Friday 12 October 2018

பெண் குழந்தைகள் தினம்


நேற்று பெண் குழந்தைகள் தினம். உங்கள் பெண் குழந்தைகளுக்கு நீங்கள் வழங்கக்கூடிய மிகப்பெரிய சொத்து கல்விதான். சரியான கல்வி இன்னும் பல திறமைகளை சேர்த்துவிடும்.
  • யாரையும் சார்ந்திருக்காமல், சோதனைகள் வரும்போது கலங்காமல், சுயமாக நிற்கக்கூடிய தன்னம்பிக்கையை வழங்குவது கல்வி.
  • கல்விதான் பாலின சமத்துவத்துக்கு அடிப்படை
  • கல்விதான் பொருளாதார சூழலையும் சமூக அந்தஸ்தையும் மேம்படுத்தும்
  • கல்விதான் திட்டமிட்ட வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வைத் தரும்.
  • கல்விதான் பெண்களுக்கு தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த அறிவைத் தரும்
  • கல்விதான் சகல துறைகளிலும் பெண்களும் வேலைவாய்ப்புப் பெற வழிவகுக்கும்



பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தவர்கள் யார் என்று யோசித்தால், தமிழகத்தில் பெரியார் முதன்மையாக நினைவுக்கு வருகிறார். பாரதியார் பெண் சமத்துவத்துக்காகப் பாடியிருக்கிறார். பாரதிதாசன் பெண் கல்வியை வலியுறுத்திப் பாடியிருக்கிறார். ஆண்களோடு பெண்களும் சரிசமமாக்க் கல்வி கற்றால்தான் முன்னேற்றம் விரைவாக இருக்கும் என்றார் அம்பேத்கர். கல்வியிலும் சொத்திலும் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்றவர் அம்பேத்கர். சமூக சீர்திருத்தம் என்றாலே உடனே நினைவுக்கு வருவது ராஜா ராம்மோகன் ராய் பெயர்.


ஆனால், இந்தியாவில் பெண் கல்வியின் முன்னோடி என்றால் நினைவுக்கு வர வேண்டியது ஜோதிராவ் பூலே, அவருடைய துணைவியார் சாவித்திரிபாய் பூலே. ஏனென்றால், பாரதிக்கும் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் முன்னால் 19ஆம் நூற்றாண்டிலேயே பெண் கல்விக்குக் குரல் கொடுத்தவர்கள் செயலிலும் காட்டியவர்கள் இவர்கள். சமூக சீர்திருத்தவாதி என்று அறிந்த அளவுக்கு இவர்களின் கல்விப்பணி குறித்து நாம் அறியவில்லை. இவர்களோடு, நாம் இதுவரை அறியாத இன்னொருவரைப் பற்றியும் இப்போது பார்ப்போம்.

1848இல் புனேவில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி புகட்டும் பணியைத் துவக்குகிறார்கள் பூலே தம்பதியினர். இதற்காக உள்ளூர் மக்களால் மிரட்டப்படுகிறார்கள். இந்தக் கல்விப் பணியை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையேல் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். வீட்டைக் காலி செய்கிறார்கள் பூலே தம்பதியினர்.

பூலே குடும்பத்தினரோ, அவருடைய சமூகத்தினரோ ஆதரவு தரவில்லை. வசிப்பதற்கும் பள்ளிக்கும் இடம் தேடி அலைகிறார்கள். அப்போது அறிமுகம் ஆனவர்தான் உஸ்மான் ஷேக். புனே நகரின் கஞ்ச் பேட் பகுதியில் இருந்த உஸ்மான், தன்னுடைய வீட்டை அவர்களுக்கு வழங்க முன்வருகிறார். அவர்களுக்குத் துணையாக நிற்கிறார் உஸ்மானின் தங்கை ஃபாதிமா ஷேக்.

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை என்று கருதப்படும் சாவித்திரிபாய் பூலேயுடன் சேர்ந்து கொண்டு பாத்திமாவும் பள்ளியில் ஆசிரியப் பணி புரிகிறார். (மூன்றாவதாக வந்து சேர்கிறார் சகுணா பாய்.) பாத்திமா-சாவித்திரி கல்விப் பணிக்கு முழு ஆதரவாக நிற்கிறார் உஸ்மான்.

அவர்கள் இருவரும் நடந்து செல்லும்போது ஆதிக்க சாதியினர் அவர்கள்மீது பல வகையிலும் தாக்குதல் தொடுப்பார்கள். கற்களை வீசுவார்கள், வசவுச் சொற்களைப் பிரயோகிப்பார்கள், சாணியை வீசியடிப்பார்கள். இதற்கெல்லாம் கலங்காமல் தமது பணிகளைத் தொடர்ந்தார்கள் பாத்திமாவும் சாவித்திரிபாயும்.

பாத்திமாவுக்கு புதிய சிக்கல் வந்தது. இந்துக்களின் எதிர்ப்புடன், இஸ்லாமிய சமூகத்தினரும் அவரைத் தூற்றினார்கள். ஆனால் அவர் தயங்கவில்லை. வீடு வீடாகச் சென்று பெண் கல்விக்காகப் பிரச்சாரம் செய்தார். பெண்களை கல்வி கற்க அனுமதிக்காத ஒவ்வொரு வீட்டிலும் மணிக்கணக்கில் பேசி, சமாதானம் செய்து, தமது வீட்டுப் பெண்களை பள்ளிக்கு அனுப்புமாறு செய்தார். அதனால்தான் இந்தியாவின் முதல் முஸ்லிம் ஆசிரியை என்று கருதப்படுகிறார் பாத்திமா ஷேக்.

பாத்திமா ஷேக் குறித்து அதிக தகவல்கள் இல்லை. 1848 முதல் 1856 வரை பள்ளியில் ஆசிரியப் பணி செய்திருக்கிறார் என்று தெரிகிறது. சாவித்திரி பாய் பூலே தன் கணவர் ஜோதிராவ் பூலேவுக்கு எழுதிய பல கடிதங்களில் பாத்திமா குறித்து நெகிழ்ந்து எழுதியிருக்கிறார்.

இது நடந்தது 19ஆம் நூற்றாண்டு. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு. இப்போதும் தலித்களும் முஸ்லிம்களும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சொல்லப்போனால், முன்னெப்போதும் இருந்ததைவிட இப்போது அதிகம் தேவை இருக்கிறது.

பாத்திமா- சாவித்ரிபாய் பூலே நடத்திய பள்ளியின் இன்றைய நிலையைப் பார்க்க வேண்டாமா? கீழே இருப்பதுதான் அதன் படம். வரலாற்றுச் சிறப்புகளில் இது இடம்பெற்றிருக்க வேண்டாமா? அரசு இதை நினைவுச்சின்னமாக ஆக்கியிருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை? முந்தைய பத்தியில் விடை இருக்கிறது.


No comments:

Post a Comment