Wednesday 22 October 2014

தன் தேரஸ் - தீபாவளி – மேளா



தீபாவளி கொண்டாடுவதற்கான காரணம் பகுதிக்குப் பகுதி வேறுபடுகிறது. தெற்கே நரகாசுரனைக் கொன்றதைக் கொண்டாடுகிறார்கள். ஒருநாள் பண்டிகையோடு இது முடிந்து விடுகிறது. வடக்கே இது ஐந்து நாள் பண்டிகை. தீபாவளி கொண்டாட பல காரணங்கள் நம்பிக்கைகளாக உலவுகின்றன. இராமன் வனவாசம் முடித்து திரும்பி வந்ததைக் கொண்டாடுகிறார்கள். இராமன் இராவணனை வென்று சீதையை மீட்டு வந்ததையும் கொண்டாடுகிறார்கள். 


தில்லியில் தீபாவளி பெரும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கடைகள் எல்லாம் மாறி விடுகின்றன. நடைபாதைகள் எல்லாம் கடைகள் முளைத்து விடுகின்றன. எந்தக் கடை எதை விற்பது என்ற வேறுபாடின்றி எல்லாக் கடைகளும் எதையெதையோ விற்பனை செய்யும். அதுவும் தன் தேரஸ் நாளில் கடைவீதிகளில் கூட்டம் சொல்லி முடியாது. சீரியல் விளக்குகள், அலங்காரப் பூக்கள், பட்டாசுகள், பாத்திரங்கள்... என்ன... பாத்திரங்களா... பாத்திரங்கள் எதற்கு என்று கேட்பீர்கள். சொல்கிறேன்.

தன் தேரஸ் என்றால் என்ன தெரியுமா? செல்வத்தின் திருமகள் - லட்சுமி எப்படி வந்தாள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். பாற்கடலைக் கடையும்போது உருவானவள் லட்சுமி. ஆனால் லட்சுமி மட்டும் இருந்தால் போதுமா? அதை அனுபவிக்க ஆரோக்கியமும் ஆயுளும் வேண்டும் அல்லவா? அதற்காக மீண்டும் கடைந்தபோது கையில் அமிர்த கலசத்துடன் வந்தவர்தான் தன்வந்தரி. (மேலும் விவரங்களை இணையத்தில் தேடிக் கண்டடைக.) தன்வந்தரிதான் தேவர்களுக்கே மருத்துவராம். தன்வந்தரியைக் கொண்டாடுவதுதான் தன் தேரஸ். 


தன்வந்தரி கையில் கலசத்துடன் வந்தார் அல்லவா? அதனால்தான் தன் தேரஸ் தினத்தில் ஏதேனும் ஒரு பாத்திரத்தை வாங்குவது நல்லது என்று நம்புகிறார்கள். பணம் கொழித்தவர்கள் தங்கம் வாங்குகிறார்கள். குறைவாக இருப்பவர்கள் வெள்ளியில் ஏதேனும் வாங்குகிறார்கள். அதுவும் இல்லாதவர்கள் ஏதேனும் ஒரு பாத்திரமேனும் வாங்குவார்கள். அதனால்தான் தன் தேரஸ் நாளில் கடைவீதிகளில் கடும் நெரிசல் இருக்கும்.

ஆக, தில்லி போன்ற வடபகுதிகளில் முதல் நாள் – அதாவது நேற்று – தன் தேரஸ் முடிந்தது. இன்று சின்ன தீபாவளி – அதாவது நரக சதுர்தசி. நாளைதான் தீபாவளி – லட்சுமியைப் போற்றுகிற நாள். லட்சுமியை எப்படி வேண்டுமானாலும் பெறலாம். எனவே இரவு முழுவதும் சூதாட்டமும் நடைபெறுவதுண்டு. அடுத்த நாள் – பட்வா -  கணவன்-மனைவி உறவைக் கொண்டாடும் நாள். தலை தீபாவளியும் இதுதான். கடைசியாக பாய் தூஜ், அல்லது பையா தூஜ் – சகோதரன்-சகோதரி உறவைக் கொண்டாடும் நாள். (ஆக, பெரும்பாலான அலுவலகங்களில் ஐந்து நாட்களிலும் வேலைகள் ஓடாது. குறிப்பாக பெண்கள் அலுவலகம் வரவே மாட்டார்கள்.)

*

தீபாவளியை ஒட்டி வீட்டுக்குப் பக்கத்தில் சிஆர்பிஎஃப் மேளா போட்டிருக்கிறார்கள் என்றாள் மகள். சிஆர்பிஎஃப் படையினரின் குடும்பத்தினர் சங்கங்கள் வழக்கமாக ஊறுகாய், அப்பளம் போன்ற பொருட்களை விற்கும் கடைகள் சிலவற்றை மேளா என்ற பெயரில் அமைப்பதுண்டு. சின்ன டென்ட் போட்டு, பத்து கடைகள் இருக்கும். அதனால் நான் வரவில்லை என்று கூறிவிட்டேன். எல்லாரும் போய் வந்தார்கள். வந்து சொன்னபிறகுதான் தெரிந்தது அது பெரிய மேளா என்று.


அடுத்தநாள் எல்லாருமாக மீண்டும் புறப்பட்டு விட்டோம். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பழைய வளாகத்தில் இவ்வளவு பெரிய மைதானம் இருப்பதே எனக்கு இப்போதுதான் தெரியும். ஒவ்வொரு கடையைப் பார்க்கும்போதும் சிஆர்பிஎஃப்-இல் இருக்கும்-இருந்த நண்பர்களின் நினைவு வந்துகொண்டே இருந்தது.


எல்லா மாநிலங்களிலுமிருந்தும் வந்த நூறு கடைகள் இருக்கலாம். உணவுக்கடைகள் தனி வரிசை. (அந்தப்பக்கம் போகவிடாமல் எல்லாரையும் மேய்த்துக்கொண்டு அப்படியே நகர்ந்துவிட்டேன் என்பதை சொல்லத் தேவையில்லை.) ஒருபக்கம் இசை நிகழ்ச்சி, மறுபக்கம் பொம்மலாட்டமும் நாட்டுப்புறக் கலைகளும், இன்னொரு பக்கம் பொய்க்கால் குதிரையும் மயிலாட்டமும், ஒருபக்கம் காபி அல்லது பாப்கார்ன் கடைகள், கேட்பவர்களை எதிரே உட்கார வைத்து உடனடியாகப் படம் வரைந்து தரும் ஓவியர் ஒருபக்கம், பின்பக்கம் இராட்டினங்கள்.... ஒரு திருவிழாவின் சகல அம்சங்களுடன் இருந்தது மேளா.

அலைமோதும் கூட்டத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் என்றாலும் உயர் வர்க்கத்தினரையும் நிறையவே காண முடிந்தது. இந்த மேளா மட்டும் இல்லாதிருந்தால் இவர்களில் பலர் மால்களுக்குச் சென்றிருக்க்க்கூடும்.


ஏகப்பட்ட பொருட்கள். வடகிழக்கு மாநிலக் கடைகளில் பிரம்பு நாற்காலிகள், கலைப்பொருட்கள் எல்லாம் அசத்தின. ஆந்திரத்தின் கடைகளில் உலோகச் சிலைகள். (விலைதான் அண்டவிடாமல் செய்து விட்டது.) கஷ்மீர் கடையில் சால்வைகள். பெங்களூர் கடையில் மரத்தால் செய்த கைவினைப் பொருட்கள். பஞ்சாப் கடையில் ஏகப்பட்ட விளையாட்டு சாதனங்கள் குறிப்பாக ஹாக்கி அல்லது கிரிக்கெட் மட்டைகள். ஹிமாச்சலக் கடையில் ஆப்பிள், கொய்யா, லிச்சி போன்ற பழ ரசங்கள். சென்னை கடையில் சங்கில் செய்த கைவினைப் பொருட்கள். கோவை கடையில் 2 லிட்டர் டேபிள்டாப் கிரைண்டர் 2200 ரூபாய். (சிஆர்பிஎஃப் கிரைண்டரும் தயாரிக்கிறதா என்ன...?!)


கடை கடையாக ஏறி இறங்கி, கட்டுபடியாகக்கூடிய சில பொருட்களை வாங்கி வந்தோம். ஆப்பிள், கொய்யா, லிச்சி பழச்சாறுகள். நெல்லிக்காய் கேண்டி... அடாடா, என்ன இனிப்பு! மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய். தேன். மரத்தில் செய்த சீப்பு. சங்கில் செய்த குங்குமச்சிமிழ். மரத்தில் செய்த குங்குமச்சிமிழ். சால்வை சைசில் இருந்த சத்தீஸ்கரின் ஈரிழைத்துண்டு. சின்னச்சின்ன மரத்துண்டுகளில் செய்த டைனோசர் பொம்மை. (ஒரு கடையில் நம்கீன் - மிக்சர் போன்ற ஏதோ உப்புப்போட்ட தீனி என்று நினைத்து, 5 ரூபாய்தானே என்று நான்கு பாக்கெட் வாங்கி வந்தால்.... லேசாக மசாலா தூவிய 50 கிராம் பொரிதான் இருந்தது. இந்த பல்பு வாங்கிய கதையை மட்டும் யாருக்கும் சொல்லி விடாதீர்கள் ! )


இப்படி ஏதேதோ அள்ளிக்கொண்டு வந்தோம். இவற்றில் எதுவுமே தேவை என்பதற்காக வாங்கியதல்ல. வாங்கியவற்றில் பெரும்பாலானவை குடிசைத் தொழிலில் அல்லது கூட்டுறவு முறையில் தயாரிக்கப்பட்டவை என்பதற்காக. கொடுத்த பணம் யாராவது ஒரு முதலாளிக்குப் போகப்போவதில்லை, யாரோ ஒரு தொழிலாளிக்குப் போகும் என்பதற்காக.

இதுவரை கண்டிராத வகையில் ஓர் அரிசி வகை. சாதாரணமாக நாம் வாங்கும் அரிசியில் கால்பங்கு நீளம்தான் இருக்கிறது. அவ்வளவு சன்னமான, அவ்வளவு சிறிய அரிசியை நான் இதுவரை பார்த்ததே இல்லை. விற்பனையாளர் சொன்ன பெயர் என்னவென்றே புரியவில்லை. கிலோ 70 ரூபாய். வடக்கே கீர் எனப்படும் பாயாசம் செய்வதற்கான அரிசியாம் அது. இந்த மகிழ்ச்சியான அனுபவத்தைக் கொண்டாட தீபாவளிக்கு பாயாசம் செய்யலாம் என்று உத்தேசம்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

சிக்கனமாய் கொண்டாடுங்கள்
சிறப்புறக் கொண்டாடுங்கள்.
*


3 comments:

  1. சுவாரஸ்யமான பதிவு ! தீபாவளிக்கான காரணங்கள் மாறுபட்டாலும் தீபாவளி பண்டிகையால் உண்டாகும் மகிழ்ச்சி ஒன்றுதான் !

    தீபாவளி நள்வாழ்த்துக்கள் !

    இந்த நன்னாளில் மனிதநேய வெளிச்சம் வையகமெங்கும் பரவட்டும் !

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : தேங்காய்க்குள்ள பாம் !

    http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post_15.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

    ReplyDelete
  2. எல்லா வருடமும் இங்கே செல்ல வேண்டும் என நினைத்துக் கொள்வதோடு சரி. அடுத்த வருடம் கண்டிப்பாக செல்ல வேண்டும்! :)

    ReplyDelete