Sunday, 26 February 2012

உலகப் புத்தகக் கண்காட்சி - 26-2-12

முதல்நாள் என்பதால் நேற்று வேலை முடிந்து பிரகதி மைதானில் இருந்து புறப்படும்போது மணி 3-15. நான்கு மணிக்கு வீடு சேர்ந்து, விடிகாலையில் உறக்கம் பிடித்து, புத்தகக் குவியல்களின் கனவுகளுக்கு இடையே தூங்கியதாய் திருப்தி செய்துகொண்டு மீண்டும் வந்தாயிற்று.

வழக்கம்போல குடும்பமும் முதல்கட்ட புத்தக வேட்டைக்குத் துணையாய் வந்து விட்டது. வழக்கம்போல காலையில் தமிழ்க் கடைகளை சுற்றிவிட்டு வருவது என் வழக்கம். எனவே அவர்களுடன் சென்றேன்.

 

சந்தியாவையும் சாந்தாவையும் சந்தித்துவிட்டு ...


மேற்கிலிருந்து வந்து இங்கே வேரூன்றிய மதத்தின் நூல்களை தெற்கிலிருந்து வடக்குக்குக் கொண்டு வந்திருக்கும் இஸ்லாமிக் பவுண்டேஷன் டிரஸ்ட் கடையையும் கவனித்து விட்டு....


அப்படியே கிழக்காகச் சென்று ...


பாரதிக்குப் பதவிசாய் வணக்கம் கூறி


காலத்தின் சுவடைப் பார்த்து விட்டு ....


புதுயுகம் படைக்கும் புரட்சிக் கடையில் புன்னகைத்து விட்டு...

திரும்புகையில் காலச்சுவடின் கண்ணனிடம் கதைத்துக் கொண்டிருந்த முத்துலட்சுமி. காலையிலேயே வந்து வேட்டையை முடித்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது சின்ன மகள் வந்து, யாரோ அங்கே உங்கள் வலைபதிவு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றாள். யாரந்த முகமறியா அறிமுகங்கள் என்று யோசிக்கும்போதுதான் முத்துலட்சுமி சொன்னார் - பதிவர்கள் சந்திக்கத் திட்டம் போட்டதாகவும், தன் நண்பர்கள்தான் என்றும்.

இன்றைய அறிமுகங்கள் மகிழ்ச்சி தருபவை - வெங்கட், திருமதி வெங்கட், சரவணன் என்கிற கலாநேசன், சிறுமி ரோஷ்னி...


நன்றி பதிவுலகவாசிகளே... உங்கள் நட்பும் எழுத்துத் தொடர்பும் தில்லியை விட்டு நாம் சென்ற பிறகும்கூட தொடரட்டும்...

வலைபதிவர்கள் பலர் வம்பு பதிவர்களாக இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் வம்பு பதிவர்கள் உள்பட வலைபதிவர்கள் பலரும் வாசகர்களாக இருக்கிறார்கள். இருந்துதானே ஆக வேண்டும்... நல்ல வாசகனாக இல்லாதவன் எழுத்தாளன் ஆக முடியுமா...

வெங்கட்டின் வலைபதிவை சிலமுறை பார்த்திருக்கிறேன். வேலைபளுவால் அதிகம் பார்க்க முடியவில்லை. முத்துலட்சுமி கூறிய விவரங்களிலிருந்து சீக்கிரம் அதையெல்லாம் படித்து முடித்துவிட வேண்டும் என்று ஆவல். புத்தகக் கண்காட்சி முடிந்து, அடுத்த மாத உத்தேச தமிழகப் பயணமும் முடியட்டும்...

கடமை அழைத்ததால் நண்பர்களுடன் உரையாடலை முறித்துக்கொண்டு விரைவாக சில நூல்களை மட்டும் வாங்கிக்கொண்டு வந்தாயிற்று. வேலை இடைவேளைகளில் இந்தப் பதிவும் எழுதத் துவங்கியாயிற்று.

இன்று வாங்கிய நூல்கள் -
இவான் - விளதிமிர் பகமோலவ்
சூதாடி - தஸ்தயோவ்ஸ்கி
புகழ்பெற்ற மூன்று கதைகள் - முல்லை முத்தையா
சிறகுகள முறியும் - அம்பை
காட்டில் ஒரு மான் - அம்பை
ஆதியில் பெண் இருந்தாள் - மரிஜா ஸ்ரெஸ்
புதிய சலனங்கள் - சிறுகதைத் தொகுப்பு
பிராயச்சித்தம் - லா.ச.ரா.
மகாகவி பாரதியார் - வ.ரா.
சென்னையின் கதை - கிளின் பார்லோ
உயரப் பறத்தல் - வண்ணதாசன்
பொம்மைக்காரி - பாவண்ணன்
சோ. தர்மன் கதைகள் - சிபிச்செல்வன் தொகுப்பு

மகள்கள் ஆங்கிலப் புத்தகங்களைத் தேடிப் புறப்பட்டிருக்கிறார்கள். சுமார் 2000 ரூபாய்க்கு வாங்கி விட்டதாகத் தெரிகிறது. பட்டியலை நாளை பார்ப்போம்.

மையக் கருத்து அரங்கில் சாகிப் பீபி ஔர் குலாம் திரைப்படம் - 1962, அப்ரார் ஆல்வி இயக்கத்தில் குரு தத், மீனா குமாரி, வஹீதா ரஹ்மான் நடித்தது - ஓடிக் கொண்டிருக்கிறது.



அரங்கின் உள்ளே இந்த சிற்பத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வங்கத்தின் தேபபிரதா சக்ரவர்த்தி வடிவமைத்தன் நகல் இங்கே உருவாக்கப்பட்டு இருக்கிறது. சிற்பம் என்னைக் கவர்ந்தது என்றாலும் எதற்காக இங்கே என்று புரியவில்லை. நண்பர்களிடம் கேட்டபோது, திரையரங்கில் கியூவில் காத்திருக்கும் மக்களை சுட்டுகிறது என்றார்கள். யோசித்தபோது இருக்கலாம் என்று தோன்றியது. எங்கள் கால டாக்கீசின் முன் மூங்கில்களைக் கட்டி அமைத்த தடுப்புகளில் காத்திருந்த மக்களின் நினைவு வந்தது.  அப்படியானால் இங்கே இருப்பது பொருத்தம்தான். இல்லையா நண்பர்களே...

மீண்டும் நாளை




Saturday, 25 February 2012

உலகப் புத்தகக் கண்காட்சி - 25-2-12


உலகப் புத்தகக் கண்காட்சி - 25-2-12


காலை 10 மணிக்கு நடைபெற்ற துவக்க விழாவில் அமைச்சர் கபில் சிபல், வண்ண பலூன்களைப் பறக்கவிட்டு அதிகாரபூர்வமாக கண்காட்சியைத் துவக்கி வைத்தார். 1972இல் துவங்கி இருபது உலகப் புத்தகக் கண்காட்சிகளை நடத்தி முடித்திருக்கும் நேஷனல் புக் டிரஸ்ட், இதை ஆண்டுக்கொரு முறை நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என்றார் அமைச்சர். என்னைப் பொறுத்தவரை இது வியப்புக்குரிய அறிவிப்பு.
கடந்த புத்தகக் கண்காட்சியின்போது இதே வேண்டுகோள் முன்வைக்கப்பட்டபோது, ஆண்டுதோறும் நடத்துவதெல்லாம் சாத்தியமில்லை என்று அவர் கூறியது நினைவுக்கு வருகிறது. ஏனென்றால், அவருடைய அமைச்சகம்தான் கண்காட்சிக்கு மானியம் வழங்க வேண்டும்.

நன்றி தெரிவித்துப் பேசிய இயக்குநர் சிக்கந்தர், ஆண்டுக்கொருமுறை உலகப் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று அமைச்சர் அறிவித்ததற்கு நன்றி கூறினார். இது அவருடைய சாதுர்யமா அல்லது அமைச்சர் தனியாக அவரிடம் முன்னரே கூறியதன் விளைவா என்பதை அவருடன்பேசினால்தான் தெரியும்.



எனக்குத் தெரிந்த 25 ஆண்டுகளில் முதல்முறையாக தமிழர் ஒருவர் என்பிடியில் இயக்குநராக வந்திருக்கிறார்.

மேலும், ஆண்டுக்கு ஒருமுறை இவ்வளவு பிரம்மாண்ட கண்காட்சியை நடத்தும் அளவுக்கு நேஷனல் புக் டிரஸ்டிடம் மனித ஆற்றல் வளம் உள்ளதா என்பது ஒரு கேள்வி. ஆண்டுதோறும் குறைந்தது இரண்டு மாதங்கள் முழு அலுவலகமே இதில் மூழ்கியிருக்க இயலுமா... பதிப்பாளர்கள் இதற்கு ஆர்வம் காட்டுவார்களா... பிரகதி மைதானை நிர்வகிக்கும் சர்வதேச வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் ஏற்கெனவே என்பிடி மீது பொறாமையில் இருப்பதாக தகவல்... ஆண்டுதோறும் என்றால் ஐடிபிஓ எப்படி இதை ஜீரணிக்கும்...




சிறப்பு விருந்தினர் ஒடிஷாவைச் சேர்ந்த எழுத்தாளர் மனோஜ் தாஸ். குழந்தைகள் அரங்கை இவர்தான் திறந்து வைத்தார். குழந்தைகள் அரங்கில் நாடகங்களும் இன்னபிற நிகழ்ச்சிகளும் தொடர்ந்தன. ஒன்பது நாட்களும் அங்கே கொண்டாட்டம்தான்.

எது எப்படியோ, கண்காட்சி துவங்கி விட்டது. முதல் நாள் என்பதால் கூட்டம் அதிகம் இல்லை. மதியத்துக்கு மேல் கொஞ்சம் களை கட்டியது. 


தபன் சின்ஹா 50 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய காமிரா

மையக் கருத்து சினிமா என்பதால் அதற்கான சிறப்பு அரங்கில் கொஞ்சம் அதிகமாக மக்களைப் பார்க்க முடிந்தது. இங்கே இருக்கும் நூல்கள் காட்சிக்கு மட்டுமே, விற்பனைக்கு அல்ல. ஒரு பயாஸ்கோப் வைத்திருக்கிறார்கள்... நீங்கள் விரும்பினால் கீழே உட்கார்ந்து பெட்டியின் கண்ணில் கண் வைத்து பயாஸ்கோப் அனுபவம் பெறலாம்.


பாரு பாரு நல்லாப் பாரு பயாஸ்கோப்பு படத்தைப்பாரு

தமிழ்ப் புத்தகக் கடைகளுக்குச் சென்று வந்தேன். இந்தமுறை கிழக்கு பதிப்பகம் கடையில் எதையும் விற்கப்போவதில்லையாம்... ஆர்டரை எடுத்துக்கொண்டு அனைத்தையும் அஞ்சல்வழி அனுப்புமாம்... கண்காட்சியில் இருக்கும் நூல்கள் பார்வைக்கு மட்டுமாம்... ஒருவேளை கடைசி இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்போது, புத்தகங்களை திருப்பி எடுத்துச் செல்வதற்குப் பதிலாக விற்றுவிட்டுப் போகலாம். கிழக்கு பத்ரி இன்னும் என்னென்ன செய்வார் என்று யூகிக்க முடியவில்லை.

சந்தியா பதிப்பகம் தமிழ்-தமிழ் அகராதி, புதுமைப்பித்தம் முழுத் தொகுப்பு போன்ற தடிதடியான நூல்கள் பலதும் வைத்திருக்கிறது. வண்ணதாசன், கலாப்ரியா நூல்களும் நிறையக் கண்டேன். காலச்சுவடு வழக்கம்போல நிறைய நூல்களை வைத்திருக்கிறது. இன்று அவர்களின் நூல்வெளியீட்டு விழா தமிழ்ச் சங்கத்தில் இருப்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறை...ய்...ய நூல்களுடன் வந்திருக்கிறது. பதிப்பாளர் சங்கத்தில் யாரையும் காணவில்லை. சாந்தா பதிப்பகத்தில் பத்துப் பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து சந்தித்து வரும் இளைஞர் மதியம் வரை வந்து சேரவில்லை. ஒருவேளை இன்று வருவார் போல... இஸ்லாமிக் டிரஸ்ட் கடையில் இஸ்லாமிய நூல்கள் நிறைய அடுக்கியிருக்கிறார்கள்.

பாரதி புத்தகாலயத்திய் புத்தகம் பேசுது மட்டும் எடுத்து வந்தேன். அங்கே நான் வாங்கக்கூடிய நூல்கள் நிறையவே இருக்கின்றன. கடந்த ஆண்டு எட்டாயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கியதாக நினைவு. இந்த ஆண்டு என்ன ஆகப்போகிறதோ தெரியவில்லை.


வழக்கம்போல இந்த ஆண்டும் புத்தக விழிப்புணர்வு ஊர்வலம்... 1000 மாணவர்கள் கோஷ அட்டைகளைப் பிடித்தபடி மைதானத்துக்குள் ஊர்வலம் வந்தனர். எனக்குப் பிடிக்கும் என்றாலும் புரியாததில் இதுவும் ஒன்று - பிரகதி மைதானில் இருப்பவர்கள் எல்லாரும் புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், வாங்க வந்த ஆர்வலர்கள்தான். அப்புறம் யாருக்கு இவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...



சரி...சரி போகட்டும்... குழந்தைகளுக்கு இலவச அனுமதியும் ஆரஞ்சு வண்ணத் தொப்பியும் கிடைத்தது. பிஸ்கட், குளிர்பானங்களும் கிடைத்திருக்கும். அந்த மட்டுக்கு மகிழ்ச்சிதான். மீண்டும் நாளை.


Thursday, 23 February 2012

20ஆவது உலகப் புத்தகக் கண்காட்சி

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தில்லியில் நடைபெறும் உலகப் புத்தகக் கண்காட்சி மீண்டும் வந்து விட்டது.


2012 பிப்ரவரி 25 முதல் மார்ச் 4 வரை பிரகதி மைதானில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நாடெங்குமிருந்து 1400 புத்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன.  மொத்தம் பதினான்கு அரங்குகளில் கண்காட்சி நடைபெறும்.

தமிழகத்திலிருந்து பங்கேற்கும் நிறுவனங்களில், தமிழ் நூல்கள் வைத்திருக்கும் கடைகள் 10ஆம் எண் அரங்கில் அமைந்திருக்கும். அவற்றின் கடை எண்களின் விவரம் கீழே.

நியூ செஞ்சுரி புக் ஸவுஸ் - கடை எண் 25
பாரதி புத்தகாலயம் - கடை எண் 22
காலச்சுவடு - கடை எண் 23
கிழக்கு பதிப்பகம் - கடை எண் 21
பதிப்பாளர் விற்பனையாளர் சங்கம் - கடை எண் 24

சாந்தா பதிப்பகம் - சிறிய கடை எண் 16
சந்தியா பதிப்பகம் - சிறிய கடை எண் 14
இஸ்லாமிக் பவுண்டேஷன் டிரஸ்ட் - சிறிய கடை எண் 13

இது தவிர, நேஷனல் புக் டிரஸ்ட் பல அரங்குகளில் கடைகள் அமைத்திருந்தாலும், ஒரு அரங்கில் மட்டுமே தமிழ் மற்றும் இதர மொழி நூல்கள் கிடைக்கும். சாகித்ய அகாதமி நிறுவனமும் பிராந்திய மொழிகளுக்கென தனி கடை அமைத்திருப்பதாகத் தெரிகிறது. இந்த நிறுவனங்களின் கடை விவரம்

நேஷனல் புக் டிரஸ்ட் - அரங்கம் 14 - கடை எண் - 70-79
சாகித்ய அகாதமி - அரங்கம் 11 - கடை எண் 323-324

10ஆம் எண் அரங்கம் மெட்ரோ நிலைய நுழைவாயில் வழியாக வந்தால் மிகவும் பக்கத்தில் இருக்கிறது.  உச்சநீதிமன்ற சிவப்பு விளக்குக்கு எதிராக உள்ள 8ஆம் எண் வாயில் வழியாக வந்தால் நேராக நடக்க வேண்டும். பெரிதாக அமைக்கப்பட்டுள்ள குளத்தின் இடப்புறம் 10ஆம் அரங்கம்.

உங்கள் வசதிக்காக வரைபடம் கீழே - கறுப்பு வண்ணக் கட்டத்தில் இருப்பது 10ஆம் அரங்கம் -


அனைத்து நிறுவனங்களும் நூல்களின் விலையில் சீராக 10 சதவிகிதம் கழிவு தர வேண்டும் என்பது அமைப்பாளர்களின் நிபந்தனை. சில நிறுவனங்களிடம் அதற்கும் அதிகமாகக் கழிவு பெறுவது உங்கள் திறமை....


இலட்சக் கணக்கான நூல்களைக் கண்டு நூல் விரும்பிகள் மலைத்தும் மகிழ்ச்சியில் திளைத்தும் போவீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

திரைப்பட ஆர்வலர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. இந்தியத் திரைப்படங்கள் உருவான நூறாவது ஆண்டு நெருங்குவதை முன்னிட்டு இந்தப் புத்தகக் கண்காட்சியின் மையக் கருத்து - நூறாண்டை நெருங்கும் இந்திய சினிமா.

இதற்காக 7ஆம் எண் அரங்கில் தனியாக கண்காட்சி நடைபெறுகிறது. திரைப்படங்கள் தொடர்பான நூல்கள் பல மொழிகளில் காட்சிக்கு இருக்கும். அவை விற்பனைக்கு அல்ல. பதிப்பாளர்கள் விரும்பினால் அந்த நூல்களின் பதிப்புரிமை பெற சம்பந்தப்பட்ட பதிப்பாளர்களை அணுகலாம்.
இதில் மகிழ்ச்சியான செய்தி என்ன என்று கேட்பவர்களுக்கு...
தினமும் ஒரு திரைப்படமும் திரையிடப்படுகிறது - அதாவது, இலக்கியத்திலிருந்து திரைக்கு வந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு ஏழு திரைப்படங்கள் உண்டு. தமிழர்களின் மகிழ்ச்சிக்கு தண்ணீர் தண்ணீர் -


திரையிடப்படும் படங்கள் மற்றும் நேரம் -
25 பிப்ரவரி சனிக்கிழமை மாலை 5.30 - பதேர் பாஞ்சாலி -வங்க மொழி
26 பிப்ரவரி ஞாயிறு மாலை 5.30 - சாஹிப் பீபி ஔர் குலாம் - இந்தி
27 பிப்ரவரி திங்கள் மாலை 4.00 மணி - உம்ரோ ஜான் 1981ஆம் வருடத்தியது
28 பிப்ரவரி செவ்வாய் மாலை முற்பகல் 11.30 - தேவதாஸ் - இந்தி - 1936ஆம் வருடத்தியது
28 பிப்ரவரி செவ்வாய் மாலை 5.30 - மால்குடி டேஸ் - இந்தி தொலைக்காட்சித் தொடர்
29 பிப்ரவரி புதன் மாலை 5.30 - தண்ணீர் தண்ணீர் - தமிழ்
1 மார்ச் விழாயன் மாலை 5.30 - ஹலோதியோ சொரயே பாவதான் காய் - அசாமியா
2 மார்ச் வெள்ளி மாலை 5.30 - சூரஜ் கா சாத்வான் கோடா - இந்தி
3 மார்ச் சனிக்கிழமை மாலை 5.30 - மாதி மாய் - மராட்டி
4 மார்ச் ஞாயிறு நண்பகல் 12.00 - சாருலதா - வங்கமொழி

உம்ரோ ஜான் தவிர அனைத்துத் திரைப்படங்களுக்கும் ஆங்கில சப்டைடில் இருக்கும் - ஒருவேளை உம்ரோ ஜானுக்கும் இருக்கலாம்.
திரையிடுவது தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம்

இவை தவிர திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் அமர்வுகள், நூல் வெளியீடுகள் போன்ற நிகழ்ச்சிகளும் நாள் முழுதும் நடைபெறும். இவை குறித்து மேலும் விவரம் அறிய அஞ்சல் அனுப்பினால் பிடிஎப் வடிவில் சிறு பிரசுரம் அனுப்ப இயலும்.

பத்து நாட்களும் புத்தகக் கண்காட்சியில் கழிக்கும் வாய்ப்பு மீண்டும் எனக்குக் கிடைத்திருக்கிறது. நேரம் கிடைத்தால் சுவாரசியமான புகைப்படங்களை பதிவில் காணலாம்.

வாசிப்பை நேசிப்போம்.


Tuesday, 3 January 2012

பண்பாட்டு அதிர்ச்சி - 2


தில்லியில் கடும் கோடையில் நாளுக்கு ஒருமணி நேரமோ இரண்டு மணி நேரமோ மின்வெட்டு ஏற்பட்டாலே பத்திரிகைகள் கிழி கிழி என்று கிழித்து விடும். அடுத்த நாள் முதல்வர் எப்படியோ மின்சாரத்தை எங்கிருந்தாவது கடன்வாங்கி சமாளிப்பார். ஒருவாரம் நிலைமை சீரடையும். மீண்டும் ஓரிரு மணி நேர மின்வெட்டு.... மீண்டும் பத்திரிகைகளில் இருட்டடிப்பு பற்றிய செய்திகள். மீண்டும் சுதாரித்தல். இதுதான் தலைநகரம். அதுவும் நடுத்தர வர்க்கத்தின் பெரும்பாலோருக்கு இன்வெர்டர் இருப்பதால் மின்வெட்டு பெரியதொரு பிரச்சினையே இல்லை. எப்போதாவது மாதத்தில் ஒருமுறை முழுநாள் மின்தடை ஏற்பட்டால்தான் இன்வெர்டரும் காலியாகும். குளிர்காலத்தில் இந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால் தமிழகம்... பிரமிப்பாக இருக்கிறது. இவ்வளவு மின்வெட்டுகளையும் சந்தித்துக் கொண்டு முந்தைய ஆட்சியை சகித்துக் கொண்டு எப்படி இருந்தார்கள் தமிழர்கள் என்பது சத்தியமாக எனக்குப் புரியவில்லை. இப்போதும் நிலைமையில் ஏதும் மாற்றமில்லை. அவ்வளவு சீக்கிரத்தில் மாற்றம் ஏற்பட சாத்தியமும் இல்லை.
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நேரத்தில் என சுழற்சி முறையில் மின்வெட்டு. காலையில் இரண்டு மணி நேரம், பிற்பகல் இரண்டு மணி நேரம், மாலை அல்லது இரவில் இரண்டு மணி நேரம் - ஆக நாளுக்கு ஆறு மணி நேரம் நிச்சயமாக மின்சாரம் கிடைக்காது. ஒரே ஒரு ஆறுதல் - எப்போது மின்சாரம் இருக்காது என்பது முன்பே தெரிந்திருப்பது. இது நகரங்களில்.
கிராமங்களில் இந்தக் கவலை ஏதும் இல்லை. பல இடங்களில் நாளுக்கு 5 அல்லது 6 மணிநேரம்தான் மின்சாரம் இருக்கும் என்றான் என் நண்பன் ஒருவன்.
காலை 6-8 அல்லது 7-9 அல்லது மாலை 7-9 மின்தடை இருக்கின்ற ஊர்களில் வீடுகளில் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. யார் எந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தாலும், எந்தப் பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்பவர்களாக இருந்தாலும் காலை நேரம் முக்கியமானது, பரபரப்பானது, இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்களுக்கோ மிகமிக முக்கியமானது. அதேபோல மாலை மற்றும் இரவு நேரங்களில் மாணவர்கள் எப்படிப் படிக்க முடியும்
இன்று தமிழகப் பெண்கள் தமிழ்ப் பாரம்பரியப் பெண்களாக மாறி விட்டார்கள் என்று சொல்லலாமா... பின்தூங்கி முன் எழுகிறார்களோ....
இந்தப் பிரச்சினையில் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்று தோன்றுகிறது. அதுவும் வேலைக்குப் போகிற, மணமான பெண்களுக்கு இன்னும் சிரமம். வேலைக்கும் போகிற, குழந்தைகளும் இருக்கிற பெண்களுக்கு மிக மிக சிரமம்.
ஆனால் பெண்கள் இதை உணர்ந்தவர்களாக இருக்கிறார்களா என்று கேட்டால்... ஊஹூம்... உணர்வதெங்கே, இப்படியொரு சிந்தனைகூட அவர்கள் மத்தியில் இருப்பதாகத் தெரியவில்லை. ஏற்கெனவே இரட்டைச் சுரண்டலுக்கு ஆளாகும் பெண் வர்க்கத்தினரின் வேலைப் பளு, ஆட்சியாளர்களின் திறனின்மையால் மேலும் அதிகரித்திருக்கிறது. ஆனால் யாரும் இதன் பரிமாணத்தைப் புரிந்திருப்பதாகத் தெரியவில்லை.
அதனினும் பெரிய அபாயமாக இப்போது தெரிவது - கூடங்குளம் வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்கிற நடுத்தரவர்க்க மனப்பான்மை. நான் போன ஊர்களில் எல்லாம் யாரேனும் ஒருவர் இப்படிக் கூறுவதைக் கேட்டு அதிர்ந்து வருகிறேன். ஓரிருவருடன் விவாதித்துப் பார்த்தேன். விவாதங்களோ உண்மைகளோ அவர்களுடைய மனப்பதிவுகளை மாற்ற முடியாது என்பது புரிந்து போனபின் விவாதிப்பதை விட்டு விட்டேன்.
கூடங்குள எதிர்ப்பாளர்களைவிட கூடங்குள ஆதரவாளர்கள் உண்மையிலேயே அபாரமாக பிரச்சாரம் செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதுவும் கோவை-திருப்பூர்-ஈரோடு போன்ற தொழில்துறை மாவட்டங்களில் இந்தப் பிரச்சாரம் தீவிரமாகவே பயன் தந்திருக்கிறது. அப்துல் கலாம் இவர்களுடைய வாதங்களுக்கு மிக அருமையான கருவியாகி விட்டார். அப்துல் கலாம் விஞ்ஞானி அல்ல என்று யாரும் சொன்னால் உதை வாங்காமல் தப்பிப்பது பெரிய விஷயம்தான்.
திருப்பூரில் கூடங்குள ஆதரவு உண்ணாவிரதம் நடைபெற்றது. உண்ணாவிரதப் பந்தலுக்கு அருகே வைத்திருந்த முக்கிய விளம்பரப் பலகையில் அப்துல் கலாம் சிரித்துக்கொண்டே சொல்கிறார் - கூடங்குளம் அணுஉலை மிகவும் பாதுகாப்பானது.
அப்துல் கலாம் என்கிற நேர்மையான மனிதர் மீது மக்களுக்கு இருக்கிற மோகமும், அதன் காரணமாக அவர் கூறுவதை நம்புவதும் ஒருபக்கம் இருக்கட்டும். கூடங்குளம் வந்தால் தமிழகத்தின் மின்வெட்டுப் பிரச்சினை தீர்ந்து விடும் என்ற பொதுக்கருத்து எப்படி உருவானது என்பது புரியவில்லை. அதுவும் எந்த விவாதமும் இன்றி இக்கருத்து மக்கள் மனங்களில் நிலைபட்டு விட்டதாகத் தோன்றுகிறது. கூடங்குளம் மின்நிலையத்தில் கிடைக்கும் மின்சாரத்தில் தமிழகத்திற்கு 930 மெவா தருவதாக இருந்ததை வியாபாரி மன்மோகன்சிங் கொஞ்சம் கொசுறு சேர்த்து 1000-ஆகத் தருவதாக அறிவித்திருக்கிறார்.
2009 கணக்கின்படி, தமிழகத்தின் நிறுவப்பட்ட மின்உற்பத்தித் திறன் 10200 மெ.வா. - இது மத்திய அரசிடமிருந்து பெறுவதையும் சேர்த்து. காற்றாலை போன்ற புதுப்பிக்கப்பட்ட ஆற்றல்வளங்கள் வாயிலாகக் கிடைப்பது 4000 மெ.வா. இதே கணக்கின்படி சராசரியாக 12 சதவிகிதப் பற்றாக்குறை உள்ளது. கூடங்குளம் இயங்கினாலும் முதல் யூனிட்டில் கிடைக்கப்போவது 1000 மெ.வா. ஆறு மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது யூனிட்டிலிருந்து இன்னொரு 1000 மெ.வா. ஆக, இரண்டு யூனிட்டுகளும் இயங்கத் துவங்கினாலும், தமிழகத்துக்குக் கிடைக்கப்போவது 1000 மெவா மட்டுமே. அதையும் தமிழக அரசு என்ன கிராமப் புறங்களுக்கா வழங்கப்போகிறது... நகரங்கள்தானே அனைத்து அரசுகளுக்கும் செல்லப்பிள்ளைகள்... நகரங்களுக்குக் கிடைத்ததுபோக மிச்ச சொச்சம்தானே இதர பகுதிகளுக்குக் கிடைக்கும்.
இவை பற்றியெல்லாம் பெரிய விவாதம் எதுவும் இல்லாமலே கூடங்குளம் வந்தால் மின்பிரச்சினை தீரும் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டு விட்டது. பாதிப்புக்கு ஆளாகக்கூடிய பகுதி மக்களின் வேதனைகளோ குரல்களோ இவர்களை எட்டவும் இல்லை, எட்டினாலும் இவர்களை அது பாதிக்கவும் செய்யாது. இதுதான் எதார்த்த உண்மை.
சரி, ஒரு வேளை கூடங்குளம் என்பது கோவைக்கு அருகே இருக்கிற வாலாங்குளம் அல்லது பழனி அருகே இருக்கிற மடத்துக்குளம் ஆக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். ஊஹூம். ஒன்றும் ஆகியிருக்காது. கூடங்குளம் பகுதியில் போராடுகிற மக்கள் திரள் அளவில் பாதி என்ன, பத்து சதவிகிதம்பேர் கூட இங்கே போராட முன்வந்திருக்க மாட்டார்கள்.
அமராவதி ஆற்றை ஒட்டி அமைந்திருக்கிற ஏராளமான காகித ஆலைக் கழிவுகளால் ஆற்று நீரும் சுற்றுப்பகுதிகளும் பலப்பல பத்தாண்டுகளாக மாசுபட்டு வந்தபோதும் அதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். மதுக்கரை சிமென்ட் ஆலையிலிருந்து புகையுடன் கரியும் வெளியேற, வீடுகள் எல்லாம் காசில்லாமலே சாம்பல் வண்ணம் பூசிக்கொண்டபோதும் அதற்கெதிராக பெரும் போராட்டம் எதுவும் நிகழ்த்தாதவர்கள், திருப்பூரிலும் ஈரோட்டிலும் சாயப்பட்டறைகள் நொய்யலையும் சுற்றுப்பகுதிகளையும் முற்ற முழுக்க விஷமாக்கியபின்பும், சாயப்பட்டறைகள் மூடப்பட்டு வேலைகள் குறைந்து போனதற்காக வருந்துகிறார்களே அன்றி சுற்றுச்சூழல் மாசுக்காக வருந்தாதவர்கள் இந்தத் தொழில்துறை நகர மக்கள். இந்தப் பகுதியில் அணுமின் நிலையம் வந்திருந்தால் இவர்கள் நிச்சயம் அதற்கெதிராகக் குரல் எழுப்பியிருக்க மாட்டார்கள்.
இரும்பையும் இரும்புச் சாதனங்களையும் அதிகம் அதிகம் கையாண்டு இந்தத் தொழில்துறை நகர மக்களின் இதயங்களும் இரும்பாகி விட்டதோ...
இன்னுமொரு ஆச்சரியமும் எனக்கு உண்டு - இத்தனை மின்பிரச்சினைகளுக்கும் இடையே, இந்தப் பிரச்சினையால் முக்கியமாகப் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் மின்சாரம் கிடைத்த வேளைகளில் தொலைக்காட்சி மெகா தொடர்களில் எப்படி முழுகிக் கிடக்கிறார்கள்....
யாருக்கேனும் பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்.

Monday, 26 December 2011

சுந்தரம் பிஎஸ்சி. பி.எட்.


அவன் வயதை 25க்கும் 30க்கும் இடையே அவரவர் வசதிக்கேறப் மதிப்பிட்டுக் கொள்ளலாம். இஸ்திரி போடாத பேன்ட், கட்டம் போட்ட சட்டை, சுத்தமாகத் தலைசீவி எண்ணெய் தடவிய தலைமுடி.
ஹலோ, குட் மார்னிங்...
குட் மானிங் - எங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பதில் சொல்வோம்.
ஹவ் டு யூ டூ... தெளிவான ஆங்கிலத்தில் எங்களைப் பார்த்துக் கேட்பான்.
தாங்யூ - எங்களுக்குத் தெரிந்த மற்றொரு ஆங்கில வார்த்தையில் பதில் அளிப்போம். இந்த தாங்யூ கூட அவரவர் பின்னணியைப் பொறுத்த உச்சரிப்புக் கொண்டதாக இருக்கும்.
ஐயாம் வெய்ட்டிங் ஃபார் மை அப்பாயின்மென்ட் ஆர்டர் என்பான். அவ்வளவு நீள வாக்கியத்துக்கு எங்களால் அர்த்தம் புரிந்து கொள்ள முடியாது என்றாலும் கேட்டுக் கேட்டுப் பழகிப்போய் அதன் அர்த்தம் எங்களுக்கு மனப்பாடமாகி இருந்தது. எங்களுக்கு என்றால், என்னைப் போன்ற விடலைப் பருவச் சிறுவர்களுக்கு.
ஐஆம் சுந்தரம், பிஎஸ்சி பிஎட் என்பான். எஸ்... எஸ்... என்போம்.
1970களில் பிஎட் முடித்த ஆசிரியர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு அன்டிரெயின்ட் எனப்பட்ட, பிஎட் படிக்காத பட்டதாரிகளுக்கு பள்ளிகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவான காலம் அது. இவர்களில் பெரும்பாலானவர்கள் நிரந்தர ஆசிரியர்கள் ஆனார்கள்.
எங்கள் பள்ளிக்கும் இளைஞர்கள் நான்கு பேர் ஆசிரியர்களாக வந்தார்கள். இருவர் கணிதத்திற்கு, இருவர் அறிவியலுக்கு. அறிவியலுக்கு வந்தவர்கள் எங்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஆனால் கணிதத்திற்கு வந்தவர்களில் ஒருவர் அபார ஆங்கிலப் புலமையும் கணிதம் கற்பிக்கும் திறமையும் கொண்டவராக வாய்த்தார். மற்றொருவர் தமிழில் தீராத ஆர்வமும், சித்திரக் கலையில் வல்லுநராகவும் கணக்கைத் தமிழிலேயே புரிய வைப்பதில் சிறந்தவராகவும் இருந்தார். இளைஞர்கள் என்பதால் மாணவிகள் மத்தியில் ஈர்ப்பும் இருந்தது. தீராத தமிழார்வலர் பெண்கள் பக்கம் அதீதமாகவே கவனம் செலுத்துவதை நாங்கள் பொறாமையுடனும் வியப்புடனும் கவனித்து வந்தோம்.. ஆங்கிலப் புலமைக் கணக்காசிரியரோ சாமியார் என பெயர் எடுத்தார். கணக்கு என்றாலே காத தூரம் ஓடுகிறவனைக்கூட கணக்கில் பாஸ் மார்க் வாங்க வைத்தவர். அவரிடமிருந்து நாங்கள் ஒற்றை ஒற்றை ஆங்கில வார்த்தைகளாகக் கற்றுக் கொண்டு பரிசோதிக்க முயன்று கொண்டிருந்த காலத்தில்தான் சுந்தரம் எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தான்.
இட் அது பட் ஆனால் வாட் என்ன சே சொல்லு என்பதான ஆங்கிலப் புலமைகளை நாங்கள் அவன் பக்கம் விட்டெறிவோம். சிரிப்பான். இப்படிப்பட்ட நபர்களுக்கு எல்லா ஊர்களிலும் தரப்படும் பட்டம் அவனுக்கும் கிடைத்தது - பைத்தியம்.
இருந்தாலும் நாங்கள் உள்பட யாரும் அவனை சீண்டியதோ கோபமூட்டியதோ கிடையாது. காரணமாக இருந்தது அவனுடைய ஆங்கிலம். மென்மையான குரலில், அதே சமயம் தெளிவான உச்சரிப்பில் ஆங்கிலத்தில் பேசுவான். அண்ணா அமெரிக்கா சென்று அமெரிக்கப் பல்கலைக் கழகத்து மாணவர்களையே தனது ஆங்கிலப் புலமையால் வியப்பில் ஆழ்த்தியதான செய்தி எங்களை எல்லாம் ஆட்கொண்டிருந்த காலம். அதை அவனிடம் திருப்பிச் சொல்லுமாறு  கேட்போம். எனி சென்டென்ஸ் வில் நாட் எண்ட் வித் த வேர்ட் பிகாஸ் பிகாஸ் பிகாஸ் ஈஸ் எ கன்ஞக்சன்... எத்தனை முறை கேட்டாலும் எங்களுக்கும் சலிக்காது, அவனுக்கும் சலிக்கவில்லை என்பதும் அவன் எங்கள் மேல் கோபம் காட்டாததிலிருந்து தெரிந்தது.
எங்கேயும் தூங்குவான், செட்டியார் அல்லது ஐயர் அல்லது பாய் கடை முன் வந்து நிற்பான் - ஒரு குட் மார்னிங். அவன் புண்ணியத்தில் எங்கள் ஊர் பெட்டிக்கடை சாகுல் அமீது முதல் மளிகைக் கடை கருப்பசாமி செட்டியார் வரை எல்லாரும் குட் மார்னிங் கற்றுக் கொண்டார்கள். எந்தக் கடைக்குப் போனாலும் வெளியே மௌனமாக நிற்பான். டீக்கடைக்கார் டீ போட்டு நீட்டுவார். பேசாமல் ஓரமாக நின்று குடித்து விட்டு தாங்க் யூ சொல்லி விட்டு நடப்பான். பெட்டிக்கடைக்காரர் வாழைப்பழம் தருவார். ஓட்டல் வைத்திருந்த ஐயர் இலையில் இட்லி வைத்துத் தருவார். எல்லாருக்கும் ஒரே பதில் - தாங்க் யூ.
பஸ் ஸ்டாண்டில் ஏதேனும் ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டு தன் தோளில் மாட்டியிருக்கும் ஜவுளிக்கடை மஞ்சள் பையிலிருந்து தாள்களை எடுப்பான். சட்டைப் பாக்கெட்டிலிருந்து பென்சிலை எடுத்து கணக்குப் போட ஆரம்பிப்பான். எங்களுக்குத் தெரிந்திருக்காத ஏதேதோ சின்னங்கள் எல்லாம் பயன்படுத்தி ஏதேதோ கணக்குகள் போடுவான். நாங்கள் அவனுக்குப் பின்னால் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்போம்.
ஒருநாள் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது - உண்மையிலேயே இவன் கணக்கில் புலியா, எப்போதோ படித்த ஒரு கணக்கை தினமும் போடுகிறானா என்று. அன்று முதல் நேரம் கிடைத்த போதெல்லாம் நான் அவன் பின்னால் செல்லத் தொடங்கினேன். பஸ் ஸ்டாண்ட் எனும் புளியமரத்தடி பெஞ்சில், ரயில்வே ஸ்டேஷனின் பூவரச மரத்தடி பெஞ்சில், மூடிய கடையின் திண்ணையில் என அவன் எங்கே உட்கார்ந்து கணக்குப் போடுவதைக் கண்டாலும் நானும் பக்கத்திலோ பின்னாலோ நின்று கவனிக்கத் தொடங்கினேன். என் சந்தேகம் தீர்ந்தது. ஒரு நாள் போட்டுப் பார்த்த கணக்கை அவன் மறுநாள் போட்டுப் பார்த்ததை நான் பார்த்ததே இல்லை. உண்மையிலேயே கணக்குப் படித்தவன்தான், எதனாலோ மூளை குழம்பி விட்டிருக்கிறது என்று கண்டுபிடித்தேன். இதை என் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன். சிரித்தார்கள் அவர்கள் - ஆமா... இவரு பெரிய தாமஸ் ஆல்வா எடிசன் பாரு, கண்டு பிடிச்சுட்டாராம்... ஏண்டா, அவன் பேசற இங்கிலீசுல இருந்தே அவம் படிச்சவந்தான்னு புரியலையா ஒனக்கு...
இவனுக்கும் ஒருநாள் வேலை கிடைத்து விடும் என்று நான் நம்பினேன். அப்போது பைத்தியமும் தெளிந்து விடலாம். ஒருவேளை இவனே எங்கள் பள்ளிக்கும் ஆசிரியராகலாம். கற்பனை செய்து பார்த்தபோது ஆசிரியர் வடிவத்தில் அவன் பொருத்தமாகத் தோன்றவில்லை.
யாரிடமும் அவன் யாசகம் கேட்டதில்லை, .யாரும் அவனுக்கு் தேவையானதை அவன் கேட்காமலே வழங்கத் தயங்கியதும் இல்லை.
அவன் அழுக்காகவோ கிழிசலாகவோ ஆடைகள் அணியவில்லை. பல நாட்களில் வேட்டி சட்டை, சில நாட்களில் பேன்ட் சட்டை. மாறாமல் இருந்தது அவன் தோளில் போட்டிருந்த மஞ்சள் பை. ஊருக்குள் இருந்த யாரேனும் ஒருவர் அவனுக்கு பழைய ஆடைகளைக் கொடுக்கிறார்கள் என்பது எங்களுக்குப் புரிந்தது. பள்ளி முடியும் வரை காக்கி அரைக்கால் சட்டை தவிர பேன்ட் என்ற கனவே காண முடியாதவர்களாக இருந்த எங்களுக்கு இவன்மேல் கொஞ்சம் பொறாமைகூட இருந்ததுண்டு.
கோடை கால விடுமுறைக் காலங்களில் ஆற்றுநீரில் ஆட்டம்போட நாங்கள் போகும்போது அவனையும் ஆற்றில் பார்ப்பதுண்டு. ஆற்றுப் பாறைகளில் எப்படியும் சின்னச் சின்ன சோப்புத் துண்டுகள் கிடைக்கவே செய்தன. சிலர் மறுநாளுக்காக தனக்கு மட்டுமே தெரிந்த குழியில் மறைத்து வைத்து விட்டிருப்பார். பலர் மறந்து விட்டுச் சென்றிப்பார்கள். சிலர் சிறிய சோப்புத் துண்டுகளை இனியும் பயன்படுத்த முடியாது என்பதற்காக விட்டுச் சென்றிருப்பார்கள். பெரும்பாலும் கதர் கடையின் மஞ்சள் சோப்புகள். அவற்றைப் பொறுக்கி எடுத்து தன் ஆடைகளை சுத்தமாகத் துவைத்து மணலிலோ பாறையிலோ காய வைப்பான். குளிப்பான். பாதி உலர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு ஊருக்குள் வருவான். வருகிற வழியிலேயே ஆடைகள் உலர்ந்து விடும்.
இவனைப் போல் இருந்து விடுவது எவ்வளவு சுபலம் என்று பல சமயங்களில் எனக்குத் தோன்றும். பள்ளிக்குப் போக வேண்டியதில்லை, வீட்டுப் பாடம் இல்லை, டியூஷன் இல்லை, வாத்தியார்களிடம் அடி இல்லை, போலீஸ்-திருடன் விளையாட்டில் மறைந்திருந்தவனை அவன் அப்பாவோ அம்மாவோ ஆட்டத்தின் நடுவிலேயே காதைப் பிடித்து இழுத்துச் செல்லும் அபாயமில்லை. மேற்படிப்பு என்ன படிக்க வேண்டும் என்ற கவலையும் இல்லை. இப்படி எத்தனையோ இல்லைகள். ஆனால் அந்த சுலபமான வாழ்க்கை எனக்கு வாய்க்கவில்லை, எல்லாருக்கும் என்ன வாய்த்ததோ அதுவே எனக்கும் வாய்த்தது. படிப்பு, மேற்படிப்பு, வேலை தேடல், அலைச்சல், விரக்தி, தற்காலிக வேலைகள், ஊர்விட்டு ஊர் மாற்றங்கள்....
2011 டிசம்பர் 22
பஸ் ஸ்டாண்டில் இறங்கி சுற்றிலும் பார்த்து, என்னை வினோதமாகப் பார்க்கும் அறிமுகம் இல்லாத நபர்களின் பார்வையைப் பொருட்படுத்தாமல் சிகரெட்டைப் பற்ற வைத்து பழைய ஊரின் நினைவுகளை மீட்க முயன்று மேலே நடந்தேன்.
குட் மார்னிங் சார்...
குரலின் மென்மையில் அதிர்ந்து திரும்பினேன். கட்டம் போட்ட சட்டை, பேன்ட், தோளில் மஞ்சள் பை. ஹவ் டு யூ டூ சார்.
நொடியில் அவனை அடையாளம் காண முடிந்தது, அவன் பெயர் மட்டும் நினைவுக்கு வர மறுத்தது. கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அடக்கிக் கொண்டேன். நீ என்பதா, நீங்கள் என்பதா.....
பொத்தாம் பொதுவாக சௌக்கியமா என்றேன்.
நல்லா இருக்கேன் சார். வாத்தியார் சார் சன்தானே நீங்க என்றான். மறுபடியும் கண்ணீர் வர வைக்கிறான் இவன்.
சரியா கண்டுபுடிச்சுட்டீங்க...
சிரித்தான்.
நல்லா இருக்கீங்களா...
இருக்கேன் சார்...
மீண்டும் அதே சிரிப்பு.
உங்க பேரு மறந்துட்டேன்...
சுந்தரம் சார். சுந்தரம் பிஎஸ்சி பிஎட்.
சட்டைப் பைக்குள் கைவிட்டபோது கிடைத்த பத்து ரூபாயை நீட்டினேன். தாங்க் யூ என்ற படி வாங்கிக் கொண்டான்.
சே.... பாக்கெட்டில் கைவிட்டபோது ஏன் ஐம்பது ரூபாய் நோட்டோ நூறு ரூபாய் நோட்டோ வரவில்லை.... அட, அது போகட்டும். பர்ஸை எடுத்துப் பார்க்க விடாமல் செய்தது எது...
அவனுடைய ஆங்கிலமா இல்லை நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு என்னையும் ஒருவன் அடையாளம் கண்டு கொண்டான் என்ற அதிர்ச்சியா... தெரியவில்லை. 

Saturday, 24 December 2011

பண்பாட்டு அதிர்ச்சி - 1


வீரன் ஒருமுறைதான் சாகிறான், கோழையோ தினமும் சாகிறான் - இந்தப் பழமொழி ஏனோ நினைவு வந்தது பண்பாட்டு அதிர்ச்சி என்ற தலைப்பினை இட்டதும்.
தமிழகத்தை விட்டு தலைநகருக்குக் குடிபுகுந்தவர்கள் பெரும்பாலோர் பண்பாட்டு அதிர்ச்சியிலிருந்து தப்பியிருக்க முடியாது. அது ஒருமுறைதான் நிகழ்வது. ஆனால் தலைநகரிலேயே வசிக்க நேர்ந்தவர்கள தாயகம் வரும் ஒவ்வொரு முறையும் பலமுறை அதிர்ச்சிகளுக்கு ஆளாக நேருகிறது - மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது ஆனால் எனக்கு.
நீ.....ண்.....ட பயணத்துக்குப் பிறகு ரயிலிறங்கியதும் முதலில் சந்திப்பது பேருந்துகளில் ஏற்பட்ட - ஏற்படுகிற மாற்றங்கள். என்னைப் பொறுத்தவரை இதுதான் முதல் அதிர்ச்சி. அடுத்து வீடு சேர்ந்ததும் மின்வெட்டு அதிர்ச்சி... அப்புறம் தொலைக்காட்சித் தொடர்களின் அதிர்ச்சி...
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒருநாளில் வந்திறங்கி ஊருக்கு பேருந்துப் பயணம் மேற்கொள்ளும்போது பஸ்களில் எல்லாம் வீடியோ. கவுண்டமணியும் செந்திலும் மண்டைத் தலையா... எருமைத் தலையா என்று செந்தமிழில் ஒருவரை ஒருவர் திட்டி பாசத்துடன் உதைத்துக் கொள்ளும் தமிழ் நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் காட்சிகளை ஒரு பஸ் விடாமல் எல்லாவற்றிலும் காணும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. அரசு பஸ்களும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. யார் போட்ட வழக்கோ, யார் தொடுத்த புகாரோ தெரியாது - வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது.
இப்போது வீடியோ இல்லாத குறையை இரண்டு மடங்காகத் தீர்ப்பது என முடிவு செய்து விட்டன பேருந்து நிறுவனங்கள். எந்தப் பேருந்தில் ஏறினாலும் உசுரே போகுது-வும் ஒய் திஸ் கொல வெறி டி என்றும் தொண்டை கமறும் குரலைக் கேட்டாக வேண்டிய தலைவிதி... அதிலும் எங்கே போக வேண்டும் என்று கேட்கிற நடத்துநரின் குரலும் போகிற இடத்தைச் சொல்கிற பயணியின் குரலும் அமுங்கிப் போகிற வகையில் உச்சஸ்தாயியில் தொம்தொம் என ஒலிக்கின்றன பாடல்கள். காலையில் பள்ளிக்குத் தேர்வு எழுதச் செல்லும் மாணவன் பேருந்தில் பயணம் செய்தால் அவன் காதில் நாள் முழுதும் இந்தப் பாடல் எதிரொலித்துக்கொண்டே இருக்கும் என்பது நிச்சயம். ஏன் இந்தக் இரைச்சல் வெறி தமிழகமே....
எங்கே போவதானாலும் அரசுப் பேருந்துகளில் மட்டுமே செல்வது என்ற எழுதப்படாத விதியை கடுமையாகப் பின்பற்றுபவனாக இருப்பதால் எனக்கு ஓரளவு இதிலிருந்து விடுதலை. அப்படியும் அரசுப் பேருந்துகள் சிலவற்றிலும் பாடல்கள் ஒலிக்கவே செய்கின்றன - சற்றே இரைச்சல் குறைவாக.
சில நேரங்களில் வேறு வழியே இல்லாமல் தனியார் பேருந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயமும் நேர்ந்து விடுகிறது. உதாரணமாக இரண்டு நாள் முன்பு திருப்பூரிலிருந்து ஈரோடு செல்ல நேர்ந்தது போல.
ஈரோடு செல்வதற்காக திருப்பூர் புதிய பேருந்து நிலையத்துக்கு நான் சென்ற போது பிற்பகல் 3.30 மணி. அரசுப் பேருந்து ஒன்று காலியாகக் காத்திருந்தது. ஏறி அமர்ந்து கொண்டேன். 5...10...15... நிமிடங்கள் கழிந்தன. ஒரு தனியார் பேருந்து அதிரும் ஸ்பீக்கர்களில் பாட்டுகள் ஒலிக்கப் புறப்பட்டது. இந்த பஸ்சில் அமர்ந்திருந்த எல்லாரும் சந்தோஷமாக ஏறிக்கொள்ள அது போய்விட்டது. நான் காத்திருந்தேன். 5...10...15 நிமிடங்கள் கழிந்தன. மற்றொரு தனியார் பஸ் வந்து நின்று பாட்டை அலற விட்டு என் பஸ்சுக்கு முன்னால் நின்று கொண்டது. முன் நிகழ்ந்தது போலவே இப்போதும் இந்த பஸ்சில் ஏறியவர்கள் ஓடிப்போய் அதில் ஏறிக்கொண்டார்கள். எனக்கு பைப்பர் கதை நினைவுக்கு வந்தது. இரைச்சல் பாடல்கள்தான் தமிழகப் பயணிகளை இழுக்கும் பைப்பரோ...
இந்த பஸ் லேட்டாகுங்க... என்று அந்த பஸ்காரர் சொன்னதற்கு தலையாட்டி விட்டு அப்படியே அமர்ந்திருந்தேன். அதுவும் போய்விட்டது. 5...10...15....
காக்கிச் சட்டை அணிந்த இருவர் தோளின்மேல் கைகளைப் போட்டுக்கொண்டே வந்தார்கள். ஒருவர் நானிருந்த பேருந்தில் ஏறி டிரைவர் ஸீட்டுக்கு மேலே ஏதோ ஒன்றை செருகிவிட்டு கீழே இறங்க இருவரும் மீண்டும் தோள்மீது கைபோட்டுக் கொண்டு மாயமாகி விட்டார்கள். ஓஹோ.... டிரைவர் வந்து விட்டார் எப்படியும் புறப்பட்டு விடும் என்ற நம்பிக்கை பிறந்தது.
இப்போது மூன்றாவது தனியார் பேருந்து வந்து நின்று அதுவும் போய் விட்டது. 5...10...15 நிமிடங்கள் யாரையும் காணவில்லை. குமுறலை அடக்கிக் கொண்டு கீழே இறங்கினேன். நேரக்காப்பாளர் - டைம்கீப்பர் என்பதன் தமிழாக்கமாக இருக்க வேண்டும் ... அபாரமான தமிழாக்கம்தான் - என்று போடப்பட்டிருந்த அறைக்குச் சென்றேன். ஒரு மணி நேரமாக காத்திருப்பது பற்றிச் சொன்னேன். ஒரு மாவட்டத் தலைநகருக்கும் மற்றொரு மாவட்டத் தலைநகருக்கும் இடையே ஒரு மணி நேரத்திற்கு அரசுப் பேருந்தே இல்லாமல் இருப்பது விந்தையாக இல்லையா என்று கேட்டேன்.
நேரக்காப்பாளர் அன்று மௌனவிரதம் போல.... பக்கத்தில் இருந்தவர் பேசினார். நான் காத்திருந்த பஸ்சுக்கு டிரைவர் வந்து விட்டாராம், கண்டக்டர் வரவில்லையாம், அதனால் அந்த பஸ் போகாதாம்...
சரி அடுத்த பஸ் எப்போது ...
அது ஐந்தரை மணிக்கு வரும்... அதான் முன்னாடி நிக்குதே பிரைவேட் அதுல போயிடுங்க என்று அருமையான ஆலோசனை கிடைத்தது.
போலாந்தாங்க, ஆனா கவர்மென்டு பஸ்சுல மட்டும்தான் போகணும்னுதான் இவ்வளவு நேரம் வெய்ட் பண்றேன் என்றேன். என்னங்க பண்றது கண்டக்டர் இல்லியே என்றார்.
சரி இதைப்பத்தி எங்க கம்ப்ளைண்ட் பண்ணணும், நம்பர் இருந்தா குடுங்க என்றேன். அதெல்லாம் எங்ககிட்ட இல்லேங்க... வந்தா வந்த டைமைக் குறிக்கிறதும் புறப்பட்டா புறப்பட்ட டைமைக் குறிக்கிறதும்தான் எங்க வேலை என்றார்.
அருமையான வேலைப் பகிர்வு முறை. ஒருவேளை மௌன விரதம் இருந்தவர் பேருந்துகளின் வருகிற நேரத்தையும், அழகாக பதிலளித்தவர் புறப்படுகிற நேரத்தைக் குறிப்பவருமாக இருக்கலாம். அரசுப் பேருந்துக் கழகங்கள் கடும் நஷ்டத்தில் இயங்குவதில் வியப்பேதும் இல்லை.
தலைவிதியை நொந்து கொண்டு தனியார் பேருந்தில் ஏறினேன். மீண்டும் ஒலித்தது ஒய் திஸ் கொல வெறி டி....
பண்பாட்டு அதிர்ச்சிகள் தொடரும் - பேருந்துப் பயணங்களுக்கு இடையே.
பி.கு. இந்தப் பதிவும் ஒரு அரசுப் பேருந்தில்தான் எழுதப்படுகிறது. திருப்பூர் - உடுமலை அரசுப் பேருந்து, 21 டிசம்பர் 3.30 மணி. பாட்டுகள் ஒலிக்காத இந்தப் பேருந்தின் ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் கோடானுகோடி நன்றிகள். 

Monday, 19 December 2011

அழைப்பிதழ்

அன்பு நண்பர்களே,
எங்கள் கனவு இல்லத்தின் திறப்பு விழா - புதுமனை புகு விழா - அழைப்பிதழ் கீழே. 





அன்புடையீர்
எல்லாம் வல்ல இறைவன் திருவருளாலும்
உங்கள் அனைவரின் அன்பான ஆதரவாலும்
அஜீமா ரஹ்மான் இல்லம்
என்னும் எமது கனவு இல்லத்தின்
திறப்பு விழா
28 டிசம்பர் 2011, புதன்கிழமை
காலை 10.30 மணிமுதல் பகல் 12.00 மணிக்குள்
உடுமலைப்பேட்டை, ஏரிப்பாளையம்
தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தின் பின்புறம்
ஆவணாண்டீஸ்வரர் லேஅவுட்-இல் 42ஆம் இலக்கத்தில் நடைபெற உள்ளது.

வருகை புரிந்து வாழ்த்த வேண்டுகிறோம்.

அன்புடன்
எஸ். அஜீமுன்னிஸா                     ஆர். ஷாஜஹான்
எஸ். ஜஹான் ஆரா                        எஸ். ஆமீனா

உங்கள் நல்வரவை நாடும் - சுற்றமும் நட்பும்


நண்பர்கள் அனைவரையும் இயன்றவரை நேரில் சந்தித்து அழைக்கத்தான் விரும்பினோம். ஆனால் தவிர்க்க இயலாத வேலைப்பளுவும் இதர பிரச்சினைகளும் இதை சாத்தியப்படுத்தவில்லை. நீங்களும் இதைப் பொருட்படுத்த மாட்டீர்கள் என நம்புகிறேன்.
இந்த இனிய நாளில் உங்கள் வாழ்த்துகளை வேண்டுகிறோம்.