Wednesday 15 June 2016

சோழியன் குடுமி சும்மா ஆடுமா

அமெரிக்கப் பயணத்தில் இந்தியா பெறுவது என்ன?
காலாவதியான தொழில்நுட்பத்துக்கு 2.8 லட்சம் கோடி

அமெரிக்காவில் கைதட்டல் வாங்கிய மோடி குறித்து பக்தர்கள் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் பேசுவது ஒன்றாகவும் உள்நாட்டில் செயல்கள் வேறாகவும் இருப்பதை தெள்ளத்தெளிவாக எழுதினால், அதில் உள்ள விஷயங்களில் ஒன்றுக்கும்கூட பதில் தராமல் எப்போதும் போல தேய்ந்துபோன ஒரே வாதத்தை முன்வைக்கிறார்கள் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆயிற்று. 60 ஆண்டுகளாக சீர்கெட்ட இந்தியாவை இப்போதுதான் சீர்செய்து கொண்டிருக்கிறார்.

பக்தர்களிடம் வேறு ஏதும் எதிர்பார்க்க முடியாது. போகட்டும். சிட்டிசன் டாட் இன் தளத்தில் ரபீர் புர்காயஸ்தா எழுதிய கட்டுரையின் சுருக்கத்தை தமிழில் தருகிறேன். அமேரிக்காகாரன் எதற்குக் கை தட்டினான் என்று புரிந்து கொள்ள விரும்புவோர் புரிந்து கொள்ளட்டும்.

 ஆங்கிலத்தில் வாசிக்க

அமெரிக்காவுக்கு நான்காவது முறையாக பயணம் மேற்கொண்ட மோடியைப் பற்றி பத்திரிகைகள் விதந்தோதுகின்றன. ஆறு அணு உலைகளை நிறுவுவதற்கான ஆரம்பப் பணிகள் என்று பாராட்டித் தள்ளுகின்றன. அது மட்டுமா? வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தின் ஏபி1000 மாடல் அணுஉலைகளை 5ஆம் தலைமுறை உலைகள் என்றும் பாராட்டுகின்றன. இதற்கு முந்தைய ஏபி600 உலைகள் இரண்டாம் தலைமுறை உலைகள் என அழைக்கப்பட்டன. அதற்கு அடுத்து வருகிற ஏபி1000 மூன்றாம் தலைமுறை உலையாகத்தானே இருக்க முடியும்?! நடுவே இரண்டினை விட்டுவிட்டு நேராக ஐந்தாம் தலைமுறை என்று எப்படிச் சொல்ல முடியும்? ஆனால் இந்தியாவில் இருக்கும் சில ஊடக கனவான்களின் கண்களுக்கு மட்டும் அப்படித்தான் தெரிகிறது!

உண்மை என்னவென்றால், எட்டாண்டுகால பேரத்துக்குப் பிறகு, குஜராத்தில் மிதிர்விர்டி என்ற இடத்தில் அமைக்கப்படுவதாக இருந்ததை ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளத்தில் அமைக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. ஸ்ரீகாகுளத்தில் அமைப்பதற்கான ஆரம்பப் பணிகளை மேற்கொள்வோம் என்று மட்டுமே வெஸ்டிங்ஹவுஸ் கூறியுள்ளது.

இன்றைய உலகில் அணு சக்தித் தொழில்நுட்பம் என்பது சாகும் தருவாயில் உள்ள தொழில்நுட்பம். அதன் முதலீட்டுச் செலவுகள் மிகவும் அதிகம். ஒருகாலத்திலும் எந்த நாட்டிலும் இலக்கு வைக்கப்பட்ட காலத்திற்குள் கட்டப்பட்டதே இல்லை. புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் முறைகளான காற்றாலை மற்றும் சூரிய மின்சாரத்துக்கான முதலீட்டுச் செலவுகள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன. எம்ஐடி டெக்னாலஜி ரிவ்யூ என்ற இதழ் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு கட்டுரை வெளியிட்டது. அமெரிக்காவின் அணு உலை சராசரியாக 35 ஆண்டுகள் பழமையானது, நவீன வடிவமைப்புத் தரங்களின்படிப் பார்த்தால் காலாவதி ஆனது, செயல்பாட்டு லைசன்ஸ் முடிவடையும் தருவாயில் இருக்கிறது என்று அது எழுதியது.

ஒருகாலத்தில் அணு சக்தியில் ஆர்வம் கொண்டிருந்த அமெரிக்கா, இனிமேலும் இந்தத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதில்லை என முடிவு செய்து விட்டது. அமெரிக்காவின் செத்துக் கொண்டிருக்கும் அணுஉலைத் தொழில்நுட்பத்துக்கு உயிர் கொடுக்கக்கூடிய நாடுகள் இரண்டுதான் இந்தியாவும் சீனாவும். அமெரிக்காவின் முக்கியமான அணுஉலை நிறுவனங்களான வெஸ்டிங்ஹவுஸ், ஜிஈ இரண்டுக்குமே அமெரிக்காவிலும் எந்த வியாபாரமும் கிடைக்கவில்லை, ஐரோப்பிய யூனியனிலும் ஏதும் கிடைக்கவில்லை. ஆக, அணுஉலைகளைத் தருவதன் மூலம் அமெரிக்கா இந்தியாவுக்கு பெரிய உதவி ஏதும் செய்து விடவில்லை. மாறாக, அமெரிக்காவில் மரணப்படுக்கையில் கிடக்கும் தொழில்நுட்பத்துக்கு இந்தியா உயிர் கொடுக்க முன்வந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

அதற்காக இந்தியா என்ன விலை கொடுக்கப்போகிறது? ஜைதாபூர் அணுஉலைக்காக அரிவா நிறுவனத்துடன் என்ன பேரம் பேசப்பட்டிருக்கிறது என்று இதுவரை தெரியாது அல்லவா? அதேபோல வெஸ்டிங்ஹவுஸ் பேரமும் எவ்வளவு என்று இதுவரை தெரியாது. இருந்தாலும், பழைய சில மதிப்பீடுகளின் அடிப்படையில் பார்த்தால், 6 அணு உலைகளுக்காக இந்தியா 2.8 லட்சம் கோடி செலவு செய்யும் என்று கணக்கிடலாம். அதாவது, கிலோவாட் யூனிட்டுக்கு 12-14 ரூபாய்! நிலக்கரியில் இயங்கும் அனல்மின் நிலையத்தின் உற்பத்திச் செலவைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு. காற்றாலை அல்லது சூரிய மின்சாரத்துக்கான செலவைவிட இரண்டு மடங்குக்கும் அதிகம்!
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியா-அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தம் போட்டப்பட்டது. வெஸ்டிங்ஹவுஸ், ஜிஈ ஆகிய இரண்டுக்கும் தலா ஒவ்வொரு இடம் தருவதென முன்வந்தது. ஸ்ரீகாகுளத்தை ஜிஈ-ஹிட்டாச்சிக்கு வழங்கியது இந்தியா. ஜிஈ அதை மறுத்து விட்டது. குஜராத்தில் உள்ள மிதிர்விர்டியை வெஸ்டிங்ஹவுசுக்கு வழங்கியது. ஆனால் குஜராத்தில் அணுஉலை அமைக்க எதிர்ப்பு வந்ததாலும், சுற்றுச்சூழல் அனுமதி காரணங்களாலும் மிதிர்விர்டி திட்டம் கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக இப்போது ஸ்ரீகாகுளத்தை வெஸ்டிங்ஹவுசுக்குத் தரப்போகிறது. (வடமாநிலஙகள் ஒதுக்கும் திட்டங்கள் எல்லாம் ஏன் தென்மாநிலங்களில் திணிக்கப்படுகின்றன என்று நான் கேட்க மாட்டேன்!)

ஆக, மோடி-ஒபாமா அறிக்கையில் இடம்பெற்ற ஆறு அணுஉலைத் திட்டங்கள் என்பது மன்மோகன் சிங் காலத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நீட்சியே தவிர புதிதல்ல. எட்டு ஆண்டுகளில் நடந்தது என்னவென்று பார்த்தால் அடியைப் பிடிடா என்கிற கதையாக மீண்டும் துவங்கிய இடத்திலேயே நிற்பதுதான்.

(அப்போ காங்கிரஸ் காலத்தில் துவக்கியபோது என்ன செய்து கொண்டிருந்தாய் என்று என்னை யாரும் கேட்கத் தேவையில்லை. காங்கிரஸ் கால அணுஉலைத் திட்டங்களுக்கு எதிராக எழுதியவை நிறையவே என் பேஸ்புக் பக்கங்களில்உண்டு, வலைப்பூவிலும் உண்டு.)
காங்கிரஸ் காலத்திலாவது, அணுசக்தியின் ஆற்றல் குறித்த நம்பிக்கைகள் கொஞ்சம் இருந்தன. ஆனால் புகுஷிமா விபத்துக்குப் பிறகு உலகெங்கும் எல்லா நாடுகளிலும் அணுசக்தி பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகள்தான் இன்னும் அணுசக்தியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, அணுசக்தி என்பதற்கும் மேலாக, அணுஆற்றல் நாடுகளின் பட்டியிலில் சேர அமெரிக்கா அளித்த ஒத்துழைப்புக்கு நன்றிக்கடன்தான் இது. இந்தியாவுக்கு அணுஉலை எரிபொருள் கிடைக்கும் வாய்ப்பு திறந்தது என்றாலும், இரட்டைப் பயன்பாட்டுத் தொழில்நுட்பம், எரிபொருள் மறுபயன்பாடு, என்எஸ்ஜி-யில் உறுப்பினராதல் ஆகிய இதர வாக்குறுதிகள் எதுவும் இன்னும் நிறைவேறவில்லை.

கடந்த எட்டு ஆண்டுகளில் எவ்வளவோ நடந்து விட்டது. ஃபுகுஷிமாவிலிருந்து நிறையவே கதிர்வீச்சு கடலுக்குள் கசிந்து விட்டது. புதிதாக அணுஉலைகள் ஏதும் அமைப்பதில் என்று அமெரிக்கா கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டது. ஓல்கிலுவாடோ, ஃபிளாமன்வில்லி ஆகிய இரண்டு இடங்களில் அணுஉலைகளில் கையைக் கடித்துக்கொண்ட பிரான்ஸ் இனிமேலும் அணுஉலைகளை விரிவாக்கம் செய்வதில்லை என நிறுத்தி விட்டது. மூடப்படும் அணு உலைகளுக்குப் பதிலாக புதிதாக மூன்றாம் தலைமுறை அணுஉலைகளை நிறுவலாமா என்று இங்கிலாந்து இன்னும் யோசித்துக் கொண்டேதான் இருக்கிறது. புதுப்பிக்கப்படும் ஆற்றல் வளங்களின் பக்கம் திரும்பிவிட்ட ஜெர்மனி அணுஉலைகளை மூடிக் கொண்டு வருகிறது.

இந்த நிலைமைக்குப் பிரதான காரணிகள் மூன்றாம் தலைமுறை அணுஉலைகளுக்கு ஆகும் பெரும் செலவு, கட்டுமானத்தில் உள்ள கடினமான சிக்கல்கள், காலத்துக்குள் முடிக்க முடியாமல் போவது. அணு உலைகளுக்குக் கிடைக்கும் மின்சாரம் தடைபட்டால் என்னவாகும் என்பதை புகுஷிமா விபத்து நமக்குக் காட்டி விட்டது.

நாம் வாங்கப்போகும் வெஸ்டிங்ஹவுஸ் அணுஉலைகள் குறித்தும், இன்றைய சூழலில் இது புத்திசாலித்தனம்தானா என்றும் இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். பிரான்சின் அரிவா நிறுவனத்தின் ஈபிஆர் (மூன்றாம் தலைமுறை கனநீர் அணுஉலை) என்ன பிரச்சினைகளைத் தருகிறதோ அதே பிரச்சினைகளை வெஸ்டிங்ஹவுஸ் ஏபி1000 அணு உலையும் எதிர்கொள்கிறது. அரிவாவின் ஈபிஆர் உலைகள் அமெரிக்காவிலும் சீனாவிலும் கட்டப்படும்போது பெரும் செலவுகளை ஏற்படுத்தின, குறிப்பிட்ட இலக்குக் காலத்தைக் கடந்தும் முடிக்க முடியவில்லை. அதே நிலைமைதான் வெஸ்டிங்ஹவுஸ் ஏபி1000 அணுஉலைக்கும் இருக்கிறது.

அமெரிக்காவில் ஜார்ஜியாவிலும், தென் கரோலினாவிலும் ஏபி1000 அணுஉலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. இரண்டும் தலா இரண்டு உலைகளைக் கொண்டிருக்கும், தலா 1100 மெவா மின் உற்பத்தி செய்யும். நான்கு ஆண்டுகளுக்குள் கட்டப்படும் என்று திட்டமிடப்பட்டது, ஆனால் ஏழு ஆண்டுகள் ஆனபிறகும் இன்னும் முடியவில்லை. முதல் யூனிட் 2018இலும், இரண்டாவது யூனிட் 2019இலும் முடியும் என இப்போது மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வெஸ்டிங்ஹவுஸ் சீனாவிலும் சான்மென், ஹையாங் ஆகிய இரண்டு இடங்களில் நான்கு யூனிட்களை அமைத்து வருகிறது. இவையும் திட்டமிட்ட காலத்தைவிட மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னும் முடியாமல் இழுத்துக்கொண்டிருக்கிறது.

அரிவா பின்லாந்தில் அமைக்க முயன்ற மூன்றாவது யூனிட் ஈபிஆர் அணுஉலை போலவேதான் இதுவும். அரிவா திட்டம் ஐந்தாண்டுகளில் முடியும் என்று திட்டமிடப்பட்டு, மேலும் எட்டு ஆண்டுகள் கழிந்தும் இன்னும் இழுத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு 3 பில்லியன் யூரோ என்று மதிப்பிடப்பட்டது, ஆனால் திட்டமிட்டதைவிட மூன்று மடங்காகி, இப்போது 8.5 பில்லியன் யூரோவாக உயர்ந்திருக்கிறது.

அமெரிக்காவில் தோஷிபாவுக்குச் சொந்தமான வெஸ்டிங்ஹவுஸ் அணுஉலைகளைப் பொறுத்தவரை, நிர்ணய விலை ஒப்பந்தம் உள்ளது. எனவே, அணுஉலை கட்டுவதற்கான கடனை திருப்பிச் செலுத்துவதில் ஏற்படும் தாமதம் என்பதுதான் பிரதானக் கவலை. சீனா விஷயத்தில் ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் தெரியவரவில்லை. ஆனாலும், தாமதம் குறித்து சீனா பெரிதும் கவலை கொண்டுள்ளது. தாமதம் ஏற்படுவதாலும், செலவு அதிகரிப்பதாலும் ஏற்படும் நஷ்டத்தை யார் ஏற்பார்கள் என்பது தெரியவில்லை. சீனா இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டது போலத் தெரிகிறது. இப்போது அவர்கள் தமது சொந்த அணுஉலைகளின்பக்கம் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கிறார்கள்.

ஏபி1000 உலையின் முதலீட்டுச் செலவு எவ்வளவு? தாமதம், அதனால் ஏற்படும் அதிகச் செலவு என்பதையெல்லாம் ஒதுக்கிவிட்டே பார்ப்போம்.

அமெரிக்காவில் நிறுவப்படும் உலைக்கு 2009இல் மதிப்பிடப்பட்டது 14 பில்லியன் டாலர் அதாவது, இன்றைய நாணய மதிப்பில் 94 ஆயிரம் கோடி ரூபாய். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும், இலக்குக் காலம் கடந்த பிறகுதான் இயங்கும் என்றும் திட்டமிட்டதைவிட செலவுகள் அதிகரிக்காது என்றே வைத்துக்கொள்வோம். ஸ்ரீகாகுளத்தில் நிறுவப்படும் உலைகளுக்கு 2,80,000 கோடி ரூபாய் ஆகும். அதாவது, இரண்டு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய். அதாவது, ஒரு மெவா மின்சாரத்துக்கு 42 கோடி ரூபாய். நிலக்கரி அனல்மின் நிலைய உற்பத்திச் செலவைவிட 7 மடங்கு! இது மிகைப்படுத்தியது என்று யாரேனும் நினைத்தால் ஜைதாபூர் அரிவா திட்டத்தையும், 7 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் பேரம் இழுத்துக் கொண்டே இருப்பதையும் நினைவுகொள்ளவும்.

மேலே குறிப்பிட்டபடி ஒரு மெவா மின் உற்பத்திக்கு 42 கோடி ரூபாய் என்றால், உங்களையும் என்னையும் போன்றவர்கள் பயன்படுத்துகிற யூனிட்டுக்கு எவ்வளவு ஆகும்? மிகக் குறைவான மதிப்பீட்டின்படியும் யூனிட்டுக்கு 12 முதல் 14 ரூபாய் வரை வரும். நிலக்கரி மின்சாரத்துக்கு இது 3-4 ரூபாய், காற்றாலை அல்லது சூரிய மின்சாரத்துக்கு 4 முதல் 6 ரூபாய். தெளிவாகச் சொன்னால், இறக்குமதி செய்யப்பட்ட அணுஉலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்திச் செலவு, புதுப்பிக்கப்படும் மின்செலவைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு.

பயன்படுத்திய எரிபொருளைக் கையாள்வது, அவற்றை காலத்துக்கும் பாதுகாப்பது, ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால் ஏற்படுகிற மிகப்பெரிய இழப்புகள் எல்லாம் கணக்கில் கொண்டால்....!

அணு உலைக்கான செலவு அதிகமாவதைக் குறைப்பதற்காக, யூனிட் செலவைக் குறைப்பதற்காக அணு உலையின் திறனை அதிகப்படுத்துவதில் ஈடுபடுகின்றன. வெஸ்டிங்ஹவுஸ் ஏபி1000 உலை 1100 மெவா, அரிவாவின் ஈபிஆர் 1600 மெவா. இப்படி அதன் திறனை அதிகரிக்கும்போது அணுஉலைகளும் இன்னும் சிக்கலாகின்றன. வடிவமைப்பு, கட்டுமானம் எல்லாம் தாமதம் அடைந்து, திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்க முடியாமல் போகின்றது. இதுதான் அணு உலைகள் திட்டம் பின்னடைவதன் காரணம். அமெரிக்கா அணுசக்தி திட்டத்தைக் கைவிட்டதற்குக் காரணம் த்ரீமைல் ஐலேண்ட் விபத்து மட்டுமே அல்ல, திட்டமிட்ட செலவுக்குள்ளும் காலத்துக்குள்ளும் முடிக்க இயலவில்லை என்பதே.

இன்னொரு முக்கிய சிக்கல் இருக்கிறது. பல யூனிட்களை ஒரே இடத்தில் நிறுவும்போது விபத்துக்கான சாத்தியங்களும் அதிகம். இருந்தாலும் நாம் அதிக யூனிட்களை ஒரே இடத்தில் நிறுவுவதன் காரணம், செலவைக் குறைப்பதற்கே. ஸ்ரீகாகுளத்தில் ஆறு 1100 மெவா உலைகள் அமைக்கும்போது, ஏதேனும் விபத்து நிகழந்தால் அதன் விளைவு கேஸ்கேடிங் விளைவாக மிகக் கடுமையாக இருக்கும்.

அணுசக்தித் தொழில்நுட்பம் ஒன்றுதான் தொடர்ந்து விலை அதிகரித்துக் கொண்டே வரும் தொழில்நுட்பமாகும். மற்றவை எல்லாம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன.

ஆக, பொருளாதார ரீதியாகவும் சரி, சுற்றுச் சூழலுக்குத் தீங்கற்ற சக்தி என்ற வகையிலும் சரி, அணுசக்தி என்பது சரியான தீர்வு அல்ல. புதுப்பிக்கப்படும் ஆற்றல் வளங்களின் பக்கம் திரும்புவதே சரியான தீர்வாக இருக்கும்.
ஆங்கிலத்தில் வாசிக்க


No comments:

Post a Comment