Sunday 28 February 2010

ஆட்டக்களத்தில் இந்தியா - 2009 ஒரு மீள்பார்வை

ஆட்டக்களத்தில் இந்தியா


2009 ஒரு மீள்பார்வை

ஜனவரி மாதம் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், உத்திரப் பிரதேச அணியைத் தோற்கடித்த மும்பை அணி கோப்பையை வென்றது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், நூறாண்டு நிறைவை முன்னிட்டு புகழ் அரங்கம் என ஒரு பட்டியலை அறிவித்தது. வரலாற்றில் மிகச்சிறந்த பவுலர்கள், மற்றும் பேட்ஸ்மேன்கள் இதில் இடம் பெற்றனர். பவுலர்களில் பிஷன்சிங் பேடி, பேட்ஸ்மேன்களில் சுனில் கவாஸ்கர், கபில்தேவ் ஆகிய மூன்று இந்தியர்களுக்கு மட்டுமே இதில் இடம் தரப்பட்டனர் என்பது சற்றே சர்ச்சையைக் கிளப்பியது.

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியன் ரயில்வே அணி, தமிழக அணியைத் தோற்கடித்தது. மகளிர் பிரிவிலும் இந்தியன் ரயில்வே அணி வெற்றி கண்டது.

சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டியில், சோமதேவ் காலிறுதியை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்.

ஒற்றையர் ஆட்டங்களில் காலிறுதி-அரையிறுதி வரை எட்டி வந்த சானியா, மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் மகேஷ் பூபதியுடன் ஜோடி சேர்ந்து, மிக்ஸ்டு டபிள்ஸ் பிரிவில் வெற்றி கண்டார். சானியாவுக்கு முதல் கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டம் கிடைத்தது.

இதே ஆஸ்திரேலியன் ஓப்பனில், ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் யுகி பாம்ப்ரி.

பாரஸ்வநாத் இன்டர்நேஷனல் ஓப்பன் செஸ் போட்டியில் சூரியசேகர் கங்குலி சாம்பியன் பட்டம் பெற்றார்.

கடந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளில், அபினவ் பிந்த்ராவுக்கு பத்மபூஷண் விருதும், பல்பீர் சிங் குல்லார், ஹர்பஜன் சிங், பங்கஜ் அத்வானி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன.

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையே நடைபெற்ற ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து நான்கிலும் வெற்றி கண்டு சீரிஸ் வெற்றி பெற்றது. அடுத்து நடைபெற்ற ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி கண்டது.

பஞ்சாப் தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவைத் தோற்கடித்தது.

அடுத்து, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு ஹாக்கி போட்டிகளில் இரண்டில் டிரா செய்தும், இரண்டில் வெற்றி கண்டும் சீரிஸ் வெற்றி பெற்றது.

துலிப் கோப்பைக்கான உள்நாட்டு டெஸ்ட் போட்டியில் மேற்கு மண்டல அணி தென்மண்டல அணியைத் தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியது.

லினாரஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் நான்காவது இடத்தைத்தான் பெற முடிந்தது.

இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளுக்கிடையில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியைத் தோற்கடித்தது.

விஜய் ஹஜாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, வங்க அணியைத் தோற்கடித்து கோப்பையை வென்றது.

ஐசிசி மகளிர் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றன. இந்திய அணி சூப்பர் சிக்ஸை எட்டியது. ஆனால் இறுதியை எட்ட முடியாமல் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

இந்தியா-நியுசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டு 20-20 போட்டிகளிலும் நியூ சிலாந்து வெற்றி பெற்றது.

அதனையடுத்து நடைபெற்ற ஐந்து ஒருநாள் போட்டிகளில், ஒன்றில் நியூ சிலாந்து வெற்றி கண்டது. ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது. மூன்று ஆட்டங்களில் வென்ற இந்திய அணி சீரிஸ் வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றன.

1967-68க்குப் பிறகு 13 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியே கண்டிருந்தது. எனவே, இந்த டெஸ்டில் வெற்றி கண்டால் நாறபதாண்டு கால வறட்சிக்கு முடிவு கிடைக்கும் என்பது இந்திய அணியின் ஆவலாக இருந்தது. எண்ணியதுபோலவே, முதல் டெஸ்ட்டில் வெற்றி கிடைத்தது, இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. மூன்றாவது டெஸ்ட் மழையின் காரணமாக டிராவில் முடிந்தது. இந்திய அணி சீரிஸ் வெற்றி கண்டது.

இந்தப் போட்டியின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற பெருமை டெண்டுல்கருக்கும், அதிக கேட்ச் செய்தவர் என்ற பெருமை டிராவிடுக்கும் கிடைத்தது.

இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற மகளிர் கிராண்ட்பிரி செஸ் போட்டியில் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.



ஆம்பர் பிளைண்ட்போல்ட் மற்றும் ராபிட் செஸ் போட்டியில் பங்கேற்ற விஸ்வநாதன் ஆனந்த், பிளைண்ட்போல்ட் பிரிவில் வெல்ல முடியவில்லை என்றாலும், ராபிட் பிரிவில் அரோனியன், கடா காம்ஸ்கி ஆகிய இருவருடன் சாம்பியன் பட்டத்தைப் பகிர்ந்து கொண்டார்.

ஹூஸ்டனில் நடைபெற்ற டபிள்யு.டி.ஏ. சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில், சீனத்தின் ச்சியா ஜுங் சுவாங்-உடன் ஜோடி சேர்ந்து ஆடிய சானியா மிர்சா, இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஐ-லீக் கால்பந்துப் போட்டியில் இறுதியை எட்டிய சர்ச்சில் பிரதர்ஸ் அணி, 6-2 என்ற கோல் கணக்கில் மொகமதன் ஸ்போர்ட்டிங் அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டமும் ஐம்பது லட்சம் ரூபாய் பரிசையும் வென்றது.

அஸ்லன் ஷா கோப்பைக்கான ஹாக்கி போட்டிகள் மலேசியாவில் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியைத் தோற்கடித்து கோப்பையை வென்றது.

துப்பாக்கித் திறனில் உலகக் கோப்பைக்கான போட்டிகள் சீனத்தில் நடைபெற்றன. இந்தியர்கள் பலர் அதில் பங்கேற்றாலும், இந்தியாவுக்கு இரண்டே பதக்கங்கள் கிடைத்தன. ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் ஹீனா சித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். ராபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

ஐபிஎல் துவக்கப்படுவதற்கு முன்பே தனியாரால் துவக்கப்பட்டது ஐசிஎல் எனும் இந்திய கிரிக்கெட் லீக். இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரம் பெற பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியம் எப்படியோ தடுத்துக்கொண்டே வந்தது. கடைசியாக, மே மாதம் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் ஐசிஎல்-இன் அங்கீகார விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து, ஐசிஎல்-லுக்குப் போன கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் தமது தவறை உணர்ந்து உறவைத் துண்டித்துக்கொண்டு திரும்பி வந்தால் உள்நாட்டு அணிகளில் சேர்க்கப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் வலைவீசி பலரையும் இழுத்து விட்டது.

கொச்சி, கோவை, சென்னை ஆகிய நகரங்களில் கிராண்ட் பிரி தடகளப் போட்டிகள் நடைபெற்றன. மூன்றிலும் கேரளம் அதிக பதக்கங்களை வென்றது.

அரபு நாட்டில் நடைபெற இருந்த ஆசியா கோப்பை கால்பந்துப் போட்டிகள் மலேசியாவில் நடைபெற்றன. அஸ்லன் ஷா கோப்பையை வென்ற உற்சாகத்தில் இருந்த இந்திய அணி, காலிறுதியைக்கூட எட்டவில்லை.

ஆசிய கிராண்ட்பிரி தடகளப் போட்டிகள் சீனத்தில் நடைபெற்றன. இந்தியர்கள் 8 தங்கம், 10 வெள்ளி, 15 வெண்கலம் ஆகிய பதக்கங்களைப் பெற்றனர்.

மார்ச் மாதம் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற இலங்கை அணியினர்மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இத் தாக்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய பார்வையை மாற்றி விட்டது. ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக, இந்தியாவில் நடைபெற இருந்த இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டன.

முதல்முறை இருந்த அளவுக்குப் பரபரப்பு இந்த முறை இருக்கவில்லை. தொலைக்காட்சியில் டிஆர்பி விகிதமும் குறைவாகவே இருந்தது. முதல் ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணிகள் வெற்றி கண்டன. இந்த முறை வேகமாக விக்கெட்டுகளை வீழ்த்திய அணிகள்தான் வெற்றி கண்டன.

முதல் ஐபிஎல் போட்டியின்போது கடைசி இடத்தில் இருந்தது டெக்கான் சார்ஜர்ஸ் அணி, அதே அணி இந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் இரண்டாவது இடம் பெற்றது. தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வழங்கினார்.

பிலிப்பைன்சில் நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் சூரிய சேகர் கங்குலி சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் பிரிவில் மீனாட்சி நான்காம் இடம் பிடித்தார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக இருக்கும் பைச்சுங் புட்டியாதான் மோகன் பகான் அணிக்கும் கேப்டனாக இருந்தார். ஐ-லீக் கால்பந்துப் போட்டியில் மோகன் பகான் வெற்றி பெற இயலவில்லை. அத்துடன், தனியார் தொலைக்காட்சியில் நடனப் போட்டியில் பங்கேற்ற புட்டியா அதில் வெற்றியும் பெற்றார். இதெல்லாம் பிடிக்காத மோகன் பகான் நிர்வாகம், புட்டியாவுக்கு நோட்டீஸ் அனுப்புவதாக மீடியா வாயிலாக அறிவித்தது. இதனால் கோபம் கொண்ட புட்டியா மோகன் பகான் அணியிலிருந்து விலகிக்கொண்டார்.

சந்தோஷ் கோப்பை கால்பந்துப் போட்டிகள் தமிழகத்தில் நடைபெற்றன. தமிழக அணி அரையிறுதியில் கோவாவிடம் தோல்வி கண்டது. இறுதிப் போட்டியில் கோவா அணி வங்கத்தைத் தோற்கடித்து சந்தோஷ் கோப்பையை வென்றது. தமிழகம் மூன்றாம் இடத்தையே பிடித்து என்றாலும் பி. முத்து சிறந்த ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்றார். பி.சி. ரிஜு, தங்கக் கால்கள் என்ற பதக்கத்தைப் பெற்றார்.

ஒலிம்பிக் பதக்க வீரர்கள் விஜேந்தர், ஜிதேந்தர் இருவரும் சீனத்தில் நடைபெற்ற ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலம் வென்றனர். பரம்ஜித் சமோடா, தினேஷ் குமார் ஆகியோரும் வெண்கலம் வென்றனர். தோக்சம் நானோ சிங், ஜெய் பகவான் ஆகிய இருவரும் வெள்ளியை வென்றனர். சுரன்ஜய் சிங் தங்கம் வென்றார். சர்வதேச அளவிலான குத்துச்சண்டையில் 1994இல் ராஜ்குமார் சங்வான் தங்கம் வென்ற பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது தங்கம் இது. பதக்க வரிசையில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்தது.

20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஜூன்-ஜூலையில் நடைபெற்றன. நடப்புச் சாம்பியனாக இருந்த இந்தியா, சூப்பர் எய்ட் குழுவிலும்கூட இடம்பெறாமல் வெளியேறியது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியைத் தோற்கடித்த பாகிஸ்தான் உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

ஜோஸ் பிராசா, இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். முந்தைய பயிற்சியாளரான ரிக் சார்லஸ்வொர்த், கேட்டது எதுவும் கிடைக்காமல் வெறுத்துப்போய் விலகிய பல மாதங்களுக்குப் பிறகு, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜோஸ் பிராசா நியமிக்கப் பட்டார்.

அதைத் தொடர்ந்து, சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் அறிவுரைப்படி இந்திய ஆடவர் ஹாக்கி – மகளிர் ஹாக்கி என இரண்டையும் சேர்த்து ஹாக்கி இந்தியா பதிவு செய்யப்பட்டது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொருளாளராக இருக்கும் ஏ.கே. மட்டு தலைமையில் உருவாக்கப்பட்ட ஹாக்கி இந்தியாவுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அங்கீகாரம் அளித்தது, சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பும் அங்கீகாரம் அளித்தது. நிர்வாகிகள் தேர்தல் விஷயத்தில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பொறுப்புகளை ஏற்பார்கள் எனறு நம்பலாம்.

20-20 உலகக் கோப்பையில் இந்தியாவின் கனவை சிதறடித்த மேற்கிந்திய அணியுடன் ஆடுவதற்காக இந்திய அணி மேற்கிந்தியா சென்றது. நான்கு ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டி மழையின் காரணமாகக் கைவிடப்பட்டது. இரண்டில் வென்ற இந்திய அணி, சீரிஸ் வெற்றி பெற்றது.

ஜாகர்த்தாவில் நடைபெற்ற இந்தோனேசியன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் போட்டியில் சீனத்தின் லின் வாங்கைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார் சைனா நேவால். ஓப்பன் சீரிஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். இவருக்கு முன்னர் இந்தியாவுக்கு ஓப்பன் சீரிஸ் சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்தவர்கள் இருவர் பிரகாஷ் படுகோனே, மற்றவர் புல்லேல கோபிசந்த். அதே கோபிசந்த் இந்த சைனா நேவாலுக்கு பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியன் ஓப்பன் கிராண்ட் பிரி போட்டியில் பங்கேற்ற சைநா நேவால், காலிறுதியை எட்டிய பிறகு வெளியேறினார்.

புனே நகரில் பயிற்சியில் இருந்த இந்திய ஹாக்கி அணியின் முக்கிய ஆட்டக்காரர் பல்ஜித் சிங்-குக்கு கண்ணில் காயம் பட்டு இன்று வரை ஆட இயலாத நிலையில் இருக்கிறார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற என்எஸ்சி சீரிஸ் ஸ்குவாஷ் போட்டியில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார் ஜோஷ்னா சின்னப்பா.

உலக ஜூனியர் வாலிபால் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்குச் சென்ற இந்திய அணி அரையிறுதி வரை எட்டியது.

ஒலிம்பிக் பதக்க வீரர் விஜேந்தர் சிங், சுஷில் குமார், மேரி கோம் ஆகிய மூவருக்கும் விளையாட்டு ரத்தின விருதுகள் வழங்கப்பட்டன.

வில்வித்தை வீரர் மங்கல் சிங் சம்பியா, தடகள வீராங்கனை சினிமோல் பவுலோஸ், பேட்மின்டன் சைநா நேவால், குத்துச் சண்டை சரிதா தேவி, சதுரங்கத்தில் தானியா சச்தேவ், கிரிக்கெட்டில் கௌதம் கம்பீர், ஆடவர் ஹாக்கியில் இக்னேஸ் திர்க்கி, மகளிர் ஹாக்கியில் சுரீந்தர் கௌர், கபடியில் பங்கஜ் ஷிர்சத் உள்ளிட்ட பலருக்கு அர்ஜுனா விருதுகள் வழங்கப்பட்டன.

பேட்மின்டன் பயிற்சியாளர் கோபி சந்த், மல்யுத்தப் பயிற்சியாளர் சத்பால், ஹாக்கி பயிற்சியாளர் பல்தேவ் சிங், குத்துச் சண்டை பயிற்சியாளர் ஜெயதேவ் பிஷ்ட ஆகியோருக்கு துரோணாச்சாரியா விருது வழங்கப்பட்டது.

நேரு கோப்பை கால்பந்துப் போட்டிகள் புதுதில்லியில் நடைபெற்றன. கடுமையான போட்டிகளுக்குப்பிறகு இறுதியை எட்டிய இந்திய கால்பந்து அணி, சிரியாவைத் தோற்கடித்து நேரு கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.

மிலான் நகரில் நடைபெற்ற உலகக் குத்துச் சண்டைப் போட்டியில் பங்கேற்ற விஜேந்தர், அரையிறுதியை எட்டி, உலகக் குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு முதல் முறையாக பதக்கம் பெற்றுத்தந்து சாதனை படைத்தார்.

சர்வதேச பில்லியர்ட்ஸ் சாம்பியன் போட்டியில் பங்கேற்ற 24-வயது பங்கஜ் அத்வானி, 41 வயது மைக் ரஸ்ஸலைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். கீத் சேத்திக்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்தியாவுக்குக் கிடைத்த சாம்பியன் பட்டம் இது.

இலங்கையில் நடைபெற்ற டிரைசீரிஸ் கிரிக்கெட் போட்டியில் நியூ சிலாந்து மற்றும் இலங்கை அணிகளை வெற்றி கண்டு, டிரை சீரிஸ் கோப்பையைக் கைப்பற்றியது இந்திய அணி. சர்வதேசத் தர வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தகுதிச் சுற்றில் தேறாமல் வெளியேறியது.

ஆண்டு தோறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் சிறந்த ஆட்டக்காரர்கள் விருதுகளில், தோனி, கவுதம் கம்பீர், சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றன. சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர் விருது கவுதம் கம்பீருக்கும், சிறந்த ஒருநாள் கிரிக்கெட்டர் விருது தோனிக்கும் கிடைத்தது.

டென்மார்க்கில் நடைபெற்ற உலக மல்யுத்தப் போட்டியில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் பெற்றுத் தந்தார் ரமேஷ் குமார்.

இந்தியாவின் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியப் போட்டியான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சேவாக் தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணி, மும்பை அணியைத் தோற்கடித்து இரானி கோப்பையைக் கைப்பற்றியது.

49ஆவது நேஷனல் ஓப்பன் தடகளப் போட்டிகள் போபாலில் நடைபெற்றன. 57 பதக்கங்கள் பெற்ற ரயில்வே முதலிடம் பெற்றது. 18 பதக்கங்கள் பெற்ற சர்வீசஸ் இரண்டாம் இடம் பிடித்தது. 13 பதக்கங்கள் பெற்ற கேரளம் மூன்றாம் இடம் பிடித்தது.

ஆடவர் பிரிவில் மும்முறை தாண்டலில் புதியா சாதனை படைத்த எம். ரஞ்சித் ஆடவர் பிரிவின் சிறந்த தடகளவீரர் பெருமையைப் பெற்றார்.

800 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டம் என இரண்டிலும் தங்கம் வென்ர டின்ட்டு லுகா, மகளிர் பிரிவில் சிறந்த தடகள வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார். 5 பதக்கங்கள் பெற்று தமிழகம் பத்தாம் இடத்தைப் பிடித்தது.

எம்.சிசி முருகப்பா தங்கக் கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் ஆர்மி-லெவன் அணி கோப்பையை வென்றது.

இந்தியன் ஓப்பன் கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டியில் பெங்களூரைச் சேர்ந்த சின்னசாமி முனியப்பா, கொரியாவின் லீ சுங்-கைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். அலி ஷேர், ஃபிரோஸ் அலி, அர்ஜுன் அத்வால், ஜோதி ரந்தாவா, விஜய் குமார் ஆகிய கோல்ஃப் சாம்பியன்களின் வரிசையில் சேர்ந்திருக்கிறார் சின்னசாமி.

இந்திய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் குழு, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் குழு ஆகிய மூன்றும் இணைந்து துவக்கியுள்ள சாம்பியன்ஸ் லீக் 20-20 கிரிக்கெட் போட்டிகள் முதல் முறையாக இந்தியாவில் நடைபெற்றன.

இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, மேற்கிந்தியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து உள்நாட்டு 20-20 கிரிக்கெட் போட்டிகளில் வென்ற 12 அணிகள் இதில் பங்கேற்றன.

நியூ சவுத் வேல்ஸ் புளு அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது. டிரினிடாட் டொபாகோ அணி இரண்டாம் இடம் பிடித்தது.

கனடாவில் இந்திய ஹாக்கி அணிக்கும் கனடிய ஹாக்கி அணிக்கும் இடையிலான ஏழு ஹாக்கி போட்டிகளில் முதல் நான்கிலும் வென்ற இந்திய அணி சீரீஸ் வெற்றியைப் பெற்றது.

இந்திய கால்பந்து அணியின் காப்டன் புட்டியா, 100 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற சாதனை புரிந்தவர் என்பதற்காக தில்லியில் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு அவருக்கு ஒரு தங்கக் காசும், ஐந்து லட்ச ரூபாய் காசோலையும் அளித்துப் பாராட்டியது.

மாநிலங்களுக்கிடையிலான தடகளப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றன. வழக்கம்போல இந்த முறையும் கேரளம்தான் அதிக பதக்கங்கள் பெற்றது.

நவம்பர் மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியா சீரிஸ் வெற்றி கண்டது.

வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்கப் போட்டிகளில் பங்கேற்ற இந்தியர்கள் 6 தங்கம், 9 வெள்ளி, 25 வெண்கலப் பதக்கங்களுடன் ஏழாவது இடம் பிடித்தனர்.

சீனத்தில் நடைபெற்ற 18ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 1 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் வென்ற இந்தியா ஆறாம் இடம் பிடித்தது.

பாங்காக்கில் நடைபெற்ற ஆசியக் கோப்பைக்கான மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி இறுதிவரை எட்டி சீனத்திடம் தோல்வி கண்டது. இருப்பினும், மகளிர் உலகக் கோப்பையில் பங்கேற்கும் தகுதியை இந்தியா பெற்று விட்டது. இந்த டோர்னமென்டின் சிறந்த ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்றார் சுப்ரதா பிரதான்.

அர்ஜென்டினாவில் நடைபெற்ற உலக ஜூனியர் செஸ் சாம்பியன் போட்டியில் சௌம்யா சாம்பியன் பட்டம் வென்றார். கொனேரு ஹம்பி, ஹரிகா ஆகிய இருவருக்கும்பிறகு, இந்த சாம்பியன் பட்டம் வென்ற மூன்றாவது இந்தியர் சௌம்யா.

சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்து இருபது ஆண்டுகளைக் கடந்து விட்ட சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் 17000 ரன்கள் குவித்த சாதனை புரிந்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்கள் குவிக்கும் சாதனையை நெருங்கி விட்டார்.



1 comment:

  1. பல அனுபவங்கள்.கருத்துப் பதிவுகள்.செம்மையாக உள்ளன.தொடர்ந்து எழுதுக.வரவேற்கிறேன்.வாழ்த்துகிறேன்.
    கி.நாச்சிமுத்து ,புது தில்லி

    ReplyDelete