Sunday 7 July 2013

அழகிய தருணங்கள்

தன் மகளின் திருமணத்தை முன்னிட்டு விருந்தினர்களுக்கு வழங்குவதற்காக வெளியிட்ட கவிதைகள் கொண்ட சிறு பிரசுரம் ஒன்றை முகநூல் தோழி மரியா சிவானந்தம் ஓரிரு மாதங்களுக்கு முன் அனுப்பி வைத்திருந்தார். உறக்கம் தொலைத்த ஓரிரவில் பிடிஎஃப் வடிவில் இருந்த அதை முழுவதுமாகப் பார்க்க முடிந்தது.

வேலைக்குப் போகும் பெண், தாய், இயற்கையின் ரசிப்பு, கல்வி குறித்த கவலை, மனிதம் என பல்வேறு தலைப்புகளில் கவிதைகள். சுவைசேர்க்கத் துணையாக சில படங்கள். அந்நூலிலிருந்து சட்டெனப் பிடித்துப்போன சில கீற்றுகளை கீழே தரலாம் என்று தோன்றியது. ஒவ்வொரு தலைப்பிலும் முழுக் கவிதையும் தரவில்லை, சில வரிகளை மட்டுமே தந்திருக்கிறேன். நீங்களும் படித்து மகிழலாம்.

1. வீட்டுக்கொரு காந்தி -

அநியாய அடக்குமுறை
எழுப்பிடும் சப்தங்களில்
நியாயமான உரிமைகளின்
முனகல்கள்
நெறிக்கப்படுகின்றன.

இனிவரும் தலைமுறையேனும்
உரிமையின் குரலாக
எளிமையின் வடிவமாக
வாய்மையை வெல்லச்செய்து
வையத்தைத் துலங்கச் செய்ய
“வீட்டுக்கொரு காந்தி” வளர்ப்போம்.

2. வன்முறை வாழ்க்கை முறையல்ல -

விரைவான முடிவாக
தலைகளை உருட்டும்
தவறான வழக்கத்திற்கு
விதைதனை இட்டது யார்?

இம்முறை தோற்றதே
இறுதியாய் இருக்கட்டும்.
வன்முறை இனியும் நம்
வாழ்க்கை முறையல்ல.

3. வீதியோர செல்லங்கள் -

வண்ணவண்ண உடைகள்
வகைவகையாய் உணவுகள்
பஞ்சுப்படுக்கைகள் இவை ஏதும்
இவர் பார்த்தறியா சுகங்கள்.

எச்சில் இலைகளுக்காய்
இரவுபகலாய் போராடினாலும்
இவர்கள் புசிப்பதென்னவோ
பசியைத்தான்.

இச்சுதந்திர சொர்க்கத்தில்
ஆளுக்கொரு திட்டம்
அறிவிக்கையில்
வீதியோரம் நாளுக்கொரு
பிச்சைக்காரன் பிறக்கிறான்.

இவர் கட்டிடும் கந்தலைவிட
கனவுகள் நைந்து போயின.

முடியாத துயரோடு
முடிகிற இவர் வாழ்வு
என்று விடியும்?

“எது” நடந்தால்
இவர் துயர் தீரும்?

4. பொருந்தாத் திருமணம் -

பட்டுச்சேலையைக் கிழித்து
கந்தலுக்கு ஒட்டுப்போட்ட
முட்டாள்தனம்...
முள்ளின் நுனிக்கு
மணிமகுடம் சூட்டும்
வெட்டி வேலை...
வானத்துப் பறவையுடன்
வறட்டுத் தவளையைப்
பறக்க விரட்டும் பரிதாபம்.

5. பாலும் கசந்ததடி -

அடுக்களை அரசுகள்
ஆட்டம் காணுகின்றன.

பருப்பைத் தொடுகையில் நெருப்பு
பாலும் கசந்திடும் தவிப்பு

புளியா புலியா
புரியாத வியப்பு

விண்ணேறும் விலைவாசி
வீழ்கையில் எம்
விழியோரம் குறுநகை மலரும்

படைத்திடும் கவிதைபோல
சமைத்திடும் உணவும்
சுவையோடு மிளிரும்.

6. அழிந்த வரலாறு -

வளைத்த கறுப்புக் கம்பியில்
அப்பா அடுக்கி, குத்திவைத்த
காலப் பெட்டகங்கள்...

மஞ்சள் தடவிய சுபச்செய்தி
குழந்தை பிறப்பு
நலம் நாடும்
நீல நிறக் கடிதங்கள்
மரணம் சுமந்த உறைகள்...

பொங்கலுக்கு வெள்ளையடிக்கையில்
போகிக்கு கொளுத்துகையில்
ஆண்டுதோறும் அனலுக்கு இரையாயின...

எரித்த கடிதங்களில்
எரிந்தது என் வீட்டு வரலாறு.

7. உப்புக்கல்லை வைரம் என்றால்... -

நிறுத்தக்குறிகள் இடப்படாத
நீண்ட வாக்கியமாய்
அர்த்தமும் இன்றி
அழகும் இன்றி
சக்கரக் கால்களில் சுழன்று
சந்தியில் கலையுது
மக்கள் வாழ்க்கை.

வசதியாய் வளர்கையில்
வாழ்க்கை தொலைந்தது.

உண்மையை உரசிப்பார்க்கும்
உரைகற்கள் உடைந்ததால்
உப்புக்கல்லை வைரமென்று
ஒப்புக்கொள்வதில்
உள்ளுறுத்தல் யார்க்கும் இல்லை.

8. அழகிய தருணங்கள் -

கடற்கரை மணலில்
கணவருடன் விரல்கோத்து
கால்கடுக்க நடக்கும் தருணம்

சுட்டெரிக்கும் வெயிலில்
மட்டையடித்து திரும்பும் மகள்
மறக்காமல் தந்த - புழுதி
மணம்வீசும் ஈரமுத்தம்.

பள்ளி நண்பரைப் பார்க்கையில்
பழங்கதைகள் தொகுக்கும் தருணம்.

வெள்ளிக் காசுகளை
அள்ளி இறைத்தாற்போல்
விண்மீன்கள் சுயாட்சி நடத்தும்
நிலவில்லா இரவு.

தந்திக்கம்பிகளில் தலைசாய்த்து
எந்த ஊருக்கோ
சேதி அனுப்பும் குருவிகள்.

9. மாற்றுங்கள் -

வாடகை தராமல்
இங்கு வாசம் செய்யவந்த
வெள்ளைப் பறவைகள்
பறந்து போகையில்
எச்சமென நம் தலையிலிட்ட
மிச்சம் இந்தக் கல்விமுறை.

10. நீ -

இளமையில் கைகோத்தேன்
இறுதிவரை துணையானாய்.

அன்று உறவானாய்
இன்று எல்லாமே நீயானாய்.

என் சிரிப்பின்
பொருளாக,
நிறைவாக,
பலமாக,
கைநடுங்க
நான் எழுதும்
கடைசிக் கவிதையின்
கடைசி வரியாக
நீ.

4 comments:

  1. எடுத்துத் தந்த கவிதைத் துளிகள் அனைத்தும் அருமை. கவிதைத் தொகுப்பினை படித்திட ஆசை... கிடைக்கும் இடம் சொல்லிடுங்களேன் ஷாஜஹான் ஜி....

    ReplyDelete
  2. கவிதை துணுக்குகள் பிரமாதம்

    ReplyDelete
  3. வெங்கட், அதை எழுதிய மரியா பிடிஎப் வடிவில் எனக்கு அனுப்பியிருந்தார். வேண்டுமானால் மின்அஞ்சலில் அனுப்புகிறேன்.

    ReplyDelete