Tuesday 28 February 2012

உலகப் புத்தகக் கண்காட்சி - 28-2-12

நேற்று இரவு ஒரு மணிக்கே வேலையை முடித்து விட்டு ஒன்றரை மணிக்கெல்லாம் வீடு போய்விட்டேன். நேற்று முடித்து அச்சுக்கு அனுப்பிய கண்காட்சி செய்தி மடலில் நான்கு புகைப்படங்கள் விடுபட்டு விட்டன என்று அச்சகத்தார் போன் செய்து காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சுவதாக கனவு கண்டு விழித்து மீண்டும் தூங்கி.... பிரகதி மைதான் முழுக்கவும் ஒலித்துக்கொண்டிருக்கும் சானல் மியூசிக் திடீரென ஏன் இவ்வளவு சத்தமாக ஒலிக்கிறது என்று விழித்துப்பார்த்தால்... எட்டு மணி அலாரம் எழுப்புகிறது.

முந்தாநாள் ஆங்கில நூல்களைத் தேடிச்சென்ற மகள்கள் வாங்கியவை -
பெரியவள் தேர்வுகள் -
Manorama Year Book 2012
Pride and Prejudice - Jane Austen
Mansfield Park - Jane Austen
Sense and Sensibility - Jane Austen
World Famous horror Stories

சின்னவள் தேர்வுகள் -
Treasure Island
Peter Pan
Gulliver's Travels
Oliver Twist

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. இரண்டு நூற்றாண்டுகள் கழிந்த பின்னும் ஜேன் ஆஸ்டின் இன்றும் இளைஞிகளின் ஆகர்ஷ எழுத்தாளராக இருப்பது எப்படி... சேதன் பகத்தின் விறுவிறுப்பான நடையைப் படிக்கும் வளரிளம் பருவத்தினரால் இதையும் எப்படிப் படிக்க முடிகிறது... யாரேனும் பதிலளித்தால் மகிழ்வேன்.

புதையல் தீவு, ஆலிவர் டிவிஸ்ட் போன்ற நூல்கள் இன்னும் பலப்பல ஆண்டுகளுக்கும் சிறார்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் என்றே தோன்றுகிறது. நமது தாய்மொழி எழுத்தாளர்களில் இவ்வாறான கதை எழுதுபவர்கள் அரிதிலும் அரிது. ரஸ்கின் பாண்ட் தவிர்த்து வேறு யாரும் உண்மையில் குழந்தைகளுக்கான கதைகளை சாகசம் கலந்து எழுதுவதாகத் தெரியவில்லை. குழந்தை இலக்கியம் இன்னும் நம்மிடம் உருவாகவே இல்லை.

நேற்று சஸ்பென்ஸ் வைத்ததை இன்று கொஞ்சம் உடைக்கலாம். எப்போதும் வருபவர்களில் உடனடி நினைவுக்கு வருபவர்கள் ஸ்ரீகாந்த், அத்வானி. ஸ்ரீகாந்த் முந்தாநாளும் வந்திருந்தார் என்று தகவல்.


அத்வானி வரும்போதெல்லாம் அவருடன் அவருடைய மகள் பிரதிபாவும் வருவதும், யாரோ திரை நட்சத்திரம் வந்து விட்டதாக கூட்டம் அவர்கள் பின்னால் செல்வதும் வழக்கமான காட்சி.


இந்த ஆண்டின் மையக்கருத்து இலக்கியமும் திரைப்படமும் என்பதால், திரையுலகப் பிரமுகர்கள் - நட்சத்திரங்கள் அல்ல - வந்துபோகிறார்கள். ஜாவேத் அக்தர் இரண்டுநாள் வந்தார், இரண்டு நாட்களும் ஏதேதோ புத்தகங்களை வெளியிடுவதற்காக. உம்ரோ ஜான் புகழ் முஜாபர் அலி வந்தார் மற்றொரு புத்தக வெளியீட்டுக்காக.

அப்புறம்... எழுத்தாளர் ராமகிருஷ்ணன் இன்றும் வந்திருந்தார். தமிழ்ப் புத்தகக் கடைகளுக்கு வந்தபோது ...


ஞாயிற்றுக்கிழமை பதிவர் சந்திப்புக்கு ஜிஜி வராமல் போனது இதற்காகத்தான் என்று இப்போது புரிகிறது. சரி சரி வச்சுக்குவோம்...

நேற்று ராமகிருஷ்ணன் புகைப்படத்தை அனுப்புங்கள் என்று சொல்லியிருந்தும் அனுப்பாமல் தன் பதிவில் மட்டும் போட்டுக்கொண்டு சதி செய்த ......யையும் வச்சுக்குவோம்....

ஆஹா... நானும் வம்புக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன்போல!!!
இன்று தமிழ்ப் புத்தகங்களை ஒரு சுற்று சுற்றி பாரதியிலும் காலச்சுவடிலும் சில நூல்களைத் தேர்வு செய்து வைத்துவிட்டு வந்தேன். மொத்தமாக வாங்கிய பிறகு பட்டியல் வெளியாகும். இரவல் கேட்கக்கூடிய பதிவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இந்தப் பட்டியல் வெளியீடு.

சாந்தா பதிப்பகத்தாரிடம் எப்போதும் சில புத்தகங்கள் வாங்குவது வழக்கம் என்பதால் மிகவும் சிரமப்பட்டு சிலவற்றை வாங்கினேன் -
குழந்தைகளின் கவனக்குறைபாடும் மிகுசெயல் நிலையும்
ஆசிரியர் என்பவர் யார்
காமராஜ்
உலக தினங்களும் தேசிய தினங்களும்.

ஏப்ரல் 23 உலகப் புத்தக தினம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பல நாடுகளிலும் அவரவர் விருப்பம்போல வெவ்வேறு நாட்களில் புத்தக தினம் கொண்டாடுகிறார்கள் என்பது கொசுறுச் செய்தி.

இன்று மால்குடி டேஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டது. வழக்கம்போல கிடைக்காதது.

நண்பர்களின் தொடர் வருகையால் தில்லி அரங்கம் பற்றி இன்றும் எழுத இயலவில்லை. தொடர்வேன்.

வாசிப்பை நேசிப்போம்


3 comments:

  1. நல்ல பகிர்வு...

    மால்குடி டேஸ்....

    இப்போது மீண்டும் வாசித்துக் கொண்டு இருக்கிறேன்... சென்ற வாரம்தான் "The Man Eater of Malgudi" படித்தேன்....

    ReplyDelete
  2. :))) ஆகா பதிவு எழுதிவிட்டீர்களே என்று விட்டுவிட்டேன்.. அனுப்பி வைக்கிறேன் இணைத்துவிடுங்கள்..

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    எஸ். ரா. அவர்களை சந்திக்க உதவியதற்கு நன்றி.

    ReplyDelete