Friday, 28 August 2015

மகாத்மா காந்தியின் சிந்தனைகள்




காந்தி மகான், அரசின் வலுமிக்க சக்திக்கு எதிராக அகிம்சை மற்றும் சத்தியத்தின் தூய வலுவை நிறுத்தி வைத்தார்; வெற்றியும் கண்டார். அவர் சொல்லிலும் செயலிலும் கடைப்பிடித்த அகிம்சை, சத்தியம் ஆகியவை ஒன்றும் புதியவையல்ல. மலைகள் எந்த அளவுக்குப் பழமையானவையோ அந்த அளவுக்கு இவையும் பழமையானவை என்கிறார் அவர். அவர் செய்ததெல்லாம் அந்தத் தத்துவத்துக்குப் புதுவாழ்வு கொடுத்ததும் அதனைப் புதுத் தளத்தில் பயன்படுத்தியதும்தான்.

சத்தியம், அகிம்சை, சத்தியாக்கிரகம், அன்பு, கடவுள் பக்தி, உடைமையின்மை, சுதந்திரம், உண்ணாநோன்பு, பிரார்த்னை, பிரும்மச்சரியம், உழைப்பு, இயந்திரம், கல்வி, பெண்ணுரிமை என வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் குறித்து காந்தியின் சிந்தனைகள் எவ்வாறு இருந்தன என்பதை இந்நூல் காட்டுகிறது.

இந்த நூலில் மகாத்மா தமது சொந்தச் சொற்களிலேயே பேசுகிறார். அவருக்கும் வாசகருக்கும் இடையே எடுத்துச் சொல்லுவார் யாரும் இல்லை; எவரும் தேவையும் இல்லை. இந்நூலின் அச்சுப் பிரதிகளை காந்தியே பார்வையிட்டிருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு. காந்தியையும் அவரது சிந்தனைகளையும் அறிந்தோர் இன்னும் சிறப்பாக அவரைப் புரிந்து கொள்ளவும், அறியாதோர் எளிதாக அறியும் வகையிலும் அமைந்துள்ள இந்த நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் புதுவரவு.

*

எனது எழுத்துகளைக் கவனமுடன் பயில்வோருக்கும் அவற்றில் அக்கறை காட்டும் மற்றவருக்கும் நான் சொல்ல விரும்புவது இதுவே: எனது சிந்தனை முரணற்று இருக்கவேண்டும் என்பது பற்றி நான் கவலைப்படவேயில்லை. சத்தியத்தை நாடும் எனது முயற்சியில் நான் எத்தனையோ கருத்துக்களை கைவிட்டு விட்டேன்; புதியன பலவற்றைக் கற்றிருக்கிறேன். வயதில் முதியவனாகி விட்டதால் என் மனத்தின் வளர்ச்சி நின்றுவிட்டதாகவோ, எனது வளர்ச்சியானது தசைகளின் தளர்ச்சியினால் நின்றுவிடும் என்றோ நான் நினைக்க வில்லை. எனது அக்கறையெல்லாம், கணத்துக்குக் கணம் நான் கடவுளென நம்பும் சத்தியத்துக்கு நான் கீழ்ப்படியத் தயாராக இருக்கவேண்டும் என்பதுவே. எனவே எனது இரண்டு படைப்பு களில் முன்னுக்குப்பின் முரண்பாடு தெரிந்தால், வாசகர்களுக்கு எனது மதியின் தெளிவில் இன்னும் நம்பிக்கை இருப்பின், இரண்டு கருத்துக்களில் காலத்தால் பிற்பட்டதையே அவர்கள் ஏற்றுக் கொளல் நலம்.
- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

*

இதற்கு முன்னர் நான் பேஸ்புக்கில் பல பதிவுகளில் இந்நூலைப் பற்றி எழுதியிருக்கிறேன். The Mind of Mahatma என்ற தலைப்பில் நவஜீவன் டிரஸ்ட் வெளியிட்டுள்ள ஆங்கில நூலின் தமிழாக்கம் இது.
நான் புத்தக வடிவமைப்புத் தொழில் துவங்கியபோது செப்பனிடும் வேலை துவங்கியது. பலமுறை திருத்தியும் பிழைபார்த்தும் நூலாக வெளிவர 17 ஆண்டுகள் ஆகிவிட்டன.
தமிழாக்கம் தம்பி சீனிவாசன், வேங்கடராமன், கண்ணையன் தட்சிணாமூர்த்தி.
என் நண்பர் நாக. வேணுகோபாலன் அவர்களுக்கும் இதை செம்மைப்படுத்தியதில் பெரும் பங்குண்டு.

வெளியீடு - நேஷனல் புக் டிரஸ்ட், 978-81-237-7627-9, ரூ. 460

Wednesday, 15 July 2015

காமராஜர்



இன்று காமராஜர் பிறந்த தினம். தேர்தல் நேரத்தில், “ஆட்சியிலிருந்தப்ப செஞ்ச நம்ம சாதனைகளைச் சொல்ல வேணாமாஎன்று கேட்டபோது, “அதை எதுக்குச் சொல்லணும்கிறேன், மக்களுக்குத் தெரியாதா?” என்று கேட்ட பெருந்தகை. அவரையே தோற்கடித்தவர்களின் வாரிசுகள்தான் நாம்.

கடந்தமாதம் தமிழகப் பயணத்தின்போது, திமுக அமைச்சராக இருந்த சாதிக் பாட்சா அவர்களின் வீட்டுக்குப் போனேன். பக்கத்தில்தான் இருந்தது காமராஜர் நினைவகம். (சென்னை தி.நகரில், திருமலைப்பிள்ளை சாலையில் அமைந்துள்ளது.) சென்னையில் வசித்த காலத்தில் பார்க்காமல் தவறவிட்டதை அன்று பார்த்தேன். நாங்கள் போய் சுற்றிப்பார்த்த ஒரு மணிநேரத்தில் யாருமே வரவில்லை. ஒரே ஒரு பெண் காவலர் மட்டும் வாயிலில் இருந்தார். யாரோ ஒருவர் நிர்வாகியாக இருக்கலாம் - உள்ளறையில் லேப்டாப்பில் மூழ்கியிருந்தார்.

புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்று சொல்லக்கேட்க வியப்பாக இருந்தது. ஆனானப்பட்ட அருங்காட்சியகங்களில் புகைப்படம் எடுக்க அனுமதி இருக்கும்போது எளிய மனிதர் காமராஜரின் நினைவகத்தில் புகைப்படம் எடுப்பதால் என்ன பாதிப்பு வந்து விடும் என்று தெரியவில்லை. (அதுக்காக நாம விட்டுடப் போறோமா என்ன...)

ஓர் அறையில் முழுக்க புத்தகங்கள். உள்ளே அனுமதி இல்லை. கதவு வழியாகப் பார்க்க மட்டுமே முடியும். சுவர் முழுக்கப் புகைப்படங்கள் வரலாற்றுப் பதிவுகள். மாடி உள்பட இதர அறைகளில் காமராசர் பயன்படுத்திய பொருட்கள், அவருக்குப் பரிசாகக் கிடைத்த பொருட்கள். அவர் பேனாவே வைத்துக்கொள்ள மாட்டார் என்று எங்கோ படித்தேன். ஆனால் எத்தனை பேனாக்கள்... பேனா சேகரிப்பது அவருடைய பொழுதுபோக்காக இருந்திருக்கலாம்.

குறிப்பாகச் சொல்ல வேண்டியது அவருடைய ஆடைகளை, ஆடைகள் வைத்திருந்த சாதாரண பெட்டியை, படுக்கையை, நாற்காலிகளை. படத்தில் இருக்கின்றன. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். வாய்ப்புக் கிடைக்கும்போது போய்ப் பாருங்கள். இப்படியொரு எளிமையான தலைவரும் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார் என்று புரிந்து கொள்ளவாவது முடியும்.

* * *

கர்மவீரர் காமராசர்
 (விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் நூலில் இடம்பெற்ற கட்டுரை)

தாமாகவே பதவியைத் தத்தம் செய்துவிட்டு மக்கள் பணிக்காகத் தம்மை அர்ப்பணித்தவரும் உண்டு என்னும் கடந்த கால நிதர்சனம் காமராசரைப் பற்றி நினைக்கும்போது தோன்றுகிறது. தனக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்காமல், அதிகாரத்தில் இருந்தவரையில் தாயையும் தங்கை வீட்டாரையும் அண்டவிடாமல் ஒதுக்கி வைத்த தலைவர்கள் வாழ்ந்த விவரம் மங்கலாக நினைவுக்கு வருகிறது. முதலமைச்சர் பதவிக்குத் தம்மை எதிர்த்துப் போட்டியிட்டவரையே நிதி அமைச்சராக்கிய தலைவர்கள் வாழ்ந்தது தூசுபடிந்த வரலாற்று நூல்களில் அடங்கிக் கிடக்கிறது. இன்று இருந்திருந்தால் அந்த மனிதருக்கு நூறு வயதாகியிருக்கும்.

காமராசர் என்ற தேசத்தொண்டர், காமராசர் என்ற நிர்வாகி, காமராசர் என்ற அரசியல் ஞானி, காமராசர் என்ற பண்பாளர் இன்றைய சூழலில் நினைவுகூரப்பட வேண்டிய ஒருவர். சர்வ வல்லமை கொண்ட தலைவராக அவர் திணிக்கப்படவில்லை. சாதாரணத் தொண்டனாகப் பொதுவாழ்வைத் தொடங்கிய அவருக்கு தலைமைப்பதவி தேடி வந்தடைந்தது.

ரௌலட் சட்ட எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், உப்புச் சத்தியாக்கிரகம், யுத்த எதிர்ப்பு, வெள்ளையனே வெளியேறு போராட்டம் என அவர் பங்கேற்ற போராட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். வேலூர், அலிப்பூர், அமராவதி என்று பல சிறைகளை அலங்கரித்தவர். மூவாயிரம் நாட்கள் வெஞ்சிறையில் வாடியவர். சிறையில் இருந்தவாறே தேர்தல்களில் போட்டியிட்டு வென்றவர் காமராசர்.

பதினான்கு ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தபின், 13-4-1954 அன்று தமிழக முதல்வர் ஆனார். 2-10-1963இல் தாமாகவே பதவியைத் துறந்து கட்சிப் பணிக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தார். இப்போதெல்லாம் தேர்தல் வருவதற்கு வெகுநாட்கள் முன்பே சாதனைப் பட்டியல்கள் போட்டு விளம்பரப்படுத்திக் கொள்வதையும், “எதுக்கு சொல்லணும்னேன்? ஜனங்களுக்குத் தெரியாதா?” என்று காமராசர் கூறியதையும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது.

நேர்மையும் திறமையும் மட்டுமில்லை, எளிமையும் அவரது தனிப்பண்பு. தமிழகத்தில் புதிய இருப்புப் பாதைத் திட்டமொன்றை நிறைவேற்றுவது தொடர்பான கூட்டம் நடந்தது. மத்திய அரசு அதிகாரி ஒருவர் விரிவாக ஆங்கிலத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அந்த அதிகாரி, தமிழ்நாட்டவர், திடீரென தயக்கத்தோடு பேச்சை நிறுத்தினார். பெருந்தலைவர் தமக்கே உரிய தனிப்பண்போடு, “ஏன் நிறுத்திட்டீங்க...? எனக்குப் புரியுமோ புரியாதோன்னு பாக்கறீங்களா? எனக்குப் புரியாட்டா நான் கேட்டுப் புரிஞ்சுக்கிறேன். உங்களுக்கு எப்படி சௌகரியப்படுமோ அதிலேயே பேசுங்கஎன்று ஊக்குவித்தார்.

பதவியில் இருந்தபோதும், பதவியைத் துறந்தபின்பும், 1971இல் தேர்தலில் தோற்றபின்பும், எந்தச் சிற்றூருக்குச் சென்றாலும் அவர் கேட்ட கேள்வி - இந்த ஊரில் பள்ளிக்கூடம் இருக்கிறதா? பிள்ளைகள் எல்லாம் படிக்கிறார்களா?” அவருடைய சொந்த வாழ்க்கையையும் பொது வாழ்க்கையையும் பிரித்துப்பார்க்க முடியாது.

1903 ஜூலை 3ஆம் நாள், விருதுப்பட்டி - இன்றைய விருதுநகர் - நகரில் குமாரசாமி-சிவகாமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் காமாட்சி. 1919 ஏப்ரலில் ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரஸ் இயக்கத்தின் முழுநேர ஊழியர் ஆனார். 1930 வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றார், அலிப்பூர் சிறையில் 2 ஆண்டுகள் கழித்தார். 1933 வட்டமேஜை மாநாடு தோல்வி கண்டதால் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். காமராசருக்கு ஓராண்டு சிறை. 1937 தேர்தலில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1941 யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்துக்காக கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்துகொண்டே விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு பெற்றார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார், இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை, அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார்.

விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் தலைவராக, முதல்வராக, நாடாளுமன்ற உறுப்பினராக, பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் காங்கிரஸ் தலைவராக பல்வேறு பொறுப்புகளில் இருந்த காமராசர்தான் இந்திய அரசியலில் கிங் மேக்கர் என்று மதிக்கப்படுபவர். 1975ஆம் ஆண்டு, காந்தி பிறந்த அக்டோபர் 2ஆம் நாள் உயிர்நீத்தார்.

கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலுக்கு எழுதிய வரிகள் காமராசரை மனதில் கொண்டு எழுதப்பட்டவை. இதைவிட வேறென்ன எழுதிவிட முடியும்... -
கல்யாண சுகமுமில்லை கடமைக்கு முடிவுமில்லை
என்னவோ நீ பிறந்தாய் எல்லார்க்கும் வாழ்வு தர.

காமராசர் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் நிறையவே உண்டு. ஆனால் விடுதலைப்போராட்ட காலத்தில் அவர் சிறைப்பட்ட செய்திகள் அதிகம் இல்லை. சீடன் தலைவராகவும், ஆசான் செயலராகவும் இருந்தது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மட்டும்தான் நிகழ்ந்திருக்க முடியும். ஆம், 1940இல் காமராசர் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் ஆனார், அவருக்குக் கீழே மகிழ்ச்சியுடன் செயலர் ஆனார் சத்தியமூர்த்தி.

* * *
காமராசர்-ஓர் ஆய்வு
நேஷனல் புக் டிரஸ் வெளியீடு
எழுதியவர் - வி.கே. நரசிம்மன். பின்னுரை - வி.என். நாராயணன்
தமிழாக்கம் - நாக. வேணுகோபாலன்

ஐஎஸ்பிஎன் - 978-81-237-7101-4 , ரூ.230
 காமாட்சி என்னும் இயற்பெயர் கொண்ட காமராஜர், இந்திய அரசியலில் ஒரு சகாப்தம். கர்மவீரர், தென்னாட்டு காந்தி என பலவாறாக அழைக்கப்பட்ட இந்த மாமனிதர் மக்கள் தலைவர் என்பதன் உண்மையான உதாரணமாகத் திகழ்ந்தவர். விடுதலைப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து, கடைசிமூச்சு வரை மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டிருந்த ஒப்பற்ற தலைவர். நேரு மறைவுக்குப் பிந்தைய நெருக்கடியான காலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று, நாடு எதிர்நோக்கியிருந்த பல சிக்கல்களைத் தீர்த்துவைத்தவர். அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்த காலத்தில் கல்வி, தொழில்துறை, வேளாண்மை என பலதுறைகளிலும் தமிழ்நாடு அபார முன்னேற்றம் கண்டது.


- நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீட்டில் வந்துள்ள காமராஜர் நூலின் பின்னட்டை

Wednesday, 10 June 2015

கல்விச்சாலைகளும் காசுச்சாலைகளும்

நேற்று காலை வாசலில் வந்து விழுந்த நாளிதழின் உள்ளே இருந்தது ஏ-4 அளவில் ஒரு துண்டறிக்கை, அதாவது நோட்டீஸ். இவற்றை உடனே தூக்கி எறிந்துவிடுவதே எனக்கு வழக்கம் என்றாலும், ஏனோ தெரியவில்லை, அதை ஓரமாகப் போட்டு வைத்தேன். மாலையில் அதன் நினைவு வரவே, தேடி எடுத்து திருப்பிப் பார்த்தேன். ஒரு பக்கம் ஒரு பள்ளியின் விளம்பரம், மற்றொரு பக்கம் ஒரு டியூஷன் சென்டரின் விளம்பரம். இரண்டையும் நடத்துபவர் ஒரே ஆளாக இருக்கலாம். இருக்கட்டும். விஷயம் அதுவல்ல.

ஆங்கில வழிக் கல்வி வழங்குவதாகச் சொல்லிக்கொண்ட அந்தத் தனியார் பள்ளியின் விளம்பரத்தில் இருந்த ஆங்கிலத்தின் தரம் சொல்லத் தரமன்று. இவற்றுக்கெல்லாம் எப்படி அங்கீகாரம் கிடைக்கிறது, ஒரு துண்டறிக்கையைக்கூட பிழைகளின்றி தயாரிக்கத் தெரியாத ஒரு நிறுவனம் என்ன கற்றுக் கொடுத்துவிட முடியும் என்று வியப்பாக அல்ல, அதிர்ச்சியாக இருந்தது. ப்ரீ-கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை எல்லா பாடங்களுக்கும் சிறந்த முறையில் டியூஷன் வகுப்புகள் என்று பறைசாற்றிய அந்த சுற்றறிக்கையின் தலைப்பு - ............. TUTON CENTRE. என் மனதுக்குள் எழுந்த திட்டுகள் இங்கே எழுதத் தரமற்றவை.

இப்படி இருந்தாலும் இத்தகைய பள்ளிகள்தான் ஊருக்கு ஊர் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. கிராமம், நகரம் என்ற வித்தியாசமின்றி பெற்றோர் இத்தகைய பள்ளிகளில் தம் குழந்தைகளைச் சேர்க்கத் துடிக்கிறார்கள். விளக்கில் விட்டில் பூச்சிகளைப்போலப் போய் விழுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் குழந்தைகளே இல்லாமல் மூட வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அரசுப் பள்ளிகளில் தரம் இல்லையா... ஆரம்பப் பள்ளிகள் அவ்வளவு மோசமாகவா இருக்கின்றன... நேரில் பார்த்தறிய வாய்ப்புக் கிடைத்தது நேற்று.

நேற்று ஒரு கிராமத்தின் ஆரம்பப் பள்ளிக்குச் சென்றேன். அந்தப் பள்ளியில் இப்போது இருப்பது ஆறு மாணவர்கள் மட்டுமே. மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டதால், ஆசிரியர் எண்ணிக்கையும் இரண்டிலிருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டு விட்டது. ஒரு டீக்கடைகூட இல்லாத அந்தக் கிராமத்தை அடைய பேருந்து வசதி கிடையாது. இரண்டு கிலோமீட்டர் நடந்தாக வேண்டும். இப்போது அதில் ஆசிரியராக இருப்பவர் தினமும் நடந்து போய் நடந்து திரும்புகிறார். ஆனால் அந்த கிராமத்தின் பெற்றோர்களோ, தம் குழந்தைகளை எப்படியாவது பக்கத்தூரின் ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்பதை என்னவென்று சொல்வது...

பள்ளியில் எல்லாம் இலவசம். புத்தகங்கள், நோட்டுகள், பென்சில், செருப்பு, புத்தகப் பை, மதிய உணவு என எல்லாமே இலவசம். இவற்றில் சில குறைகளும் ஊழலும் இருக்கலாம் என்றாலும் தரமற்றது என்றுகூட சொல்ல முடியவில்லை. பள்ளியின் கல்விமுறையும், கல்விச் சாதனங்களும்கூட சிறப்பாகவே இருக்கின்றன. இதை வாசிப்பவர்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளியின் கல்விமுறையை பார்த்திருக்க மாட்டார்கள் என்பதால் சில படங்களைக் காட்டுவது அவசியமாகிறது.


கம்பியில் கட்டிவிடப்பட்ட தோரணம்போல காட்சி தருகிறதே, அதன் பெயர் கம்பிப் பந்தல். குழந்தைகள் தமது கையால் வரைந்தவை. சூரியக் குடும்பம், தாவர வளர்ச்சி, பாடம் தொடர்பான கருத்து வரைபடம், படம் வரைந்து வண்ணம் தீட்டுதல் என பலவகையான படங்கள் மாணவர்களால் வரையப்பட்டு அதில் தோரணமாகத் தொங்க விடப்படுகின்றன. பாடத்தைப் படித்து முடித்த மாணவர்களின் புரிதல் அதில் வெளிப்படுகிறது. படங்கள் நன்றாகவே இருந்தன, படத்துக்கான குறிப்புகளும் தெளிவாகவே இருந்தன. இத்தனைக்கும் பெஞ்ச்சுகளோ, டெஸ்க்குகளோ இல்லாதவர்கள் அவர்கள்.


ஏணிப்படிகள் என்று சில வரைபடங்கள் இருக்கின்றன. அதில் சின்னச் சின்னதாக சில படங்கள் அல்லது குறிகள் இருக்கும். மற்றொரு பக்கத்தில் சுமார் நூறு பிளாஸ்டிக் டிரேக்கள் இருக்கின்றன. ஏணிப்படிகளின் வரைபடங்களில் என்ன குறிகள் அல்லது படங்கள் உண்டோ, அதே படங்கள் டிரேக்களில் ஒட்டி வைக்கப்பட்டிருக்கும். அந்த டிரேக்களில் வாசிப்பு அட்டைகள் அல்லது செயல்பாட்டுக் குறிப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி ஏணிப்படிகள்.


குறிப்பிட்ட ஒரு படம் அல்லது குறியீட்டுக்கு நிகரான தட்டிலிருந்து அட்டையை எடுத்து, அதில் சொல்லப்பட்டிருப்பதை செய்து முடித்துவிட்டு ஏணியில் ஏறலாம். பிறகு அடுத்த அட்டை. வாசிப்பு அட்டைகள் அல்லது செயல்பாட்டு அட்டைகளும் தரமாக, குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணங்களில் அச்சிடப்பட்டு, லேமினேட் செய்யப்பட்டிருப்பதால் கையாளும்போது சேதம் அடைவதில்லை.


காலநிலை நாள்காட்டி என்று ஒரு நாள்காட்டி. தினமும் காலை, நண்பகல், மாலை என மூன்று நேரமும் வானிலை எப்படி இருக்கிறது என்பதை குழந்தைகளே குறித்து வைக்க வேண்டும். மாத இறுதியில் மொத்த மாதத்தின் காலநிலை எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்று அவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

குழந்தைகள் சுத்தமும் சுகாதாரமுமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆரோக்கியச் சக்கரம் என்றொரு சக்கரம். ஏதேனுமொரு குழந்தையிடம் குறையிருந்தால், மற்றவர்களுக்குத் தெரியாமல் அவர்களுக்கு மட்டுமே தெரியும்படி சுட்டிக்காட்ட உதவுகிறது. தினமும் பத்து ஆங்கிலச் சொற்கள், அவற்றின் தமிழாக்கத்துடன் கற்பிக்கப்படுகிறது.



ஆரம்பப் பள்ளியின் இந்தச் சிறுவர்கள், அதே பள்ளியில் படித்த மூத்த மாணவர்களின் துணையுடன் அறிவியல் மாடல்களை உருவாக்கியிருந்தது வியப்பை அளித்தது. மோட்டார் பொருத்திய சிறிய காற்றாலை, எல்ஈடி விளக்குகள் அமைத்த ஒரு கோயில் வளாகம். பாவம், பேட்டரிகள்தான் இருக்கவில்லை. என்னுடைய கேமராவில் இருந்த பேட்டரியைக் கழற்றி அதில்போட்டு இயக்கிப் பார்க்க வேண்டியிருந்தது. அதனால் படம் தெளிவில்லை.

அவர்களுடைய நோட்டுப்புத்தகத்திலிருந்தும் புத்தகத்திலிருந்தும் சில கேள்விகளைக் கேட்டேன். கையெழுத்துகளைப் பார்த்தேன். பள்ளி நேரம் முடிந்து விட்டிருந்ததால், மூன்று பேர் மட்டுமே இருந்தனர். மூன்று பேரில் இருவரின் கையெழுத்துகள் அபாரம், ஒருவனின் கையெழுத்து சிறப்பாக இல்லை என்றாலும் மோசமில்லை.


பள்ளியைவிட்டுப் புறப்படும்போது, இங்கே படித்து முடித்து வேறொரு ஊரில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவன் நடந்து வந்து கொண்டிருந்தான். அது ஐந்து மைல் தூரம் தள்ளியிருக்கும் உயர்நிலைப்பள்ளி. மூன்று கிலோமீட்டர் வரை பஸ்சில் வந்து, இரண்டு மைல் நடந்து வந்தவன். டேய் கவுதம், இங்கே வாடா என்றதும் என்னங் டீச்சர் என்று பக்கத்தில் வந்து கைகட்டி நின்றவனின் பேன்ட் கணுக்காலுக்கு மேலேயே முடிந்து விட்டிருந்தது. சட்டையில் இரண்டு பொத்தான்களின் இடத்தில் பின்னூசிகள் குத்தப்பட்டிருந்தன. கால்களில் செருப்பு இருக்கவில்லை. அந்த நேரத்தில் என்னால் முடிந்தது, அவன் மறுக்க மறுக்க அவனுக்கு 200 ரூபாய் கொடுத்து செருப்பு வாங்கிக்கொள்ளச் சொன்னதுதான்.

ஏதோ ஒரு கிராமத்தைக் கடக்கும்போது, தார்ப்பாய்ச்சி வேட்டியும் புடவையும் கட்டியவர்களாக, தலையில் மூட்டை முடிச்சுகளை சுமந்து கொண்டு ஒரு கூட்டம் நடந்து போய்க்கொண்டிருந்தது. பார்த்ததுமே அவர்கள் வடமாநிலத்தவர்கள் என்று தெரிந்தது. திருப்பூர் கம்பெனிக்காரர்கள் இப்போதெல்லாம் நகருக்கு வெளியே கிராமங்களில் சின்ன கம்பெனிகளை அமைத்து, இவர்களுக்கு வேலை தருகிறார்கள். இவர்களுடைய குழந்தைகள் படிப்பதற்கான வாய்ப்பே இல்லை. நாங்கள் சென்ற கிராமத்தில் இதுபோல 12 குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களை பள்ளியில் சேர்க்க முயற்சி செய்வதாகவும் சொன்னார் அந்த ஆசிரியர். தமிழ் தெரியாத அவர்களை எந்தப்பிரிவின்கீழ் சேர்ப்பது என்பதில் சில சிக்கல்கள் இருந்தாலும் சேர்ப்பதில் உறுதியாக இருந்தார் அவர். மகிழ்ச்சியாக இருந்தது.

திரும்பி வரும்போது, தான் இதற்கு முன் வேலை செய்த பள்ளிக் குழந்தைகளுக்கு வாலிபால் வாங்கிக் கொடுங்களேன் என்றார் ஆசிரியர். வாலிபால் என்ன, வேறு ஏதாவது விளையாட்டு சாதனங்களும் வாங்கினால் போயிற்று என்றேன். என் தாராள குணத்தைக் காட்டுவதற்காக இதைக் கூறவில்லை. இப்போது வேலைசெய்கிற பள்ளியின்மீது மட்டுமல்ல, முன்னர் வேலை செய்த பள்ளியின் மாணவர்கள் மீதும் அக்கறை காட்டக்கூடிய ஆசிரியர்களை அரசுப் பள்ளிகளில் மட்டுமே பார்க்க முடியும் என்று காட்டுவதற்காக.

இந்தப் பதிவைப் படித்த பிறகு, குருட்டுத்தனமாக ஆட்டுமந்தைகள் போல தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்ல இருக்கும் ஒருவர் தன் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதாக முடிவு செய்தால், அது இந்தப் பதிவுக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் நினைப்பேன்.



பி.கு. – உறுதியளித்தபடி, இன்று ஒரு வாலிபால், ஒரு ஃபுட்பால், இரண்டு ரிங்குகள் வாங்கிக் கொடுத்து விட்டேன்.