Friday 8 March 2013

படித்ததில் பிடித்தது - 4


காற்றில் மிதக்கும் நீலம் 




புத்தகத் திருவிழாவின்போது தில்லி வந்திருந்த சக்தி ஜோதி நான்கு நூல்களைப் பரிசளித்தார். இப்போதெல்லாம் வாசிப்புக்கு பயணங்கள்தான் வாய்ப்பாக அமைகின்றன. வானொலிக்குச் செல்லும் வழியில் படிப்பதற்காக சட்டெனக் கையில் கையில் கிடைத்த ஒன்றை எடுத்துச்சென்றேன். சுகுமாரனின் முன்னுரையைப் படிக்கும்போதுதான் இது அவரது நான்காவது நூல் என்று தெரிந்தது. அடடா... முன்னரே பார்த்து எடுத்திருந்தால் அவருடைய கவிதையின் வளர்ச்சியை அவதானித்திருக்கலாமே என்ற எண்ணம் ஒருபக்கம். படித்தபின் நல்ல கவிதை நூல் படிக்கத் தேர்வு செய்தேன் என்ற திருப்தி மறுபக்கம். 

இது விமர்சனம் அல்ல. படித்ததில் பிடித்ததைப் பகிர்ந்து கொள்வது மட்டுமே. சக்திஜோதி அவருடைய ஐந்து கவிதை நூல்களையும் பஞ்சபூதங்களை தலைப்பாகக் கொண்டு படைத்திருப்பதாகச் சொன்னார். இது காற்று குறித்தானது. காற்று மட்டுமில்லை, நிலமும் நீரும் வானும் தீயும்கூட இங்கே இருக்கத்தான் செய்கின்றன.

எந்தவொரு கவிதைத் தொகுப்பிலும் எல்லாக் கவிதைகளுமே மனதிற்குப் பிடித்து விடுவதில்லை. சில கவிதை நூல்களில் மிகச்சில கவிதைகளே திருப்தி தரும். சிலவற்றில் பலவும் திருப்தி தரும். இது இரண்டாவது வகை.

காட்டுத்தீ, நிலா முற்றம், அறியப்படாத சுவை, பாதையில் பரப்பிய தென்றல், மேகம் உரைக்கும் செய்தி, கடிதம், நினைவெனும் பெருவெளி, மாதச்சம்பளம், அன்பில் நனைந்த மழை, நினைவின் சுவை, சில நாட்கள், மாதவம், பருவம், விரிசுடர், மூடிய அறை, காற்றில் திசையறிந்தவன், மகள், வாகை என்றொரு இனம், நதிக்கரையில் நிற்கும் புதிர், பூக்கனவு, கோடை மழை, சுமை, மேகங்கள் உரசிக்கொள்ளும்பொழுது, உற்சாகம், குறிஞ்சி மலர், ஓவியம், காதலின் நீட்சி, முகவரி, கொண்டாட்டம்... என, நூலில் உள்ள கவிதைகளில் பாதிக்கும்மேல் திரும்பவும் வாசித்துப் பார்க்க வைத்தது திருப்தி அளித்தது. 

காட்டுத்தீ
... காடுகளுக்குப் பாதை இல்லை
நெருப்புக்கும்கூட ...
மேற்குத்தொடர்ச்சி மலைகளில் இரவுகளில் தீயின் தடங்களைப் பார்த்து புரியாத புதிரென வியந்தவர்களுக்கு இந்தக் கவிதை இன்னும் அழகாகப் புரியும்.


பாதையில் பரப்பிய தென்றல்
... இந்தச் சுடர் அணையும் முன்
வந்து விடுவாய்
உன் பாதங்கள் நோகாதபடிக்கு
நிலத்தின்மேல் தென்றலைப் பரப்பி வைத்து
இமைகள் மூடாது காத்திருக்கிறேன் ...
காதலைப் பொதுமைப்படுத்தும் இந்தக் கவிதையின் மென்மை நெகிழ வைக்கிறது.

கடிதம்
... எழுத வேண்டிய ஒரு கடிதத்தை
எவ்வாறு தொடங்க வேண்டுமென்பதை
அறியாமல் இருக்கிறேன்
அறிந்துகொள்ள விரும்பாமலும் இருக்கிறேன் ....

நினைவென்னும் பெருவெளி
... கொடியது இப்பனி அல்ல
பனிக்காலத்தில் வரும்
உன் நினைவுகள் ...
காதலை எத்தனை முறை எத்தனை கவிஞர்கள் எத்தனை விதமாகப் பாடினாலும் இன்னும் எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. 

மாதச் சம்பளம், சில நாட்கள்  இந்த இரண்டும் பெண்களுக்கே உரிய பிரச்சினையை மென்மையாய் முன்வைக்கின்றன.
... மூன்று நாட்களை அகற்ற விரும்பியபடி
அந்த நாளுக்காய் காத்திருக்கத் துவங்குகிறேன்.

... ஆணாய் பிறந்திருக்கலாம் என்று
நினைக்கத் தோன்றும் அந்த சில நாட்கள்.

அடுத்து மாதவம் கவிதை பெண்ணாய் பிறப்பதற்கு பெருந்தவம் செய்திருக்க வேண்டும் என்கிறது. காரணம் -
...  பெண்ணுடல் புதிர்களால் ஆனது ...
வானத்திலும் மிதக்கும் நீரிலும் மிதக்கும்
இரகசியங்கள் கொண்டது ...
நாற்பத்தொன்பது ஜென்மங்களும்
பெண்ணாகவே பிறக்க வேண்டும்.

நினைவின் சுவை அட... என்று நினைக்க வைக்கிறது சங்கப்பாடலை நினைவூட்டுவதால்.
... இரவெல்லாம் மூங்கிலைத் தாலாட்டும்
தென்றலின் பாதையை துளையிடும் வண்டுகள்
மழையில் நனைந்த தினைச்செடிகளில் மலரும் சிரிப்பை
அவனிடம் நினைவூட்டினால்தான் என்ன

சந்திப்பு கவிதை மிகச்சிறப்பாய் அமைகிறது. ஆதவன் தன் சிறுகதைகளில் விளக்கும் அகமன உணர்வுகளை இந்தச் சிறிய கவிதை எளிதாய் கூறிச்செல்கிறது.
சந்திக்கத் துடித்துக் கொண்டிருந்தோம்
சந்திப்பால் ஒரு பயனும் இல்லையென்றபோதும்
நமக்குத் தெரியும்
ஒரு பயனும் தேவையில்லையென
என்றபோதும்
உனக்கு ஒரு பயன் வேண்டுமென நினைத்தேன்
எனக்கு ஒரு பயன் வேண்டுமென நினைத்தாய் ...
சந்தித்தோம்
பயன் இருந்தது மாதிரியும் இருந்தது
இல்லாதது மாதிரியும் இருந்தது
காத்துக்கொண்டிருக்கிறோம்
இன்னும் ஒரு சந்திப்பிற்கு
ஒருவேளை அந்தச் சந்திப்பிலாவது
யாருக்காவது பயன் இருக்கலாம்.

மகள் கவிதையை ஒரு தாய் தன் மகளின் மாற்றங்களைப் பார்ப்பதாகவும் கருதலாம், ஒரு கவிஞர் தன்னைத்தானே பார்ப்பதாகவும் கருதலாம்.
... அவள் அவளாக மாறியபொழுது
அவளை அவள் உணர்ந்து
அவலைக் கடக்க நாம் அனுமதிக்கவேயில்லை.

காவியா, நதிக்கரையில் நிற்கும் புதிர், சுமை, முகவரி, இன்னும் சில கவிதைகளை ஏற்கெனவே முகநூலில் பலர் பகிர்ந்து விட்டதால் இங்கே எடுத்தாளவில்லை.

இன்னும் பலவற்றைக் குறித்து வைத்திருந்தாலும், நீளம் கருதி தவிர்த்துவிட்டு, உற்சாகம் என்னும் கவிதையை முத்தாய்ப்பாகத் தரலாம் என்று தோன்றுகிறது.
... ஒரு சொல் போதும் ஒருவன் சாவதற்கு
ஒரு சொல் போதும் ஒருவன் வாழ்வதற்கு ...
இதில் சொல்பவர் யார் என்பதுதான்
சொல்லின் முக்கியம். ...
ஒரு சொல் என்பது
ஒருவனை வாழ வைக்குமானால்
அந்தச் சொல்லைச் சொல்வேன்.

அதுதானே கவிதையின், இந்தக் கவிதை எழுதியவரின் நோக்கம். ஒற்றைச் சொல் போதுமாயிருக்கும்போது இன்னும் சொற்களை நான் எழுதத்தான் வேண்டுமா...?

காற்றில் மிதக்கும் நீலம்
சக்தி ஜோதி
உயிர் எழுத்து பதிப்பகம்முதல் தளம்தீபம் வணிக வளாகம்கருமண்டபம்திருச்சி-2
பக்கம் 13, விலை ரூபாய் 75


வாசிப்பை நேசிப்போம்

4 comments:

  1. நன்றி ஷாஜஹான் .

    ReplyDelete
  2. வாசிக்கக் கிடைத்த நானல்லவா கூற வேண்டும்...

    ReplyDelete
  3. குறித்து வைத்துக் கொண்டேன். அடுத்த பயணத்தின் போது வாங்குவதற்கு.

    நல்ல நூல் அறிமுகத்திற்கு நன்றி....

    ReplyDelete
  4. மகிழ்ச்சி வெங்கட். தேவையெனில் தெரிவியுங்கள். அடுத்த சந்திப்பில் தருகிறேன்.

    ReplyDelete