Thursday 5 March 2015

ஈரானிலிருந்து வந்த அழகான ஓவியம்



உலகப் புத்தகத் திருவிழாவில் வெளிநாட்டுப் பதிப்பாளர்களுக்கான அரங்கம் தனியாக இருந்தது. சிங்கப்பூரும் கொரியாவும் சிறப்பு விருந்தினர் நாடுகள் என்பதால், அந்நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான மேடை ஒன்றும் அங்கே இருந்தது. அதன் அருகே ஓர் இளம்பெண் நாற்காலியில் அமர்ந்திருக்கும் படம் ஒன்றை புகைப்படக்காரர் கொண்டுவந்து கொடுத்த படங்களில் பார்த்தேன். இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருந்த அந்தப் பெண்ணின் முகம் அவ்வளவு அழகு. மிக மிக மெலிதான புன்னகை தவழும் சாந்த முகத்துடன் ஒரு பதுமையைப் போல அமர்ந்திருந்தார். வயது 16 முதல் 18க்குள் இருக்கலாம். யார் இவர், எதற்காக அமர்ந்திருக்கிறார் என்ற கேள்வி ஒருநாள் முழுக்க உள்ளுக்குள் இருந்துகொண்டே இருந்தது. மறுநாள் தேடிப்போய் அவரைச் சந்தித்து உரையாடினேன். அவர் ஈரானிலிருந்து வந்த ஓவியர். அவருடைய ஓவியங்கள் சிலதைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்.


ஓ... ஈரானா... நான் மஜீதியின் திரைப்பட ரசிகன் என்றதும் எழுந்து நின்று இயல்பாக பேச ஆரம்பித்து விட்டார். ஆங்கிலம்தான் பிரச்சினையாக இருந்தது. ஒற்றை ஒற்றை வார்த்தை பதில்களை மட்டுமே அவரால் தர முடிந்த்து.


ஆண்டுதோறும் திருவிழாவில் ஈரான் கலந்து கொள்கிறது. இந்த முறைதான் ஒரு பெண்ணைப் பார்த்தேன். ஈரானில் ஓவியர்கள் உண்டு என்பதே எனக்கு வியப்புதான். அந்த வியப்பை உறுதி செய்தன இந்த ஓவியங்கள். மனித முகங்கள் மிக அரிதாகவே இருந்தன. ஒன்றே ஒன்றில் மட்டும்தான் அப்ஸ்ட்ராக்ட் முறையில் ஒரு பெண் முகம்.


ஈரானில் கலகக்குரல் ஓவியர்கள் உண்டா, அரசு எப்படிப் பார்க்கிறது என்ற கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை, அல்லது பதில் அளிக்க விரும்பவில்லை. Farshchian என்பவர்தான் ஈரானின் புகழ்மிக்க ஓவியர் என்று தெரிவித்தார்.


உங்கள் ஓவியங்களை இங்கே விற்பனைக்காக வைத்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, ஊஹும், இது பார்ப்பதற்கு மட்டுமே. இந்தியர்கள் வாங்க விரும்புவதில்லை, பார்க்க மட்டுமே விரும்புகிறார்கள் என்றார். ஈரானில் விற்பனை ஆவதுண்டா என்றதற்கு யெஸ்... என்று விரிந்த புன்னகயை பதிலளித்தார்.


உங்களைப் படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன். ப்ளீஸ் வேண்டாமே என்று கூறிவிட்டார். ஏற்கெனவே எடுக்கப்பட்ட அவருடைய படம் என்னிடம் இருக்கிறது. இருந்தாலும் அவருடைய கருத்துக்கு மதிப்பளித்து படத்தை வெளியிடாமல் தவிர்க்கிறேன்.

அப்புறம்... மனதுக்குள் உறுத்திக்கொண்டிருந்த, கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்டேன் - உங்கள் வயது என்ன? 21 என்றார். என் மகளினும் சிறியவர் நீங்கள் என்று கூறிவிட்டு மகிழ்ச்சியாக விடைபெற்றேன்.

அந்த இளம் ஓவியரின் பெயர் ஜைனப். ஓவியங்கள் பிடித்திருந்தால் ஒரு பாராட்டு அஞ்சல் அனுப்புங்கள் - zeinababdi1372@gmail.com

2 comments:

  1. அருமையான ஓவியங்கள். அதிலும் இரண்டாவது ஓவியம் ரொம்பவும் பிடித்தது.

    ஓவியருக்கு எனது பாராட்டுகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  2. ஓவியர் பாராட்டிற்கு உரியவர்
    பாராட்டுவோம்
    தங்களுக்கும் மனமார்ந்த நன்றி நண்பரே

    ReplyDelete