Thursday 18 April 2013

ஆட்டக்களம் 2012 - மீள்பார்வை


தெற்காசிய சேவை என்று முன்னர் அறியப்பட்ட, இன்று திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம் என அறியப்படுகிற வானொலியில் ஒவ்வொரு மாதமும் முதல் செய்வாய், மூன்றாம் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் "ஆட்டக்களம்" என்னும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. சுமார் 20 ஆண்டுகளாக நான் இந்த நிகழ்ச்சியை வழங்கி வருகிறேன்.  புத்தாண்டு துவங்கும் ஒவ்வொரு ஜனவரி மாதமும் முதல் செவ்வாயில், முந்தைய ஆண்டின் நிகழ்வுகளை சிறப்புப் பார்வையாக அலசுவது வழக்கம். அவ்வாறு 2013 ஜனவரி முதல் நாள் ஒலிபரப்பான நிகழ்ச்சியிலிருந்து 2012இல் ஆட்டக்களங்களில் நிகழ்ந்தவற்றின் சாரத்தை மட்டும் இங்கே பார்க்கலாம்.

* * *

ஜனவரியில் நடைபெற்ற 60ஆவது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் கேரள அணி சாம்பியன் ஆனது. மகளிர் பிரிவில் ரயில்வேஸ் அணி கேரளத்தைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது.

57ஆவது தேசிய பால் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் பிரிவில் கர்நாடகம் சாம்பியன் ஆனது.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையில் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நான்கு டெஸ்ட்டுகளிலும் இந்தியாவை படுமோசமாகத் தோற்கடித்த ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

இந்திய மகளிர் 20-20 கிரிக்கெட் போட்டியில் தில்லியைத் தோற்கடித்த ரயில்வேஸ் அணி வெற்றி கண்டது.

சி.கே. நாயுடு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி, தில்லி அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

உள்நாட்டு கிரிக்கெட்டில் முக்கியத்துவம் பெறும் ரஞ்சி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடும் ராஜஸ்தானும் இறுதியை எட்டின. இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை மீண்டும் வெல்லும் ஆசையுடன் இறுதியை எட்டிய தமிழகம் ராஜஸ்தானிடம் தோல்வி கண்டது.

தேசிய பிலியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பங்கஜ் அத்வானி மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டம் வென்றார்.

தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவர் பிரிவில் அமல்ராஜ் சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த ஐந்து போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற ஷரத் கமல் இரண்டாம் இடம் பிடித்தார். மகளிர் பிரிவில் பவுலமி கடக் ஏழாவது முறையாக சாம்பியன் ஆனார்.

 

கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டவர்களில் எட்டு பேர் ஆட்டக்களத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பிப்ரவரி மாத சிறப்புச் செய்தி.
·         மாஸ்கோ ஒலிம்பிக்சில் இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்ற ஜஃபர் இக்பால்
·         வில்வித்தைக் கலைஞரும், பார்சிலோனா ஒலிம்பிக்கில் பதக்கத்தை மயிரிழையில் தவற விட்டவருமான லிம்பா ராம்
·         இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஜூலன் கோஸ்வாமி, சைநா நேவாலின் பயிற்சியாளர் கோபிசந்த் உள்பட லட்சுமி, ஜ்வாலா கட்டா, என பலரையும் பேட்மின்டன் ஆட்டத்தில் ஒளிரச் செய்த சையத் முகம்மது ஆரிஃப்
·         ஸ்கையிங் வீர்ர் அஜீத் பஜாஜ்
·         ஊனமுற்றோருக்கான தடகள வீரர் ஜஜ்ரிஜா
·         விளையாட்டு வர்ணனையாளர் ரவி சதுர்வேதி
·         உடல்கல்வி ஆசிரியர் பிரபாகர் வைத்யா
ஆகியோர் பத்மவிருது பெற்றனர்.

14ஆவது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவர் பிரிவில் உத்திரப் பிரதேசம் சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் பிரிவில் கேரளம் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது. மூன்றாம் இடத்துக்கான போட்டிகளில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் தமிழக அணிகள் வெற்றி பெற்றன.

ஒலிம்பிக்கை முன்னிட்டு தில்லியில் நடைபெற்ற ஹாக்கி தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியா வெற்றி கண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தகுதி பெற்றது.

கிரிக்கெட்டுக்கு பிரிமியர் லீக் போல ஹாக்கிக்கு வேர்ல்ட் சீரீஸ் ஆப் ஹாக்கி என்னும் ஹாக்கி லீக் புதிதாகத் துவக்கப்பட்டது. சண்டிகர் காமெட்ஸ், போபால் பாதுஷாஸ், கர்நாடகா லயன்ஸ், டெல்லி விசார்ட்ஸ், ஷேர்-ஏ-பஞ்சாப், சென்னை சீத்தாஸ், மும்பை மரைன்ஸ், புனே ஸ்டிரைக்கர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கும் வேர்ல்ட் சீரீஸ் ஹாக்கி போட்டிகள் மார்ச்-ஏப்ரலில் நடைபெற்றன. ஷேர்-ஏ-பஞ்சாப் சாம்பியன் பட்டம் வென்றது, புனே ஸ்டிரைக்கர்ஸ் இரண்டாம் இடம் பிடித்தது.

இந்தியா ஆஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றன. இதிலும் இந்திய அணி இறுதியை எட்டமுடியாமல் தோல்வியுடன் திரும்பியது. ஆஸ்திரேலியா வெற்றி கண்டது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. வங்கதேசம் இறுதியை எட்டியது. நடப்புச் சாம்பியன் இந்தியா வெளியேறியது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஆசிய கோப்பையை வென்றது என்றாலும் வங்கதேசம் அபார முன்னேற்றம் கண்டிருப்பது இந்தப் போட்டியில் தெளிவாகத் தெரிந்தது.
  
 

ஆசிய மகளிர் குத்துச்சண்டைப் போட்டி மங்கோலியாவில் நடைபெற்றது. பாக்யவதி கச்சாரி, கவிதா செஹல் இருவரும் வெண்கலம் வென்றனர். மேரி கோம், சரிதா தேவி இருவரும் தங்கம் வென்றனர். பிங்கி, சோனியா, மோனிகா, பூஜா ஆகிய நால்வரும் வெள்ளியை வென்றனர். ஆக, இந்திய மகளிர் எட்டு பதக்கங்களுடன் நாடு திரும்பினர்.

செக்கோஸ்லோவேக்கியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில், விகாஸ் கிருஷ்ணன் வெண்கலம் வென்றார். ஷிவ் தாப்பா வெள்ளிப் பதக்கம் பெற்றார்.


ஸ்விஸ் ஓப்பன் கிராண்ட் பிரி போட்டியில், சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டார் சாய்னா நேவால்.

மியாமியில் நடைபெற்ற சோனி எரிக்சன் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - செக் குடியரசின் ரேடக் ஸ்டெபானக் ஜோடி வெற்றி கண்டது. லியாண்டர் பயசுக்கு இது ஐம்பதாவது டபுள்ஸ் சாம்பியன்ஷிப் என்பது குறிப்பிடத்தக்கது.


சச்சின் டெண்டுல்கர் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் விளையாட்டுலகைச் சேர்ந்த இன்னொருவர் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார் என்பது பலருக்கும் தெரியாது. இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணியில் ஆடியவருமான திலீப் திர்க்கி, ஒடிஷா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்வு பெற்றார்.

ஐபிஎல் 2012 கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் துவங்கி மே மாதம் முடிவடைந்தது. கோல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் ஆனது. கடந்த இரண்டு முறையும் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாம் இடம் பிடித்தது.

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தன் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான போட்டி மாஸ்கோவில் நடைபெற்றது. இந்த முறை அவரை எதிர்த்து ஆடியவர் போரிஸ் கெல்ஃபாண்ட். 13 சுற்றுகளின் முடிவில் இருவரும் சமநிலையில் இருந்தனர். எனவே டைபிரேக்கரில் ஆட நேர்ந்தது. இதில் வெற்றி கண்ட ஆனந்த், உலக செஸ் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

ஜூன் மாதம் நடைபெற்ற தாய்லாந்து ஓப்பன் கிராண்ட் பிரி போட்டியில் தங்கம் வென்ற சாய்னா நேவால், இந்தோனேசியா ஓப்பன் சூப்பர் சீரிஸ் போட்டியிலும் தங்கம் வென்றார்.

52ஆவது தேசிய தடகளப் போட்டிகள் ஐதராபாதில் ஜூலை மாதம் நடைபெற்றன. டீம் சாம்பியன்ஷிப்பைப் பொறுத்தவரை, ஆடவர் பிரிவில் கேரளம் முதலிடமும், தமிழகம் இரண்டாம் இடமும் பிடித்தன. மகளிர் பிரிவில் கேரளம் முதலிடமும், மேற்கு வங்கம் இரண்டாம் இடமும் பிடித்தன. ஒட்டுமொத்தத்தில் கேரளா முதலிடமும், உத்திரப் பிரதேசம் இரண்டாம் இடமும் பெற்றன.

தெற்காசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஆறு பிரிவுகளிலும் இந்தியர்களே சாம்பியன் பட்டங்களை வென்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் அபிஷேக் யாதவ், இரட்டையர் பிரிவில் அபிஷேக் - சுதான்ஷு ஜோடி, கேடட் பிரிவில் உத்கர்ஷ் குப்பா, மகளிர் ஒற்றையர் பிரிவில் ரீத் ரிஷ்யா, மகளிர் இரட்டையர் பிரிவில் ரீத் - மல்லிகா ஜோடி, கேடட் பிரிவில் கர்ணம் ஸ்பூர்த்தி ஆகியோர் முதலிடம் பெற்றனர். இவர்களைத் தவிர, ஒற்றையர் பிரிவில் சுதான்ஷு குரோவர், கேடட் பிரிவில் பெர்டி போரோ, மகளிர் ஒற்றையர் பிரிவில் மல்லிகா பண்டர்கர், கேடட் பிரிவில் சுதிர்த முகர்ஜி ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றனர்.

ஜூலை இறுதியில் துவங்கி ஆகஸ்ட் மத்தியில் முடிவடைந்தது லண்டன் ஒலிம்பிக் 2012. பதின்மூன்று பிரிவுகளில் 81 விளையாட்டு வீரர்கள் இந்தியாவிலிருந்து பங்கேற்றனர். இந்திய ஹாக்கி அணி முதல் சுற்றுப் போட்டிகளிலேயே தோல்வி கண்டு ஒலிம்பிக் அணிகளிலேயே கடைசி இடமான பனிரெண்டாம் இடம் பிடித்தது.

 

·         இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத்தந்தவர் ககன் நாரங்க். ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் ககன் நாரங்க் வெண்கலப் பதக்கம் வென்றார்.
·         25 மீட்டர் ராபிட் பயர் பிரிவில் அபாரமாக இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார் விஜய்குமார்.
·         பேட்மின்டனில் சாய்னா நேவால் வெண்கலம் வென்றார்.
·         குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தந்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார் மேரி கோம்.
·         யோகேஷ்வர் தத், 60 கிலோ மல்யுத்தப் பிரிவில் வெண்கலம் வென்றார்.
·         66 கிலோ மல்யுத்தப் பிரிவில் வெள்ளியை வென்றார் சுஷில் குமார். இதன் மூலம், தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார்.
அமெரிக்கா 104 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. சீனா 88 பதக்கங்களுடன் இரண்டாம் இடம், பிரிட்டன் 65 பதக்கங்களுடன் மூன்றாம் இடம், ரஷ்யா 82 பதக்கங்களுடன் நான்காம் இடம் பிடித்தன. இந்தியா இரண்டு வெள்ளி நான்கு வெண்கலம் என ஆறு பதக்கங்கள் பெற்று 55ஆம் இடம் பிடித்தது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் ஐந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றது. இதில் 4-1 என்ற சீரீஸ் கணக்கில் வெற்றி கண்டது இந்தியா.

  
 

தேசிய அளவில் உயரிய விருதான விளையாட்டு விருதுகளுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்கள் -
·         ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற விஜய் குமார், மற்றும் யோகேஷ்வர் தத் இருவருக்கும் கேல் ரத்னா விருது.
·         கிரிக்கெட் ஆட்டக்காரர் யுவராஜ் சிங், மல்யுத்த வீராங்கனை கீதா போகட், வில்வித்தை தீபிகா குமாரி, பொம்பாய்லா தேவி,  தடகளத்தில் சுதா சிங், கவிதா ரவுத்,  பேட்மிண்டனில் அஷ்வினி பொன்னப்பா, பி. கஷ்யப், பில்லியர்ட்ஸ் ஆதித்ய மேத்தா,  குத்துச்சண்டை விகாஸ் கிருஷண்,  ஹாக்கி சர்தார் சிங்,  ஜுடோ யஷ்பால் சோலங்கி,  கபடியில் அனுப் குமார்,  போலோ-வில் சமீர் சுஹாக்,  துப்பாக்கி சுடுதலில் அன்னுராஜ் சிங், ஓம்கார் சிங், ஜாய்தீப் கர்மாகர், ஸ்குவாஷ் தீபிகா பள்ளிகல்,  நீச்சலில் சந்தீப் சேஜ்வால், பளுதூக்கும் சோனியா ச்சானு,  மல்யுத்தத்தில் நர்சிங் யாதவ், ராஜீந்தர் குமார், வுஷு கலையில் பிமல்ஜித் சிங்,  பாராலிம்பிக் தடகள விளையாட்டில் தீபா மல்லிக், ராம்கரன் சிங் ஆகியோர் அர்ஜுனா விருது பெற்றனர்.
·         தடகள வீராங்கனை கிருஷ்ணா பூனியாவின் பயிற்சியாளரும் கணவருமான விரேந்தர் பூனியா, மகளிர் கபடி பயிற்சியாளர் சுனில் தபஸ், மல்யுத்தப் பயிற்சியாளர் யஷ்வீர் சிங்,  ஹாக்கி பயிற்சியாளர் ஹரேந்திர சிங், குத்துச் சண்டைப் பயிற்சியாளர் - கியுபாவைச் சேர்ந்த பெர்னாண்டஸ், பாரா-ஸ்போர்ட்ஸ் தடகளப் பயிற்சியாளர் சத்யபால் சிங், ஆகியோருக்கு துரோணாச்சாரியார் விருதுகள் வழங்கப்பட்டன.
·         தடகளத் துறையில் ஜே.எஸ். பாட்டியா, டேபிள் டென்னிசில் பவானி முகர்ஜி ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சாதனை விருது தரப்பட்டது.
·         தடகளத்தில் ஜக்ராஜ் சிங் மான், ஹாக்கியில் குன்தீப் குமார்,  மல்யுத்தத்தில் வினோத் குமார், பாரா ஸ்போர்ட்சில் சுக்பீர் சிங் டோகஸ் ஆகியோருக்கு தியான் சந்த் விருது வழங்கப்பட்டது.
·         இந்திய உருக்கு ஆணையம், ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம், ராணுவ விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம், ஏர் இந்தியா விளையாட்டு மேம்பாட்டு வாரியம் ஆகிய அமைப்புகளுக்கு தேசிய அளவிலான விளையாட்டு மேம்பாட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
·         மவுலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பையை யாருக்கு வழங்குவது என்பதை இந்த ஆண்டும் விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்யவில்லை.

இந்தியா வந்த நியூசிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி கண்டு சீரீஸைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் நியூ சிலாந்து வெற்றி கண்டது.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா கோப்பையை வென்றது.

நேரு கோப்பை கால் பந்துப் போட்டி ஆகஸ்ட் மாதம் நடந்து முடிந்தது. இந்தியா, சிரியா, மாலத்தீவுகள், நேபாளம், கேமரூன் ஆகிய ஐந்து நாடுகள் இதில் பங்கேற்றன. இறுதியை எட்டிய இந்தியா, கேமரூனைத் தோற்கடித்து நேரு கோப்பையை தக்கவைத்துக்கொண்டது.

எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பைக்கான ஹாக்கி போட்டி செப்டம்பரில் நடந்தது. இறுதிப் போட்டியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் - ஏர் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் சமநிலையில் இருந்ததால் இரண்டும் கோப்பையைப் பகிர்ந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

52ஆவது தேசிய தடகளப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றன. ஆடவர் பிரிவுகளில் 138 பதக்கங்கள் பெற்ற சர்வீசஸ் முதலிடமும், 119 பதக்கங்கள் பெற்ற ரயில்வே இரண்டாம் இடமும், 72 பதக்கங்கள் பெற்ற ஓஎன்ஜிசி மூன்றாம் இடமும் பெற்றன.
மகளிர் பிரிவில் 208 பதக்கங்களுடன் ரயில்வே முதலிடமும், 42 பதக்கங்கள் பெற்ற ஓஎன்ஜிசி இரண்டாம் இடமும், 40 பதக்கங்கள் பெற்ற கேரளம் மூன்றாம் இடமும் பெற்றன.
சிறந்த தடகளவீரர் என்ற பெருமையை ஆடவர் பிரிவில் இராணுவத்தைச் சேர்ந்த ஜிதின் தாமஸும், மகளிர் பிரிவில் ரயில்வேயைச் சேர்ந்த டின்டு லுகாவும் பெற்றனர்.
 

லண்டனில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், இந்தியாவிலிருந்து 10 பேர் பங்கேற்றனர். ஆடவர் உயரம் தாண்டல் போட்டியில், கர்நாடகத்தைச் சேர்ந்த கிரிஷா ஹோசநகரா, வெள்ளியை வென்றார்.

பெடரேஷன் கோப்பை கால்பந்துப் போட்டி செப்டம்பரில் முடிந்தது. இறுதிப் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணியும் டெம்போ அணியும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரத்தில் ஈஸ்ட் பெங்கால் இரண்டு கோல்கள் அடித்தது, டெம்போ ஒரு கோல் மட்டுமே அடித்தது. ஆக. ஈஸ்ட் பெங்கால் அணி பெடரேஷன் கோப்பையைக் கைப்பற்றியது.


கனடாவில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், 51 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார் பபிதா குமாரி. ஆறு ஆண்டுகள் முன் சீனாவில் உலக சாம்பியன்ஷிப்பில் அல்கா தோமர் வெண்கலம் வென்ற பிறகு மற்றொரு பதக்கம் வென்ற இரண்டாமவர் பபிதா குமாரி.

ஹாக்கி இந்தியா நடத்தும் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் அக்டோபரில் நடந்து முடிந்தன. ஏர் இந்தியாவைத் தோற்கடித்த பஞ்சாப் வெற்றி கண்டது.

செப்டம்பர் அக்டோபரில் 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. சூப்பர் எய்ட் வரை முன்னேறிய இந்தியா வெளியேறியது. மேற்கிந்திய அணி உலகக் கோப்பையை வென்றது.

மகளிர் 20-20 உலகக் கோப்பையில் இந்திய அணி தகுதிச் சுற்றிலேயே வெளியேறியது. ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்றது.

20-20 உலகக் கோப்பை முடிந்த கையோடு சாம்பியன்ஸ் லீக் 20-20 போட்டிகள் நடந்தன. முந்தைய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இந்திய அணிகளே வென்று வந்தன. இந்த முறை சிட்னி சாம்பியன் பட்டம் வென்றது.

அடுத்து, இந்தியாவுக்கு வந்த இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. ஒன்றில் இந்தியா வென்றது. இரண்டு ஆட்டங்களில் வென்ற இங்கிலாந்து சீரிஸைக் கைப்பற்றியது.

சாய்னா நேவால் டென்மார்க் ஓப்பன் பேட்மின்டன் போட்டியிலும் சாம்பியன் ஆனார். இதன் மூலம் ஆறு ஓப்பன் சீரிஸ் சாம்பியன் பட்டங்கள் பெற்றவராக ஆனார் சாய்னா. அடுத்து பிரெஞ்ச் ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் போட்டியில் கலந்து கொண்ட சாய்னா நேவால், காலிறுதிவரை எட்டியபிறகு வெளியேறினார்.

தில்லிக்கு அருகே கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் இரண்டாவது பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெற்றது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற செபாஸ்டியன் வெட்டல் இந்த முறையும் சாம்பியன் பட்டம் வென்றார். பெர்னாண்டோ அலோன்சோ இரண்டாம் இடமும், மார்க் வெப்பர் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

நவம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த அஜய் மக்கன் இடத்தில் புதிய அமைச்சரானார் ஜிஜேந்திர சிங்.

தில்லியில் நேரு கோப்பைக்கான ஹாக்கி போட்டி நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அணி இந்துஸ்தான் பெட்ரோலியம் அணியை வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

மூன்றாவது உலகக்கோப்பை கபாடிப் போட்டி பஞ்சாபில் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. 16 நாடுகள் பங்கேற்றன. இந்திய ஆடவர் அணி பாகிஸ்தானை வீழ்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய மகளிர் அணியும் மலேசியாவைத் தோற்கடித்து உலகக் கோப்பையை வென்றது.


சீனத்தின் நான்சங் நகரில் நடைபெற்ற ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டியில் அஞ்சலி பாகவத் 397 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார். ஆசிய அளவில் இது அவருடைய மூன்றாவது பதக்கம் ஆகும்.

இந்தியன் பிரிமியர் லீக்-கிலிருந்து டெக்கான் சார்ஜர்ஸ் நீக்கப்பட்ட பின்பு காலியான ஓரிடத்தை சன் குழுமம் ஏலம் எடுத்த செய்தி நேயர்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த அணிக்கு சன்ரைசர்ஸ் என்ற பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட்  ஆட்டக்காரர் ஸ்ரீகாந்த் ஆலோசகராகவும், டாம் மூடி பயிற்சியாளராகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டது.

டெஸ்ட் சீரீஸைக் கைப்பற்றிய இங்கிலாந்துக்கும் இந்திய அணிக்கும் இடையில் இரண்டு 20-20 போட்டிகள் மாதம் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் இந்தியாவும், இரண்டாவதில் இங்கிலாந்தும் வெற்றி கண்டன.

பாகிஸ்தானுடன் இரண்டு இருபது-இருபது போட்டிகளும் மூன்று ஒருநாள் போட்டிகளும் இடம்பெற்றன.
25ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்ற 20-20 ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி கண்டது,
அகமதாபாதில் 28ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது.
அடுத்து நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் சீரீஸ் வெற்றி கண்டது புத்தாண்டுச் செய்தி.

கிரிக்கெட்டில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வோடு இந்த அலசலை நிறைவு செய்யலாம். இதற்காக சுமார் பத்தாண்டுகள் பின்னே செல்வோம் ....
2004இல் பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கங்குலி காயம்பட்டிருந்ததால் டிராவிட் அப்போது கேப்டன். புகழ்பெற்ற ஒரு ஆட்டக்காரர் 194 ரன்கள் எடுத்திருந்தார். இன்னும் 6 ரன்கள் எடுத்திருந்தால் அவர் இரட்டை சதம் அடித்திருப்பார். ஆனால் இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தார் டிராவிட். இதுகுறித்து அந்த ஆட்டக்காரருக்கு மனவருத்தம் ஏற்பட்டதாகவும் தகவல் உண்டு. ஆனால் டிராவிட் செய்தது சரியா இல்லையா என்பதுதான் கேள்வி.
அந்த ஆட்டத்தில் சேவாக் முதல் இன்னிங்சில் 375 பந்துகளில் 309 ரன்களைக் குவித்திருந்தார். அந்தப் புகழ்பெற்ற ஆட்டக்காரரோ 348 பந்துகளில் 194 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேலும் 6 ரன்கள் எடுத்து சதமடிக்க விடுவதா அல்லது ஆட்டத்தை முடிப்பதா என்பதுதான் அந்தக் கேள்வி.
அந்தப் புகழ்பெற்ற ஆட்டக்காரர், இரட்டை சதத்தை எட்ட வேண்டும் என்பதற்காக மட்டை போட்டுக்கொண்டிருந்தார். அவர் ஒரு ரன்கூட எடுக்காத ஓவர்களே பத்து இருக்கும். கடைசி 20 ரன்கள் எடுக்க பத்து ஓவர்கள் ஆகி விட்டன. இந்தக் கட்டத்தில் யுவராஜ் சிங் ஆட்டமிழ்ந்தார். இந்திய அணி ஏற்கெனவே 675 ரன்கள் குவித்து விட்டதால், ஆட்டத்தை மேலும் இழுக்க விரும்பாத டிராவிட் டிரா செய்தார்.
கிரிக்கெட்டை அறிவுபூர்வமாக ரசிப்பவர்கள் டிராவிட் செய்ததுதான் சரி என்றார்கள். உணர்வுபூர்வமாக ரசிப்பவர்கள் தவறு என்றார்கள். ஆனால் டிராவிட்டுக்குத் தெரியும் தான் செய்ததுதான் சரி என்று. தனிநபர்களும் சாதனைகளும் முக்கியம்தான், ஆனால் அணி அதைவிட முக்கியம் என்று கருதியவர் டிராவிட்.
இந்த டிராவிட் மார்ச் மாதம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
அந்தப் புகழ் பெற்ற ஆட்டக்காரர் வேறு யாரும் அல்ல. நூறாவது சதம் அடித்து சாதனை படைத்த, ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விலகிக் கொண்ட டெண்டுல்கர்தான். இந்த இருவரின் விலகலுக்கு இடையே விலகியவர் வி.வி.எஸ். லட்சுமண்.

 * * *
பி.கு. - பதிவில் புகைப்படங்கள் இணையத்திலிருந்து சுட்டவைதான். பெரும்பாலும் பெண்களின் படங்களைத்தான் சேர்த்திருக்கிறேன். ஒவ்வொரு பெண்ணின் படத்தைத் தேட பெயர்களை இடும்போதும், Autosuggestion இன்னொரு சொல்லையும் தானே பரிந்துரைக்கிறது - hot ... ! இதை வக்கிரம் என்பதா, கொடுமை என்பதா...  ஆக, ஹாட் படங்களை தவிர்த்து விட்டு, அவர்களின் இயல்பை வெளிப்படுத்தும் படங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. ஆண்களின் படங்களை அதிகம் சேர்க்கவில்லை. சுஷில் குமார் ஒலிம்பிக் போட்டியில் எதிராளியின் காதைக் கடித்தார் என்று எனக்கு சந்தேகம் இருப்பதாலும், விஜேந்தர் போதை மருந்துக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பதாலும் அவர்கள் படத்தைச் சேர்க்கவில்லை. 

1 comment:

  1. வெறும் ஊறுகாயை மட்டும் பரிமாறினால் விருந்து சுவைக்குமா நண்பரே? சாதம் வேண்டாமா? திரௌபதியின் புடைவை மாதிரி புள்ளிவிவரங்களாக அடுக்கிக்கொண்டு போகிறீர்களே! எங்களைப் போல ஆடி அடங்கி விட்டவர்களையும் கொஞ்சம் கவனிக்க வேண்டாமா?

    ReplyDelete