Friday 12 May 2017

ஹைடிரோகார்பன் - யார் பொறுப்பு

ஹைட்ரோகார்பன் என்றால் என்ன?
ஹைட்ரோகார்பன் என்பது கரிம வேதிப்பொருள்களின் கலவை, அதாவது, ரசாயனப் பொருள். இதில் ஹைட்ரஜனும் கார்பனும் இருக்கும்.

ஹைட்ரோகார்பன் என்பது இயற்கையாக்க் கிடைப்பதா, செயற்கைப் பொருளா?
இரண்டும் உண்டு. இயற்கையாகக் கிடைப்பதில் முக்கியமானது நிலத்திலிருந்து எடுக்கப்படும் பெட்ரோலியத்தின் மூலப் பொருளான கச்சா எண்ணெய். மற்றபடி, கார்பனையும் ஹைட்ரஜனையும் விகிதப்படி கலந்து யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால், ஹைட்ரோகார்பன் என்று இங்கே பேசப்படுவது நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள்தான்.

ஹைட்ரோகார்பன் பொருட்களுக்கு உதாரணம் ?
மீத்தேன், புரொபேன் போன்ற வாயுக்கள், பென்சீன் போன்ற திரவங்கள், மெழுகு போன்ற திடப்பொருட்கள்,

அப்படியானால் மீத்தேன் திட்டமும் ஹைட்ரோகார்பன் திட்டமும் ஒன்றுதானா?
மீத்தேன் திட்டம் என்று சொன்னால் எதிர்ப்பு வருகிறது என்பதால் ஹைட்ரோகார்பன் என்று சொல்லியிருக்க வாய்ப்பு உண்டு. மீத்தேன் திட்டம் என்றால் மீத்தேன் என்று மட்டுமே பொருள்படும். ஹைட்ரோகார்பன் என்றால், மீத்தேன் உள்பட பலவும் அடங்கும்.

நாடு முன்னேற வேண்டாமா? வளர்ச்சி வேண்டாமா? வளர்ச்சி வேண்டியிருக்கிறது. அது இல்லையேல் மின்சாரம் உள்பட எந்த வசதியும் அனுபவிக்க முடியாது. பெட்ரோலியப் பொருட்களின் எல்லா வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு அதை எதிர்க்கலாமா?
வளர்ச்சி வேண்டும்தான். அதற்காக அதன் பின்விளைவுகளைப் பற்றி யாரும் பேசவே கூடாதா என்ன? பசுமைப் புரட்சி வந்தபோது அன்றைக்கு அது உன்னதமான திட்டம். மண்வளத்தை எல்லாம் சீரழித்து விட்டதென இன்று அது விமர்சிக்கப்படவில்லையா? வளர்ச்சி என்ற பெயரால் நீராதாரப் பகுதிகளை எல்லாம் ஆக்கிரமித்ததன் விளைவை 2015 டிசம்பரில் சென்னையில் நாம் பார்க்கவில்லையா?

அறிவியல் தெரிந்தவர்கள் பேச வேண்டிய விஷயம் அல்லவா இது?
கேட்கிற கேள்விக்கு சரியான பதில் இல்லை என்றால் வாயை அடைப்பதற்கான எளிய வழி இது. கூடங்குளம் விவகாரத்தின்போதும் இதேதான் சொன்னார்கள். விந்தை என்னவென்றால், அறிவியல் தெரிந்தவர்கள் அடுக்கடுக்காக பொய்களை அவிழ்த்து விட்டார்கள்! அறிவியல் அறிந்தவர்கள் எல்லாரும் உண்மையே பேசுவார்கள், நேர்மையானவர்கள் என்று பொருளாகுமா என்ன?

ஹைடிரோகார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு வரும்?
இதுவரை வாசித்த கட்டுரைகள், தேடிப்படித்த தகவல்கள், இந்திய நில அமைப்பு ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில் இந்தத் திட்டம் சாதகங்களைவிட அதிக பாதகங்களையே கொண்டுவரும் என்று தோன்றுகிறது.

ஏன் என்றால், தமிழகத்துக்கு இப்போதே கடுமையான தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள். மேற்குத் தொடர்ச்சி மலை மொட்டை அடிக்கப்பட்டு, மழை குறைந்து விட்டது. நீராதாரங்களை பராமரிக்கும் பழக்கத்தை மறந்து விட்டோம். தமிழகத்துக்கென சொந்தமாக உற்பத்தியாகும் நதிகள் இல்லை. கேரளமும் கர்நாடகமும் அணைக்கு மேல் அணையாக கட்டிக் கொண்டே இருக்கின்றன. நிலத்தடி நீர்வளம் சுரண்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்போது சூரிய மின்சக்தி பரவலாகிக் கொண்டிருப்பதால் வேளாண்மைக்காக நிலத்தடி நீர்வளம் இன்னும் சுரண்டப்படும். இத்தனை பிரச்சினைகளுக்கும் மேலாக, ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கும் நீர் நிறையவே தேவை.

இத்தகைய பின்புலத்தில், ஒவ்வொரு இடமாக கிணறு தோண்டி, பல்வேறு இடங்களிலிருந்தும் சுரண்டி எடுத்த நிலத்தடி நீரை இரசாயனங்களுடன் உள்ளே செலுத்தி, அந்தப் பகுதியின் நிலத்தடி நீரை மாசுபடுத்தி, இருக்கிற வளத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அப்படியே விட்டு விட்டு அடுத்த இடத்தை நோக்கிச் செல்கிற திட்டம் இது. இதன் சுற்றுச்சூழல் பாதிப்புகள் எந்தளவுக்கு இருக்கும் என்பதை எந்த விஞ்ஞானியும் / அதிகாரிகளும் சொல்லிவிட மாட்டார்கள்! கர்நாடக ரெட்டிகள் மலைகளை சுரண்டி மொட்டை அடித்த கதைகளை நாம் பார்க்கவில்லையா என்ன? சுற்றுச்சூழல் அனுமதிகளும், அவ்வப்போதைய மதிப்பீடுகளும், என்ன சாதித்தன? அப்போதெல்லாம் செய்யாததை இப்போது மட்டும் செய்து விடுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

• இந்தத் திட்டம் வேண்டாம் என்பவர்கள் காரோ பைக்கோ வேண்டாம் என்று சொல்லிவிட்டு நடந்து போவார்களா? சமையல் கேஸ் வேண்டாம் என்று மறுத்துவிட்டு விறகு அடுப்புக்குப் போவார்களா?
இந்தமாதிரி கேள்வி கேட்பவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பெட்ரோலைக் குடிப்பார்களா? காற்றுக்குப் பதிலாக எரிவாயுவை சுவாசிப்பார்களா? என்று திருப்பிக் கேட்கலாம்தானே?

முந்தைய காங்கிரஸ் அரசும், தமிழ்நாட்டில் திமுக அரசும்தானே இத்திட்டம் கொண்டுவரக் காரணம்? பாஜக அரசை எதற்கு குற்றம் சொல்ல வேண்டும்.
கீழே கொடுத்திருக்கும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது.
///கேள்வி=இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எப்ப தொடங்கினாங்க?
பதில்= *1996ல்*
கேள்வி = அப்ப யார் அங்க எம்எல்ஏவா இருந்தா
பதில்= *ராஜசேகர்*
கேள்வி = அவர் எந்தகட்சி?
பதில் = கம்யூனிஸ்ட் கட்சி.
கேள்வி = அந்தத் தொகுதி எம்பியா இருந்தது யாரு?
பதில்=ப.சிதம்பரம்
கேள்வி =அவர் எந்த கட்சி?
பதில் = *காங்கிரஸ்*
கேள்வி = இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுத்த மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி யாரு?
பதில்= *ஆ.ராசா*
கேள்வி = அவர் எந்த கட்சி?
பதில்= *தி.மு.க*
கேள்வி = அப்ப ஏன் தேவையில்லாமல் இப்போதைய பிரதமர் மோடிய தப்பா பேசுறீங்க.???
பதில்= அதான்பா இன்றைய லேட்டஸ்ட் அரசியல்...//

திட்டம் தொடங்கியது 1996 இல்லை. In order to harness CBM potential in the country, the Government of India formulated CBM policy in 1997. கொள்கை அளவில் முடிவெடுத்ததே 97இல்தான். அதற்குப் பிறகு எங்கெங்கே ஹைடிரோகார்பன் இருக்கக்கூடும் என்ற பரிசோதனைகள் தொடங்கின. இதில் இருக்கிற எல்லா தகவலும் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். 1990களில் ஃப்ராக்கிங் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது. ஏதோ டிரில் போடுவார்கள், எண்ணெய் வரும், பம்ப் மூலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த அளவுக்குத்தான் புரிதல் இருந்திருக்கும்.

சுற்றுச்சூழல் என்கிற விஷயமே எப்போதிருந்து பரவலாக பேசப்படுகிறது? 20-30 ஆண்டுகளாகத்தானே? அப்போது தவறு என்றாலும் தெரியாத ஒரு விஷயம், இப்போது தெரிய வரும்போது கைவிட வேண்டியதுதானே? ஜப்பானில் ஃபுகுஷிமா விபத்துக்கு முன்னால் அணுஉலையை ஆதரித்தோம் என்பதற்காக இப்போதும் ஆதரிக்க முடியுமா?

எத்தனை காலத்துக்கு காங்கிரசையே குற்றம் சொல்லிக் கொண்டிருப்பீர்கள். அப்படியே காங்கிரஸ் செய்திருந்தால், அது தவறு என்றால் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் திட்டத்தைக் கைவிட வேண்டாமோ?

அதுவும் போகட்டும். முக்கியமான விஷயம் இங்கே இருக்கிறது.
On 02nd Sep 2015 Government has approved the Discovered Small Field policy with a prime objective to bring Discovered Small Fields to production at the earliest so as to increase the domestic production. The Discovered Small Field policy provides for single uniform license for producing all kinds of hydrocarbon, no cess on the oil production, moderate royalty structure, customs duty exemptions and complete marketing and pricing freedom for the sale of produced crude oil and natural gas. These small fields have been discovered by National Oil Companies i.e. Oil & Natural Gas Corporation Ltd (ONGC) and Oil India Ltd (OIL) and are envisaged to be put on production through expeditious efforts.
Under the policy, Government of India is offering 46 Contract Areas with 67 oil and gas fields, estimated to hold over 625 Million Barrels of Oil and Oil Equivalent Gas (O+OEG) in-place, spread over 1,500 square kilometres in Onland, Shallow water and Deepwater areas.


அதாவது, 2015 செப்டம்பர் 2ஆம் தேதிதான் அரசு ஸ்மால் ஃபீல்ட் பாலிசிக்கு அங்கீகாரம் அளிக்கிறது. நெடுவாசல் அந்தத் திட்டத்தின்கீழ்தான் வருகிறது.

2015இல் ஆட்சியில் இருப்பது மோடியா காங்கிரசாஅதற்கும் மேலே, இந்தக் கொள்கையின் அடிநாதம்
single uniform license
no cess on the oil production
moderate royalty structure
customs duty exemptions
complete marketing and pricing freedom for the sale
அதாவது, ஹைடிரோகார்பன் திட்டத்தால் நிலங்களை அழித்து வளங்களை சுரண்டுவோருக்கு சலுகை மேல் சலுகைகள்!

• உலகத்தின் எத்தனையோ நாடுகளில் இத்திட்டம் செயல்படவில்லையா?
இது திரிக்கப்பட்ட உண்மை. ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஹைடிராலிக் ஃப்ராக்கிங் என்னும் தொழில்நுட்பம் பயன்படுகிறது. பல நாடுகளில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை படிப்படியாக கைவிட்டு வருகிறார்கள். ஃப்ராக்கிங் செய்வதற்கு தடை விதித்துள்ள நாடுகள்
ஆஸ்திரேலியா - 2016 செப்டம்பர் முதல் நிரந்தரமாக தடை செய்யப்பட்டது.
பல்கேரியா - 2011 ஷேல் கேஸ் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் 2012இல் தடை செய்யப்பட்டது.
கனடா - பல காலமாக பரவலாக பயன்படுத்தப்பட்டது. 2011 முதல் மறுபரிசீலனை துவங்கியது. பல பகுதிகளில் நிறுத்தப்பட்டு விட்டது.
பிரான்ஸ் - மக்கள் எதிர்ப்பால் 2011 முதல் தடை செய்யப்பட்டது.
ஜெர்மனி - பல ஆண்டுகளாக பரவலாக பயன்படுத்தப்பட்டது. 2016 முதல் முற்றிலுமாக தடை செய்யும் சட்டம் இயற்றப்பட்டது.
நெதர்லாந்து - 2013இல் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு தொடர்கிறது.
நியூசிலாந்து - மிகச்சிறிய அளவில் நடைபெறுகிறது. அதற்கும் எதிர்ப்பு துவங்கி விட்டது.
போலந்து - பரவலாக பயன்பாட்டில் இருக்கிறது. மக்கள் தொகை நெருக்கமும், விவசாய நாடாகவும் இருப்பதால், கவலை அதிகரித்து வருகிறது.
ருமேனியா - மக்கள் போராட்டம் தொடர்கிறது.
தென் ஆப்பிரிக்கா - புதிதாக துவக்கும் திட்டம் எதிர்ப்புகளை சந்தித்து, 2011இல் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. ஷெல், ஃபால்கன் உள்ளிட்ட நிறுவனங்களின் காரணமாக, மக்களுக்கு முழு விவரமும் தெரிவிக்கப்படாமல், தடை விலக்கப்பட்டது.
டுனிசியா - 2014இல் தடை விதிக்கப்பட்டது.
உக்ரைன் - உலகிலேயே அதிகமான ஷேல் கேஸ் உள்ள நாடுகளில் 3ஆவது இடம். ஆனால் நாட்டின் அரசியல் நிலவரம், புவியரசியல் காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு திட்டங்கள் முன்னேறவில்லை.
யு.கே. - பரவலாக பயன்பாட்டில் உள்ளது. எல்லாமே கடல் பகுதியில் என்பதால், நிலப்பகுதியில் துவங்கியபிறகு மக்கள் கவனம் திரும்பியது. 2011இல் நிலநடுக்கம் காரணமாக தற்காலிக தடை செய்யப்பட்டது. கிணறுகளுக்குள் செலுத்தும் ரசாயனங்கள் ஆபத்தற்றவையாக மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது..
ஸ்காட்லாந்து - புதிய திட்டங்களுக்கு அனுமதி கிடையாது என முடிவு செய்யப்பட்டு விட்டது.
யுஎஸ் - 2012இல் வெர்மான்ட் மாகாணம்தான் முதன்முதலில் தடை செய்தது. அதிக ஷேல் கேஸ் இருப்பதாக கருத்தப்படும் நியூ யார்க் 2014இல் தடை செய்தது. மேரிலேண்டும் தடை செய்துவிட்டு, புதிய விதிகள் உருவாக்கப்பட்ட பிறகு தடை விலக்கப்படும் என அறவித்துள்ளது. கலிபோர்னியாவின் மான்டரி கவுன்டியில் 2016 நவம்பரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அலமேடாவில் 2016 ஜூலையில் தடை. ஆக மொத்தம், கலிபோர்னியாவின் 6 கவுன்டிகளில் தடை விதிக்கப்பட்டு விட்டது. டெக்சாஸ், சான்டா க்ரூஸ், பென்சில்வேனியா என பல பகுதிகளிலும் தடை.


நெடுவாசல் உள்ளிட்ட தலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மைய அரசு ஒப்புதல் அளித்து விட்டது. அதைத் தடுப்பதற்கான நிர்ப்பந்தம் இனி தமிழக அரசுதான் செய்ய வேண்டும். தமிழக அரசை நிர்ப்பந்தம் செய்வதன் மூலம்தான் இதைச் செய்ய முடியும்.

No comments:

Post a Comment