Saturday 7 May 2016

கதம்பம் - தேர்தல் நேரக் கிறுக்கல்கள்

அம்மா அறிக்கை
தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் கண்மூடித்தனமாக அறிவிக்கப்படக்கூடாது.
தேர்தல் வாக்குறுதிகளின் பின்னால் இருக்கும் நியாயத்தையும், அவற்றை நிறைவேற்றுவதற்கான நிதித் தேவைகளை எவ்வாறு நிறைவு செய்வார்கள் என்பதையும் தேர்தல் அறிக்கை கூற வேண்டும். சாத்தியமுள்ள, நிறைவேற்றப்படக்கூடிய வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.என்று தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தெளிவாகக் கூறுகின்றன.

இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், இலவச வைஃபை, இலவச செல்போன், 100 யூனிட் மின்சாரம் இலவசம், ஸ்கூட்டருக்கு மானியம், இலவச ஆடுகள், இலவச மாடுகள், 500 ரூபாய்க்கு இலவச கைத்தறி ஆடைகள், இலவச செட்டாப் பாக்ஸ்....

நிதிநிலைமை குறித்த எந்தக் கவலையுமின்றி அடித்து விட்டிருக்கிற அம்மா தேர்தல் அறிக்கை, அவர் எந்த அளவுக்கு மக்களை முட்டாளாகக் கருதுகிறார், காலம் காலமாக முட்டாள்களாகவே வைத்திருக்க முடியும் என்று நம்புகிறார் என்பதையே காட்டுகிறது. அதிமுகவை வீழ்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
(தேர்தல் நடத்தை நெறிமுறைகள் முழுதும் நாளை பதிவாக வெளிவரும்)
*
ஒரு சந்தேகம்
அம்மா என்றழைக்காத உயிரில்லையே...
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே...
காட்சிதந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா...
அம்மா... நீ சுமந்த பிள்ளை...
அம்மா என்றால் அன்பு...
அம்மாவும் நீயே...
ஆசைப் பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா...
போன்ற பாடல்களை மட்டுமே அம்மா போனில் ரிங்டோனாகவும் காலர் டியூனாகவும் வைக்கும் வகையில் செட்டிங் செய்தே தரப்படுமோ?
*
முழியாக்கம்

Sponsored என்ற சொல்லுக்கு தமிழில் என்ன தெரியுமா?
கருணாநிதி என்கிறது கூகுள். நீங்களே பாருங்களேன்!


 *
இலவசங்களை நம்பி வாக்களிப்பவர்கள் இந்த வீடியோவைப் பாருங்கள்...
இந்த அடி உங்கள் தலையில்தான் விழுகிறது என்று அர்த்தம்.
*
யாருக்கு வாக்களிக்கலாம்?

வெற்றி பெறுகிற கட்சிக்கே வாக்களிக்க வேண்டும், என்பதான சிந்தனை பொதுவாக நிலவுகிறது. இதுவே தேர்தல் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கிறது. இது, அவசியமில்லாதது மட்டுமல்ல. தவறானதும் கூட.

பெரும்பாலோர் நாட்டின் முன்னேற்றத்தில் நம்பிக்கையின்றி இருந்த போதிலும், நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்பதன் வெளிப்பாடுதான் ஜெயிப்பது பற்றி அலட்டிக் கொள்ளாமல் நேர்மையான கொள்கைக்கு நமது வாக்கினைச் செலுத்துவது.

தனிப் பெரும்பான்மை பெற்ற அரசின் சர்வாதிகாரத்தால் மக்களுக்கு நிகழும் கொடுமை கூடுதலாயும், தொங்கு நாடாளுமன்றம் / சட்டமன்றம் ஏற்படுவதால் மக்களுக்கு நிகழும் கொடுமை குறைவானதாகவும் இருக்கும் என்பதையே இந்திய மக்களாட்சி வரலாறு நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

எனவே, "எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போய்விடுமே" - என்று கவலைப் பட்டால் அது கட்சி அபிமானக் கவலையே தவிர, மக்களைப் பற்றிய கவலை அல்ல. உங்கள் மனதிற்கு நேர்மையாய் படும் மக்கள் பிரதிநிதிக்கு மட்டுமே உங்கள் வாக்கினைத் தாருங்கள்.


சட்ட மன்றத்தில் விளிம்பு நிலை மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் சிறிய கட்சி இருந்தால் அவற்றுக்கு வாக்களிக்கலாம்.

1 comment:

  1. Please read Subavees views. I accept his views..
    நல்லவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை யார்தான் மறுப்பார்கள்? ஆனாலும் நல்லவர் யார் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது, தனி ஒரு நல்லவர் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்று என்ன செய்ய முடியும் என்று இரண்டு வினாக்கள் நம் முன் உள்ளன.

    நல்லவர் என்றால் யார் என்று எளிதில் வரையறை செய்து விட முடியாது.அது ஒரு பொத்தாம் பொதுவான சொல். ஒருவருக்கு நல்லவராக இருப்பவர், இன்னொருவருக்குக் கெட்டவராக இருப்பார். நாம் வாழும் காலமோ அவதூறுகள் நிறைந்த காலம். சொல்லப்படும் குற்றச்சாற்றுகளில் உண்மைகளும், பொய்களும் கலந்தே கிடக்கின்றன. உண்மை அறியும் குழுவை நியமித்து, நல்லவரைக் கண்டறிவதற்குள் தேர்தல் முடிந்துபோய் விடவும் வாய்ப்பு உள்ளது.

    இதனை விட முதன்மையானது எதுவெனில், சட்டமன்றம் போன்ற அமைப்புகளில் 'ஒரு நல்லவர்' என்ன செய்து விட முடியும் என்பதுதான். உள்ளாட்சித் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு. உள்ளாட்சித் தேர்தலில், கட்சி பேதம் பார்க்காமல், ஊருக்கு உழைப்பவரை நாம் தேர்ந்தெடுக்கலாம். அங்கு கட்சிகளுக்கு வேலையில்லை.

    ஆனால் சட்ட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவை சட்டங்களை உருவாக்கும் அமைப்புகள் (Constitution making bodies). அங்கே கட்சிகள்தாம் எதனையும் தீர்மானிக்கும் உரிமை உடையவை. தனி மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்குச் செயல்பட முடியாது. கட்சி கட்டளைகளை (Whip) மட்டும்தான் அவர்கள் நிறைவேற்ற முடியும். அப்படிச் செய்கின்றனரா என்று கவனிப்பதற்குத்தான் கொரடா என்று ஒருவரை ஒவ்வொரு கட்சியும் நியமிக்கிறது. கட்சிக் கட்டளையை மீறினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

    தங்களுக்கு விருப்பம் இல்லாத ஒரு தீர்மானத்தையும், கட்சி கட்டளையிட்டால் அவர்கள் நிறைவேற்றியே தீர வேண்டும். தாங்கள் விரும்பும் தீர்மானத்திற்கு எதிராகவும், கட்சியின் ஆணைப்படி வாக்களிக்கவும் நேரும். எனவே, சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆட்களைப் பார்த்து வாக்களிக்கக் கூடாது. கட்சியைப் பார்த்தே வாக்களிக்க வேண்டும்.

    ReplyDelete