Tuesday 13 November 2012

கதம்பம் 3

இன்னுமொரு தீபாவளி
இதே தலைப்பில் ஏற்கெனவே ஒரு பதிவை படித்தது போலத் தெரிகிறதே என்று யோசிக்கும் நண்பர்களே... புதிதாக வேறு எந்த மாற்றமும் வந்துவிடவில்லை என்பதால் (இன்னுமொரு தீபாவளி) அதையே படிக்கலாம். கொசுறாக சில செய்திகள்.

இந்த ஆண்டு பட்டாசுச்சத்தம் மிகமிகக் குறைவு. எந்தவொரு விஷயத்தையும் அது சிறப்பு, இது பெரிது, இது குறைவு என்று கூறும்போது நம் மனம் பின்னணியில் ஒப்பீடு ஒன்றைச்செய்த பிறகுதானே நமக்குத் தெரிவிக்கிறது. நானும் அதைத்தான் கூறுகிறேன். 1991இல் நான் தில்லிக்கு வந்த காலத்தில் இருந்ததில் கால்பங்குகூட இல்லை என்று நிச்சயம் கூறலாம். கடந்த ஆண்டில் இருந்ததில் பாதி அளவுக்கு இருக்கும் என்று தோன்றுகிறது. வரவேற்கத்தக்க இந்த மாற்றத்துக்கு இப்போதும் விலைவாசி உயர்வே காரணமாக இருக்கும் என்று தோன்றுகிறது. 


முகநூலில் இப்படி ஒரு வாழ்த்து எழுதினேன் -
            Wish you all a happy Diwali.
            Celebrate this festival of light by caring the unfortunate ones.
            Experience the joy of sharing by lighting their hopes.
இந்த ஆண்டு முந்தைய தீபாவளிகளைவிட ஏராளமான தின்பண்டங்கள் வந்து குவிந்ததற்கு இது காரணமாக இருக்காது என்றே நம்புகிறேன். வந்ததில் நாங்களும் தந்தது போக இருக்கிற டப்பாக்களில் அடைத்து வைத்திருக்கிற தீனி இன்னும் ஒருவாரத்துக்குக் காணும். நட்புக்கு வணக்கம்.

* * *

யார் அது...?
அதிகம் விளம்பரப்படுத்தப்படாத என் வலைப்பூவுக்கு வருகை தரும் நண்பர்களுக்கு நன்றி. என் பதிவுகள் உங்களுக்கு விருப்பமானவையாக இருந்திருக்கும் - இல்லாவிடினும் வெறுப்பூட்டுவதாக இருந்திருக்காது என நம்புகிறேன்.

கூகுளில் புதியவன் என்று தேடி சிலர் வந்தடைகிறார்கள், சரி. வேறு சிலர் இருக்கிறார்கள் - ஒருவர் " கண்காட்சி நடைபெறும் " என்று கூகுளில் தேடியே வந்து கொண்டிருக்கிறார். மற்றொருவர் ஒவ்வொருமுறையும்  " வரவேற்புரை கவிதை " என்று தேடியே வந்து சேர்கிறார். இது ஏன் என்றுதான் புரியவில்லை.

வலைப்பூவுக்கு வருகை தந்தவர்கள் யார் என்று பார்க்கும்போது ரஷ்யாவிலிருந்தும் உக்ரைனிலிருந்தும் சிலர் தொடர்ந்து - தினமும் படித்து வருகிறார்கள் என அறிகிறேன். ஜெர்மனி, போலந்து, லண்டன், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளிலிருந்து தொடர்ந்து பார்வையிடுபவர்கள் யார் என்பதை கொஞ்சம் ஊகிக்க முடிகிறது. ரஷ்யாவிலிருந்து பார்வையிடும் நண்பர்(கள்) யார் என்பதுதான் புரியவில்லை. அறிமுகம் செய்து கொண்டால் எனக்கு திருப்தியாக - மகிழ்ச்சியாக இருக்கும்.

* * *

ஆதம் குன்று
வீட்டில் வாக்காளர் அட்டையைத் தேடிக் குடையும்போது பான் கார்டு கிடைப்பதில்லையா.... எப்போதோ யார் யாரோ கொடுத்துவைத்த விசிட்டிங் கார்டுகள் கிடைப்பதில்லையா... அவர்களின் முகம் எப்படியிருக்கும் என்று கொஞ்சநேரம் குழம்ப வைக்கும் இல்லையா. அப்படித்தான் நிகழ்ந்தது அண்மையில் இணையத்தில் ஒரு விஷயத்தைத் தேடியபோது.

இலங்கைச் சிறுகதை ஒன்றில், . . . . . . . . . . (என்ற நபர்) புகழின் உச்சியை அடைந்தார் என்று தமிழில் மொழிபெயர்த்திருந்தார் ஒருவர். வாக்கியம் பொருந்தவில்லையே என்று ஆங்கிலத்தை சரிபார்த்தபோது ஆதம்ஸ் பீக் என்று இருந்தது. அட, ஆதம்ஸ் பீக் என்பதற்கு புகழின் உச்சி என்றுகூடப் பொருள் உண்டா என்று வியந்துபோய் சரிபார்க்கப் புகுந்தேன். அப்போது தெரிந்தது - இலங்கையில் இருக்கிற ஆதம் குன்று அது என்று. 


உலகில் நான்கு மதங்களுக்குப் புனிதமான மலை இது ஒன்றுதான் என்று தோன்றுகிறது. ஆதம்ஸ் பீக் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் சிவனொளி பாதமலை என்னும் மலை, இந்துக்கள், முஸ்லீம்கள், பௌத்தர்கள், கிறித்துவர்கள் ஆகிய நான்கு சமூகத்தினருக்கும் புனிதமான மலையாம். அங்கே இருக்கிற பாதக் குறியை நான்கு சமூகத்தினரும் தமது நம்பிக்கைகளுக்கேற்ப தமது மதத்துக்குச் சொந்தமான பாதக்குறி என்று வழிபடுகின்றனர்.


இறைவனால் அனுப்பப்பட்ட ஆதம் நபியின் பாதக்குறி என்று இஸ்லாமியர்கள் கருதுவதால் அவர்களுக்கு இதுவும் ஒரு புனிதத்தலம்.
சிவதாண்டவத்தில் கால் பதித்த சிவனின் காலடி என்று இந்துக்கள் கருதுவதால் இது இந்துக்களின் பூஜைத்தலம்.
புத்தரின் காலடி என்று நம்புவதால் பௌத்தர்களின் புண்ணியத்தலம்.
கிறுத்துவர்களின் ஈடன் தோட்டம் என்பதாலும், ஆதிமனிதன் ஆதாம் அவர்களுக்கும் உரியவர் என்பதாலும் மட்டுமல்ல, புனித தாமசின் காலடி அது என்று போர்த்துகீசிய கிறித்துவர்கள் நம்புவதாலும் இது கிறித்துவர்களுக்கும் புனிதத்தலம்.
எது எப்படியோ, நான்கு மதத்தினரும் உரிமை கோரி மோதிக்கொள்ளாமல் அவரவர் முறைப்படி போற்றிக்கொள்கிறார்கள் என்ற வகையில் மகிழ்ச்சி.

(சிறுகதையில் குறிப்பிடப்பட்ட நபர், ஒருகாலத்தில் ஏறுவதற்குக் கடினமான ஆதம் மலையின் உச்சிக்கு ஏறுகிற அளவுக்கு வலிமையானவராக இருந்தவர் என்பதுதான் மூலக் கதையில் கூறவந்த கருத்து என்பது வேறு விஷயம்.)

* * *

சிறகுக்கு கைகொடுப்போம்
யாரோ ஒரு நண்பர் முகநூல் பக்கத்தில் சுயம் என்றொரு தொண்டு நிறுவனம் பற்றிய செய்தியைப் பகிர்ந்திருந்தார். இணையத்தில் தேடி அந்த நிறுவனம் மேற்கொண்டுவரும் பணிகளைப் பற்றி அறிந்தேன். நான் புரிந்துகொண்டவரை சிறப்பான சேவை செய்வதாகத் தோன்றியது. அந்த அமைப்புக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்துவிட்டேன். நீங்களும் என்னைப்போலவே உதவி செய்ய விரும்பலாம் அல்லவா...  அதற்காக விவரங்கள் கீழே.

சுயம் - http://www.suyam.org
வங்கி விவரங்கள் 
Name of the Account : Suyam Charitable Trust
Nature of the Account : Savings Bank Account
Account Number : 603101272441 
Bank : ICICI Bank, Sowcarpet Branch
IFSC/NEFT Code : ICIC0006031
மேலதிக தகவலுக்கு - http://www.suyam.org/donatenow.htm

* * *

தமிழில் தட்டச்ச
ஏற்கெனவே சில தட்டச்சுக் கருவிகள் இணையத்தில் இருந்தாலும், கூகுளும் இப்போது தட்டச்சுக் கருவிகளை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே இந்த வசதி http://www.google.co.in/transliterate என்ற பக்கத்தில் இருக்கிறது. ஆனால் இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே இதில் தட்டச்ச முடியும். இப்போது உருவாக்கியிருக்கும் கருவியை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளலாம், இணைய இணைப்பு இல்லாமலே பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பு. முக்கியமான இந்திய மொழிகள் அனைத்துக்கும் கருவிகள் இங்கே கிடைக்கின்றன. 

* * *

தேவி... ஸ்ரீதேவி...
இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்படம் பற்றி நண்பர் சந்துரு எழுதியது சொல்வனம் இதழில் வந்திருக்கிறது. நானும் பார்த்த அந்தத் திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ஒரு விஷயம்.

படத்தைப் பார்த்ததும் எனக்கும் ( ! ) கூட இதைப்பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று தோன்றியது. நேரமின்மை தடையாய் இருந்தது ஒருபுறம் இருக்க, அதை நன்றாகவே செய்வதற்கு நிறையப்பேர் இருக்கிறார்கள் நாம் எதற்கு என்று விட்டுவிட்டேன். இருந்தாலும் நம்ம ஸ்ரீதேவி இல்லையா... எத்தனை வருசமாச்சு அவரைப் பாத்து...! கட்டுரை எழுதியிருந்தால் ஸ்ரீதேவி நடிப்பைப் பாராட்டியே என் கட்டுரை அமைந்திருக்கும். குறிப்பாக அது ஸ்ரீதேவியின் பலவிதமான பாவங்கள். 

ஆங்கிலப்பள்ளிக்குச் செல்லும்போதும் திரும்பும்போதும் காட்டும் பாவங்கள். முதல்முதலாக ஆங்கில வகுப்புக்குச் செல்லும்போது காட்டும் தயக்கம், வெளிவந்து நடக்கும்போது அச்சம், அடுத்து கொஞ்சம் தைரியம், அதற்குப்பிறகு இன்னும் கொஞ்சம் தைரியம், பிறகு அபார தன்னம்பிக்கையுடன்கூடிய நடை, காதல் வெளிப்படுத்தப்பட்ட பிறகு முகத்தில் குழப்பமும் கலக்கமுமான நடை. 



இயக்குநர் இதை எதிர்பார்த்தார் என்றால், அதை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதேவி. எத்தனைபேர் இதைக் கவனித்து ரசித்தார்கள் அல்லது புரிந்து கொண்டார்கள் என்று தெரியாது. ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலே இருக்கும் படங்களில் இது சற்றே வெளிப்படுவதை உணர முடியும் என்று நம்புகிறேன்.

ஒரு ரகசிய வேண்டுகோள் : படத்தில் மனைவியை கிண்டல் செய்து கொண்டே இருக்கும் ஸ்ரீதேவியின் கணவருக்கும், இதைப்படிக்கும் பெரும்பாலான கணவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை யாரும் வெளியே சொல்லி விடாதீர்கள்.

1 comment:

  1. சொல்வனம் கட்டுரையைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சார். தமிழில் தட்டச்ச உதவும் இணைப்பு மிகவும் உபயோகமாக இருக்கும். தரவிறக்கம் செய்து விட்டேன்.

    ReplyDelete