Saturday 31 August 2019

அணு மின் கழிவுகளும் கூடங்குளமும்


அணுசக்தி மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா? நான் படித்து அறிந்த வரையில் சுருக்கமாக எழுதுகிறேன்.

அணுசக்தி மின்சார நிலையங்களின் படங்களைப் பார்த்திருப்பீர்கள். பெரிய பெரிய கட்டிடங்கள் இருக்கும். அவற்றில் என்ன இருக்கும்
1. அணு உலை – கனமான கான்கிரீட் சுவர்களால் அமைக்கப்பட்டிருக்கும். 2. டர்பைன், ஜெனரேட்டர் கட்டிடங்கள் 3. குளிர்விக்கும் கோபுரங்கள்.


அணுமின் நிலையமும் ஒருவகையில் அனல் மின் நிலையம்தான். அணு உலையில் எரிசக்திக் குழாய்கள் ஃப்யூவல் ராடுகள் இருக்கும். இதற்குள் செறிவூட்டப்பட்ட யுரேனியம் போன்ற அணுக்களின் சிறு சிறு வில்லைகள் நிரப்பப்படும். இவை பிளவு அல்லது பிணைவின் மூலம் வினையாற்றி கடும் வெப்பத்தை உற்பத்தி செய்யும். அந்த வெப்பம் நீருக்குக் கடத்தப்படும். நீர் சுமார் 570 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பமடையும் என்றாலும், அது கொதிக்காது. காரணம், அது அழுத்தமேற்றப்பட்ட நீராக இருக்கும். இந்த வெப்பநீர், வெப்ப மாற்றி அல்லது நீராவி ஜெனரேட்டருக்குச் செல்லும். நீராவி ஜெனரேட்டருக்குள் நீரும், நிறைய குழாய்கள் சுருள்களாகவும் இருக்கும். அணுஉலையிலிருந்து வரும் வெப்ப நீர் குழாய்களுக்குள் சுற்றி வருவதால், அந்த வெப்பத்தை ஏற்றுக்கொண்ட ஜெனரேட்டருக்குள் இருக்கும் நீர் கொதிக்கும். அது நீராவியாக வெளிவரும். இந்த நீராவி, குழாய்கள் மூலம் டர்பைன்களுக்குச் செல்லும். முதலில் அழுத்தம் அதிகமாக இருக்கும் என்பதால் அதிக அழுத்த டர்பைனுக்குள் செல்லும், பிறகு குறைந்த அழுத்த டர்பைன்களுக்குள் செல்லம். நீராவியின் அழுத்தத்தால் டர்பைனில் உள்ள தண்டு (ஷாஃப்ட்) சுழலும். அந்த ஷாப்ட் ஜெனரேட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும். ஷாப்டின் சுழற்சியால், ஜெனரேட்டர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

இவ்வாறு டர்பைனுக்குள் பயன்படுத்திய நீராவியை ஒரு கண்டென்சர் மீண்டும் நீராக மாற்றும். அந்த வேலையைத்தான் கூலிங் டவர் செய்கிறது. கூலிங் டவருக்கு மேல் புகைபோலத் தெரிவது, வெப்பமடைந்த நீரின் நீராவிதான். இவ்வாறு நீராவி-நீர் என இவ்வாறு சுழற்சி முறையில் சுற்றிக் கொண்டே இருக்கும்.


அணு உலைக்குள், எரிசக்திக் குழாய்களுடன் நேரடித் தொடர்புக்கு உள்ளான நீர், இந்தச் சுழற்சியின்போது கதிரியக்கத்துக்கு ஆளாகியிருக்கும் என்பதால் வெளியே விடப்படாது.

அணுமின் நிலையத்திலும் நீராவி உற்பத்தி செய்துதான் மின்சாரம் எடுக்கப்படுகிறது. அதற்காக, அணுமின் நிலையத்துக்கு அருகில் உள்ள ஆற்றிலிருந்து அல்லது நீர் நிலையிலிருந்தே தண்ணீர் எடுக்கப்படும். அருகில் பெரிய நீர்நிலை அல்லது ஏரி இருக்குமானால், கூலிங் டவர் தேவைப்படாது. நீரை இயற்கையிலேயே குளிர்விக்க ஏரிக்குள் விட்டு விடலாம்.

இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன்.

ஓர் அணுமின் நிலையத்திலிருந்து என்னென்ன கழிவுகள் வெளிவரும்?
கழிவுகளை மூன்றாகப் பிரிக்கிறார்கள். ஹை-லெவல், இன்டர்மீடியட் லெவல், லோ லெவல்.
ஹை லெவல் எனப்படும் கதிரியக்கம் மிகுதியான பொருட்கள் வெறும் 3%தான் வெளிவரும் என்கிறார்கள். ஆனால் இவை 95% கதிரியக்கம் கொண்டவை.
இன்டர்மீடியேட் லெவல் கழிவுகள் 7% இருக்கும். இவை 4% கதிரியக்கம் கொண்டிருக்கும்.
லோ லெவல் கழிவுகள் 90 %, இவை 1% கதிரியக்கம் கொண்டிருக்கும்.

பிரச்சினை என்னவென்றால், (வெறும்) 3 % என்று சொல்லப்படும் கழிவுகள்தான் பல்லாயிரம் ஆண்டுகள் வரை கதிரியக்கத்தை இழக்காமல் இருக்கும்.

எரிசக்திக்காகப் பயன்படும் குழாய்கள் (ராடுகள்) அதிகபட்சம் மூன்றாண்டுகளுக்குப் பிறகு கழிவு ஆகிவிடும். பயன்படுத்தப்பட்ட எரிசக்திக் குழாய்கள்தான் முக்கியமான பிரச்சினைக்குரிய கழிவுகள். உதாரணமாக, சீசியம் 137, ஸ்ட்ரோன்டியம்-90, புளூடோனியம்-239.
சிசியம், ஸ்ட்ரோன்டியம் இரண்டும் சுமார் 30 ஆண்டுகளில் கதிரியக்கத்தை தீர்த்துவிடும். ஆனால் புளூட்டோனியம்? அதன் கதிரியக்கம் தீருவதற்கு 24 ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.


படத்தில் இருப்பது சான் ஓனோஃப்ரே அணுமின் நிலையம். கலிபோர்னியாவின் சான் கிளமென்ட் நகருக்கு அருகே, பசிபிக் கடற்கரையின் ஓரத்தில் உள்ளது. 2012இல் ஒருமுறை நீர்க் கசிவு ஏற்பட்டது. உடனே மூடப்பட்டு விட்டது. இனி மீண்டும் அது திறக்கப்படும் சாத்தியம் இல்லை என்பதால், மின்நிலையத்தை அக்கு அக்காகப் பிரிக்க முடிவு செய்துவிட்டது அந்த தனியார் நிறுவனம். ஆனால், அதனிடம் இருக்கிறது 88000 டன் அணுக்கழிவுகள். பிரம்மாண்டமான கான்கிரீட் தொட்டிகளில் நீருக்குள் சில ஆண்டுகள் வைக்கப்பட்டிருக்கும். பிறகு, பிரம்மாண்டமான கான்கிரீட் தொட்டிகளுக்குள் குளிரூட்டப்பட்ட ஸ்டீல் கன்டெய்னர்களில் வைக்கப்பட்டிருக்கும். 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு இதைப் பராமரிக்க வேண்டும்!



அமெரிக்க அரசு இதில் என்ன செய்யும்? எல்லாக் கழிவுகளையும் நெவாடாவில் உள்ள யுக்கா மலைகளில் ஆழக் குழாய்கள் தோண்டி புதைத்துவிடலாம் என்று திட்டமிட்டது. ஆனால் நெவாடா மக்கள் அதை ஏற்கவில்லை. எனவே, அணுமின் நிலையங்கள் அரசைக் கேட்கின்றன. அரசு ஏதும் செய்ய இயலாது என்று சொல்கிறது. தற்போது அமெரிக்காவில் வெறும் 20 விழுக்காடு மட்டும்தான் அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 2200 டன் கழிவுகள் உற்பத்தி ஆகின்றன.

இத்தனைக்கும் இது அமெரிக்கா. ஒரு சிறு கசிவு ஏற்பட்டதும் அணுமின் நிலையத்தையே மூடிவிட்ட நாடு. கழிவுகள் வைக்கும் கானிஸ்டர்களை தயாரிக்கும் நிறுவனம், அந்த கானிஸ்டர்களில் சிறியதொரு மாற்றம் செய்ய முனைந்தபோது, உடனே அதை நிறுத்தச் சொன்ன நாடு. தன் மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்கும் அரசைக் கொண்டது. அப்படிப்பட்ட அமெரிக்காவே என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. பூகம்பம், சுனாமி என எந்தவிதப் பேரிடரையும் தாங்கும் வகையில் கழிவுகளுக்கான கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும்கூட, கடலோரத்திலிருந்து அகற்ற வழி உண்டா என்று யோசிக்கப்படுகிறது. மறுபக்கத்தில் உள்ள மலைகளில் சுரங்கம் தோண்டிப் புதைக்கலாமா என்றும் யோசிக்கப்பட்டது.


கிட்டத்தட்ட இதேபோல கடலோரத்தில் இருப்பதுதான் கூடங்குளம். கூடங்குளத்தில் உருவாகும் அணுக்கழிவுகளையும் கூடங்குளத்தில் சேமிக்கப்போவதாக செய்திகள் வருகின்றன.

இந்தப் பிரச்சினை ஏற்கெனவே விவாதிக்கப்பட்டதுதான். அணு உலைக்கு அப்பால் (Away From Reactor) கழிவுகளை சேமிக்க ஏற்பாடு செய்ய அரசுக்கு ஐந்தாண்டு கால அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம். இது நடந்தது 2013இல்.

கழிவுகளை சேமிக்கும் தொழில்நுட்ப அறிவு தன்னிடம் இல்லை என்று நீதிமன்றத்திலேயே சொன்னது தேசிய அணு சக்திக் கழகம்.

ஐந்தாண்டுகள் போன பிறகு, 2018இல் உச்சநீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கைத் தொடர்ந்து, அணுசக்திக் கழகத்துக்கு மேலும் நான்கு ஆண்டுகள் கால அவகாசம் கொடுத்த்து உச்சநீதிமன்றம்.

இந்நிலையில், ஜூலை 10ஆம் தேதி மக்கள் கருத்துக் கேட்பு நிகழ்வை நடக்க இருப்பதாக அறிவித்தது அணு சக்திக் கழகம். சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையின்படி, கூடங்குளம் நிலைய வளாகத்துக்கு உள்ளேயே கழிவுகள் வைக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

AFR என்றாலே அணு உலைக்கு அப்பால் என்றுதான் பொருள். ஆனால், ஐந்தாண்டுகள் அவகாசம் கொடுத்தும் ஏற்பாடு செய்யாதவர்கள், சுற்றி வளைத்து கூடங்குளத்திலேயே சேமிக்கத் திட்டமிடுவதாகத் தோன்றுகிறது.

திருநெல்வேலி, ராதாபுரம் தாலூகா, நித்ய கல்யாண சுந்தரி வெள்ளையன் செட்டியார் அரசு மேநிலைப் பள்ளியில் மக்கள் கருத்துக்கேட்பு நடைபெற இருக்கிறது என்று தகவல்கள் வந்தன. ஆனால், காலவரையின்றி அது ஒத்திவைக்கப்பட்டது.

ஜூலை முதல் தேதி உச்சநீதிமன்றம் ஒரு முடிவை அறிவித்த்து – ஏஎஃப்ஆர் நிறுவுவதற்கான கால வரம்பை 2022 ஏப்ரல் வரை நீட்டித்து அனுமதி அளித்த்து. இதுதான் கடைசி, இதற்கு மேலும் நீட்டிப்புத் தர முடியாது என்று உறுதியாகத் தெரிவித்து விட்டது உச்சநீதிமன்றம். அட! அபாரம்!!

No comments:

Post a Comment