Saturday 9 March 2013

தில்லிகையின் கவிதை நிகழ்வு



9-3-2013 தில்லிகை நிகழ்ச்சி மனநிறைவையும் கொந்தளிப்பையும் ஒருங்கே ஏற்படுத்தியது. முழு நிகழ்வின் காணொளி தில்லிகை பக்கத்தில் வெளியிடப்படும் என்றாலும் இன்றே எழுதுதவன் காரணம் அந்தக் கொந்தளிப்புதான். 

இன்றைய நிகழ்ச்சியிலும் மூன்று தலைப்புகளில் மூவர். மூன்றுக்கும் இடையே இழையோடியது ஒடுக்கப்படும் மக்கள் என்கிற கருத்து.
முதலாமவர் அம்பேத்கர் - தலித் கவிதை பற்றி
இரண்டாமவர் எச். பாலசுப்பிரமணியன் - இப்படிக்கு அன்புள்ள அம்மா என்ற கவிதை நூல் பற்றி.
மூன்றாமவர் சதீஷ் - இலங்கைக் கவிஞர் அகிலனின் கவிதைகள் பற்றி.

முதலாமவர், சொந்த நாட்டில், ஜனநாயகரீதியாக சம உரிமைகள் உறுதிசெய்யப்பட்ட நாட்டில் ஒடுக்கப்படும் தலித் மக்களின் கவிதைகள் எவ்வாறு உருவாயின, அடையாளம் எப்போது உருவானது, வீச்சு எப்போது துவங்கியது, இன்றைய நிலை என்ன என்பதான பரவலான பார்வையை சுருக்கமான முன்வைத்தார். குறிப்பாக 2010க்குப் பின் தலித் கவிதைகளில் செயல்பாட்டுக்கான அறைகூவல் இருப்பதை எடுத்துக்காட்டுடன் விளக்கினார்.

இரண்டாமவர், டென்மார்க்கில் புலம்பெய்ர்ந்து வாழும் இலங்கைத் தமிழர் கலாநிதி ஜீவகுமாரன் டேனிஷ் மொழியில் எழுதி, ஜீவகுமாரன் தமிழில் மொழிபெயர்த்து, பாலசுப்பிரமணியன் இந்தியில் மொழிபெயர்த்த இப்படிக்கு அன்புள்ள அம்மா என்ற கவிதை நூலை அறிமுகம் செய்தார். அது கவிதை நூலாகவும், புதினமாகவும், காப்பியமாகவும் அமைகிறது என்று கூறிய அவர், நூலிலிருந்து பல எடுத்துக்காட்டுகளையும் காட்டினார். இது, சொந்த நாட்டைத் துறக்க நேர்ந்து, வேற்று நாட்டின் அரவணைப்பில் வாழ நேர்ந்து, அந்நாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேலையில் வேர்களை மறக்கவும் முடியாமல் தவிக்கும் ஒரு தாய் தன் மகனுக்கு எழுதியதாக எழுதிய கடிதங்களின் தொகுப்பு.

மூன்றாமவர் பொங்கிய எரிமலையாய் நேற்றும் அடங்கிய எரிமலையாய் இன்றும் இருக்கிற இலங்கையில் வாழும் கவிஞர் அகிலனின் கவிதைகளை மேற்கோள்களுடன் காட்டினார். இது, சொந்த நாட்டில் உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட இனத்தின் குரலின் பதிவு.


மூன்றையும் கேட்டுக்கொண்டிருந்த எனக்குள் தனியாக ஓர் உளைவு ஓடிக்கொண்டிருந்தே இருந்தது. அதற்குக் காரணங்கள் பல.

  • சுமார் ஆறுமாதங்களுக்கு முன் எச். பாலசுப்பிரமணியன் ஐரோப்பியப் பயணம் முடித்துத் திரும்பியதும், லண்டனில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின் இணைப்பை அளித்திருந்தார். நேர்கண்டவர் இளைய அப்துல்லாஹ். அவரது பெயரைப் பார்த்ததும்தான் கடந்த புத்தகத் திருவிழாவின்போது வாங்கிய லண்டன் உங்களை வரவேற்பதில்லை என்ற நூலைப் படித்து முடித்தேன்.
  • தொடர்ந்து ஜவஹர்லால் நேரு பல்கலையில் இலங்கை எழுத்தாளர்கள் மூவர் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா. இந்த வெளியீட்டு விழாவையும் அப்துல்லாவின் நூலையும் இணைத்து பதிவு எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டது. பதிவேற்ற மறந்து போனது.
  • கிட்டத்தட்ட அதையொட்டி இலங்கை மீதான ஐநா தீர்மானம் பற்றிய விவாதம், இந்திய அரசு தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்தது குறித்த என் பதிவுகள்.

  • அதைத் தொடர்ந்து காலச்சுவடு வெளியீடாக வந்த கூண்டு (The Cage) என்னும் தமிழாக்க நூலைப் படித்து முடித்தது. அதற்கும் பதிவு எழுத வேண்டும் என்ற ஆவல் பாதியிலேயே நிற்கிறது. (நண்பர் குருமூர்த்தி படிக்கக் கேட்டார் என்பதற்காக அவருக்குத் தர தில்லிகை கூட்டத்திற்கு எடுத்துச்சென்ற ஐந்து நிமிடப் பயணத்தின்போதுகூட முன்னுரையை மீண்டும் ஒருமுறை படித்தது.)
  • அதைத் தொடர்ந்து, இலங்கையின் சிங்கள, தமிழ், ஆங்கிலக் கவிஞர்களின் தொகுப்பு நூலை நான் வடிவமைக்கும்போது அவற்றைப் படித்தது (அந்த நூல் ஆங்கிலத்தில் விரைவில் வெளியாக உள்ளது, அதிலும் அகிலனின் கவிதைகள் உண்டு.)
  • அண்மைத் தமிழகப்பயணத்தில் ரயிலில் சந்தித்த, இலங்கையைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் பயணிகள், அவர்களுடன் நிகழ்ந்த இரண்டு நாள் உரையாடல்கள்.
  • திரும்பி வந்ததும் காண்போர் அனைவரையும் கண்கலங்க வைக்கும் வகையில் வெளியான, பிரபாகரன் மகன் படுகொலைப் புகைப்படம்...
  • அடுத்து, வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற விவாதம்.... ஐநா தீர்மானம் குறித்து அமைச்சரின் நழுவல்  பதில்கள்...

இவையெல்லாம் சந்தர்ப்பவசமான தொடர் நிகழ்வுகள் என்றாலும் தொடர்ந்து உள்ளுக்குள் உளைந்து கொண்டிருந்தவை என்பதால் தில்லிகை நிகழ்வில் இலங்கைத் தமிழர் கவிதைகளைக் கேட்டதும் அத்தனையும் ஒருசேர உரைகளோடு சேர்ந்து மனதுக்குள் முன்னிலை பெற்றன.

அதனால்தான் இந்தப் பதிவு. இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமிழர்கள் உணர்வுபூர்வமாகவே அணுகி வந்திருக்கிறார்கள். 80கள் முதலாகவே பல்வேறு குழுக்களின் போராட்டங்களை, குழுக்களுக்கு இடையிலான மோதல்களை, தமிழக அரசியலை, இந்திய அரசியலை, இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பல்லாண்டுகளாக இந்திய அரசு பின்பற்றி வரும் அணுகுமுறைகளை அவதானித்து வந்தவன் என்ற வகையில் என் திடமான கருத்து இது.

இலங்கைப் படைப்புகளும் கவிதைகளும் இந்திய மக்களை எட்டவில்லை. தமிழகத் தமிழர்கள் பார்த்ததெல்லாம் ஊடகங்கள் முன்வைக்கும் தனிநபர் துதிகளும் சித்திரிப்புகள் மட்டுமே. கூடவே தமிழக அரசியல்வாதிகள் தம்வசதிக்கேற்ப குழுக்களுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற போக்குகளும் இதற்குத் துணையாயின. இலங்கையின் சோகத்துக்கு இதுவும் ஓர் முக்கியக் காரணம்.

நான் எந்தப் போராளி அமைப்பின் ஆதரவாளனோ, அனுதாபியோ அல்ல. போராளி அமைப்புகளுக்கு அவற்றுக்கே உரிய நியாயங்கள் இருந்திருக்கும் என்பதும் புரிகிறது. அதற்காக எந்த அமைப்பையும் ஒரேயடியாக துரோகி என்றோ, தமிழர்களின் காவலன் என்றோ கருதியவன் அல்ல. அதைப்பற்றியெல்லாம் இப்போது பேசிப் பயனில்லை.

படித்தவர்கள் மத்தியில்கூட இலங்கைப் பிரச்சினை பற்றிய புரிதல் மிகக் குறைவுதான். பிரச்சினையின் துவக்கம் பலருக்கும் தெரியாது. பெரும்பாலோர் பார்ப்பதெல்லாம் 80களுக்குப் பிந்தைய காலத்தை மட்டுமே. இலங்கை இனப்பிரச்சினையின் வரலாறு இந்தியர்களுக்குத் தெரியாதிருப்பதில் வியப்பில்லை. ஆனால் தமிழர்களுக்கே தெரியாது என்பதே முக்கியம். தெரிந்திருந்தால் ஒருகாலத்தில் தமிழக அரசியல்வாதிகள் மைய அரசை நிர்பந்திக்கத் தலையிட்டதுபோல இப்போதும் தலையிட்டிருக்க முடியும்.

இந்தக் கருத்துகளை நான் பகிர்ந்துகொண்டபின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சதீஷ் ஒரு கருத்தை வெளியிட்டார். தான் முன்வைத்த உரையின் நோக்கம் அனுதாபத்தைப் பெற வேண்டும் என்பதற்காக அல்ல என்று.

அவருடைய சுயமரியாதையை, நோக்கத்தை மதிக்கிறேன். நான் கூறுவதும் அனுதாபம் குறித்தல்ல. உண்மை வரலாறு மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே. பலநாடுகளின் வரலாறுகள் இலக்கியவழி மக்களை எட்டியுள்ளது. இலக்கியவழியாகவே பல நாடுகளின் அரசியலையும் நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இலங்கை விஷயத்தில் மட்டும் ஊடகங்கள் கட்டமைக்கிற, உணர்ச்சியின்பாற்பட்ட அணுகுமுறையை மட்டுமே தமிழர்களாகிய நாம் கொண்டிருந்திருக்கிறோம்.

காலம் மிகவும் கடந்துபோய் விட்டது என்பது புரிகிறது. இருந்தாலும் ஓர் ஆசை. தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் போலின்றி இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகள் பலவும் இணையத்தில் பெரும்பாலும் இலவசமாகக் கிடைக்கின்றன. படித்தவர்கள் பகிரவும் படிக்காதவர்கள் படிக்கவும் வேண்டும்.

அடுத்து வருகிற தலைமுறையேனும் பிரச்சினையைப் புரிந்து கொள்ளட்டும்.

முதல் கட்டமாக, இலங்கைப் படைப்புகள் பலதையும் கொண்டுள்ள வலைதளம் இது.
பகிர விரும்புவோருக்கு - http://www.noolaham.org

No comments:

Post a Comment