Tuesday 28 February 2012

உலகப் புத்தகக் கண்காட்சி - 27-2-12

நேற்று இரவு சீக்கிரமே வேலையை முடித்து விட்டதால் மூன்று மணிக்கே வீடு போயாயிற்று. நேற்று இரவா... இல்லை இன்று காலை 3 மணிக்கு அல்லவா...

நேற்று தமிழ்ச் சங்கத்தில் ராமகிருஷ்ணன் உரையாற்றிய நிகழ்ச்சிக்குச் செல்ல இயலவில்லை. நிகழ்ச்சி அருமையாக நடந்தேறியதாக அவர் தொலைபேசியில் தெரிவித்தார். நிகழ்ச்சியைக் கேட்டவர்களும் நன்றாக இருந்ததாகத் தெரிவித்தார்கள். எப்படியோ என் வேண்டுகோளை ஏற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சங்கத்துக்கு நன்றி, உரையைக் கேட்க திரளாக வந்தவர்களுக்கும் - திரைப்படத்துக்கு வந்து இலக்கிய உரையைக் கேட்க நேர்ந்தவர்களுக்கும் சேர்த்துத்தான் - நன்றி. ராமகிருஷ்ணன் தில்லி வர இருப்பதாக அவருடைய வலைப்பூவில் படித்தபிறகு திட்டமிட்டே இந்த நேரத்தை முடிவு செய்தோம். திட்டம் வெற்றி பெற்றது.

இன்று மதியம் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தார். அவருடனான இந்த முதல் சந்திப்பில் இலக்கியம் பேச வாய்ப்பில்லை. காரிய விஷயங்கள்தான் பேச முடிந்தது. என்பிடி இயக்குநருடன் அவருடைய சந்திப்பை நிகழ்த்தி வைத்தேன். இதன் பயன் பின்னால் தெரியலாம்.

அவருக்கு தில்லியிலும் வாசகர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியும். ஆனால் பொழுதுக்கும் புத்தகக் கண்காட்சியில் அவருடன் நேரம் செலவழிக்க இருக்கிறார்கள் என்று தெரியாது. காலையிலேயே தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி ராமகிருஷ்ணனை சந்திக்க எப்போது வரலாம் என்று கேட்டு வைத்திருந்த முத்துலட்சுமியும் வந்து விட்டார்.

அவர்களுடனான உரையாடலில் ராமகிருஷ்ணன் கூறிய ஒரு விஷயம் எனக்குப் பிடித்தது - தன் எழுத்துகளிலிருந்து கணிசமானவற்றை எடுத்து இணையத்தில் இலவசமாகப் படித்துக்கொள்ள பதிவேற்ற இருப்பதாகச் சொன்னார். எனக்குத் தெரிந்தவரை, தன் எழுத்தை முழுக்கவும் வியாபாரமாகப் பார்க்காமல், மக்களுக்கு முக்கியமானவை என்று கருதியவற்றை, இலவசமாக இணையத்தில் ஏற்றியிருக்கும் ஒரே நபர் ஞானிதான் என்று நினைக்கிறேன். இதற்கு உதாரணமாக ஒரு சிற்றேட்டுக்கான இணைப்பு -

http://gnani.net/ஏன்-இந்த-உலைவெறி-அணு-உலைக/


வாசகர்களை ஈர்க்கும் நடையில் எழுதும்கலை கைவரப்பெற்றிருக்கும் ராமகிருஷ்ணனும் இதுபோல தன் கதைகள், கட்டுரைகள் சிலவற்றை வலைதளத்தில் ஏற்றுவது வலையுலகவாசிகளுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

இன்றும் புத்தகங்களை வாங்கச் சென்றேன். நூல்வேட்டையில் இருக்கும்போது ஏகப்பட்ட தொலைபேசித் தடங்கல்கள். புலிநகக் கொன்றை  புகழ் பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய கட்டுரைத் தொகுப்பு ஒன்றும் மற்றொரு நூலையும் எடுத்து அங்கேயே பையில் வைத்து விட்டு வந்துவிட்டேன். நாளை வாங்கிய பிறகு பட்டியல் வெளியாகும்.

கடந்த புத்தகக் கண்காட்சியின்போது வந்திருந்த பிரமுகர்களில் பலர் இப்போதும் வந்தார்கள். அநேகமாக ஒவ்வொரு முறையும் வருகிறவர்களைக் குறிப்பிட வேண்டும் என்றால் .... கொஞ்சம் இரகசியம் இருக்கட்டுமே... அப்போதுதானே நாளையும் நீங்கள் என் பதிவைப் படிப்பீர்கள்...

புத்தகக் கண்காட்சி களேபரங்களில் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய ஒரு விஷயமும் உண்டு - மையக்கருத்து அரங்கின் வெளியே நிகழ்ந்திருப்பதுதான் அது.

தில்லி நகரம் தலைநகரான நூற்றாண்டு இது. இதற்காக தில்லி அரசு சில விழாக்களை நடத்தி வருகிறது. சந்தோஷம். இந்தப் புத்தகக் கண்காட்சியில் 7ஆம் அரங்கில் தில்லி பெவிலியன் என்ற ஒன்றும் அமைந்திருக்கிறது. நல்லது. ஆனால் அரங்கிற்கு வெளியே, சிமிட்டித் தரையில், கீழே தெர்மோகோல் போன்ற ஒருவகை பாலிதீன் விரிப்பை விரித்து அதன்மீது பெ......ரி.....ய்......ய..... பிளக்ஸ் பேனர் விரிக்கப்பட்டிருக்கிறது.



ஷாஜஹான் கட்டிய ஷாஜஹானாபாதின் வரைபடமாம் அது. மக்கள் அதன்மீது நடந்து செல்லவதற்கேற்ப முழுப்பரப்பிலும் விரிக்கப்பட்டிருக்கும் அபத்தத்தை என்னவென்று சொல்வது... அட்ராஷியஸ் என்ற ஆங்கிலச்சொல்தான் நினைவு வருகிறது.

பிளெக்ஸ் பேனர் சதுர அடிக்கு என்ன விலை என்பது பெரும்பாலோருக்கும் தெரியும்.  உத்தேசமாகக் கணக்கிட்டால் சுமார் ஐம்பதாயிரம் வரலாம். அரசு என்பதால் இது லட்சம் ரூபாயாகவும் இருக்கலாம்.


இலட்சம் ரூபாய் கிடக்கட்டும். இவ்வளவு பெரிய பிளாஸ்டிக் பேனர் இந்த ஒன்பது நாள் கூத்துக்குப் பிறகு கூடைக்குப் போகும். சுற்றுச்சூழல் காப்பதாகக் கூறிக்கொள்ளும் அரசின் இந்தக் கூத்தினால் யாருக்கு என்ன பயன்... இதில் என்ன இழவு புரிகிறது. அங்கங்கே பழைய தில்லியின் முக்கிய இடங்களின் பெயர்கள். அவை தில்லிவாசிகளில் தேவையுள்ளவர்கள் அறிந்தவைதான். இந்த வரைபடத்தைப் பார்த்து யாரும் அந்தப் பகுதிகளுக்குப் போய்விட முடியாது. அப்புறம் எதற்காக...

விடை தெரியாத எத்தனையோ கேள்விகளில் இதுவும் ஒன்று. யாரோ ஒரு கூமுட்டை அதிகாரி இந்த ஆலோசனை கூறியிருக்கலாம். இதனால் லாபம் கிடைக்கும் ஒப்பந்ததாரர் ஆமாம் போட்டிருக்கலாம். வேறு என்னவாக இருக்க முடியும்...

தில்லி அரங்கம் பற்றிய சிறப்புப் பதிவு போடக்கூடிய அளவுக்கு நல்ல புகைப்படங்கள் இருக்கின்றன. இன்னும் கொஞ்சம் ஆய்வு செய்து அவற்றை வெளியிட உத்தேசம் - நாளை.

2 comments:

  1. arumaiyana pathivuthan. Nanum poirunthen DTS. miga arumai. Aanal athu enna "koomutai" intha varthaiyai nan vanmaiyaga kandikiren (Arasu athigari enbathal alla, thangalin friend [nanbi!! na nalla illella, athanalthan friend] enbathanal). thodarnthu ezuthunga, innam nan bookfair-kku varavillai, varuven
    Sathya Asokan

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு.... தினம் தினம் புத்தகக் கண்காட்சியில் நடக்கும் நிகழ்வுகளை உங்கள் பக்கம் வந்தால் தெரிந்து கொள்ள முடிவதில் மகிழ்ச்சி....

    மீண்டும் நாளையோ அல்லது வரும் நாட்களிலோ வருவேன்.... பார்க்கலாம்...

    ReplyDelete