Friday 26 October 2018

புத்தி கொள்முதல்


1988-89 என்று நினைவு. சென்னையில் பெரியதோர் அச்சகத்தின் முழு நிர்வாகி நான். எனக்கும் மேலே பெரியவர் ஒருவர்.

ஆந்திரத்திலிருந்து மூன்று பேர் வந்தார்கள். தெலுங்கில் ஒரு நூல் அவசரமாக அச்சிட வேண்டும் என்றார்கள். நூலை தட்டச்சு செய்து, பிரின்ட் செய்வதற்கு ரெடியாக பேஜ் செட்டிங்கும் செய்து வைத்திருந்தார்கள். 120 பக்கம்தான் இருக்கும். 10 ஆயிரம் பிரதிகள் ஆர்டர் என்று நினைவு.

அவசரம் என்பதால் ரொக்கப் பணமாகவே தருவதாகச் சொன்னார்கள். இப்படி வாடிக்கையாளர்கள் அடிக்கடி வருவது இல்லையே! அச்சுக்கூலி கொஞ்சம் அதிகமாகவே சொன்னேன். நான் சொன்ன தொகையில் பெரும்பகுதியை ரொக்கமாக அட்வான்ஸ் கொடுத்து விட்டார்கள். மொத்தமாக 60-70 ரீம் பேப்பருக்கு ரொக்கமாக ஆர்டர் கொடுக்க முடிந்ததால், ஏற்கெனவே நாங்கள் கடன் நிலுவை வைத்திருந்த பேப்பர் டீலருக்கும் ஒரு சந்தோஷம். அடுத்த சில நாட்களுக்கு பணம் கேட்டு தொல்லை செய்ய மாட்டார். ஆக, இது எல்லாருக்கும் வின்-வின் டீல்தான். வெள்ளிக்கிழமை கொடுத்தார்கள். உடனே நெகடிவ் போட்டு, பிளேட் போடச்சொல்லி, ஞாயிற்றுக்கிழமைக்குள் நூலை அச்சிட்டு விட்டேன். பின்னிங்கும் முடிந்தது. கட்டிங் மட்டுமே செய்ய வேண்டும்.

எனக்கும் மேலே இருக்கும் பெரியவர் திங்கள்கிழமை வந்தபோது பெருமையாக விவரம் சொல்லி, இப்படி இப்படி ஒரு பார்ட்டி வந்து, அட்வான்ஸ் பணம் வாங்கி விட்டேன் என்றேன்.

அப்படியா என்று சொன்னவர், ஒரு புத்தகத்தைக் கொண்டு வருமாறு சொன்னார். கைக்கு வந்த புத்தகத்தை திருப்பிப் பார்த்தார். எல்லாம் தெலுங்கு. எனக்கும் புரியாது, அவருக்கும் புரியாது. ஆனால் நடுவே சில படங்கள் இருந்தன. நான் கவனிக்காத படங்கள் அவை.

ஏதோவொரு மஞ்சள் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்ட தரம்கெட்ட படங்கள். அதில் என்.டி. ராமாராவ் யாரோ பெண்ணுடன் சல்லாபம் செய்வதான படங்களும் இருந்தது. அது தேர்தல் நேரம். ராமாராவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் தயார் செய்த புத்தகம் அது. நான்தான் கவனிக்கவில்லை.

பாத்தீங்களா என்றார்.

நான் பேச்சறறு நின்றிருந்தேன். அவருடைய அனுபவம் எனக்கு இல்லை. நிறையப் பணம் தரக்கூடிய ஒரு வாடி்கையாளர் கிடைத்தார் என்று நான் நினைத்தேன். அவரோ, ஏன் அந்த வாடிக்கையாளர் நிறையப் பணம் கொடுக்க முன்வந்தார் என நினைத்தார்.

பெரியவர் தலையைச் சொறிந்தார், அதாவது, தன் சொட்டைத் தலையைத் தடவிக் கொண்டார். தீவிரமாக யோசிக்கும்போது இப்படிச் செய்வது அவர் வழக்கம்.

புத்தகம் டெலிவரி ஆயிடுச்சா என்று கேட்டார். இல்லை என்றேன். எங்கே இருக்கு என்றார். கட்டிங் டேபிளில் இருக்கு என்றேன்.

உள்ளே போனார். கட்டிங் ஆளைக் கூப்பிட்டு, மொத்தப் புத்தகங்களையும் பீஸ் பீஸாக வெட்டி துண்டுகளாக்கி வேஸ்டில் போடச் சொன்னார்.

மீண்டும் நாங்கள் அறைக்கு வந்தோம்.
பணம் குடுத்த பார்ட்டி வந்தால் என்ன சொல்வது என்று கேட்டேன்.
பிரின்ட் செய்ய முடியாதுன்னு சொல்லிடுங்க என்றார்.
அட்வான்ஸ் குடுத்திருக்காங்களே என்று கேட்டேன்.
அட்வான்ஸ் திருப்பித் தரச் சொல்லி ரொம்ப பிரச்சினை செய்ய மாட்டானுக. ரொம்ப கேட்டானுகன்னா திருப்பிக் குடுத்துடலாம் என்றார்.
அப்போ பேப்பருக்கான காசும் உழைப்பும் அவ்வளவும் நஷ்டம் இல்லையான்னு கேட்டேன்.

புத்தி கொள்முதல்என்றார்.



அப்போதுதான் புத்தி கொள்முதல் என்ற வார்த்தையை முதன்முதலாகக் கேட்டேன். இப்போதும் அந்தப்பாடம் நினைவில் இருக்கிறது.
*
புத்தி கொள்முதல் என்பது ஒரு விஷயத்தில் முதல் தடவை அடி பட்டதும் விழித்துக்கொள்வது. எப்போதும் மூளைக்குள் இருத்தி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது.

ஒரு விஷயத்தில் ஒருவரிடம் பட்ட பிறகு, மறுபடி மறுபடி அவரிடமே பட்டதாகச் சொன்னால், அது புத்தி கொள்முதல் அல்ல.

1 comment:

  1. நல்லதொரு அனுபவம் - உங்கள் மூலம் எங்களுக்கும் கிடைத்தது.

    உங்கள் அனுபவப் பகிர்வுகள் தொடரட்டும்.

    ReplyDelete