Wednesday 13 February 2013

அனைத்துமொழி இலக்கியங்களுக்கும் சம மதிப்பு தேவை

புதுதில்லி உலகப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, சாகித்ய அகாதமி - நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா இணைந்து அனைத்திந்திய எழுத்தாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தது. பிப்ரவரி 9ஆம் தேதி புத்தகத் திருவிழாவின் 18ஆம் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டு நாட்கள் முன் வெளியிட்ட ஆங்கில வடிவத்தின் தமிழாக்கம் இது.

தொடக்கவிழாவிற்குத் தலைமை வகித்தார் சாகித்ய அகாதமியின் பொறுப்புத்தலைவர் திரு விஸ்வநாத் பிரசாத் திவாரி. ஞானபீட விருது பெற்ற முனைவர் பிரதிபா ராய் முதன்மை விருந்தினராகப் பங்கேற்றார். மலையாள மொழியில் மூத்த எழுத்தாளர், கவிஞர், சாகித்ய அகாதமி நிறுவனத்தின் முன்னாள் செயலர் கே. சச்சிதானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 
சாகித்ய அகாதமி செயலர் சீனிவாசராவ் வரவேற்புரை வழங்கினார். இந்த மாதம் 18 முதல் 22 வரை சாகித்ய அகாதமியில் இலக்கிய விழா - அதாவது, விருது வழங்கும் விழாவும் நடைபெற இருப்பதை அறிவித்தார். இந்த ஆண்டு சச்சிதானந்தன் அவர்களும் விருது பெற இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் பன்மொழிக் கவிதைகள், சிறுகதைகள் வாசிக்கப்பட்டன. எந்தவொரு இலக்கியத்துக்கும் அத்தியாவசியத் தேவைகளான புனைவு, நினைவு மற்றும் கற்பனை ஆகியவற்றை இயற்குடி மற்றும் வாய்மொழி இலக்கியங்களின் பொருத்தப்பாட்டில் ஆய்வதற்கான ஓர் அமர்வும் இடம்பெற்றது. 

காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக பரிமாறப்பட்டு வரும் வாய்மொழி இலக்கியம்கதைகள், கற்பனைக் கதைகள், பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள்—ஆகியவை மனித வாழ்வு, பொருளியல் மற்றும் ஆன்மீகத்துக்கான உறுதியான தத்துவங்களைக் கொண்டவையாய் இருக்கின்றன. எனவே, இந்தியாவின் ஒவ்வொரு மொழியிலிருந்தும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்மொழிப் படைப்பையும் பதிப்பிக்க வேண்டும். அப்போதுதான் அவை காலத்துக்கும் நிலைத்திருக்கக்கூடிய வகையில் அச்சு வடிவில் பொக்கிஷமாக சேமிக்கப்பட முடியும்,” என்றார் சீனிவாசராவ்.

தலைமையுரை ஆற்றினார் விஸ்வநாத் பிரதாப் திவாரி. இலக்கியமும் புத்தகங்களும் மனிதவாழ்வின் வெளிப்பாடுகள். அதனால் அவை வாய்மொழி இலக்கியமாக ஆனாலும் சரி, எழுத்துவடிவ இலக்கியமானாலும் சரி, எல்லாக் காலங்களுக்கும் தாக்குப்பிடித்து நிற்கக்கூடியவை. புத்தகங்கள் வாசகனுக்கு பாதையைக் காட்டக்கூடியவை. இருட்டில் வழி தெரியாமல் தடுமாறும் ஒருவன் புத்தகம் என்னும் விளக்கை நாடும்போது அவனுக்குப் பாதை தெரிகிறது. ஆனால் இன்று புத்தகங்கள் பல சவால்களை சந்தித்து வருகின்றனசில சவால்கள் பல நூற்றாண்டுகளாக இருந்து வருபவை, வேறு சிலவோ புதிதாக உருவானவை. நாம் கடந்த காலத்தை நோக்கினால், உலகின் பல பகுதிகளிலும் எழுத்தாளர்கள் தூக்கிலிடப்பட்டதை, சுட்டுக்கொல்லப்பட்டதை, சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதை வரலாற்றில் காணமுடியும். எழுத்தாளன் என்பவன் தான் மகத்தான உண்மையை உலகுக்காக எழுதுவதாக நம்புகிறான், இந்த நம்பிக்கையே அவனை எழுதவைக்கிறது. ஆனால் மக்களாட்சிமுறைக்கு எதிரான, எதேச்சாதிகாரச் சக்திகள், கருத்துகளை அடக்க முனைகின்றன. இதை நாம் எதிர்த்தாக வேண்டியிருக்கிறது, ஏனென்றால், இலக்கியமும் புத்தகங்களும் இல்லாமல் எதுவும் முன்னேற்றம் காண்பதில்லை.” என்றார்.

புத்தகங்கள் எதிர்கொள்ளும் மற்றொரு சவால், இன்றைய தொழில்நுட்ப சாதனங்களின் ஆதிக்கம். வீடுகளில் புத்தகங்கள் தமக்கான இடத்தைத் தேடுகின்றன. ஆனால் பெரும்பாலான வீடுகளில் புத்தகங்களுக்குக் கிடைக்கும் இடம் ஆகக் கடைசியான இடம்தான், என்று கூறிய அவர், தன் கவிதைத் தொகுப்பிலிருந்து பழைய கவிதையை வாசித்தார். (இந்தியில் அவர் வாசித்த கவிதையின் சுருக்கம் இங்கே வழங்கப்படுகிறது) :
ஒரு நூல் இருளில் வைக்கப்பட்டிருக்கலாம்
அணுகமுடியாத இடத்தில் வைக்கப்பட்டிருக்கலாம்
பலப்பல ஆண்டுகளுக்கும் அப்படியே கிடந்திருக்கலாம்
ஆனால் ஒருநாள் யாரேனும் ஒருவன் வருவான்
அறிவையும் ஞானத்தையும் தேடி
அப்போது அவன் புத்தகத்தைக் கண்டடைவான்
புத்தகம் தனக்கான வாசகனைக் கண்டறியும்.

இந்திய இலக்கியங்கள், இலக்கியத்தும் வரிவடிவத்துக்கும் இடையிலான உறவு, இலக்கியத்தின் பன்மைகள், இறுதி இலக்கு ஆகியவை பற்றி உரையாற்றினார் முனைவர் பிரதிபா ராய். இந்திய இலக்கியத்தின் ஒற்றைத்தன்மை என்பது குறித்தான எந்த விவாதம் எழும்போதும், ஆய்வறிஞர்களும் இலக்கிய வரலாற்றாசிரியர்களும் பன்முக ஒற்றுமை என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். சர்ச்சையிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, இந்திய இலக்கியம் என்பது சொற்பொருளிலும் கருப்பொருளிலும் முழுமையானது என்னும் மறுக்க முடியாத உண்மையை உறுதி செய்வதற்காக. சினிவாச ஐயங்கார் உள்பட பலர் கூறியதுபோல, பல மொழிகளில் எழுதப்பட்டாலும் இந்திய இலக்கியம் என்பது ஒன்றே.”


மொழியும் இலக்கியமும் பற்றிப் பேசும்போது, ஒரு சொல் மற்றவரின் சிந்தையில் நுழைந்து, பொருள் தந்து, சிந்தனையையும் உணர்வையும் தூண்டும்போது மொழி பிறக்கிறது. உணர்வுகள், மகிழ்ச்சிகள், வேதனைகள் ஆகியவற்றின் தேர்ந்த சொல்லடுக்கை மனிதன் உருவாக்கி உலகப் பொதுவானதாக ஆக்கும்போது இலக்கியம் பிறக்கிறது. சொல்லாற்றலுடன் கூடிய இலக்கியம் ஆளுமையை, உருவாக்குகிறது, ஞான ஒளி ஏற்றுகிறது, மனச்சாட்சியை விழிக்க வைக்கிறது,என்று கூறிய பிரதிபா ராய், முத்தாய்ப்பாகக் கூறினார் ஒட்டுமொத்தத்தில் எல்லா எழுத்தாளர்களும் ஒரே பாடலைத்தான் பாடுகிறார்கள், ஒரே கருத்தையே எழுதுகிறார்கள் - அன்பும் அமைதியும் என்பதே அது. நாம் அன்பு செலுத்துவோம் அனைவரையும் வாழவைப்போம்.”

இந்திய இலக்கியம் என்ற கருத்தாக்கம், அதன் பன்முகத்தன்மை மற்றும் பொதுத்தன்மைகள், செய்யவேண்டியவை என்ன என்பது விரிவான உரையாற்றினார் சச்சிதானந்தன்.


நாம் இன்று காண்கிற இந்திய இலக்கியம் என்ற கருத்தாக்கம் மேற்கத்தியப் பார்வையின் தாக்கத்துக்கு பெரும்பாலும் ஆட்பட்ட கருத்தாக்கம்தான். தெற்காசியாவுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு, இலக்கியம் என்பது மையக் கருப்பொருளாக இருக்கிறது. ஆனால் உலகத்தின் இலக்கிய வரலாற்றில் அதற்கு மிகக்குறைவான அல்லது ஓரம்கட்டப்பட்ட இடம்தான் கிடைத்திருக்கிறது. காரணம், இந்தியாவைப் பற்றிய ஐரோப்பியர்களின் கருத்து சமஸ்கிருதப் பிரதிகள் பற்றிய அவர்களின் புரிதலின் அடிப்படையில் ஆனது. 18ஆம் நூற்றாண்டு முதலான இந்திய இலக்கிய வரலாற்றில் இதைப் பார்க்க முடிகிறது. இவை சமஸ்கிருதத்தை மட்டுமே பேசுகின்றன, அத்துடன் இந்தியா புத்திலக்கியத்திற்கு முன்னேறிய 20ஆம் நூற்றாண்டு வரையிலும்கூட இதே நிலை தொடர்ந்தது.
“சான்றாக, சமஸ்கிருதம் எந்த அளவுக்குப் பழமையானதோ அதே அளவுக்குப் பழமையான மொழி தமிழ். ஆனால் வரலாற்றாசிரியர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் தமிழைப்பற்றிக் குறிப்பிடக்கூட இல்லை. அவர்கள் (பிராந்திய) மொழிகளையும் அவற்றின் பிரதிகளையும் ஒதுக்கி வைத்தார்கள். அதிலும் குறிப்பாக, நமது நிஜ வேர்கள் பதிந்திருக்கின்ற, வாய்மொழி மற்றும் நாட்டுப்புற இலக்கியங்கள் என்ற பாரம்பரியத்தையே புறக்கணித்தார்கள். அவையெல்லாம் பேசப்படக்கூடாதவை, தீண்டத்தகாதவை என்று அவர்கள் கருதினார்கள். பெரிதும் புறக்கணிக்கப்பட்டது வடகிழக்குப் பிராந்திய மொழிகளும் இலக்கியமும்தான். இந்தியா என்ற நமது கருத்தாக்கத்தில் உண்மையில் வடகிழக்கு இருக்கிறதா என்றேகூட எனக்கு கேள்வி எழுகிறது. நாம் காப்பியங்களைப் பற்றிப் பேசும்போது வாய்மொழிக் காப்பியங்களைப் பற்றிப் பேசுவதில்லை. இந்தப் பிரச்சினை அப்படியே தொடர்கிறது. இந்திய இலக்கியம் என்பதை ஒரே மொழிக்கும் ஒரே மதத்துக்கும் உரியதாக ஆக்கிவிடுகிறது இத்தகைய பார்வை. மிகவும் அபாயகரமான பார்வை இது. 
இந்திய இலக்கியம் பற்றிய நம் புரிதல் மேற்கத்தியப் புரிதல். எனவே அது கீழையியல் நோக்கில்தான் பார்த்தது. கிழக்கு தேசங்களில் மரபுப் படிநிலைகளின்படி சில உயர்ந்தவை சில தாழ்ந்தவை என்று பார்த்தது. இது மிகத் தவறான, மேம்போக்கான புரிதல் கொண்ட பார்வை. இது மொழிகளில் உள்ள வேறுபாடுகளையோ அந்தந்த மொழிக்கே உரிய சிறப்புக் கூறுகளையோ கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.


யு.ஆர். அனந்தமூர்த்தி ஒருமுறை கூறினார், இந்திய இலக்கியத்தின் பன்முகத்தன்மையை நாம் பார்க்க முனையும்போது அதன் ஒற்றுமை புரியும்; நாம் அதன் ஒற்றுமையைப் பார்க்க முனையும்போது பன்முகத்தன்மைகள் புலப்படும் என்று. சில மொழிகள், இலக்கியத்தின் பல வடிவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றன, வேறு சில மொழிகள் சில வடிவங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டிருக்கின்றன. சமமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்ட சில வடிவங்களும் இருக்கின்றன, பகிர்ந்து கொள்வதால் அவை பரஸ்பரம் சேர்ந்து வளர்கின்றன.
“மொழிகள் மற்றும் இலக்கிய இயக்கங்களில்பழங்குடி மக்கள் இலக்கியம், காப்பியங்கள், நாடகங்கள், கவிதைகளில் பொதுத்தன்மைகள் காணக்கிடைக்கின்றன. 3ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை செவ்விலக்கியங்களின் காலம். சான்றாக சமஸ்கிருத காப்பியங்களும் தமிழில் சங்க இலக்கியங்களும் மலர்ந்த காலம். சங்க இலக்கியத்தை மோதலையும் காதலையும் பற்றிய கவிதைகள் என்றார் ராமாநுஜன். 
“5ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டுவரை பக்தி இலக்கியங்களும் சூபி மரபும் வலுவாக இருந்தன. இவற்றை கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் காணலாம்கீர்த்தனைகள், பஜனைகள், சூபி பாட்டுகள், வடகிழக்கு மாநிலங்களின் வாக் வடிவங்கள் போன்றவை அவை. இவை மனிதம் மற்றும் மதத்தை மேலும் புரிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டிருந்தன. பக்தி இலக்கியம் சாதி அமைப்பை மறுதலித்தது. அது உள்ளடக்கத்தில் புரட்சிகரக் கருத்துகளைக் கொண்டிருந்தது. சமத்துவத்தை நோக்கிய பாதையில் பெரிய மாற்றத்தை பக்தி இலக்கியங்கள் உருவாக்கின. சான்றாக, கபீர், மீரா, பசவண்ணா, சூபி சாதுக்கள் போன்றோரின் பாடல்கள். அவர்கள் கடவுளிடம் நேரிடையாக முறையிட்டார்கள், கடவுளுக்கும் தமக்கும் நடுவே யாரையும் அவர்கள் ஏற்கவில்லை. 
“பிறகு சுதந்திரப்போராட்ட காலத்தில் வேறுவகை இலக்கியங்கள் தோன்றின. வடக்கே தாகூர், தெற்கே பாரதி போன்றோர் வந்தனர். பிறகு முற்போக்கு இலக்கியம் வந்தது. அதன்பிறகு தற்காலத்தின்இயற்குடிகள் இலக்கியம், தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம், கடவுள் மறுப்பு மற்றும் தேசிய இனம் சார்ந்த எழுத்துகள் என பல்வகை இலக்கிய வடிவங்கள்  வந்தன. இவை எல்லாமே ஒவ்வொரு மொழியிலும் கூடவோ குறையவோ இருக்கவே செய்கின்றன. ஒவ்வொரு மொழியிலிருந்தும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும் செய்கின்றன.
நமக்கு இப்போது என்ன தேவை என்ற கேள்வி எழுகிறது. நம்மிடம் கூட்டாட்சி அரசியல் சாசனம் இருக்கிறது. அதேபோல இந்திய இலக்கியம் பற்றிய கூட்டாட்சிக் கருத்து தேவைப்படுகிறது. இக்கருத்து பன்முகத் தன்மையை மதிப்பதாக இருக்க வேண்டும். ஒரு மதம், அல்லது ஒரு மொழியைக் கொண்டதாக நமது இந்தியாவை நாம் கற்பனை செய்ய முடியாது, கூடாது. பல்வேறு பண்பாடுகளுக்கு உரிய இடம் அளித்தாக வேண்டும். கீழையியல் என்ற கருத்தின்படிப் பார்க்காமல் தலித் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களையும் அணைத்தழைத்துச் செல்ல வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் அனைத்து இலக்கியங்களுக்கும் சமமான இடம் இருக்கக்கூடிய ஓர் இந்திய வரைபடத்தை நாம் உருவாக்க வேண்டும்.”

சச்சிதானந்தனின் உரை பெரும் வரவேற்புப்பெற்றது. பன்மொழி நிகழ்ச்சி என்பதும் வரவேற்புக்குக் காரணம் என்று தோன்றுகிறது.


அடுத்த அமர்வில், கவிதை வாசிப்பு நிகழ்ந்தது. அஸாமிய மொழியில் ஜீபன் நாரா, இந்தியில் கங்கா பிரசாத் விமல், மணிப்புரியில் இபோம்சா சிங், பஞ்சாபியில் பர்ஜீந்தர் சௌஹான், தமிழில் சக்தி ஜோதி, தெலுங்கில் பி. மோகன், உருது மொழியில் சந்திரபான் காயல் ஆகியோர் தமது கவிதைகளை வாசித்தனர். 

பிற்பகலில் சிறுகதை வாசிப்பு அமர்வில் அஸாமிய மொழியில் குலாதர் சைக்கியா, இந்தியில் பல்ராம், ஒடியாவில் பேபஷிஷ் பாணிக்ரஹி, சிந்தி மொழியில் சிந்து மிஸ்ரா ஆகியோர் தமது சிறுகதைகளை வாசித்தனர். மிருதுளா கர்க் இந்த அமர்வுக்குத் தலைமை வகித்தார்.

இறுதியாக, ஆய்வுரை சமர்ப்பிக்கும் அமர்வு ஒன்று நிகழ்ந்தது. புத்தகத் திருவிழாவின் மையக்கருத்து பழங்குடி மற்றும் நாட்டுப்புற இலக்கியங்கள் என்பதால் அதையொட்டி புனைவுகள், நினைவுகள் மற்றும் கற்பனைகள்: பழங்குடி மற்றும் வாய்மொழி இலக்கியம் என்ற தலைப்பில் கவிஞரும் எழுத்தாளருமான மமங் தாய், வடமேற்கு பிராந்திய பழங்குடி ஆய்வில் புகழ்பெற்றவரான பகவான்தாஸ் படேல் ஆகியோர் ஆய்வுரை அளித்தனர். சிறந்த மொழிபெயர்ப்பாளரும் சாகித்ய அகாதமியில் பணிபுரிந்தவருமான நிர்மல்காந்தி பட்டாசார்ஜி இந்த அமர்வுக்குத் தலைமை வகித்தார்.

அஸாமியா, மணிப்புரி, தமிழ், தெலுங்கு மொழிக் கவிஞர்கள் ஆங்கில மொழியாக்கத்தையும் அளித்தனர். ஆனால் இந்தி, பஞ்சாபி, உருது மொழியினர் அவரவர் மொழியிலேயே வாசித்தனர். எனவே, என்னைப்போன்றவர்களுக்கு அவை புரிபடவில்லை. இந்திக் கவிஞர் பிரபலமானவர். சாகித்ய அகாதமி எதிர்காலத்தில் இதுபோன்ற பன்மொழி அமர்வுகளை ஏற்பாடு செய்யும்போது, ஆங்கிலத்தில் வழங்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினால் நல்லது.

தமிழில் கவிதை வாசித்த சக்தி ஜோதியின் கவிதையில் ஒன்று மட்டும் கீழே - இன்றைய நடுத்தர வர்க்கக் குழந்தைகளை சித்திரிக்கும் கவிதை என்பதால் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது.


காவ்யாவும் சிட்டுக்குருவியும்

காவியா
கம்ப்யூட்டர் கேமில்
விவசாயம் செய்து பழகி விட்டாள்
பொட்டட்டோவில் புழு வருமா எனக்கேட்டு
மருந்தடிக்கத் துவங்கினாள்
முன்னூறு ரூபாய்க்கு முதலீடு செய்து
எண்ணூற்று இருபத்து ஐந்து ரூபாய்க்கு அறுவடை செய்து
ஐநூற்று இருபத்தைந்து ரூபாய் லாபம் பார்த்து விட்டாளாம்.
பிறகு மாற்று விவசாயமாக
தக்காளியை பயிர் செய்கிறாள்
பன்னிரெண்டாம் நாளில் செடிகளில் இலைகள் துளிர்ப்பதாக
கணக்கும் சொன்னாள்
கம்ப்யூட்டர் விவசாயம் கற்றுக்கொண்ட காவியாவுக்கு
பின்பொரு நாளில் 
விவசாயம் செய்ய நிலமிருக்கிறதா
...
விவசாயம் என்பதை லாப விளையாட்டு என்று
நினைக்கிறாளா என்பதும் தெரியவில்லை.
இப்போது அவள்
மோட்டார்வாகனப் பந்தயத்திற்கு மாறிவிட்டாள்

என்டோசல்பான் பூச்சி மருந்திற்கு
காலிபிளவரிலுள்ள புழுக்கள் செத்துவிடுகின்றன.

பாவம் சிட்டுக்குருவிகள் என்ன செய்தன
காவியாக்கள் சிட்டுக்குருவிகளாக மாறி
அனைவரின் வீட்டு
வரவேற்பறைகளிலும் அமர்ந்திருக்கின்றனர்.
கேள்விகளாய்.

1 comment:

  1. சக்தி ஜோதி அவர்களின் கவிதை மிக அருமையாக இருந்தது. உண்மையைத்தான் கூறுகிறார். ஆனால் பெற்றோர்கள் முக்கியமாக அம்மா படிக்கும் பழக்கம் உடையவராக இருந்தால் பிள்ளைகள் ஓரளவுக்காவது கணினியில் இருந்து நகர்ந்து புத்தகங்கள் படிக்கிறார்கள் அட்லீஸ்ட் கணினியிலேயே கூட படிகிறார்கள். விவசாயம் என்றால் என்ன , இயற்கையை நேசிப்பது போன்றவற்றையும் பெற்றோர்கள் தான் சொல்லித்தரவேண்டும். அதற்கு அவர்கள் முதலில் தொலைகாட்சி பெட்டியை விட்டு நகரவேண்டும். இல்லையென்றால் எல்லா காவ்யா க்களும் கேள்விக்குறிகள் தான்.

    கவிதை மிக மிக அருமை.

    சத்யா அசோகன்

    ReplyDelete