Thursday 7 March 2013

அலைமோதும் கரையோரம் அவளோடு...

  


வங்கக் கரையோரம் வானுயரும் அலையோரம்
தென்வடலாய் நீண்டிருக்கும் மணற்பரப்பின் மீதிருந்து
காத்திருந்தேன் அவள் வரவைப் பார்த்திருந்தேன்
நெஞ்சு நிமிர்ந்திருக்க நேர்ப்பார்வை கொண்டவளாய்
வஞ்சியவள் வந்து நின்றாள் விண்ணுதிர்த்த தேவதையாய்.

`கண்ணா நான் தாமதமோ ! காத்திருந்த கடுகடுப்போ !'
என்றவளின் மொழிகேட்டுப் பூத்துச்சிரித்து விட்டேன்
`காத்திருத்தல் எனக்கொன்றும் புதிதில்லை ! அதிலும் உன் 
வரவுக்குக் காத்திருத்தல் பெரிதில்லை ! வாழ்நாளை
காத்திருந்தே கழியுமென்று சொன்னால் அதையும் நான்
கட்டளையாய் ஏற்றிடுவேன் ! காதலுடன் காத்திருப்பேன் !'
என்றுரைக்க அதுகேட்டு மங்கை மகிழ்ந்து நின்றாள்.

`என்னம்மா! ஏதேனும் சத்தியமா! இங்கு வந்த
பின்னாலும் ஏனின்னும் நிற்கின்றாய்! முகம்காட்டி
அமர்ந்திடுவாய்' என்றென் சொல்லுக்குக் கட்டுண்டாள்.
மௌனத்தில் கரைந்ததங்கே மணித்துளிகள்.

ஏனின்று தேன்மொழியாள் மௌனம் தேர்ந்தெடுத்தாள்
காரணம் புரியாமல் கலங்கியவன் நான் கேட்டேன்
`ஏனிந்த மௌனமடா? ஏதேனும் பிரச்சினையா?'
விழியுயர்த்திப் பார்த்த அவள் விளக்கலானாள்

`முகில் பொழியும் மழையும் காற்றும் நிலவும்
திகுதிகு வென் றெரிகின்ற கதிரோன் ஒளியும்
பூமி மனிதருக்குப் பொதுவென் றானதுபோல்
என் வாழ்வில் வருகின்ற இன்பங்கள் துன்பங்கள்
நம் இருவருக்கும் பொதுவென்றே ஆனபின்னே
எனக்கென்று தனியாக ஏதும் இருந்ததுண்டா?'
என்றந்த ஆரணங்கு காதலைப் பொழிந்துவிட்டாள்.

`பொதுவென்று புரிந்தவளே! உனக்குள் புதைந்திருக்கும்
பொதியை இறக்கிவிடு' என்றுரைக்க அவள் சொன்னாள் -
`காலை கடற்கரையின் சாலையில் வரும்போது
மாலை மலர்களுடன் ஒரு கூட்டம் நின்றிருந்து
மாகவியின் சிலையடியில் பேச்சில் கழித்திருந்த
காட்சியினைக் கண்டபின்னே ஆயிரமாய் கேள்விகளே
அலைமோதும் இதயமிது. அதனாலே பேசவில்லை'
என்றவளும் எடுத்துரைக்க வியப்புற்று நான் கேட்டேன்.

`பெண்ணே! இதற்காகப் பெரிதும் கலங்குவதேன்?
மாகவிக்கு மாலையிடல் புதிதன்று. தேவை...' என்று
வார்த்தை முடிக்கு முன்னே மங்கை சினந்தெழுந்தாள்.

`பாரதிக்குச் சிலையெடுத்து மாலையணி வித்துத் 
தமிழ்ச் சாரதியின் நினைவாகச் சாலைக்குப் பேர்வைத்துக்
கூட்டம்கூடி நின்று கும்பிட்டுப் புகழ்ந்துரைத்துக்
கூட்டுக்குள் நுழைந்தவுடன் மறந்திடுதல் முறைதானோ!

வீட்டு வேலைகளும் செய்யவேணும் - பெண்
நோட்டுகளும் கொண்டு வரவேணும்!
பெற்றிடும் மக்களைப் பேண வேணும் - அவள்
முற்றிலும் முட்டாளாய் வாழவேணும் !
இப்படியே நினைத் திருக்கின்ற கூட்டம்
இன்னமும் இங்குதான் இருக்குது !

விட்டுக் கொடுக்கவே வேணுமென்பார் - அவர்
மட்டுமதை யென்றும் செய்ய மாட்டார் !
பட்டங்களே பெற்று விட்டாலென்ன - அவள்
பாங்கிலே வேலையும் செய்தாலென்ன
கட்டவேணுமொரு மஞ்சள் கயிறென்றால் - இங்கு
கட்டுக்கட்டாய் நோட்டுத் தர வேணும் !

பட்டும் நகைகளும் பெட்டியும்தான் மட்டும்
எட்டும் மங்கையர் சிந்தனைக்கு என்று
வெட்டியாய் பேசுவார் வீட்டுக்குள்ளே - அவர்
கொட்டி முழங்குவார் கூட்டத்திலே !

அச்சமும் நாணமும் பெண்களுக்கே நல்ல
கற்பும் நெறிகளும் மங்கையர்க்கே என
எச்சமாகிப்போன இச்சரக்கை அவர்
உச்சத்தில் தூக்கிப் பிடித்திருப்பார்.

கண்ணுக்கழகாய் பெண்பட்டு விட்டால் - அவள்
கண்ணியிலே விழப் பார்த்திருப்பார்
கண்ணியினை அவள் கண்டு கொண்டால் - அவர்
களங்கம் பலதும் சுமத்துவார்!

ஆபீஸில் வேலைதான் செய்தா லென்ன - அட
ஆலையில் வேலைதான் செய்தா லென்ன
ஆடவர் ஏவிடும் கணைகளுக்கு - அவள்
அஞ்சியஞ்சி நாளும் வாழுகிறாள்!

என்கவி பாடிய காலமென்ன - அட
எழுபதாண்டுகள் போயுமென்ன
மாதருக்கிழிவுகள் போகலையே - அட
மடமைகளின் னமும் மாயலையே !

என்றவளின் மொழிகேட்டு வெட்கித் தலை குனிந்தேன்

என் செய்வேன் என்னினமே இன்னும் உன் உள்ளத்தில் 
பெண்மையைப் பூஜிக்கும் நல்லொளியும் தோன்றலையே !
மென்மொழி மங்கையரை மிதித்தே வைத்திருக்கும்
வன்மைக் குணங்களெலாம் வாழக்கொழிந்து போகலையே !

மாகவிக்கு சிலைவடித்தல் மாலையிடல் போதாது !
மேடைகளில் மட்டுமவன் புகழ்பாடல் ஆகாது !
பேதம்போய் பெண்ணினத்தை சரிநிகராய் கருதாமல்
வேதம்போல அவன் கவிதை போற்றல் பயனில்லை !

காதலை மட்டுமா கவிராசன் பாடிவைத்தான் !
மாதரசி வாழ்கவென மகிழ்வோடு கூத்திட்டான் !
ஓதிச் சென்றவனின் உரைதனைச் சிந்திப்பீர் !
நீதியறிந்திடுவீர் பெண் நிகரெனப் புரிந்திடுவீர் !

6 comments:

  1. பாரதியின் வார்த்தைகளை மறுபடியும் மொழிந்து எங்களுக்கு புத்துயிர் கொடுத்திருக்கிறீர்கள்...நன்றி ஷாஜஹான்...

    ReplyDelete
  2. உலகுக்கு உயிர் கொடுப்பவர்கள் நீங்கள்... நாங்கள் ஊக்கம் மட்டுமே கொடுப்பவர்கள். நன்றி அகிலா.

    ReplyDelete
  3. மிகச் சிறப்பான கவிதை.

    ReplyDelete
  4. நன்றி வெங்கட். இதுதான் என் வலைப்பூவில் முதல் கவிதை என்று நினைக்கிறேன். அட... இதிலும் ஒரு சிறப்பு பாருங்கள். முதல் கவிதையே பெண்ணைப் போற்றி....

    ReplyDelete
  5. Azhahiya nadai.....arumaiyana pathivu..... By meera

    ReplyDelete