Friday 23 September 2016

மின்சாரம் தூக்கி அடிக்குமா?

ராம்குமார் (தற்)கொலையைத் தொடர்ந்து பலருக்கும் இப்போது ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. கரன்ட் ஷாக் அடிச்சு அப்படியே தூக்கி எறிஞ்சிருச்சுஎன்கிறார்களே...? சில திரைப்படங்களில் மின்சாரம் தாக்கியவர் பறந்து போய் விழுகிறாரே? மின்சாரம் தாக்கினால் தூக்கி அடிக்குமா? மின்சார வயரை பல்லால் கடிக்கும்போது தூக்கி எறிந்திருக்காதா?

பள்ளிப்படிப்பு முடித்து சில காலம் எலக்டிரீசியனுக்கு ஹெல்பராக வேலை செய்த அனுபவத்திலிருந்து எனக்குத் தெரிந்ததை விளக்குகிறேன்.

சில காலத்துக்கு முன்னால் ஒரு வீடியோ இங்கே சுற்றிக்கொண்டிருந்தது. ஏதோவொரு ரயில் நிலையத்தில் ஒரு மின்சார ரயில் நின்றிருந்தது. பைத்தியக்காரன் ஒருவன் ரயிலின் கூரையில் ஏறி விட்டான். கிறுக்குத்தனமாக சிரித்துக்கொண்டே மேலே நடந்து போனவன், சட்டென்று மேலே இருந்த வயரைப் பிடித்தான். பிறகு கையை எடுக்க முடியவில்லை. முதலில் அவன் தலைமயிர் திகுதிகுவென எரிந்தது. ஓரிரு நொடிகளுக்குள் அப்படியே கருகி விழுந்து விட்டான். தூக்கி அடிக்க வேண்டும் என்றால் அவன் கீழே விழுந்திருக்க வேண்டும்.

அப்படியானால் தூக்கி அடிப்பதாகச் சொல்வது தவறா? ஆமாம். மின்சாரம் தூக்கி அடிக்காது. நாமே நம்மைத் தூக்கி அடித்துக் கொள்ளலாம். அதாவது, மின்சாரம் தாக்கும்போது ஏற்படும் ரிஃப்ளக்ஸ் ஆக்சனால் அதிர்ச்சியில் தூரப்போய் விழலாம்.

இங்கே தரப்படுகிற விளக்கத்தில் மின்சாரம் என்பது நாம் பொதுவாக வீடுகளில் பயன்படுத்தும் 220 வோல்ட் மின்சாரம் என்பதை கவனத்தில் கொள்ளவும். உயர் அழுத்த மின்சாரம் தாக்கினால் நொடியில் மரணம் நிகழும்.

எலக்டிரீசியன் வேலை செய்வதைப் பார்த்திருப்பீர்கள். ஒரு வயரில் மின்சாரம் வருகிறதா என்று பார்க்க வேண்டும். அவர் டெஸ்டர் கொண்டு வரவில்லை. அப்போது என்ன செய்வார்? விரலின் மேல் பகுதியால் - அதாவது, நகம் இருக்கும் பகுதியால் சட்டென்று தொட்டுப் பார்த்துவிட்டு எடுத்துக் கொள்கிறார். ஏன் என்றால், விரல் பின்பக்கமாக மடங்காது. ரிஃப்ளக்ஸ் ஆக்சனில் சட்டென விரலை மீட்டுக்கொள்ள முடியும்.

அதையே விரலின் உள்பக்கத்தால் உள்நோக்கி வளைக்கக்கூடிய மென்மையான பக்கத்தால் தொட்டுப் பார்த்தால், மின்சாரம் தாக்கும்போது, தசைகள் விரைவாக சுருங்கி விரியும்போது, சட்டென்று பிடித்துக்கொள்ளும். எனவேதான் மின்சாரத்தில் வேலை செய்பவர்கள் விரலின் பின்பக்கத்தால் - நகமிருக்கும் பக்கத்தால் தொட்டுப் பார்ப்பார்கள். அதுவும் கண நேரத்துக்கு மட்டுமே.



ஒரு படத்தின் மூலம் விளக்கியிருக்கிறேன். கறுப்பு வெள்ளையில் இருக்கும் படம், மின்சாரம் உள்ளதா என்று சோதிக்க சரியான முறை. (இது விளக்கத்துக்காகத்தானே தவிர, இதை யாரும் செய்து பார்த்துவிடக்கூடாது.) வண்ணப்படத்தில் இருப்பது தவறான முறை. அதுவும் இரண்டு விரல்களால் பிடிப்பது மிகவும் ஆபத்தான முறை.

வயரை வாயில் வைத்துக் கடிக்கும்போது மின்சாரம் பாய்ந்தால் என்னவாகும்? மின்தாக்குதலின்போது ஏற்படும் தசைச் சுருக்கம் காரணமாக வாய் இறுகிக் கொள்ளும். அதிர்ச்சியில் இருக்கும்போது, வாயைத் திறந்து வயரை அகற்றி மின்சாரத்தின் பிடியிலிருந்து விலக முடியாது. அதிலும், வாய் ஈரமாக இருக்கும் என்பதால் தப்ப முடியாது.

மின்சார இணைப்புகளில் முறையாக எர்த்திங் தரப்பட்டு, ELCB எனப்படும் Earth-leakage circuit breaker அமைப்பு பொருத்தப்பட்டிருந்தால் மட்டுமே யாருக்காவது மின்சாரம் தாக்கும்போது தானாகவே மின்இணைப்பு துண்டாகும். எல்லா வீடுகளிலும்/கட்டிடங்களிலும் ELCB இருக்காது.

எந்த வயராக இருந்தாலும், குறிப்பாக சில்க் வயர், காலப்போக்கில் இறுகி வலுவிழந்து விடும். சில இடங்களில் வெடிப்பும் இருக்கும். இன்னும் சில இடங்களில், கொஞ்சம் உருகி, உள்ளிருக்கும் உலோகக் கம்பி நீட்டிக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட வயர்களில் வேலை செய்யும்போது எச்சரிக்கை அவசியம்.


மின்தாக்குதல் எவ்வளவு நேரத்துக்கு நீடித்தது, தாக்கப்பட்ட மனிதன் மின்சாரத்துக்கும் பூமிக்கும் இடையே எர்த்திங் போல எந்த நிலையில் இருந்தான், அங்கே ஈரம் இருந்ததா போன்ற காரணிகளைப் பொறுத்து உயிரிழப்போ தீக்காயங்களோ ஏற்படும். 

2 comments:

  1. பயனுள்ள தகவல் அருமை . அதல்லாம் சரி ராம்குமார் எப்படி செத்தார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி ? அதுவும் ஜாமீன் கிடைக்கும் தருவாயில் யாரை காப்பாற்ற என்பதுதான் கேள்வி ? விடை( நீதி ) கிடைக்குமா ?

    M. செய்யது
    Dubai

    ReplyDelete
  2. ஆம்... மின்சாரம் தூக்கி அடிக்காது...
    எங்க அக்கா வீட்டுக் கம்பியை பிடித்தபோது அதன் மேல் இருந்த வயர் கட்டாகியிருந்ததால் மின்சாரம் தாக்கியது... அவரோ பிடித்த கையை விடாது சாமி ஆடுவதுபோல் ஆடினார்... பின்னர் மின்சாரம்தான் தாக்கியிருக்கிறது என அறிந்து சுவிட்ச் ஆப் செய்து அவரை விடுவித்தோம்...

    ஒருமுறை சித்தப்பா துணிகாயப் போடும் கம்பியில் ஈரத்துணி போட மின்சாரம் தாக்கி கத்தினார்... அப்போது அருகே இருந்த மற்றொரு சித்தப்பா அருகில் கிடந்த கட்டையை எடுத்து அவர் காலில் அடித்தார்... (என்ன கோபமோ?) ஆனால் சித்தப்பா உடனே கீழே விழுந்துவிட்டார்....

    ReplyDelete