக்கிறதும்தான் எங்க வேலை என்றார்.
அருமையான வேலைப் பகிர்வு முறை. ஒருவேளை மௌன விரதம் இருந்தவர் பேருந்துகளின் வருகிற நேரத்தையும், அழகாக பதிலளித்தவர் புறப்படுகிற நேரத்தைக் குறிப்பவருமாக இருக்கலாம். அரசுப் பேருந்துக் கழகங்கள் கடும் நஷ்டத்தில் இயங்குவதில் வியப்பேதும் இல்லை.
தலைவிதியை நொந்து கொண்டு தனியார் பேருந்தில் ஏறினேன். மீண்டும் ஒலித்தது ஒய் திஸ் கொல வெறி டி....
பண்பாட்டு அதிர்ச்சிகள் தொடரும் - பேருந்துப் பயணங்களுக்கு இடையே.
பி.கு. இந்தப் பதிவும் ஒரு அரசுப் பேருந்தில்தான் எழுதப்படுகிறது. திருப்பூர் - உடுமலை அரசுப் பேருந்து, 21 டிசம்பர் 3.30 மணி. பாட்டுகள் ஒலிக்காத இந்தப் பேருந்தின் ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் கோடானுகோடி நன்றிகள். 

1 comment:

  1. அதிர்ச்சி தான். சென்ற வாரத்தில் நானும் தமிழகம் சென்றிருந்தேன்.

    சென்னை - திருச்சி அரசுப் பேருந்தில் தான் பயணம் - வீடியோ இல்லாமல்....

    திருச்சியில் இறங்கி வேறு ஒரு பேருந்தில் பயணம் செய்யும் போது “கொலவெறிதான்!”

    ReplyDelete