Friday 21 February 2014

புதுதில்லி உலகப் புத்தகத் திருவிழா 2014

பிப்ரவரி 15 அன்று புதுதில்லி பிரகதி மைதானில் 22ஆவது உலகப் புத்தகத் திருவிழாவைத் துவக்கி வைத்தார் குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்ஜி. 


சுதந்திர, ஜனநாயக, பன்மொழிகளின், பல பண்பாடுகளின் மற்றும் மதச்சார்பற்ற தன்மையின் வெளிப்பாடுதான் இந்தப் புத்தகத் திருவிழா என்றார் பிரணாப் முகர்ஜி. இணையமும் காட்சி ஊடகமும் வாசிக்கும் பழக்கத்தை சீரழித்து விடும் என்ற கருத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப்பற்றிப் பேசிய அவர், வாசிக்குப் பழக்கம் என்பது மனித சமூகத்தின் அங்கமாகி விட்டது, எனவே புத்தகங்கள் நிலைத்து நிற்கும் என்றார்.


இந்தத் திருவிழாவின் சிறப்பு விருந்தினர் நாடாக இருக்கிறது போலந்து. போலந்திருந்து இதற்காக சிறப்புக்குழு வந்திருக்கிறது. போலந்தின் அமைச்சர் திருமதி கதார்ஸைனா, இரண்டாம் உலகப் போரின்போது போலந்தின் அகதிகளுக்கு இந்தியா தஞ்சம் அளித்ததை நினைவுகூர்ந்து நன்றி கூறினார். சுமார் 20000 போலந்து மக்களுக்கு நவநகர் சமஸ்தானத்தின் மன்னர் ஜாம் சாகேப் திக்விஜய் சிங் தஞ்சம் அளித்தார் என்பது வரலாறு. இந்தியாவைப் பற்றி போலந்துவாசிகளுக்கு நன்கு தெரியும். ஆனால் போலந்து இலக்கியம் இந்தியர்கள் மத்தியில் அதிகம் அறியப்படவில்லை என்றார் போலந்தின் மற்றொரு அமைச்சர் திருமதி மல்கோர்ஸடா.


இந்தப் புத்தகத் திருவிழாவின் மையக் கருத்தாக இருப்பது குழந்தை இலக்கியம். இதற்காக தனி அரங்கம் உண்டு. 13 மொழிகளில் வெளியான குழந்தை இலக்கிய நூல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களின் விவரங்கள் அடங்கிய நூல் பட்டியல் ஒன்றும் தயாரிக்கப்பட்டது.

குழந்தைகளை மையப்படுத்திய பல நிகழ்ச்சிகளும் - பொழுதுபோக்கு மற்று்ம் அறிவுசார் நிகழ்ச்சிகள் - காலை முதல் மாலை வரை நடைபெறுகின்றன. 

ஒரு நாளில் கருத்தரங்குகள், எழுத்தாளர் சந்திப்புகள், கலை நிகழ்ச்சிகள், மாநாடுகள், கவியரங்குகள், புத்தக வெளியீடுகள் என சுமார் 60 நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறுகின்றன. 

திருவிழா விவரம் –
15ஆம் தேதி துவங்கி 23ஆம் தேதி வரை 
11 மணி முதல் 8 மணி வரை. 
நுழைவுக் கட்டணம் - சிறுவர்களுக்கு ரூ. 10, பெரியவர்களுக்கு ரூ. 20.
நுழைவுச் சீட்டுகள் சில மெட்ரோ நிலையங்களிலும் கிடைக்கும்.




தமிழ்ப் பதிப்பாளர்கள் 14ஆம் எண் அரங்கம்
1. இஸ்லாமிக் பவுண்டேஷன் டிரஸ்ட் - கடை எண் 90
2. ஓங்காரம் பப்ளிகேஷன்ஸ் - கடை எண் 91
3. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - கடை எண் 92
4. கிழக்கு பதிப்பகம் - கடை எண் 93
5. காலச்சுவடு பதிப்பகம் - கடை எண் 94
6. தமிழக பதிப்பாளர் விற்பனையாளர் சங்கம் (BAPASI) – 75
7. செம்பருத்தி - S1/5 (BAPASI கடை எதிரில்)
8. பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் 73
9. Tutorush - S2/5

10. சாகித்ய அகாதமி சில தமிழ் நூல்களை வைத்திருக்கிறது. அரங்கம் 11, கடை எண் 122

11. நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா கடையிலும் தமிழ் நூல்கள் கிடைக்கும். அரங்கம் 18 - கடை எண் 44

வாசிப்பை நேசிப்போம்.

2 comments:

  1. வாசிப்பை நேசிப்போம்...

    ReplyDelete
  2. வாசிப்பை நேசிப்போம்.

    ஞாயிறு அன்று வந்தபோது உங்களைச் சந்திக்க இயலாமல் போனது....

    விரைவில் சந்திக்கலாம்! :)

    ReplyDelete